Showing posts with label நூல் விமர்சனம். Show all posts
Showing posts with label நூல் விமர்சனம். Show all posts

Sunday, January 15, 2012

வாசிப்பவரை விசுவாசிக்கும் எழுத்து : யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்‘



யெஸ்.பாலபாரதியின் ‘சாமியாட்டம்‘ என்ற இத்தொகுப்பில் மொத்தம் பனிரெண்டு சிறுகதைகள் உள்ளனஇக்கதைகள் பத்திரிகைகளிலும்இணைய இதழ்களிலும் வெளியானவை.


திருநங்கைகள் தொடர்பான ஆர்வம் காரணமாக நான் பல ஆண்டுகளாக கூவாகம் சென்று அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து வந்திருக்கிறேன். இதன் தொடர்ச்சியாக வாசிப்பில் எனக்குக் கிடைத்ததுதான் எஸ்.பாலபாரதி எழுதியஅவன்அது = அவள்என்ற புத்தகம். மூன்றாம் பாலினமாக அங்கீகாரம் பெற்றிருக்கும் திருநங்கைகளின் வாழ்வின் வலிகளைப் பேசிய  இப்புத்தகத்தின் வழியாகத்தான் எனக்கு அவர் அறிமுகம். அதன் பிறகு இணையத்தில் எழுத வந்த பிறகு நேரிலும் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

எது இலக்கியம் எது இலக்கியமில்லை என்ற கேள்வி காலம் காலமாக இருந்து கொண்டே இருக்கிறது. இதுதான் இலக்கியம் என்று ஒரு பிரிவினரும், இதெல்லாம் இலக்கியமில்லை என்று மற்றொரு பிரிவினரும் தத்தம் தரப்பை உரக்கச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். அவரவர் திராணிக்கு ஏற்றபடி, அனுபவ மதிப்பீட்டு அளவில் படித்ததும் பிடித்தது எல்லாம் இலக்கியம்தான்.

பொதுவாக சிறுகதைத் தொகுப்புகளை கடைசிக் கதையிலிருந்து வாசிப்பது என்னுடைய வழக்கம். பாலபாரதியின் கதைகளையும் அப்படித்தான் வாசித்தேன். இத்தொகுப்பின் மீதான என் அகமதிப்பீடை இது உயர்த்திக் கொள்ளச் செய்தது. காரணம் முதல் கதையிலிருந்து வாசித்திருந்தால், இத்தொகுப்பைப் பற்றிய என்னுடைய பார்வை வேறு மாதிரியாக இருந்திருக்கக் கூடும். பாலபாரதியிடம் இந்த கருத்தைச் சொன்னதும், எழுதிய காலவரிசைப்படி இக்கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது என தன்னுடைய முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதை நினைவுபடுத்தினார். ஒரு படைப்பாளியின் எழுத்தின் வீச்சை அறிவதற்கான ஒரு உத்தியாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தொகுப்பின் பனிரெண்டு கதைகளும் எழுதியே ஆக வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல், வாழ்க்கையில் அடித்தட்டு மக்களின் வலியுணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் எழுதப் பட்டவை என்பது இக்கதைகளில் நான் உணர்ந்த பொதுத்தன்மை.

காற்றில் உந்தப்பட்ட காகிதம் அது செல்கிற திசையெல்லாம் சென்று அலைக்கழிக்கப்படுவது போல வாழ்க்கை முழுவதும் நிலையற்று உழல்கிற அடித்தட்டு மக்களின் வாழ்தலுக்கான அவஸ்தை, எதிர்கொள்கிற இழப்பு, ஏற்படுகிற வலி இதுதான் இந்தக்கதைகளின் அடிநாதம். பாலபாரதியின் சுய வாழ்வனுபவம் அவருக்கு இக்கதைகளின் வழியாகச் சொல்ல உதவுகிறது

ஒரு நுனியில் ராமேஸ்வரம் மற்றொரு நுனியில் பம்பாய் என கைகளில் சுற்றிக் கொண்டு இதனூடாக அவிழ்க்க முடியாத அச்சிக்கலின் முடிச்சுகள் வழியே தன் பார்வையை கதைகளாக ஆக்கியிருக்கிறார்.

பாலபாரதியின் கதைகளில் காணக்கிடைக்கிற விவரணைகள் மிக நுட்பமானவை. இவருக்கு சொல்வதற்கு நிறைய விஷயம் இருக்கிறது. ஒரு இடத்தை விவரிக்கும் போதே உடன் பயணிக்கிற உணர்வு நமக்கும் ஏற்பட்டு விடுகிறது. ‘நகரம்என்ற கதையில், பொங்கல் வீடு எனப்படும் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து நடக்கத் தொடங்குகிற கதை நாயகனை விவரித்துக் கொண்டே வரும்போது அப்பகுதியின் அவலமான சூழல், வேலை செய்கிறவர்களின் நிலை என எல்லாவற்றைப் பற்றியும் ஒரு சித்திரமும், அனுதாபமும் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது.

அதேபோலசாமியாட்டம்கதையில்டண்டக்கும் டண்டக்கும்.. டின்.. டின்..‘ என பறையொலி ஒரு இதமான இசையோட்டமாக ஆரம்பிக்கின்ற சாமியாடியின் ஊர்வலத்தை சொல்லிக்கொண்டே வந்து, நிறைவடையும் நேரத்தில் அதேடண்டக்கும் டண்டக்கும்.. டின்.. டின்..‘ என்ற வார்த்தைகளை உச்சத் தொனியில் நம்மை உணரச் செய்து விடுகிறார்.

மனித சமூகத்தில் எவ்வளவுதான் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் நம்மை மீறிய ஒன்றிடம் ஒப்புக் கொடுப்பது என்பது ஒரு விதமான தப்புவித்தல். இது மனித குண இயல்புகளில் ஒன்று. ‘கடவுள் என்பது ஒரு நம்பிக்கைஅவ்வளவுதான். ‘வேண்டுதல்என்ற கதையில் தொலைந்து போன மகன் கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் முறையிடச் செல்கிற இடத்தில் அங்கு நடக்கிற ஒரு சம்பவம் நடைமுறை வாழ்வின் யதார்த்தத்தை உறைக்க வைக்கிறது.

அடிமைகளாக சிக்கி நகர வாழ்வில் செக்கு மாடுகளாக சுற்றிக் கொண்டிருக்கும் வளரிளம் பருவத்தினரைப் பற்றிய கதையானதுரைப்பாண்டிஎன்ற கதை இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான கதை. மேலும் இத்தொகுப்பில் உள்ள விடிவெள்ளி, தண்ணீர் தேசம், கடந்து போதல், பொம்மை ஆகிய கதைகளும் என்னைக் கவர்ந்தவை.

சிறுகதையின் முக்கிய நோக்கம் ‘Creating a Single Effect’ என்கிறார் எட்கர் ஆலன் போ. எந்தப் படைப்பும் வாசித்த உடன் ஒரு உணர்வை திறம்பட ஏற்படுத்த வேண்டும். அவ்வகையில்சாமியாட்டம்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ஒரு ஆரம்பம், கதைக்களம், முடிவு என அமைந்திருக்கின்றன. வரிசைக்கிரமமாக அமைந்திருக்கிற பாலபாரதியின் இந்த எழுத்துப்பாணி படித்து முடித்ததும் திருப்தியான ஒரு உணர்வைத் தருகின்றன. யெஸ்.பாலபாரதியின் இந்த முதல் சிறுகதைத் தொகுப்பின் வாயிலாக கதைசொல்லியாக அவர் ஆரோக்கியமான முன்னகர்தலை மேற்கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது.  தொடர்ந்து பல சிறப்பான ஆக்கங்களை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.






சாமியாட்டம்‘ (சிறுகதைகள்
யெஸ்.பாலபாரதி
வெளியீடு
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
விலை : ரூ.70/- (128 பக்கங்கள் )







சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமிடங்கள்
நிவேதிதா புத்தகப் பூங்கா அரங்கு எண். 326
பிரேமா பிரசுரம் - அரங்கு எண்.344
புக் ஷாப்பர்ஸ் - அரங்கு எண்.370
புதுப் புனல் - அரங்கு எண்.442
டிஸ்கவரி புக் பேலஸ் - அரங்கு எண்.334

Tuesday, January 10, 2012

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை - ஒரு பார்வை - ராமலஷ்மி


பொன். வாசுதேவனின் “ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை” - ஒரு பார்வை - ராமலஷ்மி

கவிதைகளைப் பிரசுரித்த இதழ்களின் பட்டியலே அவற்றின் சிறப்புக்கு அணிந்துரையாக மிளிர, கவிஞரின் நெடிய இலக்கிய பயணத்தை எண்பத்து ஏழு கவிதைகளுக்குள் அடக்கிக் கொண்டதாக “ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை”. பாசாங்குகளற்ற நேர்மையான மென்மையான உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது. வாழ்வின் மீதான அவதானிப்புகளை அழகுற வெளிப்படுத்தும் கவிதைகளுக்கு மத்தியில் அன்பைத் தேடுவனவாகவும் பிரியங்களைப் போற்றுவனவாகவும் இருக்கின்றன பல.

எத்தனையோ விதமான தேடல்கள் நிரம்பிய உலகில் தேடிக் கிடைத்த எவற்றாலும் மகிழ்ச்சியுறாத மனிதமனம் அன்பு ஒன்றினால் மட்டுமே மனநிறைவு காண்கிறது. ஊற்றெடுக்கும் சுனைநீர் எதன் பொருட்டும் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்வதில்லை. மனதிலிருந்து பீறிடும் பிரியங்கள் அதற்கான காரண காரியங்களை ஆராய்வதில்லை. எதற்கும் கட்டுப்படாது சுரக்கின்ற அதன்வேகம் பதிலுக்குப் பெறபடும் அன்புக்கு மட்டுமே அடங்குகிறது.

தொடங்கியிருக்கிறோம்’ கவிதையில்..,
“...எனக்குள் பூத்த ஆண்டாளைப்
பறித்தெடுத்து சூடிக்கொள்கிறேன்
எதற்கெனத் தெரியாமல்.”

‘கொடுக்கல் வாங்கல்’ எனும் ஒரு கோட்டில் பயணிக்கும் உலகில் இந்தக் கோட்பாட்டை உடைத்து, விதிவிலக்காக நிபந்தனைகளற்று இருந்தால் மட்டுமே அன்பு அன்பாக இருக்கமுடியும்:
“நொடிகளைத் துரத்தும் நிமிடங்களாய்
துரத்திக் கொண்டேயிருக்கிறது
அன்பு காலம் காலமாய்
...

அன்பின் பிரதேசத்தால் வாய்த்திருக்கிறது
வாழ்வின் ஆசிர்வாதம்

உனக்கும் எனக்கும்
அவருக்கும் இவருக்கும்
யாவருக்கும்”

காற்றைப் போல் கலைந்து விடக்கூடிய, ஒளியைப் போல் மறைந்து விடக்கூடிய சாத்தியங்களைத் தன்னோடு கொண்ட அன்பினைச் சார்ந்து வாழ்வதன் சிரமங்களைப் புரிந்திருந்தாலும் அதனை யாசிப்பதை நிறுத்த முடிவதில்லை எவருக்கும். இங்கே கவிஞருக்கும். வாழ்க்கையின் அடிநாதம் அன்பு என்கிற புரிதலுடன் அதனை யாசித்துப் பெறுவதில் எந்தத் தயக்கமும் காட்டாமல் துணையிடமும் ‘பிரிந்து போன தோழி’யிடமும் தாய்மையைக் கண்டு போற்றி நிறைவு கொள்கிறார். ‘சொல்ல இருக்கிறது காதல்’, ‘பால்ய விளையாட்டு’ எனப் பிரியம் பேசும் பல கவிதைகளுக்குள் ஒவ்வொரு எழுத்திலும் அன்பை இழைத்துக் கொண்டு வார்த்தைகளான வரிகள் சில:

பிரியத்தில் விளைந்த கனி’:
“.. பிரியத்தின் பொருட்டே
உனக்குள் என் வாழ்வு
பூரணமடைந்திருக்கிறது”

பிரியங்கள் உதிர்த்த கனி’:
“வலுக்கட்டாயமாய்
உதிர்ந்த பிரியங்களைத் 
திசைக்கொன்றாய் வீசிச் சுழற்றி
கடத்திக் கொண்டிருக்கிறது காற்று’

புசிக்கத்தூண்டும் பிரியங்கள்’:
”நிகழ்வின் சாத்தியங்களாக
அன்பும் பிரியமும் மட்டுமே
என்று விதிக்கப்பட்டிருக்கிறது
பிரியங்களுக்கு”

உண்மையான அன்பின் மொழி மெளனமே. அன்பின் பரிமாற்றம் நிகழ்ந்த பின், அதன் திண்மை இளகி இனிமை கூடுவது இயல்பாக நிகழ்வது. பரிமாற்றம் தவறும் போது இனிமையின் இடத்தில் வலியும் வேதனையும் வந்தமர்கிறது என்றால் பரிமாற்றங்களுக்கும் பிறகும் கூட பலவீனப்படுகிற அன்புகளால் இணையை அலட்சியப்படுத்துவதும், அன்பை சாதகமாக எடுத்துக் கொள்வதும் நிகழவே செய்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மெளனமாக அனுபவிக்கும் வலியைப் பற்றிய கவலையிருப்பதில்லை. பாலினப் பாகுபாடின்றி, அன்பிற்காகவே அனைத்து உதாசீனங்களையும் பொறுத்துக் கொண்டு செல்லும் இணைகள் கொண்ட உலகம் இது. இப்படியான அன்பின் எல்லாப் பரிமாணங்களையும் காட்டுவதான தொகுப்பின் முதல் கவிதை ‘மொழி’வது: 
“உன்னுடன் சேர்ந்து வரும் 
மெளனம் போதுமெனக்கு
...
உனது மெளனம் என்னை
மறுத்துப் பேசாது
...
தொடர் பின்றி நான் பேசினாலும்
உனது மெளனம் என்னிடம் 
கைகட்டி தலை குனிந்து நிற்கும்
...
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் மெளனத்தைக் கடைபிடிக்கும்வரை.”

பிரியங்களின் வன்முறை’யில்..
“வன் எழுத்துக்களில் புலனாகும்
குரூரம் யெப்போதும் யாரையும்
அண்டச் செய்வதில்லை என்கிறாள்

பிரியங்களின் கொடுமனம் நிகழ்த்தும்
வன்முறை பற்றி
ஒருபோதும் நான் அவளிடம் 
கேட்டதேயில்லை”.

கடைசி நிறுத்தம் வரை சென்று கொண்டிருக்கும் இவரது ‘பிராயணம்’ போலவே கடக்கின்றது தொகுப்பு பாடுபொருளாய்ப் பல வாழ்வியல் காட்சிகளை உள்ளடக்கி. ‘தன்னையே கீறக்கூடுமென அறிந்திருந்தும்’ வளர்க்கும் நகங்களைப் பற்றிப் பேசுகிறது ‘இருப்பு’.  உய்தலுக்கானப் போராட்டத்தை எப்படி விலங்குகளுடன் நடத்த வேண்டி வருகிறது மனிதனுக்கு என்பதைக் காட்டுகிறது ‘இருத்தல்’. தந்திரங்களையும் வஞ்சகங்களையும் சூழ்ச்சித் திறம் என்று கொண்டாடும் உலகெங்கும் இவர் காட்டும் ‘மிதந்து கொண்டேயிருக்கும் வலை’கள் ஏராளம்.

ஒரு கவிதையை வாசிக்கும் பொழுதில்’, ‘ஓவிய நீட்சி’ ஆகியன பிடித்த கவிதைகள் எனில், பிடித்த வரிகளைக் கொண்டதாக ‘என்னிடம் வந்த இந்த நாள்’:
“தாழப்பறந்தும் கையில் சிக்காத
விருப்பப் பறவையாய்
கொஞ்சமும் இரக்கமில்லாது
கடந்த செல்கிறது இந்த நாள்”.

கவிஞர் ஒரு வழக்கறிஞர். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதில் அவருக்குச் சம்மதமில்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்படும் பலபேரின் பின்னணியை, சிறுவயதுப் போராட்டத்தை, எது அவர்களை அச்செயலுக்கு உந்தியது எனும் காரண காரியங்களை நீதிமன்றங்கள் அலசுகின்றனவா? அவற்றைக் கருத்தில் கொண்டு பரிவு காட்டப்படுகின்றதா? விடை தேடுவதே அவசியமற்றதாக ஒதுக்கப்படும் கேள்விகள் இவை.
“அவனைவிட பாவங்களை
நீங்களும் செய்திருக்கிறீர்கள்
நானும்தான்...”

‘அகநாழிகை’ என்ற பெயரில் சிற்றிதழும் பதிப்பகமும் நடத்தி வரும் பொன். வாசுதேவனின் இந்த முதல் கவிதைத் தொகுப்பில் ‘கடவுளைச் சுமந்தவன்’ சொல்லுகிறான்:
“பத்திரமாக கோவிலில்
இறக்கி விட்டேன் கடவுளை

நிம்மதியாகவும்
மனநிறைவாகவும் இருந்தது
கடவுளுக்கும்”

இருபது ஆண்டுகளாகச் சுமந்து வந்த கவிதைகளைத் தொகுப்பாக இறக்கி வைத்த கவிஞருக்கும் இது பொருந்தும். மன நிறைவு வாசிப்பவருக்கும்!
***


ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை
விலை ரூ:70. பக்கங்கள்: 112. வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: 
ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்.

ஜனவரி 5 முதல் 17 வரைக்குமாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், கடை எண்: F 27. 
*** *** ***

Thursday, March 24, 2011

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை-யின் வாசிப்பனுபவம்


ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை-யின் வாசிப்பனுபவம் - இந்திரா பாலசுப்ரமணியன்

       இருபது வருங்களுக்கு மேலான இலக்கிய பரிச்சயம் கொண்ட திரு. பொன்.வாசுதேவனின் கவிதைகள் உணர்தலை மொழியாகக் கொண்டவை. உணர்வுகளை மொழி முழுமையாக சொல்லிவிட முடியாது எனினும் மொழியின் மூலமாகவே உணர்தலின் மூலத்தை, அதற்கு அப்பாற்பட்ட மொழியைப் பேச முடியும். மயிலிறகால் மனதை வருடுவதன் மூலம் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார்.
      aganazhikai_vasudevanபிரியத்தை தேடுவது மென்மனதின் ஆதாரம். இருத்தலுக்கான நெகிழ்வு அது. நம் மீது வழியும் பிரியங்களை தாண்டி எதையோ தேடிக்கொண்டே இருக்கிறோம். கணக்கு கூட்டல்கள் அற்ற பிரியம் இவர் கவிதைகளின் அடிநாடி. கூடவே மனதின் விகாரத்தை மெல்ல தீண்டும் சவுக்கின் நுனி.
"தனியுச்சியில் புதையுண்டு தருணம் நோக்கி காத்திருக்கிறேன் வலைக்குள் உன்னை இருத்த"
தினசரி வாழ்வில் காத்திருக்கும் இயல் அல்லது இயந்திர மனம். பொருத்தப்படாத எதிர்மனம். பொம்மை விளையாட்டில் ஆசிரியர் பயன்படுத்தும் மொழி, "படரும் ஓசை எனக்கு", "சருமம் கருக", "ஒரு சொல் இல்லை", "உள் பேசும் நான்". அருமை.
மனதின் அடுத்தடுத்த சாளரங்களை திறக்கும் பாடு பொருள். நினைவில் அதிரும் அன்பு. மன அலையில் மிதக்கும் அன்பு. இனம் சேரும்  தவிப்பு. ஆரம்பமும் அடுத்த நிகழ்வுகளும் நகர்வது தெரிந்த துல்லியம். மெல்லிய காற்றில் அசையும் இறகு போல் மனம் அலையும் வெளி. நித்திய வாழ்வின் இரக்கமற்ற பொழுதுகள். மனவெளியில் இணையோடு சுழன்றாடும் களிவூஞ்சல்.
இதமான பிரியத்தில் நிழல் தேடும் நெஞ்சம். நீண்டு கிடக்கும் காலத்தின் ஆழத்தில், கடந்து போய்விட்ட உறவுகளின் வெற்றிடத்தை நிரப்ப ஏங்கும் காத்திருப்பு. "மாய்ந்த துயரங்களின் கல்லறைகளில் களிப்பை முகிழ்க்கிறது உன் காலடித்தடங்கள்", "சரி பார்த்துகொள்கிறேன் என்னை நான்", மெல்ல கடந்து வரும் வாழ்வின் அர்த்தத்தை தீண்டுமுன்பு மனதை தீண்டிச் செல்லும் சவுக்கின் நுனி.
"என்னிடம் வந்த இந்த நாளில்", நாள் என்பதன் மறை பொருள் இதம் தரும் பிரியம் என்றும் கொள்ளலாம். தளிர் நடை பயின்று வரும் மழலை போல கள்ளமற்ற பிரியம். மனதுடன் ஒட்டி உறவாடி, கடந்தவற்றின் வெறுமையை இட்டு நிரப்பி, மலர் தரும் இதமாய், மழலையின் மெய்தீண்டலாய், துயில வைக்கும் தாலாட்டாய் வாழ்வை நிறைக்கிறது. நிரந்தரமற்றதே அன்பு என்று மெல்ல மெல்ல விட்டகலும் அன்பு.
எப்போதும் குறைபடும், கோள் சொல்லும் மனிதமனம், யாருக்காகவும் இல்லாமல் தன் இயல்பாய் மலரும் மலர். கடவுளின் படைப்பை சொல்லும் ஒற்றை மழைத்துளி. அக விடுதலையின் அற்புத நிமிடங்களை "இறைமையின் மொழியில்" பேசுகிறார் ஆசிரியர்.
ஒரு ஆண் என்றென்றைக்குமாய் தன் தாயின் முலைச்சூட்டை தேடிக்கொண்டே இருக்கிறான். பிரியமாக, நட்பாக, காமமாக அவன் தேடுவது பாதுகாப்பு உணர்வை. "முலைச்சூடு".
அருவி நீராடல் தரும், உணர்வுகள் மேலெழும் அக விடுதலை, பால்யம், இளமை, பிரிவு, பிரியம், துரோகம், இதமான கடந்தவைகள், அருவியின் பாய்ச்சலோடு மனதின் உண‌ர்வற்ற நிலை தரும் பார்வையும். வ‌ற்றிய உடலில் இருந்து வற்றாது பெருகும் மனம், எல்லா நியாயங்கள், கேள்விகள், பதில்கள், தீர்மானங்களை உடைத்து புதிதாய் துளிர்க்கும் துளிர்.
வார்த்தைகளற்ற மவுனத்தின் வலி. நட்பின் லவ் அண்ட் ஹெற்றேட் மனநிலை, சிறுகுழந்தை போல் ஏங்கி அழுது கொட்டி ஆற்றும் இணையின் மீதான கோபமும் வருடலும். உணர்வுகளின் அடிப்படையில்  கொள்ளும் பிரியங்கள் இரண்டு பக்கமும் கூரான கத்தி. மனம் தொடும்போது மலர்தலும், உரசும்போது சதையை கீறும் வலியும், பற்றிக்கொள்ள விழையும் பிரியமே ஜெயிப்பதால் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விடுவதையும் அழகாக சொல்லும் கவிதை "உன் கோபமும் என் கோபமும்".
இந்த கவிதை சொல்லியின் கவிதைகள் பிரியத்தை அடிப்படையாக கொண்டவை. மழை இவர் கவிதைகளில் சாரலாக, அடர் மழையாக, தொடர் மழையாக, நனையும் நினைவாக, படியில் நின்று வாழ்வை மழையின் மூலம் புரட்டி பார்க்கும் வலியாக கூடவே வாழ்கிறது.
எல்லா பிரியங்களும் அதனளவில் சிறப்பானவையே. ஆனால் அதன் ஆழம் எனபது முரட்டுத்தனமும், மூர்க்கமும் கொண்டது. மன முதிர்வுகள் செல்லுபடியாகா இடம். சமன் செய்யவேண்டியவர்களின் நிலையை அழகாய் சொல்லும் கவிதைகள்.
எழுதி தீர்த்துவிட முடியாமைகள், வதைபடும் மனதின் மெல்லிய அதிர்வுகள், உடலும் மனமும் குவிகிற புள்ளி, உணர்தலை உள்வாங்கிகொள்ளும் நுட்பமான நொடிகள் என்று இயல்பான வெளிப்பாடு.
அன்பு எனபது தீரா தாகம், அதன் ருசி அறிந்த பின் நிரம்பியது தெரிந்தாலும் தேடல்கள்தான். புணர்ச்சி எனபது மனம் விழையும் காமம் எனில் அது அணையா தீ. "யாராவது உரக்கச் சொல்லிவிடுங்கள்" எனவும் "மோக‌ப்பெருவெளியில் உருகி வழிகிறது என் உலகம்" என சத்தமாகவும், தலைப்பு கவிதையான, "ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனையில்" மிக மென்மையாகவும் சொல்லிச் செல்கிறார்.
வலிந்து எழுதப்பட்ட வாழ்வனுபவங்களாக இல்லாமல், இயல்பாக வெளிப்படும் மனதின் வலி மிகுந்த மொழிகள், திரு,அகநாழிகை.பொன்.வாசுதேவனின் கவிதைகள். வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவர் கவிதைகள் பேசுவது மென்மொழிகளையே. படிக்கும்போதும் உணரும்போதும் நாம் கொள்ளும் வாதைகள்தான் அவர் தொனி. ஆனால் அதை திருப்பி சொல்லும்போது அந்த கவிதைகளின் மென்மொழி நசுங்கிவிடுமோ எனும் அர்த்தம் சிதைந்து விடுமோ எனும்  மென்மை.
                 
ஞாயிற்றுகிழமை மதியபூனை... மயில் பீலி.

- இந்திரா பாலசுப்ரமணியன்

Monday, October 4, 2010

புத்தக விமர்சனம் : ஆண்டியிடம் சிக்கிய தோண்டி

தமிழ் இலக்கியத்தில் புத்தக விமர்சனம்திறனாய்வு என்ற துறை பெரிதும் கவனத்தில் கொள்ளப்படாதது ஒரு குறைதான்அப்படியே இருந்தாலும் அது ஒரு கட்டாயத்திற்காகவோ,தனிப்பட்ட விருப்பின் பொருட்டு செய்யப்பட்டதாகவவோ இருந்து வந்துள்ளதுஉலக அளவில் இலக்கியத்தின் ஒரு மிக முக்கியமான துறையான விமர்சன இயல் தமிழில் கவனம் பெறாமல்அதற்குரிய முக்கியத்துவம் வழங்கப்படாமல் மேலோட்டமான கண்ணோட்டத்தில் இருக்கிறது என்பதுதான் உண்மை.









சமீபத்தில் மனுஷ்ய புத்திரனோடுபேசிக்கொண்டிருக்கும்போது வண்ணதாசனின் கடிதங்கள் தொகுப்பைப் பற்றிய பேச்சு வந்ததுஅப்போது மனுஷ்ய புத்திரன் "வண்ணதாசனின் இதர படைப்புகள் அளவிற்கு அவரது கடிதங்கள் ஒப்பீடு செய்ய இயலாதவைஅவரது படைப்புகளில் வெளிப்படுகின்ற மனித உறவு சார்ந்த ஆழ்ந்த அகச்சிக்கல்கள் அவரது கடிதங்களில் வெளிப்படுவது கிடையாதுஅவை பளிங்கு போன்றவைஅப்பழுக்கற்ற நேரடியான மனோநிலையில் எழுதப்பட்டவை வண்ணதாசனின் கடிதங்கள்என்று கூறினார்மிகவும் யோசிக்க வைத்த விஷயம் இதுகாரணம்வண்ணதாசனின் படைப்புகள் அளவிற்கு அவரது கடிதங்கள் மீதான ஈர்ப்பு எனக்கும் கிடையாதுஒரு விமர்சனம் என்பது எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இதை என் அனுபவபூர்வ உண்மையாகக் கொள்கிறேன்எந்தத் தேவைகளும்நிர்ப்பந்தங்களும் இல்லாத இவ்வாறான கூற்றுகளே படைப்பின் உண்மையான விமர்சனமாக இருக்க முடியும்.

அழகியலுடன் கூடிய ரசனை சார்ந்த விமர்சனங்கள் படைப்பை பிறரும் வாசிக்க உந்துதலைத் தருகின்றனபடைப்பின் மீதான கருத்துக்களை விருப்பு வெறுப்பற்று வெளியிடும் மனோபாவம் இன்று யாரிடம் உள்ளதுபடைப்பின் தன்மையைத் திறனாய்வு செய்வதை விடுத்து படைப்பினை ஆக்கியவரையும்அவரது சார்புக் கோட்பாடு பற்றியும் அறிந்துகொண்டு ஒரு முன்முடிவோடு வைக்கப்படுபவையே இன்று விமர்சனங்களாகவும்இதைச் செம்மையாகச் செய்கிறவர்கள் விமர்சகர்களாகவும் அறியப் படுகிறார்கள்.

விமர்சனத்தில் கவனம் செலுத்திய வ.வே.சுஐயர் அழகியல் சார்ந்த ரசனையின் அடிப்படையில் தனது விமர்சனங்களை முன்வைத்தார்அவரை அடுத்து க.நா.சுப்ரமண்யம் படைப்புகள் மீதான தனது விமர்சனங்களை படைப்பாளிகளைப் பட்டியலிட்டும்அவரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அதை அடித்தும்திருத்தியும் விமர்சகராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.நா.சு.வின் விமர்சனப்போக்கு படைப்பாளியின் மீதான கருத்துக்களைப் படைப்பின் விமர்சனத்தில் காழ்ப்புணர்ச்சியாகக் கொள்வதற்கான ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தது எனலாம்அவரைத் தொடர்ந்து சி.சு.செல்லப்பாநா.வானமாமலைதருமு சிவராமு,தொ.மு.சி.ரகுநாதன்கைலாசபதி மற்றும் வெங்கட்சாமிநாதன் விமர்சகர்களாக அறியப்பட்டுள்ளனர்.

எழுத்து‘ இதழில் 1960களில் தொடர்ந்து வெளியான வெங்கட்சாமிநாதனின் கட்டுரைகள் விமர்சனம் சார்ந்த தீவிர நம்பிக்கைகளை அளித்ததுஆனாலும், கா.நா.சு.வைப் போலவே குறுகிய பார்வையும், காழ்ப்புணர்ச்சியும், பண்டிதத்தன்மையுடனான அணுகுமுறையும் கொண்ட வெங்கட்சாமிநாதனின் விமர்சனங்கள் எதிர்பார்ப்புகளைப் பொய்ப்பித்தது..நா.சு.வின் வழியிலேயே வெங்கட்சாமிநாதன் செய்த ‘பாலையும் வாழையும்‘ மற்றும் ‘எதிர்ப்புக்குரல்‘ போன்றவைக்குப் பிறகு வெங்கட்சாமிநாதனுக்கு ஒரு தனி அணி உருவாகியது ஒன்றுதான் இதனால் கிடைத்த பலன்.  அதே காலகட்டத்தில் படைப்புகளைப் புதிய கோணத்தில் திறனாய்வு செய்யத் துவங்கிய தருமு சிவராமுவும் காலப்போக்கில்.நா.சு., வெங்கட்சாமிநாதனைப் போலவே மாறிப்போனது பரிதாபமானது.

தொடர்ச்சியாக மார்க்சியப் பார்வையில் படைப்புகளை அணுகிய தமிழவன்,ஞானிதனக்கென ஒரு தனித்த பார்வையில்தனது அனுபவத்துக்கு உட்பட்ட ரசனையோடு படைப்புகளை விமர்சனம் செய்த சுந்தரராமசாமிபாலா போன்றோரின் இலக்கிய மதிப்பீடுகள் கருதத் தக்கதாகவும்விமர்சனத்திற்கு உட்பட்டதாகவும் இருந்து வந்துள்ளது.

இதனால் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால்ஆரம்ப காலம் முதற்கொண்டே இலக்கிய விமர்சனம் என்பது சிக்கலான ஒன்றாகத்தான் இருந்து வந்துள்ளதுஆனால் தற்போதைய நவீன இலக்கியச் சூழலில் தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல புத்தகம் திறனாய்வு அல்லது விமர்சனம் செய்ய அவர் ஆழ்ந்த வாசிப்பனுபவம் உள்ளவராகவோ,தேர்ந்த ரசனை கொண்டவராகவோ இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.ஒன்றுவிமர்சகர் படைப்பாளிக்கு நண்பராக இருக்க வேண்டும் அல்லது விமர்சிக்கப் போகிறவரின் அணியில் படைப்பாளி இணைந்திருக்க வேண்டும்.ஒரு படைப்பை விமர்சனம் செய்கிற விமர்சகர் கைக்கொள்கிற அளவுகோல்தான் என்னஅப்படியொன்று இருக்கின்றதா என்றால் கிடையாது என்பதுதான் பதில்.






 நம் விமர்சகர்கள் பலருக்கும் வேண்டியவர்களைப் பாராட்டுவதும்,வேண்டாதவர்களைப் புறந்தள்ளி எழுதுவதும்தான் விமர்சனம் என்ற எண்ணம் இருக்கிறது.  ஒரு படைப்பினைக் குறித்த அறிவார்ந்த விமர்சனத்தை விடுத்து படைப்பின் மீது சுயநலம் சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்திமாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதே தலையாய பணியாகக் கொண்டு செயல்படுகின்றனர்அசல் ஆக்கங்களின் நிலையே இப்படியென்றால் மொழியாக்கப் படைப்புகள் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

விமர்சனம் என்பது படைப்பின் மீதான முழுமையான மதிப்பீடாகக் கொண்டு வளர்க்கப்பட வேண்டும்.  படைப்பு வாசிப்பவனுக்கு ஏற்படுத்தும் அனுபவத்தை வெளிக்கொணர்வதாக அதன் சிறப்பியல்புகளைக் குறிப்பிட்டு விமர்சனப் போக்கு உருவாக விமர்சகர்களின் அனுபவமும்தகுதியும் முக்கியமானது.அவ்வகையில் அளிக்கப்படுகின்ற விமர்சனமே உண்மையானதாக இருக்கும்.

படைப்பின் ஆக்கத்தில் உள்ள நிறை குறைகளைச் சுட்டி அதைப் பரவலாகச் சென்றடையச் செய்வதுதானே முறையான ஒரு விமர்சனத்தின் பணியாக இருக்க வேண்டும்எந்த அளவிற்கு இலக்கியம் நவீன உருக்கொண்டதோ அதே அளவிற்கு விமர்சன வளர்ச்சியில் தேங்கித்தான் இருக்கின்றது.விமர்சனத்தின் தயையில்தான் படைப்பும்அதை ஆக்கியவனும் கருதத்தக்க அங்கீகாரத்துக்கான காத்திருத்தலை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

- பொன்.வாசுதேவன்

உயிரோசை இணைய இதழில் (4.10.2010) வெளியானது.

Thursday, July 22, 2010

தொன்மத்தில் துளிர்க்கும் வாழ்வின் விதை

டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் தனது ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதியுள்ள முன்னுரை.


காலம் காலமாக நடந்து வரும் இந்த இயற்கையான விசயத்திற்கு இறைவன் எனப் பெயரிட்டு, நமது நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டுக்கோப்பாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திட நாம் நினைத்தது எத்தனை தவறாகிவிட்டது. ஒன்றாய் நிற்க வேண்டிய நாம் பிரிந்து கிடக்கிறோம். எண்ணங்களும் செயல்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. இதில் யார் பெரியவர், யார் சிறியவர் எனும் சச்சரவு நீங்கியபாடில்லை. ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படுவதும், அடுத்தவர் எப்படி போனால் நமக்கு என்ன என்ற குறுகிய மனப்பான்மையும் வந்து சேர்ந்துவிட்டது

இதற்காக இறைவன் எந்த பொறுப்பும் ஏற்றுக் கொள்ள மாட்டார், நாம்தான் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். இனி எவரும் வந்து பாவ புண்ணியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கப் போவதில்லை, ஒருவேளை ஒருவர் அப்படி தோன்றினாலும் நின்று கேட்டு நிற்கும் நிலையில் எவரும் இல்லை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிட்டது.







என்னவெல்லாம் மாற்றங்கள் நேர வேண்டுமென ஒவ்வொருவரும் மனதில் நினைக்கின்றோமோ, அந்த மாற்றங்களை நம்மில் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. எத்தனையோ விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டு இருக்கின்றன. நம்மைப் பார்த்துத்தான் நமது சந்ததியினரும் வளர்ந்து வருவார்கள்

ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் நாம் இத்தனை காலமும் செயல்பட்டு இருப்பதும், இனியும் செயல்பட்டு வருவதும் நமது மனித குலத்திற்கே பெரும் அச்சம் விளைவிக்கும் செயலாகும். போராட்டங்களும், அழிவுகளுமே கண்டு பழகிப் போன பூமியிது, எத்தனையோ நல்ல விசயங்களை மறந்து போன பூமி இது. அனைத்து ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்வு சரியாக இருக்கும் என தவறான கண்ணோட்டத்தில் வாழப் பழகி விட்டோம். எந்த ஒரு கொள்கையும் ஏற்புடையதாக இல்லை. நமது வாழ்க்கை முறை மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது.







அனைவரும் சமம் என்று கூறிக்கொண்டு உழைப்பாளரை அவமானப்படுத்த நான் தயாராக இல்லை. சமத்துவம் தொலைந்து போன பூமியில் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என எனது கண்களை மூடிக்கொண்டு இருக்கவும் எனக்கு சம்மதம் இல்லை

ஒரு விசயத்தின் அடிப்படையில் ஒன்று சேரும் மனிதர் கூட்டம், அந்த விசயம் முடிந்து போனதும் விலகிப் போகும்! எந்த அடிப்படையை வைத்து மனிதரை ஒன்று சேர்க்க நினைத்தோமோ அந்த அடிப்படை இப்பொழுது ஆட்டம் கண்டு தவிக்கிறது. மனிதரின் பண்பு நலன்கள் என எதுவுமே அவசியமற்றுப் போனது. தெரிந்தே தவறு செய்து விட்டோம், தவறு எனத் தெரிந்தும் இதுதான் சரி என நமக்குள் நாம் சொல்லிக்கொள்ளும் முட்டாள்தனமான நிலை இருந்து வருகிறது. இதை தனிமனிதரின் பார்வையிலிருந்து சொல்கிறேனே தவிர இதைச் சொல்ல தகுதியிருக்கும் நிலையில் சொல்லவில்லை என்பதை குறித்துக் கொள்வது நல்லதாகும். 'போனது போய்விட்டது, இனி பகுதி போனால் என்ன, முழுமை போனால் என்ன' என்ற நிலையை அடைந்து விட்டோம்.







இதில் கலியுகம் என்று வேறு கூறிக்கொண்டு திரிகிறோம். கலிகாலம் இப்படித்தான் இருக்கும் என யார் உங்களுக்கு சொன்னது? பல வருடங்களுக்கு முன்னால் எதிர்மறையாக சிந்திக்கத் தெரிந்த ஒருவரின் கருத்தை எப்படி உங்களால் ஏற்று கொள்ள முடிகிறது

நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை! இதற்கு அர்த்தம் என்றாவது யோசித்து வைத்தது உண்டா

தனிமனித உணர்வுகளை உதாசீனப்படுத்துவதாக நினைக்கும் ஒவ்வொருவரும் எண்ணிப்பாருங்கள்.  நீங்கள் செய்து கொண்டிருப்பது உண்மையான உணர்வுகளை சிதைப்பது எனத் தெரியவில்லையா? 'எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம், எழுதத் தெரியும் என்பதற்காக எதையும் எழுதுவது அழகல்ல' எனச் சொல்லிக்கொண்டேயிருங்கள். எந்த மாற்றமும் இதுவரை நிகழ்ந்தது இல்லையே, என்ன முடிந்ததை செய்தீர்கள்? இப்படித்தான் எழுதிக் களித்திருந்தோம், படிப்பவரின் எண்ணத்தை சுயமாக எண்ணவிடாமல் கிழித்திருந்தோம். 'போன கதை போகட்டும், இனிமே என்ன செய்யறதுனு சொல்லு' இப்படி கேட்டு கேட்டே சொல்ல வருபவரை சோர்வடையச் செய்யும் மகாபாவத்தை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.







இனி எப்படி விதை விதைப்பது? எந்த மரபணுவில் எந்த நோய் இருக்கிறது என அடையாளம் கண்டு கொள்வது? இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் இருக்கும், எல்லாம் அவன் செயல் என வாழ்ந்து முடித்து விடலாமா? இப்படித்தான் பல தேடல்கள் தொலைக்கப்பட்டு விட்டன. தொலைக்கப்பட்ட தேடல்களை தேடுவதை  அவசியமாக்கிவிட வேண்டியே ஒரு சிறு பயணம் இது. 

- வெ.இராதாகிருஷ்ணன்

...................................................................................................................................

டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ 

புத்தக வெளியீட்டு நிகழ்வு



குறிப்பு :



  1. இந்த சிறுகதைத் தொகுப்பு 24.7.2010 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா யுனிவர்சிட்டி அலுமினி கிளப், ஹெக்டே ஹாலில் நடைபெற உள்ளது.
  2. புத்தக வெளியீட்டு விழாவில் ரூ.100/- மதிப்புள்ள இந்த புத்தகம் 50% சிறப்பு சலுகையில் ரூ.50/-க்கு கிடைக்கும்.
  3. புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கின்ற அனைவருக்கும் டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘நுனிப்புல்‘ (பாகம் - 1) என்ற சிறுகதைத் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும்.
அனைவரும் வருக !


- பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname