Sunday, May 29, 2011

இலக்கிய அக்கப்போர் – 3


என்ன எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது தோன்றியது. வித்தியாசமாக புனைப்பெயர்களை வைத்துக் கொள்கிறவர்கள் எப்படி அப்பெயரை தேர்வு செய்கிறார்கள்? தங்களது குணநலன்களைக் கொண்டா அல்லது தங்கள் புனைப்பெயரை வைத்து வாசிக்கிறவர்கள் எழுதியவரைப் பற்றிய ஒரு உருவத்தை கற்பிதம் செய்து கொள்வார்கள் என்பதற்காகவா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

*

ஆண் – பெண் உறவுகள் குறித்த கலாச்சாரப் புனைவுகளையும், கவித்துவப் பாசாங்குகளையும் தொடர்ந்து கலைப்பவை ஜீ,முருகனின் கதைகள். மனித உறவுகளுக்குள் நிகழும் போராட்டங்கள், பாவனைகள், பிறழ்வுகள், பயங்கள், மீறல்கள், வீழ்ச்சிகளை கனவுகளற்ற உலர்ந்த மொழியில் வரைகிறது அவரது ‘மரம்’ நாவல். மனித நடத்தையின் விசித்திரங்கள் பண்பாட்டு அளவுகோல்களால் விளக்கக்கூடியதல்ல என்பதை இந்த நாவலின் பாத்திரங்கள் நிருபணம் செய்கின்றன.

*

மனித மனம் ஒரு விசித்திர விலங்கு. நாம் தெளிவான சிந்தனையோடு இருக்கிறோம் என்பதே ஒரு வித நோய்க்கூறு மனநிலைதான்.

*

கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் தமிழின் மிக முக்கியமான, அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்று. கணேசன் – கிட்டா என்ற இரு மனிதர்களின் சிறு வயது முதல் நடுத்தர வயது வரையிலான காலகட்டத்தில் நடக்கின்ற நிகழ்வுகளை விவரித்துச் செல்வதுதான் நாவலின் கதைக்களம். முரண்பட்ட இயல்புள்ள இருவரது வாழ்வின் போக்கு வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. தஞ்சாவூர் அக்ரஹாரத்து வாழ்க்கை, தஞ்சை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடக்கின்ற சமூக பொருளாதார மாறுதல்கள் ஆகியவற்றைப்பற்றியும் கதையினூடாக பதிவு செய்கிறார் கரிச்சான் குஞ்சு.

மனித வாழ்வின் ஆதாரமான அம்சங்களான பணம், அந்தஸ்து, உடல் சார்ந்த இச்சைகள், தன்முனைப்பு, அச்சம் ஆகியவை மனிதர்களை எந்த அளவிற்கு அலைக்கழித்து அகச்சிக்கலுக்கு உள்ளாக்குகிறது என்பதையும், காமம், பணம், அந்தஸ்து இவற்றிற்கிடையேயான நெருக்கத்தையும் பற்றிய பல்வேறு பார்வைகளை இக்கதை முன்வைக்கிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத  இந்தப்பசிகள் ஒரு கட்டத்திற்குப் பிறகு வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார்.

நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப்புணர்ச்சியைக் கையாண்ட முதல் பிரதியான இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை இலாவகமாகக் கையாள்கிறது. முட்டிமோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்களின் வாழ்வு, வயிற்றுப்பசி, அதிகாரப்பசி, காமப்பசி என பலவிதமான பசியின் உந்துதல்களால் செலுத்தப்பட்டு, பல்வேறு இன்பங்களையும் துய்த்தபின் கடைசியில் எதில் நிறைவடைகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது இந்நாவல்.

*

எக்காலம் – எக்காலம் என எக்காளமிட்டுப் பாடியிருக்கின்ற பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப்புலம்பல்களை ஒரு முறையாவது ஆழ்ந்து படித்தால் வாழ்வில் முழுமையடைந்து கரையேறும் வாய்ப்பு சித்திக்கும்.

புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?

*

Thursday, May 26, 2011

இலக்கிய அக்கப்போர் – 2


தேசாபிமானம் - பாஷாபிமானம்

வயது, விதம், நியதி, தருணம், சுகம், ஞாபகம், கேலி, அற்புதம், அவசரம், அவதூறு, சதுரம், சித்திரம், பாத்திரம், பயம், பைத்தியம் இந்த வார்த்தைகள் அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது என்ன தெரியுமா?

கடைசியில் பார்ப்போம்..

