Sunday, January 29, 2012

சொலவடை


கிராமங்களில் பேச்சு வாக்கில் பொசுக்கு பொசுக்கென சில வார்த்தைகள் சொல்வாங்க. எல்லாம் அவங்க வாழ்ந்த அனுபவத்திலயும், மூத்தோரை சொல்கேட்டு வழிவழியா புழங்கின வார்த்தைங்கதான். ஆனா நறுக்குன்னு இருக்கும். அதைத்தான் சொலவடைன்னு சொல்வாங்க.. கிட்டத்தட்ட பழமொழிகள் போலத்தான். எனக்கு தெரிஞ்சத நான் சொல்றேன். தெரிஞ்சதுன்னா படிச்சது, கேட்டதுதான். உங்களுக்கு தெரிஞ்சத நீங்க சொல்லுங்க.. வேறென்னத்த கண்டோம்.

சொலவடை சிலத படிப்போமா..

• படுத்துகிட்டு தூங்குமாம் நாயிநின்னுகிட்டு தூங்குமாம் பேயி..

• கோவணத்துல காசிருந்தாகோழிய கூப்பிட பாட்டு வரும்

• கூந்தலிருக்கற சீமாட்டி கொண்டையும் முடிவா.. அள்ளியும் போட்டுக்குவா..

• வௌக்கு மாத்த கட்டி வெக்கலன்னா அது வேலைக்காகாம போயிரும்.

• உடுத்த சீலையில்லன்னு சின்னாத்தா வூட்டுக்க போனாஅவ ஈச்சம்பாய சுத்திகிட்டு எதுக்க வந்தாளாம்..

• அரிசின்னு அள்ளி பாப்பாரும் இல்ல. உமின்னு ஊதிப் பாப்பாரும் இல்ல.

• ஊசிப் போன மொச்சைய ஒழக்கு வாங்காதவன் பால்கோவா குடு பத்து ரூவாக்கின்னானாம்

• எள்ளு எண்ணைக்குகாயிது, எலிப் புழுக்கை எதுக்கு காயிது.

• புள்ள வேணுங்குறவ வாயக் கட்டணும்; புருசன் வேணுங்குறவ வயத்தக் கட்டணும்.

• ஓடை மரத்துல ஓநாய் ஏறலாம். பனை மரத்துல பன்னி ஏற முடியுமா?

• கொண்டவனை அறிஞ்சுதான் கூரை ஏறி சண்டை போடணும்

•  அக்கப்போரு பிடிச்ச நாயிவைக்கப் போர்ல படுத்துக்கிட்டுதானும் திங்காதாம்திங்கிற கழுதையவும் திங்க விடாதாம்

• மேஞ்ச மாட்டக் கெடுத்துச்சாம் மெனக்கெட்ட மாடு.

• காய்ச்சுவார் காய்ச்சினால்கழுத மூத்திரம் கூட நல்லாயிருக்கும்.

• மக வரமுன்ன பூட்டிக்க கழத்திக்க; மருமக வரமுன்ன உண்டுக்க திண்டுக்க.

• வெல்லந் தின்னவனை விட்டுட்டு வெரல் சூப்பினவனை புடிச்சிட்டு போனா எப்படி?

• பார்த்துக் கெட்டது புள்ள;பாராமக் கெட்டது பயிறு.

• பேச்சுப் பிடிச்ச நாயிவேட்டைக்கு உதவாது .

• குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டேன். மலடுன்னு இல்லாம பிள்ளப் பெத்துக்கிட்டேன். அதுக்கு மேல ஒண்ணுமில்ல

• எட்டி எட்டிப் பாத்தவளுக்கு எட்டுப் பணியாரம். முட்டுத் தேயச் சுட்டவளுக்கு மூணு பணியாரம்.

• வட்டிக்கு வாங்கி அட்டிகை வாங்கினாளாம்அட்டிகையை வித்து வட்டி கட்டினாளாம்

• கழுத கோவம் கத்துனா தீரும்.

• நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா சிவலிங்கம்னு தெரியுமா.

• வந்தன்னைக்கு வாழையில. மறுநா தைய இல. மூணாம் நா கையில.

• அம்மி அடிச்சன்னைக்கே, குழவியும் அடிச்சு இருப்பான்.

• தட்டிபோட்ட ரொட்டிய பெரட்டிப் போட நாதியில்ல.

• நுங்கு வெட்டினவன் ஒருத்தன். நோண்டித் திங்கினவன் இன்னொருத்தன்.

• விதை ஒண்ணு போட சுரை ஒண்ணா மொளைக்கும்.

இப்போதைக்கு இம்புட்டுதான்.. மிச்சம் மீதிய நீங்க சொல்லுங்க..



நன்றி : பழமைபேசி, மாதவராஜ், சகோதரன், வாசித்த புத்தகங்கள் மற்றும் கூகுளாண்டவர்.

Sunday, January 15, 2012

வாசிப்பவரை விசுவாசிக்கும் எழுத்து : யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்‘



யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்‘ என்ற இத்தொகுப்பில் மொத்தம் பனிரெண்டு சிறுகதைகள் உள்ளனஇக்கதைகள் பத்திரிகைகளிலும்இணைய இதழ்களிலும் வெளியானவை.


திருநங்கைகள் தொடர்பான ஆர்வம் காரணமாக நான் பல ஆண்டுகளாக கூவாகம் சென்று அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து வந்திருக்கிறேன். இதன் தொடர்ச்சியாக வாசிப்பில் எனக்குக் கிடைத்ததுதான் எஸ்.பாலபாரதி எழுதியஅவன்அது = அவள்என்ற புத்தகம். மூன்றாம் பாலினமாக அங்கீகாரம் பெற்றிருக்கும் திருநங்கைகளின் வாழ்வின் வலிகளைப் பேசிய  இப்புத்தகத்தின் வழியாகத்தான் எனக்கு அவர் அறிமுகம். அதன் பிறகு இணையத்தில் எழுத வந்த பிறகு நேரிலும் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்ற கேள்வி காலம் காலமாக இருந்து கொண்டே இருக்கிறது. இதுதான் இலக்கியம் என்று ஒரு பிரிவினரும், இதெல்லாம் இலக்கியமில்லை என்று மற்றொரு பிரிவினரும் தத்தம் தரப்பை உரக்கச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அவரவர் திராணிக்கு ஏற்றபடி, அனுபவ மதிப்பீட்டு அளவில் படித்ததும் பிடித்தது எல்லாம் இலக்கியம்தான்.

பொதுவாக சிறுகதைத் தொகுப்புகளை கடைசிக் கதையிலிருந்து வாசிப்பது என்னுடைய வழக்கம். பாலபாரதியின் கதைகளையும் அப்படித்தான் வாசித்தேன். இத்தொகுப்பின் மீதான என் அகமதிப்பீடை இது உயர்த்திக் கொள்ளச் செய்தது. காரணம் முதல் கதையிலிருந்து வாசித்திருந்தால், இத்தொகுப்பைப் பற்றிய என்னுடைய பார்வை வேறு மாதிரியாக இருந்திருக்கக் கூடும். பாலபாரதியிடம் இந்த கருத்தைச் சொன்னதும், எழுதிய காலவரிசைப்படி இக்கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது என தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதை நினைவுபடுத்தினார். ஒரு படைப்பாளியின் எழுத்தின் வீச்சை அறிவதற்கான ஒரு உத்தியாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தொகுப்பின் பனிரெண்டு கதைகளும் எழுதியே ஆக வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல், வாழ்க்கையில் அடித்தட்டு மக்களின் வலியுணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப் பட்டவை என்பது இக்கதைகளில் நான் உணர்ந்த பொதுத்தன்மை.

காற்றில் உந்தப்பட்ட காகிதம் அது செல்கிற திசையெல்லாம் சென்று அலைக்கழிக்கப்படுவது போல வாழ்க்கை முழுவதும் நிலையற்று உழல்கிற அடித்தட்டு மக்களின் வாழ்தலுக்கான அவஸ்தை, எதிர்கொள்கிற இழப்பு, ஏற்படுகிற வலி இதுதான் இந்தக்கதைகளின் அடிநாதம். பாலபாரதியின் சுய வாழ்வனுபவம் அவருக்கு இக்கதைகளின் வழியாகச் சொல்ல உதவுகிறது

ஒரு நுனியில் ராமேஸ்வரம் மற்றொரு நுனியில் பம்பாய் என கைகளில் சுற்றிக் கொண்டு இதனூடாக அவிழ்க்க முடியாத அச்சிக்கலின் முடிச்சுகள் வழியே தன் பார்வையை கதைகளாக ஆக்கியிருக்கிறார்.

பாலபாரதியின் கதைகளில் காணக்கிடைக்கிற விவரணைகள் மிக நுட்பமானவை. இவருக்கு சொல்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. ஒரு இடத்தை விவரிக்கும் போதே உடன் பயணிக்கிற உணர்வு நமக்கும் ஏற்பட்டு விடுகிறது. ‘நகரம்என்ற கதையில், பொங்கல் வீடு எனப்படும் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து நடக்கத் தொடங்குகிற கதை நாயகனை விவரித்துக் கொண்டே வரும்போது அப்பகுதியின் அவலமான சூழல், வேலை செய்கிறவர்களின் நிலை என எல்லாவற்றைப் பற்றியும் ஒரு சித்திரமும், அனுதாபமும் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது.

அதேபோலசாமியாட்டம்கதையில்டண்டக்கும் டண்டக்கும்.. டின்.. டின்..‘ என பறையொலி ஒரு இதமான இசையோட்டமாக ஆரம்பிக்கின்ற சாமியாடியின் ஊர்வலத்தை சொல்லிக்கொண்டே வந்து, நிறைவடையும் நேரத்தில் அதேடண்டக்கும் டண்டக்கும்.. டின்.. டின்..‘ என்ற வார்த்தைகளை உச்சத் தொனியில் நம்மை உணரச் செய்து விடுகிறார்.

மனித சமூகத்தில் எவ்வளவுதான் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் நம்மை மீறிய ஒன்றிடம் ஒப்புக் கொடுப்பது என்பது ஒரு விதமான தப்புவித்தல். இது மனித குண இயல்புகளில் ஒன்று. ‘கடவுள் என்பது ஒரு நம்பிக்கைஅவ்வளவுதான். ‘வேண்டுதல்என்ற கதையில் தொலைந்து போன மகன் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் முறையிடச் செல்கிற இடத்தில் அங்கு நடக்கிற ஒரு சம்பவம் நடைமுறை வாழ்வின் யதார்த்தத்தை உறைக்க வைக்கிறது.

அடிமைகளாக சிக்கி நகர வாழ்வில் செக்கு மாடுகளாக சுற்றிக் கொண்டிருக்கும் வளரிளம் பருவத்தினரைப் பற்றிய கதையானதுரைப்பாண்டிஎன்ற கதை இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான கதை. மேலும் இத்தொகுப்பில் உள்ள விடிவெள்ளி, தண்ணீர் தேசம், கடந்து போதல், பொம்மை ஆகிய கதைகளும் என்னைக் கவர்ந்தவை.

சிறுகதையின் முக்கிய நோக்கம் ‘Creating a Single Effect’ என்கிறார் எட்கர் ஆலன் போ. எந்தப் படைப்பும் வாசித்த உடன் ஒரு உணர்வை திறம்பட ஏற்படுத்த வேண்டும். அவ்வகையில்சாமியாட்டம்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ஒரு ஆரம்பம், கதைக்களம், முடிவு என அமைந்திருக்கின்றன. வரிசைக்கிரமமாக அமைந்திருக்கிற பாலபாரதியின் இந்த எழுத்துப்பாணி படித்து முடித்ததும் திருப்தியான ஒரு உணர்வைத் தருகின்றன. யெஸ்.பாலபாரதியின் இந்த முதல் சிறுகதைத் தொகுப்பின் வாயிலாக கதைசொல்லியாக அவர் ஆரோக்கியமான முன்னகர்தலை மேற்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.  தொடர்ந்து பல சிறப்பான ஆக்கங்களை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.






சாமியாட்டம்‘ (சிறுகதைகள்
யெஸ்.பாலபாரதி
வெளியீடு
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
விலை : ரூ.70/- (128 பக்கங்கள் )







சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடங்கள்
நிவேதிதா புத்தகப் பூங்கா அரங்கு எண். 326
பிரேமா பிரசுரம் - அரங்கு எண்.344
புக் ஷாப்பர்ஸ் - அரங்கு எண்.370
புதுப் புனல் - அரங்கு எண்.442
டிஸ்கவரி புக் பேலஸ் - அரங்கு எண்.334

Tuesday, January 10, 2012

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை - ஒரு பார்வை - ராமலஷ்மி


பொன். வாசுதேவனின் “ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை” - ஒரு பார்வை - ராமலஷ்மி

கவிதைகளைப் பிரசுரித்த இதழ்களின் பட்டியலே அவற்றின் சிறப்புக்கு அணிந்துரையாக மிளிர, கவிஞரின் நெடிய இலக்கிய பயணத்தை எண்பத்து ஏழு கவிதைகளுக்குள் அடக்கிக் கொண்டதாக “ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை”. பாசாங்குகளற்ற நேர்மையான மென்மையான உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது. வாழ்வின் மீதான அவதானிப்புகளை அழகுற வெளிப்படுத்தும் கவிதைகளுக்கு மத்தியில் அன்பைத் தேடுவனவாகவும் பிரியங்களைப் போற்றுவனவாகவும் இருக்கின்றன பல.

எத்தனையோ விதமான தேடல்கள் நிரம்பிய உலகில் தேடிக் கிடைத்த எவற்றாலும் மகிழ்ச்சியுறாத மனிதமனம் அன்பு ஒன்றினால் மட்டுமே மனநிறைவு காண்கிறது. ஊற்றெடுக்கும் சுனைநீர் எதன் பொருட்டும் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்வதில்லை. மனதிலிருந்து பீறிடும் பிரியங்கள் அதற்கான காரண காரியங்களை ஆராய்வதில்லை. எதற்கும் கட்டுப்படாது சுரக்கின்ற அதன்வேகம் பதிலுக்குப் பெறபடும் அன்புக்கு மட்டுமே அடங்குகிறது.

தொடங்கியிருக்கிறோம்’ கவிதையில்..,
“...எனக்குள் பூத்த ஆண்டாளைப்
பறித்தெடுத்து சூடிக்கொள்கிறேன்
எதற்கெனத் தெரியாமல்.”

‘கொடுக்கல் வாங்கல்’ எனும் ஒரு கோட்டில் பயணிக்கும் உலகில் இந்தக் கோட்பாட்டை உடைத்து, விதிவிலக்காக நிபந்தனைகளற்று இருந்தால் மட்டுமே அன்பு அன்பாக இருக்கமுடியும்:
“நொடிகளைத் துரத்தும் நிமிடங்களாய்
துரத்திக் கொண்டேயிருக்கிறது
அன்பு காலம் காலமாய்
...

அன்பின் பிரதேசத்தால் வாய்த்திருக்கிறது
வாழ்வின் ஆசிர்வாதம்

உனக்கும் எனக்கும்
அவருக்கும் இவருக்கும்
யாவருக்கும்”

காற்றைப் போல் கலைந்து விடக்கூடிய, ஒளியைப் போல் மறைந்து விடக்கூடிய சாத்தியங்களைத் தன்னோடு கொண்ட அன்பினைச் சார்ந்து வாழ்வதன் சிரமங்களைப் புரிந்திருந்தாலும் அதனை யாசிப்பதை நிறுத்த முடிவதில்லை எவருக்கும். இங்கே கவிஞருக்கும். வாழ்க்கையின் அடிநாதம் அன்பு என்கிற புரிதலுடன் அதனை யாசித்துப் பெறுவதில் எந்தத் தயக்கமும் காட்டாமல் துணையிடமும் ‘பிரிந்து போன தோழி’யிடமும் தாய்மையைக் கண்டு போற்றி நிறைவு கொள்கிறார். ‘சொல்ல இருக்கிறது காதல்’, ‘பால்ய விளையாட்டு’ எனப் பிரியம் பேசும் பல கவிதைகளுக்குள் ஒவ்வொரு எழுத்திலும் அன்பை இழைத்துக் கொண்டு வார்த்தைகளான வரிகள் சில:

பிரியத்தில் விளைந்த கனி’:
“.. பிரியத்தின் பொருட்டே
உனக்குள் என் வாழ்வு
பூரணமடைந்திருக்கிறது”

பிரியங்கள் உதிர்த்த கனி’:
“வலுக்கட்டாயமாய்
உதிர்ந்த பிரியங்களைத் 
திசைக்கொன்றாய் வீசிச் சுழற்றி
கடத்திக் கொண்டிருக்கிறது காற்று’

புசிக்கத்தூண்டும் பிரியங்கள்’:
”நிகழ்வின் சாத்தியங்களாக
அன்பும் பிரியமும் மட்டுமே
என்று விதிக்கப்பட்டிருக்கிறது
பிரியங்களுக்கு”

உண்மையான அன்பின் மொழி மெளனமே. அன்பின் பரிமாற்றம் நிகழ்ந்த பின், அதன் திண்மை இளகி இனிமை கூடுவது இயல்பாக நிகழ்வது. பரிமாற்றம் தவறும் போது இனிமையின் இடத்தில் வலியும் வேதனையும் வந்தமர்கிறது என்றால் பரிமாற்றங்களுக்கும் பிறகும் கூட பலவீனப்படுகிற அன்புகளால் இணையை அலட்சியப்படுத்துவதும், அன்பை சாதகமாக எடுத்துக் கொள்வதும் நிகழவே செய்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மெளனமாக அனுபவிக்கும் வலியைப் பற்றிய கவலையிருப்பதில்லை. பாலினப் பாகுபாடின்றி, அன்பிற்காகவே அனைத்து உதாசீனங்களையும் பொறுத்துக் கொண்டு செல்லும் இணைகள் கொண்ட உலகம் இது. இப்படியான அன்பின் எல்லாப் பரிமாணங்களையும் காட்டுவதான தொகுப்பின் முதல் கவிதை ‘மொழி’வது: 
“உன்னுடன் சேர்ந்து வரும் 
மெளனம் போதுமெனக்கு
...
உனது மெளனம் என்னை
மறுத்துப் பேசாது
...
தொடர் பின்றி நான் பேசினாலும்
உனது மெளனம் என்னிடம் 
கைகட்டி தலை குனிந்து நிற்கும்
...
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் மெளனத்தைக் கடைபிடிக்கும்வரை.”

பிரியங்களின் வன்முறை’யில்..
“வன் எழுத்துக்களில் புலனாகும்
குரூரம் யெப்போதும் யாரையும்
அண்டச் செய்வதில்லை என்கிறாள்

பிரியங்களின் கொடுமனம் நிகழ்த்தும்
வன்முறை பற்றி
ஒருபோதும் நான் அவளிடம் 
கேட்டதேயில்லை”.

கடைசி நிறுத்தம் வரை சென்று கொண்டிருக்கும் இவரது ‘பிராயணம்’ போலவே கடக்கின்றது தொகுப்பு பாடுபொருளாய்ப் பல வாழ்வியல் காட்சிகளை உள்ளடக்கி. ‘தன்னையே கீறக்கூடுமென அறிந்திருந்தும்’ வளர்க்கும் நகங்களைப் பற்றிப் பேசுகிறது ‘இருப்பு’.  உய்தலுக்கானப் போராட்டத்தை எப்படி விலங்குகளுடன் நடத்த வேண்டி வருகிறது மனிதனுக்கு என்பதைக் காட்டுகிறது ‘இருத்தல்’. தந்திரங்களையும் வஞ்சகங்களையும் சூழ்ச்சித் திறம் என்று கொண்டாடும் உலகெங்கும் இவர் காட்டும் ‘மிதந்து கொண்டேயிருக்கும் வலை’கள் ஏராளம்.

ஒரு கவிதையை வாசிக்கும் பொழுதில்’, ‘ஓவிய நீட்சி’ ஆகியன பிடித்த கவிதைகள் எனில், பிடித்த வரிகளைக் கொண்டதாக ‘என்னிடம் வந்த இந்த நாள்’:
“தாழப்பறந்தும் கையில் சிக்காத
விருப்பப் பறவையாய்
கொஞ்சமும் இரக்கமில்லாது
கடந்த செல்கிறது இந்த நாள்”.

கவிஞர் ஒரு வழக்கறிஞர். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதில் அவருக்குச் சம்மதமில்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்படும் பலபேரின் பின்னணியை, சிறுவயதுப் போராட்டத்தை, எது அவர்களை அச்செயலுக்கு உந்தியது எனும் காரண காரியங்களை நீதிமன்றங்கள் அலசுகின்றனவா? அவற்றைக் கருத்தில் கொண்டு பரிவு காட்டப்படுகின்றதா? விடை தேடுவதே அவசியமற்றதாக ஒதுக்கப்படும் கேள்விகள் இவை.
“அவனைவிட பாவங்களை
நீங்களும் செய்திருக்கிறீர்கள்
நானும்தான்...”

‘அகநாழிகை’ என்ற பெயரில் சிற்றிதழும் பதிப்பகமும் நடத்தி வரும் பொன். வாசுதேவனின் இந்த முதல் கவிதைத் தொகுப்பில் ‘கடவுளைச் சுமந்தவன்’ சொல்லுகிறான்:
“பத்திரமாக கோவிலில்
இறக்கி விட்டேன் கடவுளை

நிம்மதியாகவும்
மனநிறைவாகவும் இருந்தது
கடவுளுக்கும்”

இருபது ஆண்டுகளாகச் சுமந்து வந்த கவிதைகளைத் தொகுப்பாக இறக்கி வைத்த கவிஞருக்கும் இது பொருந்தும். மன நிறைவு வாசிப்பவருக்கும்!
***


ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை
விலை ரூ:70. பக்கங்கள்: 112. வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: 
ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்.

ஜனவரி 5 முதல் 17 வரைக்குமாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், கடை எண்: F 27. 
*** *** ***

Saturday, January 7, 2012

பிச்சாண்டி திரிந்து கொண்டிருக்கிறான்




வானத்தில் ஒரு நிலவுதான் என்பதைப் போல
அவனை தனியாக விட்டு விட்டு நீ சென்றிருக்கக்கூடாது
சினந்து கவனப்பிசகில் நீ செய்த ஒரு செயலால்
பித்தடைந்து அகத்தின் உச்சியிலேறி
காற்றிலேகிய சன்ன இழையாய்
மலையைச் சுற்றித் தனியனாய்த் திரிந்தபடியிருக்கிறான்.
இதை உன்னோடும் உன்னோடிருக்கும் அவனோடும்
நீ பொருத்திப் பார்க்கிறாய்
உனக்கு எல்லாமுமாய் அவன் இருக்கிறான்
அவனுக்கு நீ ஒன்றுமேயில்லை
தாங்கயியலாமல் அழுகிறாய்
பிச்சாண்டிக்கு அன்பு வெறுப்பு இரண்டுமே அகம் புறம்தான்
கழற்ற இயலாத சங்கிலிதான் இந்த வாழ்க்கை
இதை தாமதமாகவே உணர்கிறான் அவன்.
நினைவு தப்பிய வேளையில் அன்பே சிவம் என உள்ளுக்குள்
வெடித்துச் சிதறியபடி எதிரொலிக்கிறது­


பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname