Thursday, May 27, 2010

அகநாழிகை - ஜுன் 2010 இதழ்

அகநாழிகை - ஜூன் 2010 இதழ் வெளியாகியுள்ளது.




நேர்காணல்

''நவீனத்துவம் என்பது உத்தியில் இல்லை'' - பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், இலங்கை
நேர்காணல் : பஃஹிமா ஜஹான்


''சுதந்திரம்'' - பால் ஸக்கரியா
நேர்காணல் : ஷோபா வாரியர் - தமிழில் : சி.சரவணகார்த்திகேயன்


''காதலின் வரைபடம்'' - அதாஃப் சோயிப்
நேர்காணல் : அமித் ஹுசைன் - தமிழில் : நதியலை


சிறுகதைகள்


பாவண்ணன்
அய்யப்ப மாதவன்
ரிஷான் ஷெரிப்
ஐயப்பன் கிருஷ்ணன்
மதியழகன் சுப்பையா


கட்டுரைகள்


கலாப்ரியா
ஜெயந்தி சங்கர்
அஜயன்பாலா
நதியலை
ஆர்.அபிலாஷ்


வாழ்க்கைத்தொடர் : சுபின் மேத்தா


ரா.கிரிதரன்


கவிதைகள்


தீபச்செல்வன்
பெருந்தேவி
சாகிப்கிரான்
தூரன் குணா
ஆங்கரை பைரவி
தபவி
செந்தி
வெய்யில்
லாவண்யா சுந்தரராஜன்
விதூஷ்
கௌரிப்ரியா
ரகசியசினேகிதி
மண்குதிரை
ஆதவா
உழவன்
நந்தாகுமாரன்
சி.சரவணகார்த்திகேயன்


000


அகநாழிகை கிடைக்குமிடங்கள்


சென்னை


நியூ புக் லேண்ட்ஸ், தி.நகர், சென்னை.
போன் : 28158171, 28156006


டிஸ்கவரி புக் பேலஸ், கேகேநகர் மேற்கு, சென்னை. 
செல் : 9940446650 போன் : 65157525


திரு.குகன், நாகரத்னா பதிப்பகம். செல் : 9940448599


மதுரை 


பாரதி புக் ஹவுஸ், 28, வணிக வளாகம், பெரியார் பேருந்து நிலையம் உட்புறம், மதுரை-1. செல் : 97893 36277


கோயம்புத்தூர்


விஜயா புத்தக நிலையம், 20, ராஜவீதி, கோவை.
போன் : 04222577941


சேலம்


தக்கை வெ.பாபு, சேலம். செல் : 98651 53007



Tuesday, May 18, 2010

மானிடவியலும், மொழியியலும்

உயிரோசை இணைய இதழில் வெளியானது.

மானிடவியலும், மொழியியலும்

பரந்த நோக்கில் மொழி என்பதை பொதுப்புத்தியுடன் தொடர்பு ஊடகமாக கருதினாலும் பல்வேறு தளங்களில் மொழியின் தாக்கம் நிகழ்த்துகிற சமூக, மானிடவியல் மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை. ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மொழியின் பிரயோகம் மற்றும் பேச்சு மொழியின் வழக்கு ஆகியவற்றின் போக்கை ஆராய்ந்து மொழியியல் கருத்தாக்கங்கள் உருவாக்குதல் மற்றும் அதையொட்டிய விளக்கங்களையும், கணிப்புகளையும் தருவிக்கிற மொழியியல் ஆய்வு ஒரு வகை ஆகும். இது தவிர ஒரு மொழி பேசுகிற இனம் சார்ந்த வரலாற்றையும், அவர்களின் சமூக, கலாச்சார வளர்ச்சியையும் ஒப்பு நோக்கி மொழியை அணுகி ஆய்வுக்குட்படுத்தல் மற்றொரு வகை.
     ஒரு இனத்தின் தொடர்பாடலின் போக்கு மற்றும் மொழியில் அவ்வின மக்களின் கலாச்சாரம் நிகழ்த்துகிற மாற்றங்கள் அதன் வளர்ச்சியை அறிய உதவுகிறது. மொழிக்கும், பண்பாட்டுக்கும் இடையிலான தொடர்புகளை ஆய்வுக்குட்படுத்தும் போது குறிப்பிட்ட மொழியைப் பேசுகிற, கையாளுகிற மக்களின் பண்பாடு மற்றும் அவ்வின மக்களின் அறிதிறன் (Cognition) பற்றிய கூறுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மானிடவியல்சார் மொழியியல் (Anthropological Linguistics) கூற்றுகளே மொழியின் பயணத்தை துல்லியமாக கணிப்பவைகளாக இருக்கின்றன.


     மொழி ஒலி வழியே சிதைந்து உருமாறி வருவதை கண்டுணர மானிடவியல்சார் மொழியாய்வுகள் பயன்படுகிறது. வார்த்தைகள் மருவி வேறு பொருள் கொள்வது ஒலி சார்ந்த தொடர் பயன்பாடுகளின்  நீட்சியாக நிகழ்வது. வார்த்தைகள் மருவி வேறாக பொருள் கொண்டதற்கு நாமறிந்த பல உதாரணங்கள் உள்ளன.
     அதேபோல உருபியல் (Morphology) சார்ந்து மொழியின் நீட்சியாக மலர்ந்து கொண்டே செல்வதும் முக்கியமான ஒன்று. உருவியலின்படி வேர்ச்சொல் ஒன்றைப் பற்றியபடி கொடியாக தொடர் வார்த்தைகள் புதிது புதிதாக தோன்றுவது. இது ஒரு மொழியைப் பயன்படுத்தும் இனத்தின் கலாச்சார மற்றும் பண்பாட்டு வளர்ச்சியோடு இயைந்து ஏற்படக்கூடியது. இதற்கு உதாரணமாக, தொழில், தொழிலாளி, தொழிற்கூடம், தொழில் மையம், போர், போராளி, போராட்டம் என்பது போன்ற வார்த்தைகளைச் சுட்டலாம். இப்படியாக ஒரு வேர்ச்சொல்லிலிருந்து அது சார்ந்த பணிகளுக்கான சொற்கள் உருவாகிக்கொண்டே போவதை மொழியை உருபியல் ரீதியாக ஆய்வதின் வழியாக கணிக்கலாம்.
     மொழியின் உருபியல் வளர்ச்சிக்கு அடிப்படையான புத்தகமாக கி.மு.300ல் ஆக்கம் பெற்ற தொல்காப்பியம் இலக்கண நூலை கூறலாம். இன்று வரை அடிப்படை தமிழ் இலக்கண விதிகளுக்கு தொல்காப்பியமே எடுத்துக் கொள்ளப்படுவதே இதன் சிறப்பாகும். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களாக பிரிக்கப்பட்டு 1602 பாக்களில், ஒவ்வொரு எழுத்துக்கும் அதன் தொடர்புடைய  எழுத்துடன் புணர்கையில் கைக்கொள்ள வேண்டிய சொல்லாக்கத்திற்கான விதிமுறைகள் தெளிவாக வகுக்கப் பட்டுள்ளது.
     சொற்களுக்கான பொருள்களை தருகின்ற சொற்பொருளியலுக்கும், சொற்றொடரியலுக்கும் வேறுபாடு இருக்கின்றது. சொற்களுக்கான பொருளை அளிப்பது சொற்பொருளியல். ஆனால் சொற்றொடரியல் என்பது எழுத்து அல்லது பேச்சு போன்ற ஏதாவதொரு வடிவில் ஊடகமாக பிரயோகிக்கப்படுவது. சொற்றொடர்கள், வசனங்கள் இவற்றின் உபயோகத்திற்கும் நேரடியான பேச்சுக்கு உபயோகப்படுத்தப்படும் மொழியின் உரையாடல் தன்மையும் வெவ்வேறானவை. உரையாடலின் போக்கை தீர்மானிப்பதில் பண்பாட்டு கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. மொழித்திரிபுகள் நிகழ்வது உரையாடலின் தொடர்ச்சியான மொழிப் பிரயோகத்தின் வழியாகதான்.
          ஒரு சொல்லுக்கான பொருளை கோட்பாட்டு அடிப்படையிலும், செயலறிவு முறையிலும் ஆய்வுக்குட்படுத்துவது சொற்பொருளியல். சொற்கூட்டு பகுப்பாய்வின் வழியே இரு சொற்கள் இணையும் போது புதிதாக கிடைக்கிற சொல் குறித்த விவரம் கிடைக்கிறது. சில சொற்கள் சூழல் சார்ந்த பொருள் தருபவையாகவும் இருக்கின்றன. ஒரே சொல் பல பொருள் தருதல், பொதுவான பொருள் தரும் சொற்கள், ஒலி வேற்றுமை காரணமாக வேறு பொருள் தரக்கூடிய சொற்கள், ஒரே சொல் எதிரெதிர் பொருள்களை தருதல் இவை இலக்கணங்களுக்குள் வகைமைப்படுத்த இயலாதவையாக உள்ளன. இப்படியான சொற்களை ஆய்வுக்குட்படுத்தலில்தான் மானிடவியல்சார் மொழியியல் பகுத்தாய்வு முக்கிய இடம் பெறுகிறது.     
     மொழியின் சமூகச் செயல்பாடுகளின் வழியாகத்தான் அதன் சிதைவுகளும், மாற்றங்களும் நிகழ்கிறது. தனிப் பேச்சு, உரையாடல், படைப்பாக்கங்கள் இவற்றில் மொழியின் பிரயோகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படியான மாற்றங்களை நிகழ்த்துகிறது என்பதுதான் மொழிசார்ந்த மிகச்சரியான கணிப்புகளை அளிக்கும்.
          ஒரு குறிப்பிட்ட காலத்தின் மொழி குறித்த ஆய்வினை மேற்கொள்வது வரலாற்று விளக்கமுறை மொழியாய்வு எனப்படும். மொழிக்குழுவின் கோட்பாடு மற்றும் பயன்பாடு குறித்த சரியான பார்வைக்கு சூழ்நிலைசார்ந்த மொழி பயன்பாடு பற்றிய பார்வை உதவும்.

மொழியை கோட்பாட்டு ரீதியாக அணுகும் வழியாக  மட்டுமே மொழியின் வளர்ச்சியையும், பரிமாணத்தையும் முழுமையாக உணர்ந்தறிய இயலாது. முழுமையான மொழியியல் ஆய்வு என்பது இலக்கண கோட்பாட்டு ரீதியாக மட்டுமின்றி மானிடவியல் பண்பாடு மற்றும் கலாச்சார மாற்றங்களை பொருட்டில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோல ஒப்பீட்டு மொழியாய்வுகளும் மொழித்திரிபு சார்ந்த சொற்களை அணுக உதவும்.
000



“மானிடவியலும், மொழியியலும்“ என்ற இக்கட்டுரை உயிரோசை இணைய இதழில் வெளியானது. இதற்கு முன்பாக உயிரோசையில் வெளியான “பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி“ என்ற எனது கட்டுரையின் தொடர்ச்சியாக இதை வாசிக்கலாம். இதன் மீதான தங்கள் கருத்துகள் பகிர்வதன் வாயிலாக இப்பொருளில் தொடர்ந்து எழுத உந்துதலாக இருக்கும்வாய்ப்பளித்த உயிரோசை இணைய இதழிற்கு நன்றி.

- பொன்.வாசுதேவன்

Monday, May 17, 2010

இரண்டு கவிதைகள்

சிக்கிமுக்கி.காம் இணைய இதழில் வெளியான எனது இரண்டு கவிதைகள்


பிரியங்கள் உதிர்த்த கனி

ஞாபகத்தின் காலடியில்
தஞ்சம் புகும்
இன்றைய மீள்நினைவுகளை
பிரியங்களால் ஒத்தியெடுத்து
படுக்கையில் கிடத்துகிறேன்
 
ஊர்ந்து கொண்டிருக்கும்
அன்பின் கணங்களை
அனுபவித்தபடி
பயணிக்கிற திசைகளிலெல்லாம்
தடம் தரிசித்து
நீங்கிக் கொண்டிருக்கிறது நான்
 
பொய்த்துப்போன
பெருமழைக்காலத்தின்
வெக்கை நினைவுகளில்
மிச்சமிருந்த பழைய பிரியங்கள்
நனைத்துக் கொண்டிருக்கிறது
 
வலுக்கட்டாயமாய்
உதிர்ந்த பிரியங்களை
திசைக்கொன்றாய் வீசிச்சுழற்றி
கடத்திக் கொண்டிருக்கிறது காற்று.

0


பால்ய விளையாட்டு
 
வாழ்ந்து தீர்த்த பால்யத்தின்
நிறைவேற்றாத நேர்த்திக்கடனாய்
மிச்சமிருக்கின்றது பிரியங்கள்
 
உலர்த்தி பதப்படுத்தி
பத்திரப்படுத்தி
சேமித்து வைத்திருந்த
பிரியங்களை
காதலைக் கொண்டாடும்
ஒரு தினத்தில்
பீங்கான் குவளையிலிருந்து
கவிழ்த்துக் கொட்டி
பார்த்தபடியிருக்கிறேன்
 
விளையாட்டின் ஞாபகங்களை
நினைவிலேந்திய
சொப்புகளின் ஏக்கத்தோடு
காலங்களுக்குப் பின்னும்
யாசித்துக் கொண்டு
வெறிக்கின்றன பிரியங்கள்
 
பிரியங்களைச் சுமந்து
முணுமுணுத்தபடியிருக்கும்
அவற்றின் சப்தம்
அறையெங்கும்
மெல்லப்பரவி
சலசலப்பால் நிறைகிறது
 
நெளிந்து கொண்டிருக்கும்
பிரியங்களை
ஒவ்வொன்றாய்க் கையிலெடுத்து
ஆசுவாசப்படுத்தி
ஆற்றுப்படுத்தி
ஆசைதீர பார்த்துவிட்டு
மறுபடியும்
குவளைக்குள் இட்டு
மூடிவைக்கிறேன் பத்திரமாய்.

- பொன்.வாசுதேவன்

 

Thursday, May 13, 2010

புதுக்கூடு (சிறுகதை) - பொன்.வாசுதேவன்


காலையிலேயே வெயில் தீவிரமாய் பெய்து கொண்டிருந்தது. உடம்பின் உயரத்தில் முக்கால் பங்கு நீளமாயிருந்த தன் தலைமுடியை யமுனா காற்றாட வைத்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் தலைக்கு குளித்து வந்திருந்த அவள் உடல் ஆள்நடமாட்டமற்ற கடற்கரை மணலைப்போல வெண்மையாக நுட்பமான மினுமினுப்போடு இருந்தது.

சந்தோஷமான மனநிலையில் ஏதோவொரு பாடலை முணுமுணுத்தபடியிருந்தது அவள் உதடுகள். அவனுக்கு பிடித்தமான ஆகாச நீல வண்ணச்சேலையை அணிந்திருந்தாள். அவன் எடுத்துக் கொடுத்ததுதான். அவளுக்கு நீல நிறம் பிடிக்காது என்றாலும் அவனுடைய விருப்பத்திற்கு மாறாக செய்வதை அவள் விரும்புவதில்லை.

மாடியிலிருந்த அந்த அறையிலிருந்து சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஆயாசமாக இருந்தது. எதையும் நினைவில் இல்லாமல் வெற்றாய் சாலையில் எதிரெதிர் புறங்களில் ஊர்ந்தபடியிருந்த மனிதர்களையும், வாகனங்களையும், மாடுகளையும் விழிகளால் துழாவியபடியிருந்தான்.

சாலையிலிருந்து கவனம் விலகி அறையின் உச்சியில் சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியையே சிறிது நேரம் பார்த்தவுடன் சற்றே ஆசுவாசமாய் இருந்தது.

“சேலை நல்லாயிருக்காடா“ என்றபடி அவன் முன் வந்து நின்றாள் யமுனா.
வெளிர் நீல நிறத்தினிடையே அவளது இடுப்பு தனித்து தெரிந்தது.

“ம்ம்“

அவளது வடிவமும், சேலையுடுத்தியிருந்த விதமும் அவனுக்குள் கிளர்ச்சி ஏற்படுத்தியது. அவனது அடுத்த செய்கைக்காக காத்திருப்பதான தோரணையில் யமுனா நின்றிருந்தது  அவள் விழைவை குறிப்புணர்த்தியது.

கட்டிலில் அமர்ந்திருந்தபடியே அவளை இரு கைகளைக் கோர்த்து அணைத்தான். அவள் வயிற்றுக்கு நேராக அவன் முகம் பொதிந்தது. விழிகளில் இருள் நிறைக்க, ஏதோ ஒரு நதியின் ஆழத்திற்குள் ஆழ்ந்து செல்வதைப் போலிருந்தது. யமுனா அவன் தலையின் பின்புறமாக தனது கைகளைக் கோர்த்துக் கொண்டாள்.

இரத்தமும் சதையுமான இந்த உடலில்தான் வாழ்வின் பிரியங்கள் புதைந்து கிடக்கிறதா? வெற்று உரசல்களில் பூர்த்தியாகி விடுவதா அன்பு. வயிற்றில் பதிந்த உதடுகள் இறுகிக்கிடக்க அவனுக்குள் யோசனை ஊதிப் பெருத்தபடியிருந்தது, உடல் கிளர்ச்சி எப்போதும் அவனை அலைக்கழித்ததில்லை.

கேள்விகள். ஓயாது துரத்தும் கேள்விகள் அதற்கான நிமிடங்களையே தருவதில்லை.

நேற்று காலை கிளம்பும்போதே எப்போதுமில்லாமல் அதிகமாய் வேலைகள் இருந்தது. பல நேரங்களில் எந்த வேலையுமில்லாமல் சும்மாவே இருப்பான். அந்த நேரங்களில் படிப்பது மட்டுமே பிரதானமான வேலையாக இருக்கும். மனதொப்பி செய்கிற வேலை அது ஒன்றுதானே. அவனைப் பொறுத்தவரை எத்தனையோ விஷயங்களுக்காக சகித்துக் கொள்ள முடியாத அவன் வாழ்க்கையின் துயரங்களிலிருந்து ஒரு தற்காலிக விடுபடல் படிக்கிறதுதான். அவன் அகலமற்ற நீண்ட வீட்டின் சிறு அறைக்குள்ளாக இருந்து கொண்டு படிக்கிற போது கூடு விட்டு கூடு பாய்வது போல வேறோர் உலகிற்கு பயணிக்கிறதே ஆறுதலாயிருந்தது.

யமுனாவைப் படுக்கையில் கிடத்தினான். அவள் சேலை கசங்கிவிட்டால் மறுபடி கட்ட வேண்டியிருக்கும் என்பதாகச் சொல்லி அவன் கன்னத்தில் சிறு முத்தமொன்றைப் பதித்து மறுபடியும் சேலையைச் சரி செய்யத் தொடங்கினாள். அறைப் பையனிடம் காலை உணவு எடுத்துவரச் சொல்லி கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாகியிருந்தது. இன்னும் வரவில்லை.

அது ஒரு பெரிய நகரம்தான். நெருக்கடியான வீடுகளும், வீட்டின் முன் குப்பைத் தொட்டியொன்றும், சிறு மரமொன்றும் என அந்தச்சாலை திட்டமிடலோடு வடிவமைக்கப்பட்டிருந்தது. நேற்றைய இரவு முழுவதுமான சந்தோஷத்திற்குப் பிறகு விடிந்திருக்கும் இன்றைய பொழுது நன்றாகத்தான் விடிந்திருக்கிறது. இரவுகள்தான் அவனுக்குள்ளாக பல சிந்தனைகளை எழுப்பிச் செல்பவை. ஒவ்வொரு பகலின் இயலாமைகளும், குற்றவுணர்ச்சியும் இரவுகளில் உறங்கவிடாமல் நசுக்கும். சந்தோஷம், துக்கம் இதெல்லாம் ஒரு மனநிலைகள்தானே என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வான்.

அறைக்கதவு தட்டப்பட்டது. யமுனா கதவைத் திறந்தாள். அறைப் பையன் டிபன் எடுத்து வந்து உள்ளே வைத்துவிட்டு, பதிலை எதிர்பாராமல், வேறு எதாவது வேண்டுமா என கேட்டுவிட்டுச் சென்றான்.

அலைபேசி மணியடித்தது.

“சாப்பிட்டீங்களா. எப்போ கிளம்புவீங்க. ராத்திரி வந்துருவீங்களா“

எப்போதும் போலவே சுசிலா பேசினாள். இதுதான் அவள் வாழ்க்கையில் அவனிடம் அதிகம் முறை பேசிய வார்த்தைகளாக இருக்கும். பள்ளியில் படிக்கும் போதெல்லாம் அவன் கிட்டேயே வரமாட்டாள். ஒரு முறை காதருகில் சென்று ‘கூ‘வென கத்தியதற்கு அரண்டு போய் கண்களில் நீர் திரள அவள் ஓடியது  இப்போது நினைவுக்கு வருகிறது. அவளைப் பற்றி அதிகம் யோசித்ததில்லை. ஆனால் சுசிலா பேசுவது குறைவு என்றாலும் ஞாபகம் அவனைப் பற்றியதாகவே இருக்கும்.

உடம்பே எடையற்று இலேசாகிப் போனது போல் இருந்தது. தொடர்ந்து படுத்துக் கொண்டே இருந்தது காரணமாய் இருக்கக்கூடும்.

“வாடா டிபன் சாப்பிடலாம். அப்புறம் கிளம்ப நேரமாகிடும்“ என்றாள் யமுனா.

“எனக்கு இரண்டு இட்லி போதும்“ என்று சொல்லியபடியே டிபனை பிரித்து இருவருக்குமாக எடுத்து வைத்தாள்.

எனக்கு அதிகப் பசியாக இருந்தது. எப்போதாவதுதான் இப்படியிருக்கும், வீட்டிலிருக்கும்போது சாப்பிடவே தோன்றுவதில்லை. இரண்டு இட்லியை சாப்பிட்டு முடித்தவள் என்னிடமிருந்த இட்லியையும் சாப்பிடத் தொடங்கினாள். சாப்பிட்டு கை கழுவிவிட்டு வந்தமர்ந்தார்கள்.

அவன் கைகளைப் பிடித்து தன் இருபுற கன்னங்களிலும் அழுந்தத் தேய்த்துக் கொண்டாள். இருவரது முகத்திலும் மகிழ்ச்சியோ துயரமோ அற்ற முகச்சாயல் இருந்தது.

இதயத் துடிப்பு கூட நின்று விட்டதோ என எண்ணும் அளவுக்கு அவனுக்குள் ஒரு பெரிய அமைதி ஏற்பட்டிருந்தது. எதனால் இத்தகையதொரு அமைதி ஏற்பட்டது என்று தெரியவில்லை.

“சரி கிளம்புவோம்டா“

“ம்.. போகலாம்“

பையை எடுத்துக் கொண்டு அறையைப் பூட்டிக்கொண்டு வெளியே வந்தார்கள். இந்த இரண்டாவது நாளிலேயே மிகவும் பழகிப்போன இடத்திலிருந்து வேற்றிடத்திற்கு செல்வதைப் போல உணர்ந்தான். யமுனா அவன் கைகளைத் தன் கையுடன் கோர்த்துக் கொண்டாள். மெல்ல விடுவித்துக் கொண்டு அறைச்சாவியை வரவேற்பறையில் கொடுத்து விட்டு வந்தான்.

வெளியே உக்கிரமாயிருந்த வெயில் அவர்களைத் தாக்க தயாராயிருந்தது. யமுனா எதோ பேசிக் கொண்டே வந்தாள். அவனது கவனம் ஆட்டோவை அழைப்பதில் இருந்தது. ஆட்டோவில் ஏறியதும், நெருக்கமாய் அமர்ந்து அவன் கைகளைப் பிடித்தபடி அலுவலகப் பிரச்சனைகள், திரைப்படம் பற்றிய கருத்துக்கள் என்றெல்லாம் மறுபடியும் பேசத் தொடங்கினாள்.

வீட்டுக்குப் போனதும் சொல்ல வேண்டியிருக்கிற சமாதானங்கள் குறித்து இப்போதே அவன் மனதிற்குள்ளாக கோர்வையாக்கி வைத்துக் கொண்டான். அவனது பொய்கள் எளிதாக வெளிப்பட்டுவிடும். பொய் சொல்வதற்கேயுரிய சாமர்த்தியமும், மனதின் உணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டாமல் இருப்பதும் அவனுக்கு வாய்க்கவில்லை.

பேருந்து நிலையம் வந்து விட்டது. ஆட்டோவிற்கு பணம் கொடுத்தான். ஆட்டோவிலிருந்து இருவரும் இறங்கினார்கள். அவனுக்கு வெறுமையாக இருந்தது. யமுனாவின் முகமும் அதையே காட்டியது.

“அப்புறம்“ சுவாரசியமற்ற குரலில் கேட்டான்.

“ஏண்டா... அவ்வளவுதானா? பேச ஒண்ணுமில்லையா? உனக்கு ஞாபகமெல்லாம் எங்கேயோ இருக்கு. நான் பேசிட்டே வந்தேன் நீ எதுவுமே பேசலை. இன்னைக்கு ஒரு நாள்தானே? இதுக்கப்பறம் எப்பவோ....“

யமுனா பேசியதைக் கேட்டதும் புத்திசாலித்தனம்தான் ஒவ்வொருத்தருக்கும் எதிரி என்று தோன்றியது.

“நான் நினைக்கறதை எப்படி நீ சரியா சொல்லிட்டே“ என்றான்.

“ரொம்ப கஷ்டமா இருக்கு“ அவன் கைகளைப் பற்றினாள்.

“எனக்கும்தான்“ அவனுடைய அப்போதைய கஷ்டம் வேறு. சொன்னால் புரிந்து கொள்ளமாட்டாள். கூடவே போய்ச் சேரும் வரை அதையே நினைத்து வருத்தப்படுவாள்.

பேருந்து வந்ததை இருவரும் கவனித்தார்கள்.

“இல்ல அடுத்த பஸ் வரட்டும்“ என்றாள்.

“சரி“ சுயஇரக்கத்தோடு குரல் முழுமையாக வெளிவரவில்லை. சுற்றிலும் ஜனத்திரள் முடிவற்ற ஓட்டத்திலும், நடையிலும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். எங்கும் இரைச்சல். நிமிடங்கள் கடப்பதற்கு மணி நேரம் ஆவது போலிருந்தது. பேச்சின்றி சிறிது நேரம் கழிந்தது. யமுனா மறுபடியும் அவன் கையைப் பிடித்தாள். அவன் விடுவித்துக் கொள்ளவில்லை. அவன் கேள்விகளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தான்.

குற்றவுணர்ச்சி அவனை அழுத்தியது. எல்லோரைப் போலவும் இயல்பாக இருப்பதற்கான தகுதி தனக்கில்லை என்று நினைத்துக் கொண்டான். வெயில் தோய்ந்த காற்றை சுவாசிக்கையில் மூக்கின் வழியே உள்செல்கிற போது சூட்டை உணர முடிந்தது.

அடுத்த பேருந்து வந்து கொண்டிருந்தது.  அவன் முகத்தின் இறுக்கத்தையே யமுனா பார்த்துக் கொண்டிருந்தாள்.

“சரிடா, பஸ் வந்துடுது. நான் கிளம்பறேன். போன்ல பேசுவோம். சரியா“ என்றாள் யமுனா.

அவன் சரி என்றான். வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை. பேருந்தில் ஏற்றிவிட்டு “தண்ணீர் வாங்கித் தரவா“ என்று கேட்டான். “வேண்டாம்“ என்று சொன்னாள்.

“சரி போயிட்டு போன் பண்ணு“

“சரி“

பேருந்து புறப்பட்டது. கையசைத்து விட்டு சாலையைத் தாண்டி எதிர்ப்புறம் வந்து அவனது பேருந்திருக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.

000

- பொன்.வாசுதேவன்

Monday, May 3, 2010

சொற்கப்பல் (விமர்சன தளம்) அன்புடன் அழைக்கிறது

நவீன இலக்கிய சூழலில் பதிப்பக மைய அரசியலின் பிடிகளை தளர்த்தவும் , புதிய ஊற்றுகண்களை வளப்படுத்தவும், அடைப்புகளை சீர் செய்யவும், வாழ்வாங்குவாழ நவீன தமிழை முன்னெடுத்துசெல்வதற்குமாக ஆரம்பிக்கப்பட்ட சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பு கடந்த கூட்டங்களை சென்னையில் சிறப்பாக நடத்தியிருக்கிறது. 


கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றின் மீதான விமர்சனக் கூட்டங்களை, விவாத அரங்குடன், கவிஞர் விக்ரமாதித்யன், கூத்துப்பட்டறை முத்துசாமி போன்ற மூத்த படைப்பாளிகளின் முன்னிலையில் சொற்கப்பல் நடத்தியுள்ளது.


சொற்கப்பல் விமர்சன தளத்தின் அடுத்த நிகழ்வாக அண்மைய நாவல்கள் குறித்த விமர்சனக் கூட்டம் சேலத்தில் நடைபெற உள்ளது. இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்று சிறப்பிக்க இருக்கும் நிகழ்ச்சியில் தங்களையும் அன்புடன் அழைக்கிறேன்.


சொற்கப்பல் (விமர்சன தளம்) மற்றும் ‘தக்கை‘ இணைந்து நடத்தும்
நாவல் விமர்சன அரங்கு

நாள் : 8.5.2010 சனிக்கிழமை காலை 9.30 - 5.00 மணி
இடம் : சிவகாமி அம்மையார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மாப்பேட்டை, சேலம்.
------------------------------------------------------------------------------

காலை 9.30 மணி

வரவேற்புரை :
‘தக்கை‘ வெ.பாபு

துவக்கவுரை :
ஈசன் இளங்கோ

தலைமையுரை :
சுப்ரபாரதிமணியன்

------------------------------------------------------------------------------------------

காலை 10 - 1 மணி

நாவல் விமர்சன அரங்கு

அமர்வு : 1

கருத்துரையாளர்கள் : தமிழ்நதி, சந்திரா

நாவல் & ஆசிரியர்............................................................. விமர்சனம்

1. தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்................................. ஸ்ரீநேசன்
....
2. நிலாவை வரைபவன் - கரிகாலன் .............................................. அசதா

3. சாந்தாமணியும் இன்ன பிற காதல்களும் - வாமுகோமு ....... சாகிப்கிரான்

பகல் 2 - 5

அமர்வு : 2

கருத்துரையாளர்கள் : தாராகணேசன், மோகனரங்கன்

4. துருக்கி தொப்பி - கீரனூர் ஜாகிர் ராஜா ................................ இளங்கோ கிருஷ்ணன்

5. வெட்டுப்புலி - தமிழ்மகன் ....................................................... பைத்தியக்காரன் (சிவராமன்)

6. நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன் ............................... ச.முத்துவேல்

------------------------------------------------------------------------------------------

நன்றியுரை : 
அமுதரசன் (தடாகம்.காம்)

பங்கேற்பாளர்கள் : 
அஜயன்பாலா சித்தார்த், கண்டராதித்தன், அய்யப்ப மாதவன், பால்நிலவன், காலபைரவன், யாத்ரா மற்றும் பலர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : 
பொன்.வாசுதேவன் (அகநாழிகை)
தக்கை வெ.பாபு

தொடர்புக்கு : 
பொன்.வாசுதேவன் - 999 454 1010 / தக்கை வெ.பாபு - 96009 53007

அனைவரும் வருக !

சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பாளர்கள்

அகநாழிகை - தமிழ்மகன் - தடாகம்.காம் - டிஸ்கவரி புக் பேலஸ்




Comments system

Disqus Shortname