மொழியின் வரலாறு என்பதை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமா? தேசம் -மொழி இவற்றின் மீதான பற்றுதல் எந்த அளவிற்கு இருக்க வேண்டும்? ஏன் இருக்க வேண்டும்? இந்தக் கேள்வி அடிக்கடி எனக்குள் எழும். ஒரு மொழியின் வரலாறு என்றால் என்ன? இதன் பொருள் யாது? என்று பல கேள்விகள்…

ஞானக்கூத்தன் ஒரு கவிதையில் எழுதுவார்.

எனக்கும்
தமிழ்தான் மூச்சு ஆனால் அதை 
பிறர்மேல் விடமாட்டேன்

நம் தினசரி வாழ்வில் புழங்குகின்ற ஒவ்வொரு வார்த்தை தோன்றியதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. மொழியிலிருந்து தோன்றுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் ஏதோ ஒரு அடிப்படை விதிப்படியே உபயோகத்தில் இருந்து வருகிறது. சில வார்த்தைகள் வழக்கொழிந்து போனாலும் புதிய வார்த்தைகள் அவற்றிற்கான வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமூகத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அச்சமூகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிப்பையாக இருக்கின்றன. சங்க இலக்கியப் பாடல்களை நாம் வாசிக்கின்ற போது அப்போதிருந்த வார்த்தைப் பிரயோகங்கள் குறித்து அறிய முடிகிறது.

தமிழ் மொழிக்கான இலக்கண நூல்களில் தொல்காப்பியம் முக்கிய இடம் வகிக்கிறது. ‘எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி’ என ஐவகையாகப் பகுத்து தமிழ் மொழி இலக்கணம் எழுதப்பட்டுள்ளது.

வெறுப்பை ‘சீ’ யென்றும், உவகையை ‘வா’ என்றும், வியப்பை ‘ஐ’ என்றும், அவலத்தை ‘ஓ’ என்றும், அச்சத்தினை ‘ஐயோ’ என்றும் மொழியற்ற ஆதி நாட்களில் சைகை மற்றும் சுவையை வைத்தே மொழிக்கான ஒலிக்குறிப்புகள் முதன்முதலில் தோன்றியிருக்கிறது. இதன் நீட்சியாகத்தான் ஒலிக்குறிப்புகள் தோன்றி அதனை அவதானித்து மொழிக்குறிகள் உருப்பெற்றிருக்கின்றன. தமிழ் மொழியில் ட், ண், ர், ல், ழ், ற், ன் என்ற எட்டு மெய்யெழுத்துக்களை கொண்டு எந்த வார்த்தையும் துவங்குவதில்லை. இதற்கு காரணம் இவ்வனைத்து எழுத்துகளும் நாவின் மேலண்ணத்தை தொட்டு உச்சரிக்க வேண்டிய வார்த்தைகள். இவ்வார்த்தைகளை சிரமப் பிரயோகம் செய்தே உச்சரிக்க வேண்டியிருந்ததால் அவை ஆரம்பத்திலிருந்தே முதல் வார்த்தையாக பயன்படுத்தப்படவில்லை.

நம் மொழி சார்ந்த வரலாற்றைப் படிப்பதும், அறிந்து கொள்வதும் அவசியமானதா இல்லையா என்பதை விட அதில் ஒரு புதிரை விடுவிக்கின்ற வசீகரம் ஏற்படுவதென்கிறது என்பது என்னளவில் உண்மை.

மேலே ஆரம்பத்தில் கேட்டதற்கான பதில்… இவ்வார்த்தைகளுக்கிடையே உள்ள ஒற்றுமை அனைத்தும் வடமொழி சொற்கள் என்பதுதான்.

*
நிஷாந்த் - இரவின் முடிவு

சுஜாதாவின் பரிந்துரையின் பேரில் - 1975ம் ஆண்டு கணையாழியின் கடைசிப் பக்கங்களில் - (இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறேன்) ஷியாம் பெனகலின் இயக்கத்தில் வெளிவந்த ‘நிஷாந்த்’ (இரவின் முடிவு) படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் கொஞ்ச நாட்களாகவே அரித்துக் கொண்டிருந்தது. எதற்கும் தேடிப்பார்க்கலாமென்று இணைய பகவானை சுரண்டினால், என்ன ஆச்சர்யம்… முழுப்படமும் நீ-குழாயில் கிடைத்தே விட்டது.

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் நடந்த முதலாளித்துவ வன்முறைகளை பின்னணியாக கொண்டிருக்கிறது இப்படம். ஊரின் பண்ணையார் குடும்பத்தினர் செய்கின்ற அக்கிரமங்கள், ஏழைகள் மீதான கொடுஞ்செயல்கள் என கதைக்களம் ஹைதராபாத்தில் நடக்கிறது. ஊருக்கு புதிதாக வருகின்ற ஆசிரியரின் மனைவியை முதலாளி குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவன் கடத்திச் சென்று சிறைப்படுத்தி விடுகிறான். எதிர்த்துப்பேச திராணியற்ற கிராமத்து மக்கள். ஆசிரியரோ காவல்துறை, கலக்டர், வக்கீல், அரசியல்வாதி என ஒவ்வோரிடமாய் முறையிட்டு பண பலத்தின் முன் தோற்றுப் போகிறார். இறுதியாக கோவில் அர்ச்சகர் ஒருவரின் உதவியோடு கிராமத்து மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி, கோவில் திருவிழா நடக்கின்ற வேளையில் பண்ணையாரின் குடும்பத்தை ஊர் மக்கள் சேர்ந்து அடித்துக் கொன்று விடுகிறார்கள். இதில் ஆசிரியரின் மனைவியும் கொல்லப்படுகிறாள். அன்றைய காலகட்டத்தில் அதிகாரத்தின் வன்முறையை எதிர்ப்பதன் அவசியத்தை நேரடியாக பேசிய முக்கியமான படம் நிஷாந்த்.

க்ரீஷ் கர்னார்ட், ஷப்னா ஆஸ்மி, அம்ரிஷ் பூரி, நஸ்ருதின் ஷா, ஸ்மிதா (அறிமுகம்) ஆகியோர் நடித்திருக்கின்றனர். சிக்கனமான வசனம், நேரடியான கதைசொல்லல் என ஷ்யாம் பெனகலின் இயக்க உத்தி அழகியலோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கோவிந்த் நிஹ்லானி தன் அழகான ஒளிப்பதிவில் எந்த செயற்கை பூச்சுகளுமின்றி, அசல் கிராமத்தை நம் கண்முன்னே கொண்டுவரச் செய்திருக்கிறார்.

இந்த இணைப்பில் நிஷாந்த் படத்தை நீங்களும் கண்டு மகிழுங்கள்.


*

படிமம் படுகிற பாடு 

சமீபத்தைய கவிதைகளில் படிமம் என்பது படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறதை நாம் அறிவோம். கற்பனையே செய்ய முடியாத படிமங்கள் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் படிமம் என்பதுதான் என்ன?

கவிதையை அழகியலோடு உணர படிமம் வகை செய்கிறது. கவிதையின் கருப்பொருளை எளிதான மனதுக்கு அணுக்கமானதாக உணரச் செய்கிற ஒரு கருவிதான் படிமம். தெரிந்ததைச் சொல்லி தெரியாததை விளக்குவது என்ற பொருளில் இதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

கவிதையில் வருகின்ற ஒரு காட்சியை, உணர்வு தளத்தில் புரிந்து கொள்வதற்கு கற்பனைத் தளத்தில் உருவகித்து காண்பதற்கு படிமம் உதவுகிறது. கவிதையின் செறிவு என்பது வெறுமனே வடிவப்பண்பு அல்ல. சுருக்கமான அல்லது செறிவான ஒரு நிகழ்வு. உடனடியாக சரியான, பொருத்தமான படிமத்துடன் அது எளிதாக விளங்கிக் கொள்ளப்படுகிறது. கவிதைக்கு படிமம் என்பது ஒரு வருணிப்பு உத்தியே தவிர வெறும் படிமங்களை அடுக்கிக் கொண்டால் அது கவிதையாகாது

‘மின்னல்’ பற்றி படிமங்களால் கூறப்பட்ட பிரமிளின் கவிதை ஒன்று.

ககனப் பறவை
நீட்டும் அலகு

கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை

கடலுள் வழியும்
அமிர்தத் தாரை

கடவுள் ஊன்றும்
செங்கோல்.

படிமக் கவிதைக்கு ஒரு எளிய உதாரணமாக மோகனரங்கனின் கவிதை.

ஊருணிக்குள்
நனைந்தது நிலவு
நக்கிக் குடிக்கிறது நாய்.

*
பொன்.வாசுதேவன்

இலக்கிய அக்கப்போர் - 1


தமிழில் அதிகம் பேசப்படாத பல சிறந்த எழுத்தாளர்கள் உண்டு. அவர்களில் மிக முக்கியமானவர் மா.அரங்கநாதன். ஐம்பதுகளில் பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை ஆகிய இலக்கிய இதழ்களில் எழுதியவர். இவர் 'சிவனொளி பாதம்' என்ற பெயரில் கட்டுரைகளும் எழுதியுள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர் 1980களில் 'முன்றில்' என்ற சிற்றிதழையும், முன்றில் இலக்கிய அமைப்பையும் நடத்தியவர். 

'எண்பதுகளில் கலை இலக்கியம்' என்ற தலைப்பில் இவர் நடத்திய கருத்தரங்கின் போதுதான் விக்ரமாதித்யன், சாருநிவேதிதா உட்பட பலரையும் நான் முதல் முறையாக நேரில் சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றேன். மாம்பலம் இரயில் நிலையம் அருகில் இருந்த சாந்தி வணிக வளாகம் என்ற இடத்தில் முன்றில் புத்தக நிலையம் இருந்தது. அப்போது சிறுபத்திரிகைகளில் எழுதுகின்ற பலரும் சந்திக்கின்ற மையம் அதுதான். கல்லூரி நாட்களின் மாலைப் பொழுதுகள் அங்கேதான் கழிந்தது.

கவிதை குறித்து மா.அரங்கநாதன் எழுதிய 'பொருளின் பொருள் கவிதை' என்ற புத்தகம் மிக முக்கியமானது. வீடுபேறு, ஞானக்கூத்து, காடன் மலை என்ற சிறுகதைத் தொகுப்புகளும், பறளியாற்று மாந்தர் என்ற நாவலையும் இவர் எழுதியுள்ளார். மா.அரங்கநாதன் கதைகள் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட இவரது 63 கதைகளை வாசித்து முடித்தேன். தமிழர் வாழ்வியல் சார்ந்த சாமியாடல், குறிசொல்லுதல், மாந்திரீகம் போன்ற மத நம்பிக்கைகள் குறித்து பரவலாக இவரது கதைகளில் வாசிக்க முடிகிறது. இயற்கை சார்ந்த கடவுள் வழிபாட்டிலிருந்து வழிமாறிய தமிழ் இனம் பற்றிய இவரது பார்வை பிரத்யேகமானதும் முக்கியமானதும் எனப்படுகிறது. தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட வட மயமாக்கமான இந்துத்துத்வத்துக்கும், தமிழர் கடவுள் வழிபாட்டுக்கும் இடைப்பட்ட வேற்றுமையை பல கதைகளில் எழுதியிருக்கிறார். உலகமயமாக்கலின் முன் தயாரிப்பு காலத்தை பதிவு செய்கின்ற ஆவணமாகவும் இவரது கதைகள் இருக்கின்றன. நேரடியாக அரசியல் பேசாமல் தன் கதைகளினூடாக இவர் முன்வைக்கின்ற அரசியல் பார்வை மிக நுட்பமானது.

சில மாதங்களுக்கு முன்பு (கவிஞர் வெயில் திருமணத்திற்கு சென்று திரும்பும்போது) மா.அரங்கநாதன் பாண்டிச்சேரியில் வசிப்பதை அறிந்து, அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். எழுதுகிறவன் எவ்வளவு கூர்மையான சிந்தனையாளனாக இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அவர். சில மணி நேரங்கள் அவருடன் பேசியதை அகநாழிகையில் நேர்காணலாக வெளியிட விரும்பி ஒலிப்பதிவாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

*



இணையத்தில் இலக்கியம் பகிர்கிறவர்கள் பெரும்பாலும் ஜெயமோகன், சாருநிவேதிதா மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களைச் சுற்றியே ஜல்லியடிக்கிறார்கள். இவர்களைத்தவிர பிற எழுத்தாளர்களை இவர்கள் வாசிப்பதில்லையா அல்லது இவர்களே போதும் என முடிவு செய்து விட்டார்களா என்று தெரியவில்லை. இவர்களையும் முழுமையாக எத்தனை பேர் வாசித்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இவர்களைத் தவிர இருக்கின்ற எழுத்தாளர்கள் குறித்தும் இணைய வாசகர்கள் கருணை கூர்ந்து பரிசீலிக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

*


கடந்த ஆண்டு திருமாவளவனை அவரது இல்லத்தில் சந்தித்த போது அவரது சில புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுத்தார். நன்றியைப் பகிர்ந்து கொண்டு மரபுப்படி சால்வை அணிவித்து ஒரு நிழற்படமும், அவர் என் தோளில் கைபோட்டு நெருங்கியபடி ஒரு நிழற்படமும் எடுத்துக் கொண்டேன். திருமாவளவன் கொடுத்த புத்தகத்தில் ஒன்றான அவரது கவிதைகளை சமீபத்தில் (இந்த வார்த்தை பலருக்கும் அலர்ஜி என்பது தெரியும்) படித்து ..............புறும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.

அரசியல் ஈடுபாடுள்ள கவிஞர்களின் வழமைப்படியே பல்வண்ண அச்சில் பெரியார், பிரபாகரன், பாரதிதாசன், யாசர் அராபத், திலிபன், அம்பேத்கர், ரெட்டை மலை சீனுவாசன், பெருஞ்சித்திரனார் மற்றும் திருமாவளவன் படங்களுடன் கவிதை வரிகளும் இருந்தன.

*


விமர்சனம் என்பது மிக நுட்பமான விஷயம். ஒரு படைப்பின் கூறுகளை ஆராய்ந்து விருப்பு வெறுப்பற்று கருத்துகளை முன்வைப்பதும், அது சார்ந்த ஆரோக்கியமான விவாதங்களை எழுப்புவதுமே விமர்சனத்தின் அடிப்படையான நோக்கமாக இருக்க வேண்டும். தமிழில் விமர்சனம் இரண்டு வகையாக முன் வைக்கப்படுகிறது. ஒன்று எழுதுவபரைக் கருத்தில் கொண்டு படைப்பை விமர்சிப்பது. மற்றொன்று சுயவிருப்பின் பொருட்டு படைப்பை நிராகரிப்பது அல்லது ஏற்பது. தற்போது எழுதப்பட்டு வருகின்ற புத்தக விமர்சனங்களை ஒப்பு நோக்கினால் இன்றைய படைப்பு விமர்சனம் எவ்வாறு எழுதப்படுகின்றன என்பது தெரிந்து விடும்.

ஒரு படைப்பை படிக்கின்ற வாசகன் அதன் மீதான சுய வாசிப்பு அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். அது விமர்சனம் அல்ல, அனுபவ வெளிப்பாடு என்ற அளவிலேயே அதை ஏற்றுக் கொள்ளலாம். ஒரு அனுபவத்தை சக மனிதனுடன் பகிர்ந்து கொள்கிற முனைப்புதான் வாசக வெளிப்பாடு. ஒரு படைப்பை உள்வாங்கிக் கொள்வதற்கான ஆயத்தத்தை ஏற்படுத்துவதே விமர்சனத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.

*


கணையாழியில் (1986 என்று நினைக்கிறேன்) வெளியான ‘அப்பாவின் குகையில் இருக்கிறேன்’ என்பதுதான் நான் முதல் முதலில் வாசித்த கோணங்கியின் கதை. தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல் திட்டத்தில் தேர்வு பெற்ற குறுநாவல் அது. மிக எளிய வாசிப்பில் கதையின் முடிச்சு பிடிபட்டு விடுகின்ற கதை அது. அப்போதைய கோணங்கி வேறு.

வாசிப்பின் ஆரம்ப நாட்களில் கோணங்கியின் எழுத்துகள் மிக வசீகரமானவையாக இருந்தன. மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள் என ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு கிளியிடம் இருக்கின்ற மாயாவியின் உயிரைப் பறிக்கச் செல்வதான சுவாரசியத்தை கொடுக்கின்ற வல்லமை படைத்தவை அவரது கதைகள். அவரது கதைகளில் இழையோடும் தொன்மம் சார்ந்த படிமங்கள் ஈர்ப்பானவை. ஒவ்வொரு வரியும் ஒரு சிறுகதைக்கு ஒப்பானதாக இருக்கும். வனாந்தரத்தில் தனியே செல்கிறவனை திடுக்கிடச் செய்கின்ற மயிலின் அகவலைப் போல ஒரு பதட்டத்தை வாசிப்பினூடாக அளிக்கின்ற படைப்புகள் கோணங்கியுடையவை. கோணங்கியின் ‘பாழி’ வாழ்வின் தடங்களை சலனப்படுத்தி உயிர்ப்பூட்டுகின்ற மிக முக்கியமான ஒரு படைப்பு. 

எந்த காரணமுமின்றி கோணங்கியை வாசிக்காமலே புறக்கணிக்கிறவர்களாயிருக்கிறார்கள் பலர் அல்லது கோணங்கியை முழுமையாக வாசித்தவர்கள் போல தங்களை காட்டிக் கொள்கிறார்கள். இதுவே கோணங்கியின் தனித்துவம்.

*

பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname