Monday, April 27, 2009

“உன்னைப் போல் ஒருவன்“ - விமர்சனம்

நேரில் கண்டறியாதவை மீதான ஆர்வமும், வசீகரமும் எப்போதும் மனித மனங்களை ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. தனி மனவோட்டங்களின் போக்கு குறித்த ஆர்வத்தையே வரலாற்றுப் நிஜங்களும், புனைவுகளும் ஏற்படுத்துகின்றன.

கடந்து சென்ற வாழ்வையும், அதன் வேதனைகளையும், சந்தோஷங்களையும் உணர்கின்ற வாய்ப்பினை தருகின்றன தொன்மை சார்ந்த வரலாற்றுப் பதிவுகள். இப்பதிவுகளில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்று ஆராய விருப்பமற்று அதன் யதார்த்தப் புள்ளிகளை தாங்கிச்செல்லும் நம் மனது அதன் மீதான லயிப்பில் தன்னையிழக்கிறது. புனைவுகளும், புராணங்களும் நம்முள் நிகழ்த்தும் உளமாற்றங்கள் ஏராளம்.

எளிய மக்களிடையே பிறந்தவராகவும், சமகாலத்து மக்களிடையே புழங்கி மதத்தின் மீதான கேள்விகளை எழுப்பி, மக்களுக்கெதிரான அதே சமயம் வழக்கத்திலிருந்த பொதுப்போக்கினை மறுதலித்து ஒரு புரட்சியாளராகவும், புதிரானவராகவும் கருதப்பட்ட இயேசு என்பரின் வாழ்வைக் குறித்தான ஒரு அறிமுக நூலாக ‘இயேசு என்றொரு மனிதர் இருந்தார்‘ புத்தகம் வெளியாகியுள்ளது.

நம்மில் பலருக்கும் இயேசு என்றால் கிறித்தவ மதமும், அவர்களின் விடாமுயற்சியுடனான மதப்பிரசாரமும், கல்வி சார்ந்த் அவர்களின் சீரிய பணிகளும், கிறித்தவத்தின் உலகளாவிய பரவலாக்கமும்தான் முதல் நினைவுக்கு வருகிறது.

புதியதாக எந்த மதத்தையும் உருவாக்கியவர் அல்லர், எந்த மதத்தையும் ஸ்தாபிக்கவில்லை இயேசு. தான் வாழ்ந்த காலத்தில் மத ரீதியாக வழக்கத்தில் இருந்த பல நிகழ்வுகளின் மீதான தனது மாற்றுக்கருத்தை வெளிப்படையாக தெரிவித்து மதகுருக்களிடம் எதிர்ப்பையும், விரோதத்தையும் பலனாகப் பெற்றவர்தான் இயேசு.

வரலாற்றின் ஏடுகளில் சமய சீர்திருத்தவாதியாக பதிவு செய்யப்பட வேண்டிய இயேசு அவர் மீது பெரும்பான்மை யூத மக்களுக்கு ஏற்பட்ட அன்புணர்வின் காரணமாக அவரே கடவுளாகவும், மதத்தலைவராகவும், வழிபாட்டு நாயகனாகவும் ஆக்கப்பட்டார்.

யூத மதத்தில் அக்காலத்தில் நிலவிய மூடப்பழக்கங்கள் குறித்த தனது கருத்துக்களை எதிர்த்தவர் இயேசு. ‘மனிதர்கள் மீதான அன்பும் நேசமும் மட்டுமே உண்மையான இறையியல்‘ என்று கூறிய இயேசுவுக்கு கிடைத்த பரிசே சிலுவையில் அறையப்பட்டு உயிரை இழக்கச் செய்தது.

கிறித்தவ மதத்திற்கே உரியவராகவும், மதத்தலைவராகவும், நம்மால் அறியப்பட்ட இயேசுவின் வாழ்க்கை பற்றிய எளிமையான புரிதலை இந்நூல் அளிக்கிறது.

சிலுவையில் அறையப்பட்ட இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை. இயேசுவின் போதனைகளின்பால் ஏற்பட்ட ஈர்ப்பினால் அவரது வழித்தோன்றல்கள் காலம் காலமாக மேன்மேலும் உருகி, புனைந்து வந்த கருத்துக்களே இன்று நாம் காண்பவை.

இயேசு என்றொருவர் இருந்தார் என்பதும், அவரது வாழ்நாளில் தான் சார்ந்திருந்த மதத்தின் மீதான புதிய கருத்தாக்கங்களை உருவாக்கிய மதச்சீரமைப்பாளர் என்பதும் மறுக்கவியலா உண்மை. இயேசு என்ற மனிதரை மதம் சார்ந்த ஒருவராக அறிந்து கொள்ளாமல் மனிதர்களிடையே பிறந்து மனிதத்திற்காக உயிர் நீத்த ஒரு மனிதர் என்பதை இப்புத்தகம் அறியச்செய்கிறது.


‘இயேசு என்றொரு மனிதர் இருந்தார்‘

ஆசிரியர் : சேவியர்

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

விலை : ரு.100/-

Wednesday, April 22, 2009

“அகநாழிகை“ பொன்.வாசுதேவன் கவிதைகள்


“அகநாழிகை“ பொன்.வாசுதேவன் கவிதைகள்

-------------------------------------------------------

மனமொளிர் தருணங்கள்

தளர்ந்து இறுகும்

சிறகுகள் அசைத்து

கால் புதைய காற்றில்

நடக்கிறது ஒரு பறவை

என்னை நானே

அருந்தி இரசிக்கும் தருணம் அது

காற்று உதிர்த்த

பறவைச் சிறகின் கதகதப்பை

கைப்பற்றி

கன்னம் வைத்து அகமகிழ்கிறேன்

தூரத்தில் சென்று கொண்டிருக்கிறது

பறவை

உதிர்ந்த சிறகு குறித்த

கவலையேதுமற்று.



இழைவாங்கி கோர்த்துக் கொண்டிருக்கிறது

கற்பனை வெளியில்

தேங்கிய ஆசைகள்

அறியாத அந்தரங்கம்

மனதையவிழ்த்துப்போட்டு

நேர்த்தியாய்

தீர்க்கமாய் உயிர்ப்பூட்டி

இழை வாங்கியில்

ஒவ்வொன்றாய்க் கோர்த்து

ஆசைகளை இறுக்கியணைத்து ஆடுகிறது

காற்றைப் புணர்ந்த

விழுதுகளின் வேகத்தோடு

எதையும் சொல்வதற்கு

விருப்பமின்றி

தொலைவில் நின்று

வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது

நான்।

காத்திருக்கிறார்கள் அவர்கள்

முகமொளிர் முறுவலுடன்

சாளரங்கற்ற அறையின்

இருளாழத்தில்

எனது கவிதையை

எழுதிக் கொண்டிருந்தேன்.

காற்றுவெளியில் மிதந்து

பரவிக்கொண்டிருந்த

வார்த்தைகளின் வாசம்

ஈர்த்ததாய்க்கூறி

அவர்களாகத்தான் வந்தார்கள்.

வார்த்தைகளை உலையிலிட்டு

நான் தகதகக்கச் செய்ததும்

அவர்களின் பொருட்டேதான்.

தரைக்கொடியேற்றி

தளம்வரைச் சென்றதும்

அவர்களிட்ட நீர்ச்சுழி உறிஞ்சித்தான்.

இன்றும் அவர்கள் காத்திருக்கிறார்கள்

இரக்கமற்ற குரூரத்துடன்.

நினைவுகளில் உராய்ந்திழைந்து

விரல்வழியே வெளிவரும்

எனது வார்த்தைகளின் வரவுக்காக.

Monday, April 20, 2009

‘கணையாழி‘ ‘நவீன கவிதை‘ ‘புதிய பார்வை‘ கவிதைகள்

மொழி

உன்னுடன் சேர்ந்து வரும்

மௌனம் போதுமெனக்கு

என்னுடன் நீ

பேச வேண்டியது அவசியமில்லை

எனது பேச்சினைக் கேட்டு

எதையும் வெளிப்படுத்த வேண்டியதில்லை

உன் மௌனத்தைத் தவிர

உனது மௌனம் என்னை

மறுத்துப் பேசாது

உனக்கும் எனக்குமிடையே என்றும்

கருத்து வேறுபாடுகளில்லை

எனது மொழி உனக்கும்

உனது மௌனம் எனக்கும் விளங்கும்

தொடர்பின்றி நான் பேசினாலும்

உனது மௌனம் என்னிடம்

கைகட்டி தலை குனிந்து நிற்கும்

உனக்கும் எனக்குமிடையே

போட்டிகளோ பொறாமைகளோ இல்லை

என்றும்

நீ

உன் மௌனத்தைக் கடைபிடிக்கும்வரை.

(கணையாழி மே, 1992 இதழில் வெளியானது)

ஞாபகம்

எங்கேயோ பார்த்திருந்தேன்

அந்த அழகான தண்டவாளங்களை

அதனை ஒட்டிப் பரந்திருந்த

முட்செடிகளை

மீண்டும் இன்று பார்க்கிறேன்

நீளமாய்ச் சென்று வளைந்து

அம்பின் முனையைப் போலிருந்த

தண்டவாளங்களை

எங்கேயாவது பார்த்திருப்பேன்

கூடவே சென்று கொண்டிருந்த

பரந்திருந்த முட்செடிகள் இடையில்

ஒரு நதிக்காக இடைவெளி விட்டு

மீண்டும் தொடர்ந்து கொண்டிருந்தது

என்றாலும

நதியின் மேல் தொடர்ந்து சென்று

ஒரு வளைவில்

ஒன்றிணைந்து புள்ளியாகி

மறைந்தது தண்டவாளம்

என்னைப் பற்றிய

பிரக்ஞை ஏதுமின்றி.

(நவீன கவிதை இதழ் 5 மார்ச்., 1994 இதழில் வெளியானது)

இமைகளுக்கு மத்தியில்

மனதை நனைத்துச் சென்ற

மழைச்சேறில்

கால்வைத்து நடந்து சென்றாய்

நீ

சிதறி விழுந்த நீர்த்துளிச் சேர்க்கை

நெய்த நினைவுகளில்

இடமுண்டா புரள

திரும்பத் திரும்ப

நீயுமற்ற எனக்கு

தனியாய்

கண் மூடி சலனமற்று நிற்கிறேன்

விழியிடுக்குள்களில் நீர் கசிய

சிறு துளிச்சேர்க்கையில்

வழியத் தயாராய் இருக்கும்

உன் விழிக் கண்ணீரின் சூழலில்

வழிந்தோடுகின்றாய்

நீ

நினைவுகளாய் என்னை விட்டு.

(புதிய பார்வை 1-15, மே 1997 இதழில் வெளியானது)

- பொன்.வாசுதேவன்

Thursday, April 16, 2009

இந்து அரிசனர், நாடார் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நுழையத் தடை

வரலாறு என்று எதைக் கூறுகிறோம்... நடந்தவை எல்லாமே வரலாறுதானா...? எது உண்மை.. எது பொய் என பகுத்தறிந்தும், மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாற்றினை அடையாளப் படுத்துவதிலும், நினைவுக்கு மீளச்செய்வதிலும் சமுக மானுட அறிவியலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

ஆதிமனிதனின் காலம், மன்னர் காலம் என தொடர்ந்து இன்று வரை பல தொன்மைகள் படிந்த மானுட சரித்திரம் பல விசித்திரங்களைக் கொண்டது. சரித்திரத்தின் பல பக்கங்களை நாம் வாசிக்காமலும், அதைப் பதிவிடாமலும் விட்டிருக்கிறோம். ஒவ்வொருவரின் எழுத்தும், ஆக்கங்களும் அவரவர் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பாக இருக்கும்.

கலைவாணர் பாடலில் வரும் சில வரிகளை நினைவுக்கு கொண்டு வாருங்கள்... “பட்டனைத் தட்டினதும் ரெண்டு தட்டுல இட்டிலியும் கூட தொட்டுக்க சட்டினியும் சட்டுனு வந்திடனும்“ இப்பாடலின் வரிகளில் ஒளிந்துள்ள கருத்து என்ன தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியை எதிர்நோக்கும், அதற்கென ஏங்கும் சராசரி மனித மனோபாவம் அங்கே தென்படுகிறது. ‘நிழல்கள்‘ படத்தின் சில காட்சிகளில் நமக்கு உணரக்கிடைப்பது என்ன ? கல்லூரிப் படிப்பு முடிந்து வேலையில்லா நிலையிருந்த காலத்தை நமக்கு சொல்கிறது.

திரைப்படம் ஒரு உதாரணம்தான். சரித்திரங்களை பதிவு செய்வதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. வியட்நாம் போரின் போது எடுக்கப்பட்ட ‘அலறியபடி ஓடிவரும் நிர்வாணச் சிறுமி‘யின் புகைப்படம் நமக்குள் நிகழ்த்தும் உணர்வுப் பெருக்குகள் எத்தகையது. நாம் வாழ்ந்த காலத்தையும் நமக்கு முன் வாழ்ந்தோரின் வாழ்க்கை முறையையும் எந்த விருப்பு வெறுப்புகளுமற்று பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

‘சரித்திரம்‘ என்ற சொல் எதைக் குறிக்கிறது ? ‘சரி‘ என்பதை சம்மதக்குறிப்பாக நாம் பயன்படுத்தி வருகிறோம். ‘சரி‘ என்றால் ஒரு தன்மை அல்லது ஒழுங்கு என்றும் பொருள் இருக்கிறது. ‘சரிதம்‘ என்றால் ‘காதை‘ எனவும், ‘சரிதர்‘ என்றால் ‘சஞ்சரிப்போர்‘ எனவும் அர்த்தமுள்ளது. இதன்படி வாழ்ந்தவர்களின் கதையை, மானுடத்தை குறிப்பிடும் சொல்லாக சரித்திரம் விளங்குகிறது. ‘வர‘ என்ற சொல்லுக்கு ‘நடக்க‘ ‘சம்பவிக்க‘ ‘தோன்ற‘ என்றெல்லாம் பொருள் உள்ளது. நடந்தவற்றையும், சம்பவங்கள் குறித்தும், தோன்றல்கள் குறித்தும் பதிவதும், பார்ப்பதும் ‘வரலாறு‘ எனலாம்.

ஒரு இனத்தின் முழுமையான சரித்திரத்தை அறிந்துகொள்ள வரலாற்றுப் பதிவுகள் அவசியமாகிறது. கல்வெட்டு, ஓலைச்சுவடி, சிற்பங்கள், ஓவியங்கள் என தொன்றுதொட்டு வளர்ந்த சரித்திரப் பதிவுகளின் முன்னோடிகள் இன்று எழுத்து, ஓவியம், காட்சி ஊடகம், கணினி, வலைப்பக்கம் என பேரெழுச்சி பெற்று நிற்கிறது.

சமகாலத்தை மட்டுமின்றி நம் முன்னோர் வாழ்ந்த காலம் பற்றியும் நாம் பதிந்து செல்ல வேண்டியது அவசியமாகிறது. ராகுல் சங்கிருத்தியானின் ‘வால்கா முதல் கங்கை வரை‘ என்ற ஒரு புத்தகம் ஏற்படுத்திய மனவெழுச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அதேபோல ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி‘ காட்டும் உலகம் நாம் நேரில் காணாவிட்டாலும் உணர்ந்தறியக்கூடியது. ஆ.சண்முக சுந்தரத்தின் ‘நாகம்மாள்‘, ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு‘ என சொல்லிக்கொண்டே போகலாம். நேரடியாக சரித்திரத்தை பதிவு செய்யாவிட்டாலும், நாவல் என்ற வடிவத்தை கையாண்டு அதன் வாயிலாக சமகால சரித்திரத்தை பதிவு செய்த படைப்புகள் இவை.

தொ.பரமசிவன், ஆ.இரா.வெங்கடாசலபதி, பக்தவச்சலபாரதி, ஆ.சிவசுப்ரமணியன், கி.ராஜநாராயணன், நாஞ்சில்நாடன், கலாப்ரியா, பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா, ச.தமிழ்ச்செல்வன், அசோகமித்திரன், பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ், அ.முத்துலிங்கம், சு.தியோடர் பாஸ்கரன், கோபிகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், ஞாநி, மணா, சுகுமாரன், கண்ணன், எச்.பீர்முஹம்மது, ஹெச்.ஜி.ரசூல் (பட்டியல் முழுமையானது அல்ல, எனக்கு வாசிக்கக் கிடைத்தவையின் அடிப்படையிலேயே இப்பெயர்களை குறிப்பிடுகிறேன்) என சமீப காலங்களில் எழுதி வருபவர்களில் மானுடவியலை பதிவு செய்வதில் சிறந்திருக்கிறார்கள்.

சரி... பதிவின் தலைப்புக்கு வருவோம்.

“இந்து அரிசனர், நாடார் இனத்தினர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நுழையத் தடை“ என்றொரு நிலை இருந்து பின்னர் 1939-ல் ஆலய பிரவேசப் போராட்டம் நடந்த பின்னரே அனைத்து சமுகத்தினரும் நுழைய அனுமதிக்கப்பட்டனர் என வரலாற்றில் உள்ளது.

கடந்த வாரத்தில் பத்திரிகையாளர் மணா எழுதிய ‘தமிழகத்தடங்கள்‘ (வெளியீடு : உயிர்மை பதிப்பகம்) என்ற புத்தகத்தை வாசித்தேன். வரலாறு குறித்த பதிவுகளின் அவசியமும் தேவையும் எந்த அளவிற்கு கட்டாயமானது என்பதை உணர்கிறேன். அதிக விலையின்றி (ரூ.90/-) வெளிவந்திருக்கும் இதுபோன்ற புத்தகங்களை நாம் வாசித்து உணர்வதும், இதன் கருத்துக்களை பரவலாக்கி மக்களிடையே கொண்டு செல்வதும் சரித்திரம் பற்றிய ஆழமான புரிதலையும் தெளிவையும் உருவாக்கும்.

சிற்பங்கள் அடர்ந்த கோபுரங்கள், ஆயிரங்கால் மண்டபம், பொற்றாமரைக்குளம், வடிவமைப்பில் தனித்துவம் என பல்வேறு புகழ்ச்சிகளுக்கு உரித்தான மதுரை மீனாட்சியம்மன் கோவிலிற்கு காலச்சரித்திரத்தில் இருந்த ஒரு கரும்புள்ளியைப் பற்றி தமிழகத் தடங்களில் பதிந்துள்ளார் மணா.

1937-ல் காந்தி தமிழகம் வந்த போது, இந்து அரிசனங்களையும், நாடார் சமூகத்தினரையும் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து, அதைக் கண்டித்து தானும் மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு செல்ல மறுத்து விட்டார். காங்கிரசாரிடமும், ஆச்சாரக் காப்பாளர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்திய நிகழ்வு காந்தியின் மறுப்பு. 1930-க்குப் பிறகு தாழ்த்தப்பட்டோர் ஆலயங்களுக்குள் நுழைவது குறித்து வலியுறுத்தும் எண்ணம் காந்தியிடம் இருந்தது. அன்றைய சூழலில் காங்கிரசின் ஈடுபாடாக இச்செயலைக் கருதியதால், இதில் அம்பேத்கர் ஆர்வம் காட்டவில்லை.

மதுரை நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் வைத்தியநாதய்யர் தலைமையில், அப்போதைய சென்னை ராஜதானியின் பிரதம மந்திரியான ராஜாஜி வழிகாட்டுதலுடனும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆதரவுடனும் ஆலயப் பிரவேசம் நடத்த ஆலோசிக்கப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிர்வாக அதிகாரியும் ‘பச்சைக்கொடி‘ காட்டினார். அர்ச்சகர்கள் மத்தியில் இத்தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

8.7.1939-ல் காலை 10 மணிக்கு கக்கன், முருகானந்தம், பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர் முத்து என ஐந்து அரிசன சமூகத்தினரும். விருதுநகர் நகராட்சி உறுப்பினராக இருந்த எஸ்.எஸ்.சண்முக நாடாருடன் சேர்ந்து ஆறு பேர் வைத்திய நாதய்யருடன் ஆலயத்தில் நுழைந்து வணங்கினர்.

அதன் பிறகு எதிர்ப்பு இன்னமும் கூடியது. இருந்தாலும் ஆலயப் பிரவேசத்தை சட்டப் பூர்வமாக அங்கீகரித்து சட்டம் பிறப்பித்தார் ராஜாஜி. இதையறிந்து ‘அற்புதம்‘ என பாராட்டினார் காந்தி.

குறிப்பிட்ட சமூகத்தினரை கோவிலுக்குள் வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர்கள் இந்த நுழைவைத் தாங்க முடியாமல், மீனாட்சி கோவிலை விட்டு வெளியேறி விட்டாள் என்று கூறி, மதுரை தமிழ்ச்சங்கம் சாலையில் நடேசய்யர் பங்களாவில் மீனாட்சி கோவில் அமைத்து அங்கு பூசையும் நடத்தியுள்ளனர். 1945 வரை இக்கோவிலில் பூசை நீடித்து பிறகு சிதைந்து போனது. பின்னர் பழையபடி மீனாட்சியம்மன் கோவிலுக்கே திரும்பியுள்ளார்கள் அங்கிருந்த அர்ச்சகர்கள்.

சித்திரைத் திருவிழா உட்பட பல்வேறு நிகழ்வுகளிலும் குவியும் கூட்டத்திற்கு தெரியுமா கோவிலுக்குள் சிலர் நுழைவதற்கே இருந்த சமூகத் தடைகள் ? என்ற கேள்வியுடன் முடிக்கிறார் மணா.

புத்தகத்தின் இந்தக் கட்டுரை ஒரு சோறுதான். இது ஒன்று போதாதா...? சரித்திரங்கள் அறியப்பட வேண்டியதன் அவசியத்தையும், வரலாற்றின் பக்கங்கள் நீர்த்துவிடாமலிருக்க நாம் சமகால நிகழ்வுகளை பதிவிட்டு பகிர்ந்து கொள்வதன் அவசியத்தை உணர்ந்து கொள்ள....



- பொன்.வாசுதேவன்

Wednesday, April 15, 2009

சொர்க்கத்தின் வாயில்கள்


தன்னைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டியது முக்கியம் என்று நாம் உணர ஆரம்பிக்கும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படத் தொடங்கி விடுகிறது. நம்மை நாம் முழுமையாக உணர்ந்து கொண்டாலோ, உணர்ந்து கொண்டதாக நினைத்துக் கொண்டாலோ பிரச்சனைகளுக்கான தீர்வு எங்கே கிடைக்குமென அறிந்து கொள்ளலாம்.

கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. எதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனம் வளர வேண்டும். நம்பிக்கை என்பது ஒரு தேவை என்ற அளவில் மட்டுமே இருக்கக்கூடாது.

எதுவுமே புதிய தத்துவங்களையோ கருத்துக்களையோ சொல்லி விடுவதில்லை. அறிமுகமாகிற எந்தவொரு தத்துவமும் அதற்கு முன் அறியப்படாததால் புதிதாகவே தோன்றக்கூடும்.

உண்மையைத் தேட, தன்னை அறிய என வாழ்வின் எல்லா விதிமுறைகளும் நீண்ட நாட்களாக இருந்தவைதான். வழிநடத்துபவர்கள் (Leaders) தொடர்பவர்களை (Followers) அழித்தும், தொடர்பவர்கள் வழிநடத்துபவர்களின் கருத்தை சிதைத்தும் காலம்காலமாக நடப்பதுதான்.

எதையும் இயன்ற வரையில் அவரவர் வாழ்விலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நம்மைவிட நல்ல ஆசிரியன் அல்லது குரு நமக்குக் கிடைத்துவிட முடியாது. வாழ்க்கையில் அனுபவங்களின் மூலமாக வாழ்வை ஒழுங்கமைத்துக் கொளள் நாம் முயல வேண்டும். மதிப்பிற்குரிய அனைத்து விஷயங்களையுமே மறு பரிசீலனைக்கு உட்படுத்தி ஆய்ந்து ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்.

யாருடைய கருத்துக்களையும் ஏற்காமல், எந்த குருவையும் பின்பற்றாமல் இருந்தால் நாம் தனிமையாக செயல்படுவது போன்ற உணர்வு நிலை ஏற்படும்.

தனிமையாகத்தான் இருக்கட்டுமே... தனிமையாக இருக்க நாம் ஏன் பயப்பட, தயங்க வேண்டும் ? ஏனெனில், நாம் எந்தெந்த சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்கிறோம், முடிவெடுக்கிறோம் என்பதைப்பற்றி நம்மைவிட நன்கு உணர்ந்துவிடக் கூடியவர்கள் யாருமில்லை. வெறுமையாக, சோர்வாக, அபத்தமாக, குற்றவுணர்வாக, கோபமாக என பல்வேறு நிலைகளில் உணர்ச்சி வெளிக்காட்டுதலின் போது எப்படி செயல்படுகிறோம் என அறிந்திருக்கும் நாம்தான் நமக்கு குரு.

எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொண்டு எது சரியென்று படுகிறதோ அதைச் செய்யலாம். தவறாக ஆனாலும் பரவாயில்லை. தவறுகளின் மூலமாகத்தானே நாம் கற்றுக் கொள்ள முடியும். எனவே, எந்தப் பிரச்சனையிலும் தப்பித்து ஒளிய முற்படாமல் நேராக சந்திக்கின்ற மனப்பக்குவம் ஏற்படுத்திக் கொள்ளப்பட வேண்டும். மாறாக ஓடி ஒளியும் போது வாழ்வின் மீதான பயமும் நம்மைத் தொடர்கிறது.

போட்டிகள் நிறைந்த வாழ்க்கையில் பயம், சந்தோஷம், துக்கம், சோர்வு போன்ற மனோநிலைகளைக் கடந்து வருவதற்கான மனப்பக்குவம் அடைய வேண்டியது அவசியம்.

வாழ்க்கை மீதான நம்முடைய அணுகுமுறை தொன்மை வாய்ந்த வழியில் செல்வதாக அமைந்து விட்டால் உலகம் அதை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதில்லை. நம்முடைய அணுகுமுறை பழமையான கருத்துக்களுக்கு முரண்பட்டதாகவோ அல்லது புதியதொரு பாதையிலோ செல்லத் தொடங்கும்போது கடும் எதிர்ப்புகள் வரத் தொடங்குகிறது. இயேசு, புத்தர், ஓஷோ என பலரை இதற்கு உதாரணமாகச் செல்லலாம்.

நம்முடைய ஒழுங்குகளிலிருந்து நாம் பிறழ்ந்து நடப்பதற்கு அடிப்படைக் காரணியாக எதைக் கூறலாம் ? வாழும் சூழலும் சமூகம் சார்ந்த கருத்துகளின் மீது நம்பிக்கையற்று சலிப்பேற்படுவதன் மூலம் நாம் உண்மையை வேறு வழிகளில் காண முயல்கிறோம். தற்காலிகமாக நமக்கு தெளிவை உறுதிப் படுத்தும் பல விஷயங்கள் நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. இதைத் தொடர்ந்து ஒன்றிலிருந்து மற்றொன்று என நம்முடைய கவனம் திசை திரும்பி வாழ்க்கைப் போக்கே முறையற்றதாகி விடுகிறது.

பொதுவாக, நமககு ஒரு விஷயத்தின் மீது பிடிப்பு ஏற்பட்டு விட்டதென்றால் அதன் மீதுள்ள நம்பிக்கையை எளிதில் கைவிட்டு விடுவதில்லை. இயந்திரத்தனமாக அல்லது கண்மூடித்தனமாக விஷயங்களின் மீது, நபர்களின் மீது, கருத்துக்களின் மீது பற்று வைக்க நமது மனம் பழகிப் போயிருக்கிறது.

கடவுளுக்குப் பயந்து, பெரியவர்களுக்கு கட்டுப்பட்ட சராசரி வாழ்க்கையை கடத்திச் சென்றால் போதும் என்கிற மனநிலைதான் பலருக்கும் உள்ளது. புதிய விஷயங்கள் எதையும் ஏற்றுக்கொள்ளத் துணிவின்றி, மறுக்கும் தைரியமின்றி சுகமான ஒரு வாழ்க்கையைத்தான் நாம் தேடுகிறோம்.

வண்ணத்துப்பூச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்படுகிற அதன் நிலை நமக்கு வாய்க்க வேண்டும். சிந்தித்தோ, சிந்திக்காமலோ எதைச் செய்தாலும் சுதந்திரத்துடன் எதிர்பார்ப்புகளற்று நம்முடைய செயல்களை ஆர்வத்துடன் செய்ய வேண்டும்.

நம் மீது செலுத்தப்படுகின்ற அதிகாரங்களை நாம் ஏற்றுக் கொள்கிறோம். நம்மீது திணிக்கப்படுகிற கருத்துகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம். எவருக்கும் ஏற்ப வளைந்து கொடுப்பவர்களாய் நாம் பல இடங்களில் இருக்கிறோம். என்றாலும், தனிப்பட்ட குறுகலான வட்டத்திற்குள் வரும்போதுதான் நம்முடைய கோர முகங்கள் நமக்கே தெரிய வருகிறது.

வீட்டில், அப்பா, அம்மாவிடம் கோபப்படுவோம். மனைவி அல்லது கணவனிடம், பிள்ளைகளிடம் நம்முடைய அதிகாரங்களை செலுத்துவோம். கருத்துகளை திணிக்கிறோம். இதுபோல பல விஷயங்களைச் சொல்ல முடியும். எவ்வளவு கோழைத்தனமான செயல் இது.

நினைத்ததை சொல்ல முடியாமலும், சொல்வதை பேச முடியாமலும், பேசியதை செய்ய முடியாமலும் வாழ்வது எவ்வளவு சோகமானது. வாழ்க்கை வெறும் படிப்புகளால் கிடைத்து விடுவதில்லை. படிப்பு வாழ்வின் மீதான நம்முடைய பார்வையை, அணுகுமுறையை எந்த அளவிற்கு மாற்றியுள்ளது என்பதில்தான் உள்ளது அதன் பலன்.

எதையும் கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் போதுதான் வாழ்க்கையை உண்மையிலேயே நாம் வாழத் தொடங்குகிறோம் என்பதை ஒரு சிறிய ஜென் கதை மூலம் அறியலாம்.

“நிஜமாகவே சொர்க்கமும் நரகமும் இருக்கிறதா ?“ என்று ஒரு ஜென் குருவிடம் ‘சமுராய்‘ வீரன் ஒருவன் கேட்டான்.

“நீ யார் ?“ என்று கேட்டார் ஜென் குரு.

“நான் சமுராய் வீரன்“

“நீ போர் வீரனா ? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் போல தெரிகிறதே... எந்த அரசன் உன்னை காவலனாக ஏற்பான்“

வீரன் கோபமடைந்து வாளை உருவினான்.

ஜென் குரு அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார்.

“ஓஹோ... உன்னிடம் வாள் இருக்கிறது. இந்த மழுங்கிய வாளால் என் தலையை வெட்ட முடியாது“

கோபமடைந்த அவன் வாளுடன் அவரை வெட்டுவதற்காக நெருங்கினான்.

“இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன“ என்றார் ஜென் குரு அமைதியாக.

அவருடைய தைரியத்தையும், கட்டுப்பாட்டு உணர்ச்சியையும் கண்டு வியந்து வீரன் வாளை உறையில் திரும்ப வைத்து விட்டு அவரை வணங்கினான்.

“இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறக்கின்றன“ என்றார் ஜென் குரு.

- பொன். வாசுதேவன்

Monday, April 13, 2009

‘புதிய பார்வை‘-யில் வெளியான எனது கவிதைகள்

பொன்.வாசுதேவன் கவிதைகள்


பொம்மை விளையாட்டு

பிசைந்தெடுத்து வழியவிடுவாய்
அன்பற்ற இறுக்கத்தை
இரைச்சல்களற்று
எல்லாம் உறங்கும்
இரவின் விளிம்பில் அமர்ந்து
காத்திருந்த நீ
என் மேல்
இப்போதும் ஒரு கணம்
படரும் ஓசையெனக்கு
கேட்கிறது சுவாசமாய்
சருமம் கருக
நிரப்பவியலா பள்ளத்தாக்கில்
உருகி வழிந்து ஓயும் ஊற்றாய்
களைத்துறங்குகிறாய்
ஒரு சொல் இல்லை
மொழிகளுக்கப்பாற்பட்டு அதிரும் ஓசை
உள் பேசும் நான்
மின்னலாய்த் தோன்றுமொரு யோசனை
பாய்ந்து வெளிப்பட்டாலென்ன
அறுந்து சுருண்டு
கவிழ்ந்து படுக்கும் நான்
களைத்துக் குழந்தையாகியுறங்கும்
உன் முதுகு பார்த்து.



மிதந்து கொண்டேயிருக்கும் வலை

அடர்மழை மௌனமாய்
யாருக்கும் தெரியாமல்
இறங்கும் வேளையில்
உயிர்ச்சுழி தேடிப்பரவுகிறது
நீ வீசிய வலை
விழி தீண்டும் தூரம் அறியாது
அப்பிக்கிடக்கிறது இருள்
வெடிக்காத இசையின்
அரூப ஒலியாய்
காத்திருக்கிறது
வலை வருடிய கைகள்
தனியுச்சியில் புதையுண்டு
தருணம் நோக்கி
காத்திருக்கிறேன்
வலைக்குள் உன்னை இருத்த.


முலைச்சூடு

உள்நோக்கிப் பீறிடும்
ஊற்றாய்
பெருகி வழிகிறதுன் வாசனை
மழை பிசைந்த
உன் தலையினூடாக
பரவுகிறதென் முத்தங்கள்
மூச்சுக் காற்றின் வெப்பம் விரிய
ஓசையின்றிப் பிரிந்திருந்த
உன் இரவிக்கையின்
தையல் இடைவெளியில்
கசிந்து வழிகிறது
உன் வெளிர் மார்பு
கண் மூடி வாய் புதைந்து
தாழ்மையோடு யாசிக்கிறேன்
உன் முலைகளின் வாசலில்
வேண்டி வேண்டி
அழுதும் ஆனந்தமாயும்
என் வாயுறுஞ்சிய
தாயின் முலைச்சூடுகளை
மீட்டுப்பெற வேண்டி.


வலைவீசி தேவதை

கண் முன் ஒரு தேவதை
அலைகளை
சேகரித்து வீசுகிறாள்
முகத்தின் மீது
கழுவிச் சலிக்கின்றன அலைகள்
அலை சூடிய முகத்தோடு
கடற்கரையில் செல்கிறேன்
இப்போது
வேறொரு தேவதை
கடற்காற்றில் வலை படபடக்க
வீசுகிறாள்
தப்பி ஒளிகிறேன் கடலுக்குள்
அலையையும்
வலையையும்
கடந்து முழ்கித் தேடுகிறேன்
மற்றுமொரு தேவதையை.
(காயத்ரிக்கு)

‘புதிய பார்வை‘ ஆகஸ்ட் 16-31, 2007 இதழில் வெளியானது.

Comments system

Disqus Shortname