Showing posts with label உயிர்மை பதிப்பகம். Show all posts
Showing posts with label உயிர்மை பதிப்பகம். Show all posts

Tuesday, October 23, 2012

நான் ஒரு சாமானியன் - லோகி

நான் ஒரு சாமானியன். பசியும் தாகமும் அன்பும் வெறுப்பும் துரோகமும் புறக்கணிப்பும் என் வாழ்க்கையில் அனுபவங்களாக ஆகியுள்ளன. என்னைச் சுற்றி இரையும் வாழ்க்கைக் கடல். நான் அதில் ஒரு துளி. இந்தக் கரையிலாக் கடலில் எத்தனை முத்துக்கள். எத்தனை மீன்கள்.. எனக்குப் பிடித்தமானவற்றை தொட்டு எடுத்தால் போதும். தேடக்கூட வேண்டியதில்லை. எல்லாரும் தேடுவது அபூர்வமான ஒரு முத்தை. அது அவனடைய அதிர்ஷ்டத்தைச் சார்ந்தது.  
         
பிறருக்கு சர்வ சாதாரணம் என்று தோன்றக்கூடியவற்றில் கூட கலையைக் கண்டு பிடிப்பவனே மேலான கலைஞன். எனக்கு அற்பமான விஷயங்கள் கூட ஆழமான மனத்தூண்டலை அளித்து உள்ளன. ஒரு நாய் இரவில் பரிதாபமாக ஊளையிட்டதைக் கேட்டு நான் ஆழமான உணர்வெழுச்சியை அடைந்து எழுதியிருக்கிறேன். ஒரு சொல், ஒரு முகம், ஒரு காட்சி கூட ஒரு கதைக்கான தொடக்கமாக மாறக்கூடும்.

ஆறாம் வகுப்பில் படிக்கும்போது  நான் ஒரு எலிக்குஞ்சைக் கொன்றேன். அந்தத் துயரமே என்னை என் முதல் படைப்பை எழுத வைத்தது. பிற்பாடு எத்தனை கதைகள். எத்தனை நாடகங்கள், சினிமாக்கள். ஆனால் அடிப்படையில் நான் ஒரு சிறுகதைக்காரன் என்று படுகிறது. சிறுகதையின் உத்தியும், வடிவமும்தான் என் திரைக்கதைகளிலும் கடைப்பிடிக்கப் பட்டுள்ளது.

• லோகிததாஸ்


தனது நண்பரும், நல்லாசிரியருமாக இருந்தவரைப் பற்றிய நினைவுகளும், மதிப்பீடுகளும் என்ற அடங்கிய நூல் இது என்ற குறிப்புரையோடு, மலையாள இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான லோகிததாஸ் பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கும் ‘லோகி - நினைவுகள் - மதிப்பீடுகள்‘ என்ற புத்தகத்தை நேற்று வாசித்து முடித்தேன். 2009ல் வாங்கிய புத்தகம். இப்போதுதான் என்னால் வாசிக்கப்பட்டு சாபல்யம் அடைந்தது

2009 இறுதியில் என்று நினைக்கிறேன். ‘அவள்  பெயர்  தமிழரசி‘  படத்தின்  முன்னோட்டக்  காட்சி திரையிடலை  முன்னிட்டு  இயக்குநர்  மீரா  கதிரவன்,  சென்னை  அருணா  இன்  குடிமையத்தில்  நண்பர்களுடனான  சிறு  ஒன்று  கூடலுக்கு  ஏற்பாடு  செய்திருந்தார்.  அன்றைய  தினம்  நண்பர்கள்  உரையாடல்  இரவு  வெகுநேரம்  நீடித்தது.  மீரா  கதிரவனுடன்  நீண்ட  நேரம்  பேசிக்  கொண்டிருந்தேன்அவர் வழியாகத்தான் லோகிததா பற்றி  அறிய முடிந்தது. (2009  ஜீன்  மாதத்தில்  லோஹி  காலமானார்).  அதற்கு  முன்பாக  நடிகை  மீரா  ஜாஸ்மின் – லோகி  இருவரின்  அந்தரங்க  தோழமை  பற்றிய  செய்திகளின்  வழியாக மட்டுமே அவரை கேள்விப்பட்டிருக்கிறேன்

மலையாள  திரைப்பட  உலகின்  திரைக்கதையாசிரியர்களின்  பட்டியலில்  தவிர்க்க  இயலாத  பெயர்  லோகி.  ஆரம்பத்தில்  சிறுகதையாசிரியராக  அறியப்பட்ட   லோகி  ‘சிந்து சாந்தமாய் ஒழுகுந்து‘  என்ற  நாடகத்தின்  மூலமாக  பரவலாக   அறியப்பட்டார்.   நடிகர்  திலகன்தான்  லோகிததாசை  திரைத்துறையில் கொண்டு  வந்தார்சிபி  மலையில்  இயக்கிய  ‘தனியாவர்த்தனம்‘  தான்  லோகி திரைக்கதை  எழுதிய  முதல்  படம்.  சிறந்த  திரைக்கதைக்கான  கேரள அரசின் விருதைப் பெற்றது அப்படம். தொடர்ந்து பல படங்களுக்கு திரைக்கதை எழுதிய லோகி 1997 ல்பூதக்கண்ணாடிஎன்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, அப்படத்திற்காக மிகச்சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றார்.

ஒரு சிறுகதையாசிரியாக ஆரம்பித்த லோகியின் படைப்பூக்கம் என்பது அவருடைய ஆளுமை சார்ந்தது. எளிமையான நேரடியான மனிதர். கனிவையே தன்னியல்பாக கொண்டவர். விசித்திரமான பெண்மைச் சாயல் அவரது எல்லா செயல்பாடுகளிலும் இருந்தது என்கிறார் ஜெயமோகன்.

கதையுடெ காணாப்புறங்கள்‘ (கதையின் காணப்படாத பக்கங்கள்) என்கிற லோகியின் கட்டுரையுடன் ஆரம்பிக்கிறது இப்புத்தகம். ஒரு சினிமா எப்படி உருவாகிறது என்பதைப் பற்றி சாதாரண ரசிகர்களுக்கு இப்போது கூட பெரிய புரிதல் ஏதுமில்லை. பல சமயம் ஒரு நடிகர் அல்லது இயக்குநருடன் தொடர்புபடுத்தி அவர்கள் அந்தப் படத்தைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். சினிமா ஒரு கூட்டு முயற்சி. சினிமாவில் எழுத்தாளனின் பங்கு குறித்து பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை என்னும் லோகி, சினிமாவில் திரைக்கதையாசிரியனின் பங்கு குறித்து இக்கட்டுரையில் விரிவாகப் பேசியிருக்கிறார். இந்த கட்டுரைகள் மலையாள மொழியில் புத்தகமாகவும் தொகுக்கப்பட்டிருக்கிறது.

அவருடைய திரைக்கதையில் வெளியான படங்களைக் குறித்த கருத்துகளும்காதலன், கலைஞன், ரசிகன், தனியன் என தலைப்பிட்டு லோகியின் வாழ்க்கை பற்றியும், அவரது ஆளுமை குறித்தும் இப்புத்தகத்தில் சுருக்கமாக எழுதியிருக்கிறார் ஜெயமோகன். ‘திரைஇதழுக்காக ஜெயமோகனால் லோகியுடன் நிகழ்த்தப்பட்டஒரு நீண்ட உரையாடல்என்ற தலைப்பிலான விரிவான நேர்காணலும் இருக்கிறது.


லோகி - நினைவுகள் - மதிப்பீடுகள்‘  என்ற இந்தப் புத்தகத்தில் லோகியுடனான தனது அறிமுகம், அவருடனான நினைவுகள், அவரைப் பற்றிய மதிப்பீடுகளைமிக எளிமையான நடையில்,  ஜெயமோகன் பகிர்ந்துள்ளார். இப்புத்தகத்தின் வழியாக லோகிததாஸ் என்ற ஆளுமையைப் பற்றி நாம் அறிய முடிவதுடன், மலையாள திரைப்படச் சூழல் பற்றிய அறிமுகத்தையும், பார்க்கத் தவறிய பல மலையாள திரைப்படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.

லோகிததாஸ் இயக்கிய திரைப்படங்கள்

பூதக்கண்ணாடி - காருண்யம் - .ஒர்மச் செப்பு - கன்மதம் - அரயன்னங்களோட வீடு - ஜோக்கர் - சூத்ரதாரன் - கஸ்தூரி மான் (மலையாளம் & தமிழ்) - சக்ரம் - சக்கரமுத்து - நிவேத்யம்




‘லோகி’ நினைவுகள் - மதிப்பீடுகள்
ஆசிரியர் :  ஜெயமோகன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
128 பக்கங்கள் விலை ரூ.75/-


Tuesday, January 10, 2012

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை - ஒரு பார்வை - ராமலஷ்மி


பொன். வாசுதேவனின் “ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை” - ஒரு பார்வை - ராமலஷ்மி

கவிதைகளைப் பிரசுரித்த இதழ்களின் பட்டியலே அவற்றின் சிறப்புக்கு அணிந்துரையாக மிளிர, கவிஞரின் நெடிய இலக்கிய பயணத்தை எண்பத்து ஏழு கவிதைகளுக்குள் அடக்கிக் கொண்டதாக “ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை”. பாசாங்குகளற்ற நேர்மையான மென்மையான உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது. வாழ்வின் மீதான அவதானிப்புகளை அழகுற வெளிப்படுத்தும் கவிதைகளுக்கு மத்தியில் அன்பைத் தேடுவனவாகவும் பிரியங்களைப் போற்றுவனவாகவும் இருக்கின்றன பல.

எத்தனையோ விதமான தேடல்கள் நிரம்பிய உலகில் தேடிக் கிடைத்த எவற்றாலும் மகிழ்ச்சியுறாத மனிதமனம் அன்பு ஒன்றினால் மட்டுமே மனநிறைவு காண்கிறது. ஊற்றெடுக்கும் சுனைநீர் எதன் பொருட்டும் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்வதில்லை. மனதிலிருந்து பீறிடும் பிரியங்கள் அதற்கான காரண காரியங்களை ஆராய்வதில்லை. எதற்கும் கட்டுப்படாது சுரக்கின்ற அதன்வேகம் பதிலுக்குப் பெறபடும் அன்புக்கு மட்டுமே அடங்குகிறது.

தொடங்கியிருக்கிறோம்’ கவிதையில்..,
“...எனக்குள் பூத்த ஆண்டாளைப்
பறித்தெடுத்து சூடிக்கொள்கிறேன்
எதற்கெனத் தெரியாமல்.”

‘கொடுக்கல் வாங்கல்’ எனும் ஒரு கோட்டில் பயணிக்கும் உலகில் இந்தக் கோட்பாட்டை உடைத்து, விதிவிலக்காக நிபந்தனைகளற்று இருந்தால் மட்டுமே அன்பு அன்பாக இருக்கமுடியும்:
“நொடிகளைத் துரத்தும் நிமிடங்களாய்
துரத்திக் கொண்டேயிருக்கிறது
அன்பு காலம் காலமாய்
...

அன்பின் பிரதேசத்தால் வாய்த்திருக்கிறது
வாழ்வின் ஆசிர்வாதம்

உனக்கும் எனக்கும்
அவருக்கும் இவருக்கும்
யாவருக்கும்”

காற்றைப் போல் கலைந்து விடக்கூடிய, ஒளியைப் போல் மறைந்து விடக்கூடிய சாத்தியங்களைத் தன்னோடு கொண்ட அன்பினைச் சார்ந்து வாழ்வதன் சிரமங்களைப் புரிந்திருந்தாலும் அதனை யாசிப்பதை நிறுத்த முடிவதில்லை எவருக்கும். இங்கே கவிஞருக்கும். வாழ்க்கையின் அடிநாதம் அன்பு என்கிற புரிதலுடன் அதனை யாசித்துப் பெறுவதில் எந்தத் தயக்கமும் காட்டாமல் துணையிடமும் ‘பிரிந்து போன தோழி’யிடமும் தாய்மையைக் கண்டு போற்றி நிறைவு கொள்கிறார். ‘சொல்ல இருக்கிறது காதல்’, ‘பால்ய விளையாட்டு’ எனப் பிரியம் பேசும் பல கவிதைகளுக்குள் ஒவ்வொரு எழுத்திலும் அன்பை இழைத்துக் கொண்டு வார்த்தைகளான வரிகள் சில:

பிரியத்தில் விளைந்த கனி’:
“.. பிரியத்தின் பொருட்டே
உனக்குள் என் வாழ்வு
பூரணமடைந்திருக்கிறது”

பிரியங்கள் உதிர்த்த கனி’:
“வலுக்கட்டாயமாய்
உதிர்ந்த பிரியங்களைத் 
திசைக்கொன்றாய் வீசிச் சுழற்றி
கடத்திக் கொண்டிருக்கிறது காற்று’

புசிக்கத்தூண்டும் பிரியங்கள்’:
”நிகழ்வின் சாத்தியங்களாக
அன்பும் பிரியமும் மட்டுமே
என்று விதிக்கப்பட்டிருக்கிறது
பிரியங்களுக்கு”

உண்மையான அன்பின் மொழி மெளனமே. அன்பின் பரிமாற்றம் நிகழ்ந்த பின், அதன் திண்மை இளகி இனிமை கூடுவது இயல்பாக நிகழ்வது. பரிமாற்றம் தவறும் போது இனிமையின் இடத்தில் வலியும் வேதனையும் வந்தமர்கிறது என்றால் பரிமாற்றங்களுக்கும் பிறகும் கூட பலவீனப்படுகிற அன்புகளால் இணையை அலட்சியப்படுத்துவதும், அன்பை சாதகமாக எடுத்துக் கொள்வதும் நிகழவே செய்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மெளனமாக அனுபவிக்கும் வலியைப் பற்றிய கவலையிருப்பதில்லை. பாலினப் பாகுபாடின்றி, அன்பிற்காகவே அனைத்து உதாசீனங்களையும் பொறுத்துக் கொண்டு செல்லும் இணைகள் கொண்ட உலகம் இது. இப்படியான அன்பின் எல்லாப் பரிமாணங்களையும் காட்டுவதான தொகுப்பின் முதல் கவிதை ‘மொழி’வது: 
“உன்னுடன் சேர்ந்து வரும் 
மெளனம் போதுமெனக்கு
...
உனது மெளனம் என்னை
மறுத்துப் பேசாது
...
தொடர் பின்றி நான் பேசினாலும்
உனது மெளனம் என்னிடம் 
கைகட்டி தலை குனிந்து நிற்கும்
...
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் மெளனத்தைக் கடைபிடிக்கும்வரை.”

பிரியங்களின் வன்முறை’யில்..
“வன் எழுத்துக்களில் புலனாகும்
குரூரம் யெப்போதும் யாரையும்
அண்டச் செய்வதில்லை என்கிறாள்

பிரியங்களின் கொடுமனம் நிகழ்த்தும்
வன்முறை பற்றி
ஒருபோதும் நான் அவளிடம் 
கேட்டதேயில்லை”.

கடைசி நிறுத்தம் வரை சென்று கொண்டிருக்கும் இவரது ‘பிராயணம்’ போலவே கடக்கின்றது தொகுப்பு பாடுபொருளாய்ப் பல வாழ்வியல் காட்சிகளை உள்ளடக்கி. ‘தன்னையே கீறக்கூடுமென அறிந்திருந்தும்’ வளர்க்கும் நகங்களைப் பற்றிப் பேசுகிறது ‘இருப்பு’.  உய்தலுக்கானப் போராட்டத்தை எப்படி விலங்குகளுடன் நடத்த வேண்டி வருகிறது மனிதனுக்கு என்பதைக் காட்டுகிறது ‘இருத்தல்’. தந்திரங்களையும் வஞ்சகங்களையும் சூழ்ச்சித் திறம் என்று கொண்டாடும் உலகெங்கும் இவர் காட்டும் ‘மிதந்து கொண்டேயிருக்கும் வலை’கள் ஏராளம்.

ஒரு கவிதையை வாசிக்கும் பொழுதில்’, ‘ஓவிய நீட்சி’ ஆகியன பிடித்த கவிதைகள் எனில், பிடித்த வரிகளைக் கொண்டதாக ‘என்னிடம் வந்த இந்த நாள்’:
“தாழப்பறந்தும் கையில் சிக்காத
விருப்பப் பறவையாய்
கொஞ்சமும் இரக்கமில்லாது
கடந்த செல்கிறது இந்த நாள்”.

கவிஞர் ஒரு வழக்கறிஞர். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதில் அவருக்குச் சம்மதமில்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்படும் பலபேரின் பின்னணியை, சிறுவயதுப் போராட்டத்தை, எது அவர்களை அச்செயலுக்கு உந்தியது எனும் காரண காரியங்களை நீதிமன்றங்கள் அலசுகின்றனவா? அவற்றைக் கருத்தில் கொண்டு பரிவு காட்டப்படுகின்றதா? விடை தேடுவதே அவசியமற்றதாக ஒதுக்கப்படும் கேள்விகள் இவை.
“அவனைவிட பாவங்களை
நீங்களும் செய்திருக்கிறீர்கள்
நானும்தான்...”

‘அகநாழிகை’ என்ற பெயரில் சிற்றிதழும் பதிப்பகமும் நடத்தி வரும் பொன். வாசுதேவனின் இந்த முதல் கவிதைத் தொகுப்பில் ‘கடவுளைச் சுமந்தவன்’ சொல்லுகிறான்:
“பத்திரமாக கோவிலில்
இறக்கி விட்டேன் கடவுளை

நிம்மதியாகவும்
மனநிறைவாகவும் இருந்தது
கடவுளுக்கும்”

இருபது ஆண்டுகளாகச் சுமந்து வந்த கவிதைகளைத் தொகுப்பாக இறக்கி வைத்த கவிஞருக்கும் இது பொருந்தும். மன நிறைவு வாசிப்பவருக்கும்!
***


ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை
விலை ரூ:70. பக்கங்கள்: 112. வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: 
ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்.

ஜனவரி 5 முதல் 17 வரைக்குமாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், கடை எண்: F 27. 
*** *** ***

Comments system

Disqus Shortname