Tuesday, March 14, 2017

கயிற்றின் மேல் நடத்தல்

கயிற்றின் மேல் நடத்தல்

மார்ச் 2010ல் என்னை அவர் முதன் முதலாகத் தொடர்புகொண்டார். ‘யோனி’ என்ற தலைப்பில் கவிதைகள் எழுதி வைத்துள்ளதாகவும் அவற்றை வெளியிட முடியுமா என்று கேட்டார். மொத்தம் எவ்வளவு கவிதைகள் உள்ளது, எத்தனை பக்கங்கள் வரும் என்று கேட்டபோது அவர் சொன்ன கவிதைகளின் எண்ணிக்கை 400. அதன்பிறகு அவ்வளவு கவிதைகள் வேண்டாம், தேர்ந்தெடுத்துக் குறைக்கலாமே என்று சொன்னேன். சில தினங்களில் 200 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார்.

பொறுமையாக படித்துப் பார்க்கும்படியும், அதன் கருத்துகளோடு நீங்கள் முரண்படலாம் அல்லது வடிவம் சார்ந்த விமர்சனங்கள் இருக்கலாம், அதற்கான நியாயங்கள் என்ன என்று என் தரப்பிலிருந்து நேரில் சொல்லத் தயாரிக்கிறேன் என்ற குறிப்பையும் அனுப்பியிருந்தார். முழுவதையும் படித்த பிறகு நேரில் சந்தித்துப் பேசுவோம் என்றேன். பெரும்பாலான கவிதைகள் பிடித்திருந்தன. அதிலும், குறிப்பிட்ட பொருள் சார்ந்து முழுக்க எழுதப்பட்ட கவிதைத் தொகுப்புகள் குறைவு என்பதால் நல்ல முயற்சியாக இருக்கும் என எனக்குப் பட்டது.

மகாபலிபுரத்தில் சந்திப்பதாக முடிவு செய்து அங்கு சந்தித்துப் பேசினோம். கவிதைகளின் அச்சுப் பிரதியை வைத்துக்கொண்டு மீண்டும் ஒருமுறை கவிதைகளைத் தேர்ந்தெடுத்து இறுதி வடிவம் உறுதியானது. ‘யோனி’ என்ற தலைப்பு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக வைத்தது போன்ற ஒரு தொனியை ஏற்படுத்துகிறது என்ற கருத்தைத் தெரிவித்தேன். மகுடேசுவரனும் இதே கருத்தைத் தெரிவித்ததாகச் சொல்லி, அதை மாற்றச் சம்மதித்தார். அப்படித் தெரிவான தலைப்புதான் ‘பரத்தை கூற்று’.



அக்டோபர் 2010ல் சாருநிவேதிதா ‘பரத்தை கூற்று’ கவிதைத் தொகுப்பை டிஸ்கவரி புக் பேலசில் வெளியிட்டார். (டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற முதல் புத்தக வெளியீட்டு விழா அகநாழிகை பதிப்பகத்தின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழாதான். விநாயகமுருகன் உள்ளிட்ட நான்கு பேரின் புத்தகங்கள் 2009ல் வெளியிடப்பட்டது.) சரவண கார்த்திகேயனின் எழுத்தில் எப்போதும் கூர்மையும், எள்ளலுமான தன்மையை கண்டிருக்கிறேன். பரத்தை கூற்று தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரை மிக அற்புதமானது. அவரது வலைத்தளத்தில் அவர் எழுதும் பத்திகள், விமர்சனங்கள், அனுபவங்கள், அவதானிப்புகள் என எல்லாமே புதிய நோக்கிலான மாற்று சிந்தனையை உடையவை. பரத்தை கூற்று தொகுப்பு பரவலான கவனம் பெற்றது. முழுவதும் விற்றுத் தீர்ந்தும் விட்டது.



பரத்தை கூற்று வெளியான பிறகு அவர் பல புத்தகங்களை எழுதி விட்டார். சமீபத்தில் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ள அவருடைய  ‘இறுதி இரவு’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். வெகுஜன எழுத்து, இலக்கிய எழுத்து என்ற இரு பிரம்புகளில் கட்டப்பட்ட கயிற்றின் மேல் நடக்கிற வித்தைதான் இந்தக் கதைகள். அது அவருக்கே தெரிந்திருக்கிறது என்பது அவருடைய பலம்.

ஒவ்வொரு கதையைச் சொல்லிச்செல்லும்போதும் அவருக்குள்ளிருக்கும் புத்திசாலித்தனம் கதைசொல்லியைக் கீழே தள்ளி மிதித்துவிட்டு, துருத்திக்கொண்டு குறுக்கிடுகிறது. இதனாலேயே நன்றாக சொல்லப்பட்டிருக்க வேண்டிய கதைகள் கூட வலுவிழந்து உதிர்ந்துபோகிறது. ஒரு கதையில் அறிவியல், மற்றொரு கதையில் இதிகாசம், அடுத்த கதையில் நவீனம் என சேற்றில் விழுந்த தவளை உந்தியெழுந்து இலக்கில்லாமல் நகர்வதுபோல தொகுப்பு முழுதும் தொடர்கிறது.



சரவண கார்த்திகேயனுக்கு நன்றாக எழுத வருகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. கதைசொல்லும் முறையில் அவருக்குச் சில சிக்கல்கள் இருக்கிறது என நான் புரிந்துகொள்கிறேன். அவரை சுஜாதா மிகவும் பாதித்திருக்கிறார் என்பதை அவரது கதைகளை வாசிக்கும்போது புரிந்து கொள்கிறது. மற்றபடி அவரே முன்னுரையில் சொல்லியிருப்பது போல அவருடைய வருங்கால அனுபவமும், வாசிப்பும் அதை நிகழ்த்தக்கூடும். ஆனால், அதற்காக அவர் நிகழ்காலக் கதை சொல்லல் முறையில் கவனம் செலுத்தாதிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

இந்தத் தொகுப்பில் ‘இறுதி இரவு’ என்ற நல்ல கதையை எழுதியிருக்கிறார். தொகுப்பில் எனக்குப் பிடித்த ஒரே கதையும் அதுதான். மொத்தம் பதினொரு கதைகளில் ஒரு கதை எனக்குப் பிடித்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சரவண கார்த்திகேயன் மற்ற கதைகளை நன்றாக எழுதவில்லை என்பதல்ல. வாசிப்பனுபவத்தில் எனது தேர்வுகளுக்கான அளவுகோல் என்ற ஒன்றினைப் பதித்துக்கொண்ட ஒரு மனச்சிக்கலை உடையவன் நான். அதனால், சரவண கார்த்திகேயனைப் பற்றிய என்னுடைய அவதானிப்பு என்பது முற்று முழுதானதும் அல்ல.



சரவண கார்த்திகேயன் நிறைய எழுத வேண்டும். ‘இறுதி இரவு’ மாதிரியான நிறைய நல்ல கதைகளை அவரால் சொல்ல முடியும் என்ற நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் எனக்கு நிறைய இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவரது கதைகளைவிட அவருடைய உரைநடை மொழி எனக்குப் பிடித்தமானது. அடுத்த சிறுகதைத் தொகுப்பில் என்னுடைய எதிர்பார்ப்பையெல்லாம் சரி செய்துவிடுவார் என்ற பெரும் நம்பிக்கையுடன் இதைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.


**

பொன். வாசுதேவன்





Thursday, March 2, 2017

நாய்க்குணம்

‘நாற்பத்தைந்து வயதானால் நாய்க்குணம் வந்துவிடும்’ என்று சொல்வது வழக்கம். நாற்பத்தைந்து என்பதை இந்தியாவில் நடு வயதின் ஆரம்பம் என்று சொல்வதைவிட, கிழட்டுத்தனத்தின் ஆரம்பம் என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். அதுகூட ஒருவிதத்தில் தவறுதான். ஏனென்றால் நம்மில் பலர் குழந்தையாகப் பிறந்து பத்து வயதுக்குள்ளாகவே வாலிபம் எய்தி – இருபது வயதுக்குள்ளாகப் பழுத்து – அதற்கு இரண்டொரு வருஷங்ககளுக்கு உள்ளாகவே கிழடு தட்டிவிடுகிறவர்கள்தான். மற்றபடி, இதில் எவ்வளவு அசௌகரியங்கள் இருந்தாலும், ஒருவிதத்தில் சௌகரியமும் இருக்கிறது. நம்மில் பலருக்கு அறிவும் அனுபவமும் அடி நாட்களிலேயே, வாழ்க்கை தொடங்கு முன்னரே, ஏற்பட்டு விடுகிறது.

நாற்பத்தைந்தாவது வயதை எட்டும்போ எந்த மனிதனுமே நின்று நிதானித்து அதுவரை தன் வாழ்வில் தான் சாதித்திருப்பதைக் கவனித்துப் பார்த்துக் கோடுபோட்டு, கூட்டிப்போட்டு, நிகர லாப நஷ்டக் கணக்குப் பார்க்க விரும்புவதில் தவறில்லை. 

இன்று என் நாற்பத்தியாறாவது பிறந்தநாள். நான் இவ்வுலகில் தோன்றி முதல் குரல் கொடுத்து சரியாக நாற்பத்தைந்தாண்டுகள் முடிந்து விட்டன. முதல் குரலிலிருந்தே என் குரல் உலகில் சிலருக்கேனும் கேட்டிருக்கிறது என்றுதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. அக்குரலைக் கேட்டவர்களில் சிலர் அந்தக் குரலுக்குடையவனான என்னிடம் அன்பு செலுத்தினார்கள்; சிலர் வெறுத்துக் காறி உமிழ்ந்தார்கள். பெரும்பாலோர் ‘ஓஹோ! இப்படியும் ஒரு குரல்! எத்தனையோ குரல்களில் இதுவும் ஒன்று’ என்று மனத்தில் எவ்விதச் சலனமும் இன்றி மேலே சென்றார்கள்.

விதி என்கிறார்களே அதன் அர்த்தம் எனக்கு யோசித்துப் பார்க்கும்போது, சரிவரத் தெரிகிறது என்றுதான் சொல்ல வேண்டும். என்னிடம் அன்பு செலுத்தியவர்களில் பலரிடம் எனக்கு அன்பு எழவில்லை. அவர்கள் என். அனுதாபத்துக்குரியவர்களே தவிர, அன்புக்குப் பாத்திரமானவர்கள் என்று அன்றும் தோன்றவில்லை. இன்றும் நினைத்துப் பார்க்கும்போது கூடத் தோன்றவில்லை. 

அதற்கு மாறாக, எனக்குத் தீமையே நினைத்துச் செய்த சிலரிடம் என் மனம் அசட்டுத்தனமாக அளவுக்கு மீறியே ஈடுபட்டு, அடிமைப்பட்டு, உழன்றது. இந்த ஏறுமாறான நிலைமைக்கு விதி காரணமில்லாவிட்டால் வேறு எதைக் காரணமென்று சொல்வது? விதியிலே எனக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. ஆனால் அதன் காரணமாக விளைகிற விளைவுகளை நானேதான் அனுபவிக்க வேண்டியதாக இருக்கிறது.

வாழ்க்கை என்பது ஒரு மின்சார ஓட்டம். அதில் அந்த ஓட்டத்தைச் சாத்தியமாக்குபவை, இரண்டு சரடுகள்; ஒன்று பாஸிடிவ், ஒன்று நெகடிவ். ஒன்றை அசையாத அன்பு என உணருகிறோம், இன்னொன்றை வெறுப்பு என்று உணருகிறோம். இந்த இரண்டு சரடுகளினாலும் பின்னப்பட்ட பின்னல்தான் வாழ்க்கை. 

மூன்றாவது சரடு ஒன்றும் வாழ்க்கையிலே ஓடுகிறது. அது பாஸிடிவும் அல்ல நெகடிவும் அல்ல. நிர்க்குணமானது. அதை மின்சார ஓட்டத்திற்கு அவசியமான எர்த்துக் கம்பி என்று சொல்லலாமா? மண்ணைத் தொடும் இந்த மூன்றாவது கம்பியை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு வாழுகிறவனுடைய வாழ்க்கைதான் இங்கு இன்று வெற்றி பெறுகிறது என்று சொல்ல முடியும். 

பாஸிடிவையும், நெகடிவையும் மட்டும் வைத்துக்கொண்டு, அன்பு வெறுப்பு என்கிற இரண்டு சரடுகளில் மட்டும் தன் வாழ்க்கையைப் பின்னி அமைக்க முயலுபவன் வாழ்க்கையில் படுதோல்வி அடைகிறான் என்றே எண்ணிப் பார்க்கும்போது எனக்குத் தோன்றுகிறது.

• க.நா.சுப்ரமண்யம் •


‘பெரிய மனிதன்’ நாவலில்.


Comments system

Disqus Shortname