Showing posts with label Frantz Fanon. Show all posts
Showing posts with label Frantz Fanon. Show all posts

Thursday, February 10, 2011

விடுதலையும், வன்செயலும்


பிரமிள் தமிழிலக்கியத்தின் தனித்துவமான ஆளுமைகளுள் ஒருவர். கவிதை, சிறுகதை, கட்டுரைகளுடன் பல முக்கியமான படைப்புகளையும் பிரமிள் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இவரது பல படைப்புகள் அச்சுக்கு வராமலேயே உள்ளது. 
மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. அசல் படைப்பின் தரம் சற்றும் குறையாமல், சரியான புரிதலை தரவல்ல மொழியாக்கங்கள் மிகக்குறைவு. மொழிபெயர்க்க கடினமான சிரமமான கதைகளையும், கட்டுரைகளையும் பிரமிள் அசாத்தியமான திறமையுடன் மொழி பெயர்த்துள்ளார்.


அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தில் முன்னணி வகித்த புரட்சிகரச் சிந்தனையாளர் ‘பிரான்ஸ்பனன்‘(FRANTZ FANON) என்பவர். மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான  மாட்னிக்கில் 1925ல் பிறந்த இவர் 1952லிருந்து அல்ஜீரியாவில் வசித்து வந்தார். இவர் எழுதிய நூல்களில் 'WRETCHED OF THE EARTH' மிகவும் பிரபலமானது. இந்த புத்தகத்தில் பனன் எழுதியுள்ள கருத்துகள் இன்றளவிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். இந்நூலிலுள்ள ‘புரட்சிகர வன்முறை பற்றி‘ என்ற அத்தியாயத்தின் ஒரு பகுதியை எழுத்தாளர் பிரமிள் தமிழாக்கம் செய்துள்ளதை இரண்டு பகுதிகளாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

விடுதலையும் வன்செயலும் (பகுதி 1)
- பிரான்ஸ்  பனன் - தமிழில் : பிரமிள் - 

            பிரான்ஸ்  பனன் ஒரு புரட்சிகரச் சிந்தனையாளர். அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராட்டத்தில் முன்னணி வகித்த ஒரு முக்கிய தலைவர். அவரது புரட்சிகரத் தத்துவார்த்தப் படைப்புகள் அல்ஜீரியப் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்தவுடன் ஆபிரிக்க தேசிய சுதந்திர எழுச்சிகளுக்கும் உத்வேகத்தை அளித்தன.
     தேசிய சுதந்திர எழுச்சிகளின் வரலாற்று யதார்த்தத்தை பனன் மிகவும் துல்லியமாக ஆய்வு செய்கிறார். கறுப்பு ஆப்பிரிக்காவில் தாண்டவமாடிய காலனித்துவச் சுரண்டலின் மனிதாபிமானமற்ற கொடூரத்தை அவரது எழுத்துக்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஒரு சமூகத்தின் அரசியல், பொருளாதார, கலாச்சாரப் பரிமாணங்களில் ஊடுருவும் ஏகாதிபத்தியச் சுரண்டல் முறையானது எவ்விதம் அம்மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து விடுகிறது என்பதை அவர் மிகவும் திறமையாகச் சித்தரித்துக் காட்டுகிறார். ஏகாதிபத்தியவாதிகளின் அடக்கு முறையை உடைத்தெறிய வேண்டுமாயின் ஆயுதப் போராட்டமே அதற்கு ஒரே வழி என்பதை பனன் சதா வலியுறுத்தி வந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை வன்முறையானது அத்தியாவசியமான, வரலாற்றுக் கட்டாயமான ஒரு அரசியற் போராட்ட வடிவம் என்பதை அவர் வலியுறுத்துகிறார். அநீதிக்கு எதிராகத் தொடுக்கப்படும் வன்முறை தர்மமானது, புரட்சிகரத் தன்மையுடையது என்பதை அவரது அவர் அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களின் விடிவுக்கு வழிகோலும் வன்முறைப் போராட்டங்கள் உன்னதமான தார்மீக இலட்சியத்தை உடையன என்கிறார்.
     ஒடுக்குமுறை ஆட்சியில் இருந்து ஒரு தேசிய இனம் தனது விடுதலையை, தேசிய மலர்ச்சியை பெற வேண்டுமாயின் அது வன்முறையினால் தான் முடியும். ஒடுக்குமுறை ஆட்சியில் இருந்து புரட்சிகர மக்கள் சமூகம் தனது கையில் ஆட்சியைப் பெற்றுக் கொள்வதை இது குறிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் மிகக் குறைந்த கோரிக்கையில் இருந்து அவர்களின் பிரக்ஞையிலிருந்து வாழ்வோட்டத்திலிருந்து இது வெடிக்கிறது. அடக்கப்பட்ட மக்களின் இப்புரட்சிகர எழுச்சி அடக்குமுறையாளர்களை சித்தப் பிரமைக் குள்ளாக்குகிறது.

     தேசிய விடுதலை ஒரு அற்புத நிகழ்ச்சி அல்ல. அது ஒரு சரித்திர நிகழ்ச்சி. இரண்டு சக்திகளின் மோதலில் இது விளைகிறது. அடக்குமுறையாளர்களின் வன்முறை மயமான ஆட்சியிலிருந்தே இது பிறக்கிறது. தேசமக்களை துப்பாக்கி முனையில் அடக்குவதினால் மக்கள் வன்முறையைக் கையாளுகின்றனர். இந்த அடக்குமுறையாளர்களை ரகசியமாக அழிக்க முடியாது. பார்வையாளர்களாக இருந்த மக்கள் சரித்திர வெளிச்சத்துக்கு வந்துவிட்ட போராளிகளாகிறார்கள். இது மக்களையே மாற்றி அமைக்கும் இயக்கம். ஆதிக்கத்திலிருந்து விடுபடும் ஒரு இயக்கம் புது மனிதனை உருவாக்குகிறது.
     இளமையிலிருந்தே ஒடுக்கப்பட்ட வந்த மக்கள் சமூகம் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்க வன்முறை தவிர வழியில்லை என்று இளமையிலிருந்தே உணர்கிறார்கள்.
     அடக்குமுறையாளர்கள் உலகை இரண்டு படுத்துகிறார்கள். தங்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி என வாழ்க்கை நலன்களைப் பிரித்து விடுகிறார்கள். இந்த பிரிவினையைக் கவனித்தால்தான் விடுதலைக்கான தேவை எப்படி உருப்பெறுகின்றன என உணரலாம். இந்த வேறுபாட்டை போலீசும், இராணுவமும் பாதுகாக்கிறது. அவர்கள் இல்லாமல் இந்த கூறுபட்ட வாழ்க்கை முறை தாக்குப்பிடிக்காது. சுரண்டுகிறவனை சுரண்டப் படுகிறவனிடமிருந்து பொலீசும் இராணுவமே காப்பாற்றுகிறது. இதுவே அடக்குமுறைச் சமூக அமைப்பு. இது அமைதியை நிலைநாட்டும் அமைப்பாக சுரண்டப்படுகிறவனின் வீட்டினுள் வன்முறைக்கும் அமைதியின்மைக்கும வழி செய்கிறது. ஆட்சியாளர்களை ஆளப்படுவனுக்கு எதிராக துருவமாக்குகிறது. இதனால் இருவரிடையிலேயும் உடன்பாட்டுக்கு இடமே இல்லை.
     அன்றாட வாழ்வில் வன்முறையை உபயோகித்து மக்களை அடக்கி வந்த அதே வன்முறை, அடக்கப்பட்டவர்களினால் விடுதலைப் போராக உருமாற்றமடைகிறது. அடக்கு முறையாளர்களால் சுரண்டப்படும் மக்கள் எவ்விதமான உயர்ந்த மதிப்பீடுகளையும் கொண்டவர்கள் அல்ல என்றும் மிருகங்கள் என்று சித்தரிக்கப்படுகிறார்கள். இந்தச் சித்தரிப்பு அடக்கப்பட்ட மனிதனுக்கு சிரிப்பூட்டும் சித்தரிப்பு. தங்களை மிருகங்களாகக் கருதி பிரயோகிக்கப்படுகிற அடக்குமுறையின் வன்முறையினை அவன் ஆட்சியாளன் மீதே திருப்பிவிடக் காத்திருக்கிறான்.
     எனவே அடக்குமுறையாளர்கள் பேசும் சகோதரத்துவம் அவனது அன்றாட வாழ்வைப் பொறுத்தவரை அர்த்தமற்றது. அடக்குமுறையாளன் சகோதரத்துவத்தைப் பற்றிப் பேசினால் அடக்கப்பட்டவன் சக்தியை உருவுகிறான். பேச்சளவில் ஒன்றும் செய்கையில் வேறு ஒன்றுமாக அடக்குமுறையாளன் நடந்து கொள்வதே அதன் காரணம்.
     வாழ்க்கையின் அடிப்படை உரிமைகளைப் பறிகொடுத்த மக்களின் ஒரே நோக்கம் தாம் பறிகொடுத்த நிலங்களைப் பெறுவதே. அவர்கள் தங்களிடமிருந்து அதைப் பறித்தவனுடன் சகோதரத்துவ உறவு கொள்ளமாட்டார்கள். பறிக்கப்பட்ட நிலம் திரும்பப் பெறப்பட வேண்டும். இதுதான் அடக்கப்பட்டவனது ஒரே நோக்கம். இதை உணராமல் சமாதானம் பற்றிப் பேசும் அறிவு வாதம் அர்த்தமற்றது.
     சமாதானத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள் பெயர் பெற்றவர்களாகவும், நிலத்தைப் பறி கொடுத்த மக்கள் சாமான்யர்களாகவும் இருக்கலாம். ஆனால் இந்த முகம் தெரியாத மக்கள் இழந்த நிலம் என்ற இறைமை அவர்களை வன்முறை என்ற முகாமுக்கு இட்டுச் செல்கிறது. இதனால் சரித்திரம் அவர்களுக்கு ஒரு முகத்தைக் கொடுக்கிறது. வன்முறை என்ற மதிப்பீட்டை வலுவிழக்க வைத்து மக்களைப் பொதிமாடுகளாக்குகிற மதிப்பீடுகள் துகள்களாகின்றன. அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட மக்கள் நேரில் காண்பது எதை? அவர்களை எளிதாக கைது செய்யலாம். கொல்லலாம், சீர்குலைக்கலாம் என்பதைத்தான். சமாதான இந்த அனுபவங்களை மக்கள் சகித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் சமாதானவாதிகளின் போதனையாகும்.
     எல்லா மனிதர்களும் சமமானவர்கள்என்ற போதனையைத்தான் வன்முறையினைக் கைக்கொள்ளும் மக்கள் செயல்படுத்துகிறார்கள். தங்களை அடக்கியாள்கிறவர்களும் தாங்களும் சமமானவர்கள் என்றால் அடக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் இருக்க முடியாது. எனவே வெளிப்படையான ஒரு போலிக் கட்டுப்பாடு தான் வன்முறையினால் சிறகடிக்கப்படுகிறது.

     நிலமும், உணவும் தேவை என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு அவை கிடைப்பதற்கான வழிமுறைகளைக் கொண்டு வருவது தான் அறிவு ஜீவிகளின் சித்தாந்தமாக வேண்டும். மக்களுக்கு இவை கிடைக்காமல் தடையிடுகிற எதுவுமே அடக்கப்பட்ட மக்களினுள் இருக்கிற அறிவுவாதிகள் உணர்ந்து கொள்கிறார்கள்.
     அடக்கப்பட்டவன் எப்போதுமே அடக்குமுறையாளனால் குற்றம் சாட்டப்பட்டுக் கொண்டிருப்பான். ஆனால் தான் குற்றவாளியல்ல என்பது அடக்கப்பட்டவனுக்குத் தெரியுயும். அவன் தரம் குறைந்தவனுமல்ல. அவன் மீது ஆதிக்கம் சுமத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. பொலீஸ், இராணுவம் ஆகியவற்றின் கெடுபிடிகள் அவனை அடக்குகிற அதே சமயத்தில் உள்ளூர அவனை வன்முறைக்கும் தயார்படுத்துகின்றன.
     அசையாதேஎன்ற கட்டளை தாக்குஎன்ற தூண்டுதலாகவே உருமாறுகிறது. அடக்கப்பட்டவனை விழிப்படைய வைத்து வன்முறைக்கான தயார்நிலையை உருவாக்குகிறது. இறுதிப் போராட்டத்தை ஒத்திப்போட முடியாது என்ற நிலை எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் தடையே தடையினை மீறுவதற்குத் தூண்டுகோலாகும் என்பது விதி. 

Comments system

Disqus Shortname