Thursday, December 31, 2009

புத்தக கண்காட்சியில் அகநாழிகை வெளியீடுகள்


33ஆவது சென்னை புத்தக கண்காட்சி 30.12.09 முதல் 10.1.2010 வரை

சென்னையில் நடைபெறவுள்ளது.

இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் மேல்நிலைப்பள்ளி

(பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

விடுமுறை தினங்களில் காலை 11 மணிமுதல் இரவு 8.30 வரை

மற்ற நாட்களில் மதியம் 2.மணிமுதல் இரவு 8.மணி வரை

இந்த ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சிக்கு அகநாழிகை பதிப்பகம் ஒன்பது புதிய நூல்களைக் கொண்டு வருகிறது.

புதிய எழுத்துக்களை அடையாளப்படுத்தும் விதமாக இணையம் மற்றும் சிற்றிதழ்களில் சிறப்பாக கவனம் பெற்று எழுதிவரும் படைப்பாளிகளான பா.ராஜாராம், நர்சிம், என்.விநாயகமுருகன், லாவண்யா சுந்தரராஜன், டிகேபி காந்தி, மதன் ஆகியோரது புத்தகங்களுடனும், ஏற்கனவே சிறப்பான எழுத்துகளின் வழியே அறியப்பட்டுள்ள வளர்மதி, பாரதிவசந்தன் ஆகிய படைப்பாளிகளின் படைப்புகளுடனும் இந்த புத்தக கண்காட்சியில் அகநாழிகை வெளியீடுகள் விற்பனைக்கு கிடைக்கும்.

புத்தக கண்காட்சியில் சிறப்புச் சலுகை விலையில் அகநாழிகை வெளியிட்டுள்ள நூல்களை பெற்றுக்கொள்ளலாம்

அகநாழிகை இதழின் ஆண்டுச் சந்தா கண்காட்சியில் பதிவு செய்பவர்களுக்கு ரூ.150 மட்டும்.

அகநாழிகையின் வாசகர்களோடும், இணைய எழுத்தாள நண்பர்களோடும் சந்தித்து உரையாடும் வாய்ப்பையும் புத்தக கண்காட்சி அளிப்பது மகிழ்வுக்குரியது.

கண்காட்சி நாட்களில் நண்பர்கள் என்னை இந்தத் தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். 999 454 1010

அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகள் கீழ்க்கண்ட ஸ்டால்களில் கிடைக்கும்.
........................................................................................................................

உயிர்மை அரங்கு எண்.12

பரிசல் புத்தக நிலையம் அரங்கு எண்.386

இருவாட்சி பதிப்பகம் அரங்கு எண்.121

மற்றும் பல அரங்குகளிலும் அகநாழிகை வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
.........................................................................................................................

1. கருவேல நிழல் - பா.ராஜாராம் (ரூ.40)

2. கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் (ரூ.40)

3. நீர்க்கோல வாழ்வை நச்சி - லாவண்யா சுந்தரராஜன் (ரூ.40)

4. கூர்தலறம் - டிகேபி காந்தி (ரூ.40)

5. அய்யனார் கம்மா - நர்சிம் (ரூ.40)

..........................................................................................................................

புத்தக கண்காட்சியில் சிறப்பு விலையாக ரூ.35 க்கு கிடைக்கும்.

ஐந்து புத்தகங்களும் சேர்த்து விலை ரூ.175

..........................................................................................................................


உறவும் நட்புமாக அனைவரும் வருக !

- பொன்.வாசுதேவன்

Monday, December 28, 2009

‘குரலற்றவனின் குரல்‘ புத்தக வெளியீட்டு விழா

28.12.2009 திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் தேவநேயப்பாவாணர் அரங்கில் (LLA  Building. அண்ணா சாலை, சென்னை-2) ‘இருவாட்சி‘ பதிப்பகத்தின் நடத்தும் யாழினி முனுசாமி தொகுத்துள்ள ‘குரலற்றவனின் குரல்‘ – தலித் பண்பாட்டு அரசியல் கதைகள் நூல் அறிமுக விழா நடைபெற உள்ளது அனைவரும் வருக..

iruvatchi invitaiton

Friday, December 25, 2009

உக்காந்து யோசிச்சது & நகுலன் வீட்டில் யாருமில்லை, அகநாழிகை மற்றும் சில

அகநாழிகை டிசம்பர் 2009 பற்றிய நண்பர்களின் பதிவுகள்

உக்கார்ந்து யோசிச்சது (25-12-09)..!!! - கார்த்திகைப்பாண்டியன்

குறிப்பும் முன்னொழுக்கமும் என்ற பொன்.வாசுதேவனின் தலையங்கத்துடன் "அகநாழிகை"யின் இரண்டாம் இதழ் வெளிவந்து விட்டது. முதல் இதழில் குறையாக சொல்லப்பட்ட சின்ன எழுத்துரு மாற்றப்பட்டு இப்பொழுது பெரிய எழுத்துருவை பயன்படுத்தி இருப்பதால் படிக்க எளிதாக இருக்கிறது. நம் பதிவுலகை சேர்ந்த அன்பர்கள்அ.மு.செய்யதுவும், அதி பிரதாபனும் அறிமுக எழுத்தாளர்களாக தங்கள் சிறுகதைகளுடன் களம் இறங்கி இருக்கிறார்கள். நிலாரசிகனின் "சங்கமித்திரை" என்னும் கதையும், நண்பர் உழவனின் கவிதையும் வெளியாகி இருக்கிறது.அனைவருக்கும் வாழ்த்துகள். லாவண்யா சுந்தரரராஜன், பா.ராஜாராம், என்.விநாயகமுருகன் ஆகிய பதிவர்களோடு, விக்கிரமாதித்தயன், உமாஷக்தி, சந்திரா, நலன், சுகிர்தா ஆகியோருடைய கவிதைகளும் வெளியாகி இருக்கின்றன.

"அமுதமும் அமைதியும்" என்ற பாவண்ணனின் கட்டுரை என்னை மிகவுமே பாதித்தது. கதை, கட்டுரை எதுவானாலும் மனிதர் அசத்துகிறார். இசை பற்றிய ரா.கிரிதரன் கட்டுரையும் , தாணு பிச்சையாவின் புத்தகம் பற்றிய ஜெயமோகனின் கட்டுரையும் இருக்கின்றன. குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு கட்டுரை - அஜயன் பாலாவின் அல்ஜீரிய சுதந்திரப் போர் பற்றியது. புத்தகத்தின் ஹைலைட்டான விஷயங்கள் இரண்டு. அவை, மனுஷ்யபுத்திரனின் நேர்காணல் மற்றும் லக்ஷ்மி சரவணக்குமாரின் சிறுகதை. புதிதாக சில பிரச்சினைகளை மனுஷ்யபுத்திரனின் பேட்டி தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. "காலச்சுவடு" கண்ணன் மற்றும் "உயிர் எழுத்து" சுதீர் செந்தில் ஆகிய இருவரையும் மனிதர் வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கிறார். பேட்டியின் முதல் பகுதி மட்டுமே இந்த இதழில் வெளியாகி இருக்கிறது. அடுத்த புத்தகத்துக்கு ஆவலுடன் வெயிட்டிங்.
000
அகநாழிகை said...

கார்த்திகைபாண்டியன்,
அகநாழிகை பற்றிய விமர்சனத்திற்கு நன்றி. புதிய எழுத்தாளராக அறிமுகம் பெற்றிருக்கும் சாரதா என்பவர் ‘அமிதவர்ஷினி அம்மா‘ என்ற பதிவர் என்பது கூடுதல் தகவல். பதிவர்களின் ஆகச்சிறந்த படைப்புகளுக்கு அகநாழிகையில் முன்னுரிமை உண்டு. பதிவர்களின் தொகுப்புகளை வெளியிடுவதற்கும் முன்னுரிமை உண்டு.

- பொன்.வாசுதேவன்

Thursday, December 24, 2009

இயேசுநாதரும் வாசுதேவனும்

பல்வேறு மதங்கள் மனித மனங்களை ஆளுகையில் வைத்திருந்தாலும் மதப்புனைவுகளுக்கிடையேயான ஒற்றுமை விசித்திரமானது... வியப்புக்குரியதும்கூட. சமுக மானுடவியல் ஆய்வாளர்கள் மதங்களை ஒப்பு நோக்கி ஆய்வு செய்து, ஒரே வித நிகழ்வுகள் பரவலாகவும், பொதுவாகவும் மதங்களில் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கி.பி.1783-ம் ஆண்டு சியாம் (இன்றைய தாய்லாந்து) நாட்டினை ஆண்ட மன்னர் முதலாவது ராமா என்றழைக்கப்பட்டார். தாய்லாந்தில் ஆளும் மன்னரின் பெயர் ராமா -1, 2, 3, என தொடர்கிறது. பெரும்பான்மை மக்களள் லிங்கம் போன்ற வடிவை கடவுளாக இன்றும் வழிபட்டு வருவதை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். தாய்லாந்தின் அண்மையில் உள்ள கம்போடியாவின் கட்டிடக்கலை உன்னதங்களாக விளங்கும் கோயில்கள் இந்து மதம் சார்ந்து கட்டப்பட்டு, மதங்களின் எல்லை அளப்பிட முடியாத தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. அக்காலத்தில் ‘பௌங் பேங் பெஃய்‘ என்ற பௌத்த வேளாண் பண்டிகையின் போது நம் தீபாவளி பண்டிகை போல வாண வேடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடப்பட்டுள்ளது.

1854-ல் நைல் நதிப்படுகையில் கண்டெடுக்கப்பட்ட சிலை இரண்டாம் ராம்செஸ் என்ற மன்னருடையது என அறியப்பட்டுள்ளது. ஆதி நாட்களில் ‘ராமபிதிகஸ்‘ என்றொரு மனிதக் குரங்கினம் இருந்துள்ளது. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்திருந்த இக்குரங்கினத்தின் படிவங்கள் வட இந்தியாவில் சிவாலிக் என்ற இடத்தில் 1910-ல் கண்டறியப்பட்டுள்ளது. மதங்களுக்கென உருவாக்கப்பட்ட வேதங்கள் பலவானாலும் அவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

மொழியியல் ஆய்வாளர் கருத்துப்படி, ஈரானிய மொழியும், சமஸ்கிருத மொழியும் ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்று தெரிகிறது. ‘ஆர்ய‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு இந்து மற்றும் ஈரானிய மக்கள் என்ற பொருள் உண்டு. ‘ஈரன்‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ‘பாலை நிலம்‘ என அர்த்தம். துருக்கியின் ஒரு பகுதியான ‘அனடோலியா‘ என்ற இடத்தின் வழிவந்த ‘ஈரண்‘ மக்கள் இந்திய மண்ணில் ‘ஆரண்‘ என்றாகி ‘ஆர்யன்‘ என மருவியிருக்கக்கூடும், (ஆய்வுச்செய்தி – துருக்கியில் வேதகால நாகரீகம்)

images (41)

ஆபிரகாம் – இப்ராகிம், யாகோப் – யூசூப் என கிறித்தவ, முஸ்லிம் மதங்களின் பெயர்களின் ஒற்றுமை நாம் அறிந்ததுதான். அதே போல ஏசுவிற்கும், கிருஷ்ணருக்கும் பல வியப்பான ஒற்றுமைகள் உண்டு. ஏசுநாதர் – கிருஷ்ணர் இருவருமே ஆட்டிடையர் குலத்தில் தோன்றியவர்கள். இவர்கள் இருவரின் பிறப்பின் போதும் வானத்தில் நட்சத்திரம் விசேஷமாக தோன்றியுள்ளன. ஏசுவும், வாசுதேவனும் இளமையில் தர்க்க சாஸ்திரத்தில் சிறந்து இருந்திருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக கம்சன் வாசுதேவனை கொல்ல முயற்சித்தது போலவே, ஏரோது மன்னன் முன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொல்ல கட்டளையிட்டான். யமுனை நதி இரண்டாகப் பிரிந்து வாசுதேவனுக்கு வழி விட்டது போலவே, செங்கடல் பிளந்து மோசேயிற்கு வழிவிட்டது. ஒரு பருக்கை சோறுண்டு பல முனிவர்களின் பசியாற்றிய கண்ணனின் லீலை போல, ஒரு அப்பத்தை ஆயிரமாக பல்கச் செய்து வழங்கிய அற்புதத்தை ஏசுநாதரும் செய்துள்ளார்.

இதெல்லாம் சரி... பெண்களிடம் கண்ணன் குறும்பு செய்ததை போல ஏசுநாதர் செய்திருக்கிறாரா..? என்று கேள்வியெழுப்புபவர்களுக்கும் பதில் உள்ளது. ஏசுநாதரின் இளம் பருவ வரலாறு நமக்கு கிடைக்கவில்லை என்பதுதான் அது. வீட்டை விட்டு மலை வனப்பகுதிக்கு வெளியேறும் ஏசுநாதர் அதன் பிறகு என்னவானார் என்ற தகவல் இன்றி, தேவகுமாரனாக மட்டுமே நமக்கு அறியக் கிடைக்கிறார்.

images (42)

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தாவரங்களின் உரையாடல்‘ தொகுப்பில் உள்ள ‘நட்சத்திரங்களோடு சூதாடுபவர்கள்‘ கதையை தற்போது மீண்டும் படித்த போது தோன்றிய எண்ணம்தான் இந்தப் பதிவு. இயேசுவுக்கும் அவரது தந்தைக்கும் இடையேயான உறவு எப்படியிருந்திருக்கக்கூடும் என்பதையொட்டிய புனைவு அக்கதை.

இது பல சிறு குறிப்புகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. மேலதிக தகவல்கள் இருப்பின் நீங்களும் விரிவான பதிவிடலாம்.

- பொன். வாசுதேவன்

Saturday, December 19, 2009

"ஞாநியின் பூச்செண்டு”

சாருவின் வலைப்பதிவில் 'ஞாநி பூச்செண்டு' மேட்டர் பற்றி எழுதியதற்கு ஞாநியின் விளக்கம் அல்லது மறுப்பு. நண்பர் ஒருவருக்கு ஞாநி அனுப்பிய மடல் இங்கே...

gnani என் பேச்சு திரித்தும் வெட்டியும் போடப்பட்டு அவதூறு செய்யப்படுகிறேன், இலக்கிய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் பரிசுகளாக புத்தகங்களைத்தான் தரவேண்டுமென்பதே என் பேச்சின் அழுத்தம். எல்லா நிகழ்ச்சிகளிலுமே நூல்களை நினைவுப்பரிசுகளாகத்தருவதையே நான்வக்லியுறுத்துகிறேன் வலியுறுத்துகிறேன். எனக்கு மேடையில் தரப்படும் பூச்செண்டை நான் எடுத்துப் போய் ப்யன்படுத்த வழியில்லை. அவற்றில் உள்ள பூக்களை பூ வைக்கும் பழக்கத்தில் உள்ள பெண்களுக்குக் கொடுத்துவிடுவது வழக்கம். அதைத்தான் அன்றும் செய்தேன். எனக்குப் பயன்படாத பூச்செண்டை தருவதற்கு பதில், பொன்னாடை என்று பொய் சொல்லிப் போர்த்தும் கைத்தறி துண்டு தந்தால் கூட டவலாகப் பயன்படுத்துவேன் என்று சொன்னேன்.
எழுத்தில் தரும் பூச்செண்டு என்பது ஓர் அடையாளம் . பாராட்டின் அடையாளம். ஆஹா, பேஷ் பேஷ் , பலே என்பது போல அது ஒரு சொல் குறியீடு அவ்வளவுதான். எழுத்தில் தரும் குட்டு என்ன அசல் குட்டா ? அதுவும் கண்டனத்தின் குறியீடு மட்டுமே.
நான் பூச்செண்டுக்கு எதிரி அல்ல, அது பயன்படக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுத்தால் எனக்கு ஆட்சேபனையில்லை. நான் அந்தக் காசில் புத்தகம் வாங்கித்தரவே விரும்புவேன்.
ஞாநி

நன்றி : http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_17.html

idly vadai

000

சாருநிவேதிதா மற்றும் ஞாநி இருவரது பதிவுகளையும் இங்கு வெளியிட காரணம் அதில் ‘அகநாழிகை‘ தொடர்பான விஷயம் இடம் பெற்றிருந்தது மட்டுமே என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

- பொன்.வாசுதேவன்

Thursday, December 17, 2009

அஞ்ஞாநியின் அராஜகம் - சாருநிவேதிதா

 

charu

பொதுவாக நான் வெளியிடங்களுக்கோ, விழாக்களுக்கோ செல்ல விரும்பு வதில்லை. காரணம், அங்கே நடக்கும் சில சம்பவங்கள் பல தினங்களுக்கு என் உறக்கத்தைக் கெடுத்து விடுவதாக இருக்கின்றன. உதாரணமாக, பொன்.வாசுதேவனின் அகநாழிகை பத்திரிகை மற்றும் பதிப்பகத்தின் சார்பாக நான்கு புத்தகங்கள் கே.கே. நகரில் (இந்தப் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்; இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது) உள்ள ஒரு புத்தக நிலையத்தில் வெளியிடப்பட்டன. அந்த நான்கு புத்தகங்களில் நர்சிம்மின் சிறுகதைத் தொகுப்பும் ஒன்று என்பதால் அதற்குச் சென்றிருந்தேன். அதில் என்னைப் பேசவும் சொன்னார்கள் என்பதால் பேசினேன்.

அப்போது நான் ஒரு தவறு செய்து விட்டேன். பொதுவாகவே நான் ஒவ்வொரு நாள் காலை எழுந்து கொள்ளும் போதும் ’ ஜெயமோகன், கமல்ஹாசன், மனுஷ்ய புத்திரன் ஆகிய மூவரைப் பற்றியும் இன்றைய தினம் எழுதக் கூடாது’ என்று நினைத்துக் கொள்வேன். அதேபோல் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஞாநியின் கருத்து எதையும் மறுத்து எழுதி விடக் கூடாது என்ற தீர்மானமும் நிரந்தரமாக எனக்கு உண்டு. காரணம், அவர் எதைச் சொன்னாலும் அதற்கு எதிரான கருத்தையே கொண்டிருப்பவனாக இருக்கிறேன் நான்.

சமீபத்திய உதாரணம், கடற்கரையில் யாரும் கிரிக்கெட் ஆடக் கூடாது என்று போலீஸ் உத்தரவு போட்டது. உடனே ஞாநி போலீஸின் உத்தரவை எதிர்த்து குமுதத்தில் எழுதினார். கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவது இளைஞர்களின் பிறப்பு உரிமை என்பது ஞாநியின் கருத்து. நானோ கடற்கரையில் வாக்கிங் செல்லும் போது அந்தக் கிரிக்கெட் பந்தால் பலமுறை அடி வாங்கியிருக்கிறேன். அதனால் இப்போதெல்லாம் காலை நேரத்தில் அந்தப் பக்கமே செல்வதில்லை. ஒருநாள் நானும் அவந்திகாவும் கடற்கரையில் அமர்ந்திருந்தபோது வாலிபால் பந்து ஒன்று அவந்திகாவின் முதுகில் பலமாக விழுந்து எங்களை அதிர்ச்சி அடையச் செய்தது. பார்த்தால் கொஞ்ச தூரத்தில் ஒரு இளைஞர் கூட்டம் வாலிபால் ஆடிக் கொண்டிருந்தது.

ஆனால் இப்படியெல்லாம் அடி வாங்கி சாகிறவர்கள் சாகட்டும்; இளைஞர்கள் கடற்கரையில் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது ஞாநியின் கட்சி.

இப்படியே ஞாநியின் ஒவ்வொரு கருத்தையும் மறுத்துக் கொண்டிருந்தால் ஒவ்வொரு வாரம் குமுதம் வந்ததும் நான் ஞாநியின் ஓ பக்கங்களுக்கு பதிலாக ஔவ் பக்கங்கள் என்று எழுத வேண்டியிருக்கும் என்பதாலேயே ஞாநியின் பக்கமே திரும்பக் கூடாது என்று இருந்தேன். மேலும், என் பார்வையில் ஞாநி ஒரு கலாச்சார தாலிபான். நானோ ஒரு ஹிப்பி. எப்படி ஒத்து வரும்?

அகநாழிகை கூட்டத்தில் ஆரம்பத்திலேயே எனக்கு ஞாநியின் தாலிபான் நடவடிக்கைகளால் பிரச்சினை ஏற்பட்டது. ஒரு நண்பர் எங்கள் எல்லோருக்கும் பூச்செண்டு கொடுத்தார். உடனே எழுந்த ஞாநி பூச்செண்டுகளால் என்ன பயன்; இது எவ்வளவு அர்த்தமற்ற காரியம் என்றெல்லாம் லெக்சர் அடித்து விட்டு, தனக்குக் கொடுக்கப்பட்ட பூச்செண்டை ஒரு பெண்மணியிடம் கொடுத்து ‘ இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பயன்படும்’ என்றார்.

( இதிலுள்ள நிலப்பிரபுத்துவ மனோபாவத்தை கவனியுங்கள். பூ என்றால் பெண்ணுக்குரியதாம்! அட, பொக்கேயைக் கொண்டு போய் தலையிலா வைப்பார்கள்?)

இதுதான் ஞாநியின் பிரச்சினை. தனக்குப் பூச்செண்டு பிடிக்காததால் அது எல்லோருக்கும் பிடிக்கக் கூடாது என்று நினைக்கிறார். அப்படிப் பிடித்தால் அவர்கள் முட்டாள்கள், மூடர்கள், அர்த்தமற்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள். என்ன ஒரு தர்க்கம் பாருங்கள்! ஞாநி கேட்டார், ’ பூச்செண்டுக்கு பதிலாக புத்தகங்களைக் கொடுத்திருக்கலாமே?’ என்று. 24 மணி நேரமும் மனிதர்கள் தர்க்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன?

எனக்குப் பூச்செண்டுகள் பிடிக்கும். ஆனால் ஞாநிக்குப் பிடிக்காது என்பதால் யாரும் யாருக்கும் பூச்செண்டு கொடுக்கக் கூடாது. இதே சர்வாதிகார மனப்போக்கைத்தான் அவர் எப்போதுமே எல்லா விஷயத்திலுமே கடைப்பிடித்து வருகிறார்.

ஞாநியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகாத்மா காந்தியின் ஞாபகமே வரும். காந்தி வாழ்ந்த போது நான் பிறக்கவில்லை; அட்லீஸ்ட் ஞாநியையாவது பார்க்கக் கொடுத்து வைத்திருக்கிறதே என்று தோன்றும். முதலில் ஞாநிக்கும் காந்திக்கும் உள்ள பட்டப் பெயர், புனைப்பெயர் ஒற்றுமையை கவனியுங்களேன். காந்திக்கு மகாத்மா, சங்கரனுக்கு ஞாநி. காந்திக்கு மக்கள் கொடுத்த பட்டம் மகாத்மா. சங்கரனுக்கு ஞாநி என்ற புனைப்பெயர் அவரே வைத்துக் கொண்டது.

பெயர் மட்டுமல்ல; இன்னும் பல பொருத்தங்களும் உள்ளன. காந்தி வெறும் லங்கோடும், இடையில் ஒரு துணியும் மட்டுமே அணிந்திருந்தார். ஞாநியும் அவ்வாறே எளிமையின் சிகரமாக விளங்குபவர். லுங்கிதான் கட்டுவார். அது மட்டுமல்ல. தான் லுங்கி கட்டிக் கொண்டு கமலா தியேட்டருக்குப் போனதை குமுதத்தில் எழுதி 50 லட்சம் வாசகர்களுக்கும் அந்தச் செய்தியைத் தெரிவித்தார். ஞாநி மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் நமது தேசிய உடையே லுங்கிதான் என்று சட்டம் போட்டாலும் போட்டிருப்பார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த எளிமை மேட்டரால் ஆகர்ஷிக்கப்பட்ட நானும் என்னால் முடிந்த ஒரு எளிமையைப் பின்பற்றி ஒருநாள் ஜட்டியே போடாமல் பேண்ட் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐநாக்ஸ் தியேட்டருக்குச் சென்றேன். எனக்கும் குமுதத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்த உடைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் எனக்கு நேர்ந்த விளைவுகள் பற்றி எழுதியிருக்கலாம்; ஞாநியின் லுங்கிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என் ஜட்டிக்குக் கிடைக்கவில்லை. விடுங்கள்.

இன்னும் பல ஒற்றுமைகள் உள்ளன. ஞாநி அஞ்சு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க மாட்டார். தன் வீட்டையும் யாராவது தலித்துக்கோ முஸ்லீமுக்கோ அல்லது இதுபோன்ற விளிம்பு நிலை மக்களுக்கோதான் விற்பார். இப்படி பல் துலக்குவதிலிருந்து லுங்கி கட்டுவது வரை நேர்மையை மட்டுமே கடைப்பிடிப்பார்.

இப்படிப்பட்ட மகாத்மாக்களும் ஞாநிகளும் எனக்கு அலர்ஜி என்பதாலேயே ஞாநி என்றால் கொஞ்சம் ஒதுங்கி விடும் வழக்கம் உள்ளவனாக இருந்தேன். அப்படி இருந்தும் கே.கே. நகரில் மாட்டிக் கொண்டேன். ஞாநி சொன்னார், கே.கே. நகர் என்று சொல்வது தப்பு; அது எப்படி பெயர்களைச் சுருக்கலாம்? கலைஞர் கருணாநிதி நகர் என்றே சொல்ல வேண்டும்.

அவருக்குப் பிறகு பேச எழுந்த நான் சொன்னேன்: இந்த அரசியல்வாதிகளெல்லாம் தமக்குத் தாமே ஆளாளுக்கு அறிஞர், கலைஞர், புரட்சித் தலைவி என்று பட்டம் கொடுத்துக் கொள்வார்கள். அதை மக்களாகிய நாம் ஏற்றுக் கொண்டு, கூட்டம் வழியும் பஸ்ஸில் தொங்கியபடியே “’ கலைஞர் கருணாநிதி நகருக்கு ஒரு டிக்கட் குடுங்க’ என்று கேட்க வேண்டுமா? அரசியல்வாதிகள் நம்மீது ஏறி சவாரி செய்யும் போது மக்கள் இப்படித்தான் ‘ கலைஞர் கருணாநிதி நகர்’ என்ற பெயரை ‘ கே.கே. நகர்’ என்று சுருக்கிப் பழிவாங்குவார்கள்.

உடனே இதற்கு பதில் சொல்ல எழுந்த ஞாநி “ பெயரையெல்லாம் சுருக்கக் கூடாது. உதாரணமாக, சாரு நிவேதிதாவை சாநி என்று சுருக்கலாமா?” என்று கேட்டார். அவருடைய பதிலில் மொத்தம் ஆறு தடவை சாநி சாநி என்று குறிப்பிட்டு மகிழ்ந்தார் ஞாநி. என்ன ஒரு வக்கிரம் பாருங்கள்! நான் செய்தது ஒரு பகடி. அதற்கு பதில் குண்டாந்தடியை எடுத்து மண்டையில் ஒரு போடு. கேட்டால் ‘ அப்படிச் சொல்லலாமா?’ என்றுதானே கேட்டேன் என்பார். அப்படியானால் ஒருத்தன் இன்னொருத்தனைப் பார்த்து ’ உன்னை நான் ங்கோத்தா என்று சொல்லவில்லை’ என்றால் ஆயிற்றா?

இப்படி ஒருமுறை பட்டும் புத்தி வராமல் எஸ். ராமகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஞாநி பேசுகிறார் என்று தெரிந்தும் அந்த விழாவுக்குச் சென்றேன். அப்போதுதான் ஞாநி அந்த அராஜகமான காரியத்தைச் செய்தார். தனக்கும் ராமகிருஷ்ணனுக்கும், தனக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும், தான் உயிர்மை நடத்தும் ராமகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்தது பற்றிக் குறிப்பிட்டவர் தனக்கு மனுஷ்ய புத்திரனின் மேல் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லி அதற்கு ஒரு உதாரணம் கூறினார்.

ஒரு வாரத்திற்கு முன்பு உடல் ஊனமுற்றோரின் நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டாராம். (ஞாநியின் வார்த்தைகளிலேயே தருகிறேன்). அவருக்கு முன்னே அமர்ந்திருந்த 300 பேருமே ஏதோ ஒரு விதத்தில் உடல் ஊனமுற்றோர். அவர்கள் எல்லோருமே மாதம் 2000 ரூ. கிடைத்தால் போதும் என்ற நிலையில் இருப்பவர்கள். ’ லாட்டரி சீட்டு விற்று கூட பிழைத்துக் கொள்வோம்; அதற்கான ஒரு அடிப்படைப் பண உதவி தேவை’ என்பதே அவர்களுடைய வேண்டுகோளும் கோரிக்கையுமாக இருந்தது. நான் (ஞாநி) அவர்களிடம் சொன்னேன். நீங்களெல்லாம் மனுஷ்ய புத்திரனை ரோல் மாடலாகக் கொள்ள வேண்டும். அவர் கல்வி என்ற ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தார். இன்று தமிழர்கள் எல்லோருக்கும் தெரிந்த பதிப்பாளராக இருக்கிறார். அதே போல் நீங்களும் கல்வியைக் கற்று முன்னேறுங்கள்.

என்று அந்த ஊனமுற்றவர்களிடம் மனுஷ்ய புத்திரனை உதாரணம் காட்டிச் சொன்னேன். அந்த அளவுக்கு நான் (ஞாநி) மனுஷ்ய புத்திரனை மதிக்கிறேன். அவர் மட்டும் கல்வியைத் தன் கையில் எடுக்காமல் இருந்திருந்தால் அவரும் லாட்டரிச் சீட்டு தானே விற்றுக் கொண்டு இருந்திருப்பார்?

ஞாநியின் வார்த்தைகளை அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

சாரு நிவேதிதாவாகிய நான் சுரணையற்றுப் போய் விட்டேன். மானம் கெட்டுப் போய் விட்டேன். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட அருவருப்பான, ஆபாசமான, அயோக்கியத்தனமான வசையை ஒரு ஆள் மனுஷ்ய புத்திரனின் மீது வீசும் போது கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டேன். தமிழ்ச் சமூகத்தைப் போலவே நானும் மானம் கெட்டுப் போய் விட்டேன்.

அமெரிக்காவில் இருப்பவர்கள் தயவு செய்து சொல்லுங்கள். உங்கள் ஊரில் ஒரு கறுப்பின மனிதனை நீக்ரோ என்று அழைத்தால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்? அத்தனை ஆண்டுகள் ஞாநியை சிறையில் அடைக்க வேண்டும். ஏனென்றால் அவர் மனுஷ்ய புத்திரனின் தேக அடையாளத்தைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டார். அது மட்டுமல்ல; கல்வி இல்லாவிட்டால் அவர் தெருவில் லாட்டரிச் சீட்டு விற்றுக் கொண்டிருந்திருப்பார் என்று சொல்லி விட்டார். ஒரு தலித்தை அந்த சாதியைச் சொல்லித் திட்டும் ஒரு வார்த்தையால் குறிப்பிட்டால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அத்தனை ஆண்டுகள் ஞாநியை சிறையில் தள்ள வேண்டும்.

நான் கேட்கிறேன்; சொல் புதிது பத்திரிகையில் ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனைப் பற்றி எழுதிய வசைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? தமிழின் மிக முக்கியமான கவிஞனாகிய மனுஷ்ய புத்திரனின் ஒட்டு மொத்த அடையாளமே அவருடைய உடல்தானா? அவர் தன்னுடைய எழுத்துகள் வழியே உருவாக்கியவை எல்லாம் அவருடைய உடலை மீறிச் செல்லும் ஒரு முயற்சி மட்டும்தானா? அல்லது உடல் ரீதியான ஒரு தடையை, பிரச்சினையை ஒருவர் கல்வி கற்பதன் வழியாக கடந்து சென்றுவிடத்தான் முடியுமா?

உடல்ரீதியான பிரச்சினைகள் கொண்டவர்களின் துன்பங்கள் என்பது நம்முடைய நாட்டில் முழுக்க முழுக்க சமூகரீதியானவை. மொத்த அமைப்பும் அவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அரசுப் பணிகளில் அவர்களுக்கு ஒதுக்கபட்டுள்ள இடஒதுக்கீட்டிற்கான இடங்கள் கூட நிரப்பப்படுவதில்லை என்பதுதான் உணமை. இதற்காக அவர்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். நம்முடைய வீடுகள், பொது இடங்கள், போக்குவரத்து அமைப்புகள் யாவும் அவர்களுக்கு எதிராக இருக்கின்றன. எல்லவற்றையும்விட மாற்றுத்திறன் கொண்டவர்களைப் பற்றிய சமூக மனோபாவம். ஒரு தலித் இந்த சமூகத்தில் எவ்வளவு பெரிய ஸ்தானத்தை அடைந்தாலுல் அவருடைய சாதிய இழிவிலிருந்து எப்படி விடுபட முடியவில்லையோ அதேபோல மாற்றுத் திறன்கொண்ட ஒருவர் எத்தகைய சாதனைகளைச் செய்தாலும் அவர் ஒரு குறைவுபட்ட மனிதராகத்தான் பார்க்கப்படுகிறார். அவர் பிற குறைவுபட்ட மனிதர்களுக்கு மட்டுமே ஒரு முன்னுதாரணம். இத்த்கைய பார்வை கொண்டவர்களுக்கு ஞாநி ஒரு சிறந்த உதாரணம். ஞாநி மனுஷ்ய புத்திரனிடம் காட்டும் மனோபாவம் என்பது அவரது சாதிய மனோபவத்தின் ஒரு நீட்சியே. அவர்களால் மனிதர்களை வேறு எப்படியும் பார்க்கவோ வகைப்படுத்தவோ முடியாது. வேண்டுமானால் யாராவது ஒரு பிராமணர் சங்க கூட்டத்தில் போய் ‘ சங்கரன்தான் நீங்கள் பின்பற்ற வேண்டிய முன்உதாரணம். உங்களுடைய சாதித் திமிரை எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்காமல், அதே சமயம் ஒரு போலி ஜனநாயக, போலி முற்போக்கு முகமூடியையும் அணிந்துகொண்டு வெற்றிகரமாக உலா வரவேண்டுமானால் நீங்கள் ஞாநியை பின் பற்றுங்கள் ’ என்று உரையாற்றலாம்.

மனுஷ்ய புத்திரன் ஒரு முன்னுதாரமே அல்ல என்பதுதான் இதில் வேடிக்கை. அவருடைய முதல் கவிதைத் தொகுப்பை அவர் எழுதியபோது அவர் 5-ஆம் வகுப்பு ஸ்கூல் drop out . அவர் எம்.ஏ. ஜர்னலிசம் படித்தபோது அவரது மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருந்தன. காலச்சுவடின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். என்னய்யா சம்பந்தம் அவர் கல்விக்கும் இலக்கியத்துக்கும்? தனிபட்ட அவரது வாழ்வில் அவர் எவ்வளவோ பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். மாற்றுத் திறன்கொண்ட ஒருவர் தனிப்பட்ட வாழ்விலோ சமூகரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ அடையக்கூடிய பிரச்சினைகள் பெரும்பாலானவற்றை அவர் சந்தித்ததே இல்லை என்பதை அவருடனான நேர்ப் பேச்சுகளில் அறிந்திருக்கிறேன்.. ஆனால் ஞாநியைப் பொறுத்தவரை மாற்றுத்திறன் கொண்ட அனைவரும் 2 ஆயிரம் ரூபாய்க்கு லாட்டரிச்சீட்டு விற்கும் ஒரு கும்பல். இப்படி மனிதர்களை கும்பலாகப் பார்க்கும் மனோபாவம் சாதித் திமிருக்கு மட்டுமே உண்டு. எம்.எஸ். உதயமூர்த்தி, அப்துல் கலாம் வகை மிடில் கிளாஸ் வாழ்க்கை முன்னேற்றப் புனைகதைகளை ஒரு இலக்கியக் கூட்டத்தில் ஞாநியைப் போன்ற ஒரு பாமரன் வந்து உளறினால் நாமும் அதை கேட்டுக் கொண்டிருக்கிறோம்

ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனை வெறுக்கிறார். ஞாநி மனுஷ்ய புத்திரனை வெறுக்கிறார். இன்னும் எனக்குத் தெரியாத பலர் இருக்கக் கூடும். அவர்கள் ஒரே ஆயுதத்தைத்தான் கையில் எடுக்கிறார்கள். அவரை உடல்ரீதியாகத் தாக்குவது. அவரது உடலின் வழியாகவே ஒரு கலைஞனாக அவர் அடைந்த சாதனைகளை மதிப்பிடுவதன் மூலம் அவருடைய இடத்தைக் கீழிறக்குவது. நான் மனுஷ்ய புத்திரனுக்காகப் பேசவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் உடல்தீயான அதிகாரம், மேல் நிலை நோக்கு, வன்முறை ஆகியவை குறித்தே நான் இங்கே விவாதிக்க விரும்புகிறேன்.

அடுத்து, ராமகிருஷ்ணனையும் விடவில்லை. ’ இவர் கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி விட்டுப் புனைகதைகள் எழுத வேண்டும்’ என்ற புத்திமதியையே அரை மணி நேரம் மாற்றி மாற்றி வெவ்வேறு வார்த்தைகளில் சொன்னார் ஞாநி. ராமகிருஷ்ணன் தொடர்ந்து சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதிக் கொண்டே இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யாமம் நாவல். சென்ற ஆண்டு பதினெட்டாம் நூற்றாண்டின் மழை என்ற சிறுகதைத் தொகுப்பு. இந்த ஆண்டு 50 குறுங்கதைகள். இதெல்லாம் பற்றி எழுதுவுமே தெரிந்து கொள்ளாமல் ‘ நீங்கள் கட்டுரை எழுதாமல் கதை எழுதுங்கள்’ என்று என்ன புத்திமதி? கதைகளை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் வந்து ‘ நீ கதை எழுது’ என்று சொல்ல எவ்வளவு திமிரும், ஆணவமும், தடித்தனமும் இருக்க வேண்டும்? அதுவும் ஞாநியைப் போன்ற தோல்வியடைந்த, இலக்கிய வாசகர்களால் துரத்தியடிக்கப்பட்ட ஒரு அரைவேக்காட்டு எழுத்தாளன் தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரைப் பார்த்து இந்தப் புத்திமதிகளை அள்ளிவிடுகிறார்.

ஒரு எழுத்தாளனிடம் இப்படி வந்து புத்திமதியும் அறிவுரையும் சொல்ல ஞாநிக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒரே தகுதிதான். அவர் தன்னை உண்மையிலேயே ஞாநியாகவும், மற்றவர்களை அஞ்ஞாநிகளாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் எல்லோருக்கும் எப்போதும் புத்திமதிகளையும், அறிவுரைகளையும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். ஒருமுறை தமிழக முதல்வர் கருணாநிதியை ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுரை வழங்கினார் ஞாநி. அதற்கு அவர் சொன்ன காரணம், கருணாநிதியின் வேட்டியில் மூத்திரக் கறை படிகிறது; அவருக்கு வயதாகி விட்டது.

அது ஏன் ஐயா எல்லோரையும் பார்த்து எழுதாதே, வேலை செய்யாதே, வீட்டுக்குப் போ என்றே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்?

இப்போது ஞாநிக்கு என் வயதுதான். 55. ஆனால் மைக்கின் முன்னால் பேச முடியாமல் திணறிக் கொண்டே இருக்கிறார். பார்த்தால் ரத்தக் கண்ணீர் வருகிறது. 95 வயது கிழவர் பேசுவது போல் அப்படிக் கமறிக் கமறிப் பேசுகிறார். ஏன், இவர் ஓய்வு எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழலாமே? குமுதம் பத்தியிலும் வாராவாரம் கருணாநிதியைத் திட்டுவதே இவருக்குப் பிழைப்பாக இருக்கிறது. ஆக, வேறு எந்த சப்ஜெக்டும் இவருக்குக் கிடைப்பதில்லை. அப்படியானால் எழுதுவதையும் நிறுத்தி விட்டு ஞாநி ஓய்வெடுக்கப் போகலாமே?

எஸ்.ரா. விஷயம் இருக்கட்டும். மனுஷ்ய புத்திரனை இப்படி ஒரு இலக்கிய மேடையில் அவமானப்படுத்திய ஞாநியை என்ன செய்தால் தகும்? சொல்லுங்கள்...

14.12.2009. 8.46 p.m. 

www.charuonline.com

கொண்டாடிச் செல்கிறேன் (வார்த்தை டிசம். 09)

 

pv vaarthai1

Monday, December 14, 2009

ஒரு வெளியீடும் பல பதிவுகளும்

அனைவருடைய அன்பிற்கும் மிக்க நன்றி.

http://www.jeyamohan.in/?p=5545

http://tvrk.blogspot.com/2009/12/blog-post_6945.html

http://www.narsim.in/2009/12/11-12-09.html

http://nvmonline.blogspot.com/2009/12/blog-post_02.html

http://nvmonline.blogspot.com/2009/12/blog-post_08.html

http://karuvelanizhal.blogspot.com/2009/12/blog-post_10.html

http://uyirodai.blogspot.com/2009/12/blog-post_08.html

http://yerumbu.blogspot.com/2009/12/blog-post_09.html

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_12.html

http://www.aathi-thamira.com/2009/12/blog-post.html

http://jackiesekar.blogspot.com/2009/12/blog-post_11.html

http://www.nilaraseeganonline.com/2009/12/blog-post_12.html

http://www.viruba.com/chiththan/event.aspx?id=11

http://cablesankar.blogspot.com/2009/12/blog-post_13.html

http://www.luckylookonline.com/2009/12/blog-post_2929.html

http://cablesankar.blogspot.com/2009/12/blog-post_11.html

http://ashokpakkangal.blogspot.com/2009/12/blog-post_14.html

http://anujanya.blogspot.com/2009/12/blog-post_14.html

http://veeduthirumbal.blogspot.com/2009/11/blogger_26.html

http://navishsenthilkumar.blogspot.com/2009/12/blog-post.html

http://nesamithran.blogspot.com/2009/12/blog-post_03.html

Thursday, December 3, 2009

அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்

டிசம்பர் 30 முதல் ஜ‌ன‌வரி 10 வரை நடைபெற உள்ள 33வது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் வெளிவர உள்ளது.

புத்தக வெளியீட்டு விழா

நாள் : டிசம்பர் 11, 2009 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி

இட‌ம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
6, மகாவீர் வணிக வளாகம், முனுசாமி சாலை,  கே.கே.நகர் (மேற்கு), பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்), சென்னை - 78.

அகநாழிகையின் இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். அனைத்து புத்தகங்களும் வெளியீட்டு விழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும்.

அனைவரும் வருக !

கவிதைகள்

1. கருவேல நிழல் - பா.ராஜ‌ாராம்   (விலை : ரூ.40/-)

books3

2. கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் (விலை : ரூ.40/-)

books7 

3. நீர்க்கோல வாழ்வை நச்சி - உயிரோடை லாவண்யா (விலை : ரூ.40/-)

wrapper 8a 

4. கூர்தலறம் - TKB காந்தி  (விலை : ரூ.40/-)

wrapper1 

சிறுகதைகள்

1. அய்யனார் கம்மா – நர்சிம் (விலை : ரூ.40/-)

books4

கட்டுரைகள்

1.பார்ப்பன சிபிஎம் + அமார்க்சியம்= ஈழவிடுதலை எதிர்ப்பு அரசியல் - தொகுப்பாசிரியர் : வளர்மதி
(கட்டுரையாளர்கள் : யமுனா ராஜேந்திரன், டி.அருள்எழிலன், வளர்மதி, ச.பாலமுருகன், இரா.முருகவேள்)  (விலை : ரூ.90/-)

wrapper

000

தமிழ் இலக்கிய படைப்புலகத்தின் ஆகச்சிறந்த படைப்புகளுடன், அகநாழிகை (டிசம்பர் 2009) இரண்டாவது இதழ் வெளியாகியிருக்கிறது.

கட்டுரைகள்
பாவண்ணன் - ஜெய‌மோகன் - சு.தமிழ்ச்செல்வி - அஜ‌யன்பாலா சித்தார்த் - ரிஷான் ஷெரீப் - செந்தி - யாழினி முனுசாமி - ரா.கிரிதரன்

சிறுகதை
எஸ்.ஷ‌ங்கர நாராயணன் ‍- லஷ்மி சரவணக்குமார் - கே.பாலமுருகன் - நிலா ரசிகன் - சாரதா - அ.மு.செய்யது - அதிபிரதாபன்

நாடகம்
வளர்மதி

கவிதைகள்
விக்ரமாதித்யன் - அய்யப்பமாதவன் - பெருந்தேவி - திலகபாமா - பா.ராஜ‌ாராம் - என்.விநாயகமுருகன் - உயிரோடை லாவண்யா - டிகேபி காந்தி - உமாஷக்தி - உழவன் - சுகிர்தா - த.அரவிந்தன் - பாரதி வசந்தன் - சந்திரா - வெ.எழிலரசு - ஜெ.நிஷாந்தினி - மாதங்கி - மயூரா - மதுமிதா - நளன் - அண்ணல் - சஹாரா தென்றல் - கதிர்பாரதி - ஆங்கரை பைரவி - நதியலை - சாந்தாதத்

அகநாழிகை இதழிற்கு படைப்புகள் / சந்தா / புரவலர் கட்டணம் / விளம்பரங்கள் அளிக்க :

அகநாழிகை
ஆசிரியர் : பொன்.வாசுதேவன்
33, மண்டபம் தெரு,
மதுராந்தகம் - 603306.

மின்னஞ்சல் : aganazhigai@gmail.com

ஆண்டு சந்தா 150 / இரண்டாண்டு சந்தா 275 / ஐந்தாண்டு சந்தா 600

ஆயுள் சந்தா 3000 / புரவலர் கட்டணம் 1000

அகநாழிகை பதிப்பக புத்தகங்களை வாங்க மற்றும் சந்தா தொகை செலுத்த :

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண். 155501500097

P.VASUDEVAN – MADURANTAKAM BRANCH

Tuesday, November 24, 2009

ஆயுத எழுத்து ( ‘உயிரோசை’ யில் வெளியான கட்டுரை)

ஆயுத எழுத்து ………… பொன்.வாசுதேவன்

நன்றி : உயிரோசை இணைய இதழ்

பல ஆண்டுகளாக தொடர்ந்து நிகழ்ந்து வந்த ஆலோசனைகளுக்கும் விவாதங்களுக்கும் பின்னர் பெரும்பான்மையினரான 153 ஐக்கிய நாடுகள் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்திற்கான கால அட்டவணை ஏற்படுத்துவதற்கான உறுதியான நம்பிக்கை அளித்துள்ளனர். ஆயுதங்கள் பரிமாற்றத்திற்கான பொது உச்ச நடைமுறைகளுக்கும் இது உறுதியளிப்பதாக உள்ளது. தற்போது உலகளாவிய ஆயுத வர்த்தக ஒப்பந்தம் ஏதும் இல்லாத நிலையில் இந்நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. உலகின் பெரும்பான்மை ஆயுத வர்த்தகர்கள் உலகளாவிய ஆயுத ஒப்பந்தத்தை ஏற்பதாக உறுதியளித்துள்ளனர்.

ஆயுத வர்த்தகத்தில் முக்கிய நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய குடியரசு,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகளின் இத்திட்டத்திற்கு ஆதரவாக ஓட்டளித்து தங்கள் ஒப்புதலை தெரிவித்துள்ளன.ஐக்கிய நாடுகளில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், பஹ்ரைன், பெலாரஸ், சீனா,க்யூபா, எகிப்து, ஈரான், குவைத், லிபியா, நிகராகுவா, கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, சூடான், சிரியா, ஐக்கிய அரபு நாடுகள், வெனிசுலா மற்றும் யேமன் ஆகிய 19 நாடுகளும் ஓட்டளிப்பில் பங்கேற்கவில்லை. எனினும் அவர்களும் ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிம்பாப்வே மட்டுமே இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது.

தீர்மானங்களின் மீதான விவாதத்தின்போது, ஆயுத வர்த்தக ஒப்பந்தம் பன்னாட்டு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டும், பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் மனிதநேய சட்டங்களின்படியும் இருக்க வேண்டுமென இதில் பங்கேற்ற நாடுகள் வலியுறுத்தின.

ஆயுத கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கூட்டணியாக முனைப்புடன் செயல்படும் தன்னார்வ அமைப்புகள் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்திற்கு பெரும் வரவேற்பு அளித்துள்ளன. உலக ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகளின் வரலாற்று நிகழ்வு என்றும், உலகம் முழுவதும் இந்த ஒப்பந்தத்தை முனைப்புடன் செயல்படுத்தப்பட வேண்டும்.மேலும், ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின் இறுதி நிலை வரை அனைத்து நாடுகளும் தொடர்ந்து உத்வேகமளிக்க வேண்டியது அவசியம் என்றும் தன்னார்வ குழுக்கள் எச்சரித்துள்ளன. ஒப்பந்தத்தில் நம்பிக்கையற்ற குறைந்த அளவிலான எண்ணிக்கையிலான நாடுகளால் ஆயுத வர்த்தக உடன்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளன.

"ஆயுத வர்த்தகத்தின் விளைவாக பரவலாக  ஏற்படும் உயிரிழப்பு, காயங்கள் மற்றும் மனித உரிமை குற்றங்கள் போன்றவற்றிற்கான பொறுப்புகளை மரபுவழி ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் அனைத்து நாடுகளும் ஏற்றாக வேண்டும்" என்கிறார் சிறு ஆயுதங்களுக்கான பன்னாட்டு செயல் கட்டமைப்பின் இயக்குநர் ரெபேக்கா பீட்டர்ஸ். மேலும், "இக்கொடிய ஆயுத வர்த்தகத்தின் மீது கொண்டு வரப்பட்டுள்ள சட்ட ரீதியான கட்டுப்பாடுகளுக்கு உடன்பட முன் வருவதாக அரசுகள் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது" என்கிறார்.

ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின் தொடர் கூட்டங்களின் இறுதியான முடிவுகள் 2012ல் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"ஆயுத பரிமாற்றத்தை நிறுத்தவும், தொடர்ச்சியாக நிகழும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களை தடுக்கவும் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்திற்கு பொது ஒழுங்கு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்" என்கிறார் பன்னாட்டு மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனலின் ஆயுத கட்டுப்பாடு பிரிவின் தலைவரான பிரையன் வுட்."இவ்விதிமுறைகளை ஏற்படுத்துவதன் வாயிலாக நூறாயிரக்கானவர்களின் உயிர்களையும், கோடிக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முடியும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள பன்னாட்டு ஆயுத பரிவர்த்தனை பொருட்டு விளையும் தீங்குகளுக்கு மாறாக ஏற்படும் அமைதி, பாதுகாப்பு மற்றும் சீரான வளர்ச்சி ஆகியவை குறித்த முக்கிய விவரங்கள் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

ஆயுத புழக்கத்தின் விளைவாக உலகின் ஏழ்மையான பகுதிகளில் ஏற்படும் துன்பங்கள், இறப்பு போன்றவை நெடுங்காலமாக தொடர்ந்து வருவது வருத்ததிற்குரியது. ஆண்டிற்கு நூறாயிரக்கணக்கான மக்கள் ஆயுத வன்முறையின் காரணமாக குற்றவாளிகள் கையில் சிக்கி உயிரிழக்கிறார்கள்.இவ்உரிமை மீறல்களை நிகழ்த்துவதன் வாயிலாக இனஅழிவுகளும், வாழ்வு நிலையும் பெரிதும் பாதிப்புள்ளாகிறது என்று தெரிவிக்கும் ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனர் நிறுவனத்தின் அன்னா மெக்டொனால்ட், "ஆயுத வர்த்தகத்தின் மீதான உலகளாவிய தரத்தை செம்மைப்படுத்துவதன் வழியே உலகெங்கும் வாழ்வா, சாவா என்ற நிலையில் இருந்து வரும் மக்களை பாதுகாக்க இயலும்"என்கிறார்.

மனித உரிமை மீறல்களுக்கும், எரிபொருள் தொடர்பான சச்சரவுகளுக்கும்,வறுமைக்கும் காரணியாக இருந்து வருகிற உலகளாவிய மரபுவழி ஆயுதப் பரிவர்த்தனையை நிறுத்த உலகளாவிய ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தை பொது ஓழுங்கு விதிகள் அவசியம்.

அனைத்து நாடுகளும் யுத்த தளவாடங்களிலிருந்தோ, இராணுவ வெடிமருந்துச் சாலை மூலமாகவோ நடத்தப்படும் மரபுவழி ஆயுதப் பரிவர்த்தனையை அனுமதிப்பதை பின்வரும் நிலைகளில் முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

மரபுவழி ஆயுத பரிவர்த்தனையானது பன்னாட்டு மனித உரிமை சட்ட மீறல் நிகழ்வுகளுக்கோ அல்லது மனித நேயத்திற்கு புறம்பான செயல்களுக்கு பயன்படுத்த அல்லது பயன் படுத்தக்கூடும் என்ற சந்தேகம் எழும் பட்சத்தில் ஆயுத பரிவர்த்தனை அனுமதிக்கப் படக்கூடாது.

தொடர் வளர்ச்சிக்கு பாதகமான தாக்கத்தையோ, ஊழல் ஒழுங்கீனங்களுக்கு துணைபோகும் என்றோ கருதப்பட்டால் ஆயுதப் பரிவர்த்தனை தடை செய்யப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் கடமைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதத்தில் அல்லது நடைமுறையில் இருக்கும் ஆயுத ஒப்பந்தங்களுக்கு இடையூறு செய்யும் விதத்திலோ ஆயுதம் தரித்த சச்சரவை மோசமாக்கும் பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட வேண்டும்.

சமகால வன்முறை குற்றங்களுக்கு ஆதரவளிப்பதான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த ஏற்படும் மரபுவழி ஆயுத பரிவர்த்தனைக்கு அனுமதிக்க கூடாது.

தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்ற சந்தேகத்திற்கிடமான ஆயுத பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடாது.

ஆயுதப் புழக்கத்தின் மீதான கட்டுப்பாடு என்பது முழுமையாக ஆயுதத் தடை விதிப்பது அல்ல. சட்டத்திற்கு புறம்பான குற்ற நிகழ்வுகளுக்கும், மனித உரிமை மீறல் குற்றங்களுக்கும், தீவிரவாத செயல்களுக்கும் பயன்படுத்துவோரின் கைகளில் ஆயுதங்கள் கிடைக்காமல் செய்ய சட்டமியற்றி ஆயுத பரிவர்த்தனையை ஒழுங்குபடுத்துவதாகும்.நிலச்சுரங்கங்கள் போன்ற சில வகை ஆயுதங்கள் மற்றும் போருக்கு உபயோகப்படுத்தும் ஆயுதங்கள் மீது இக்கட்டுப்பாடு கிடையாது. பன்னாட்டு ஆயுத சட்டத்திற்குட்பட்டு தற்காப்புக்காகவும், சட்ட அமலாக்கத்திற்கும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வைத்துக்கொள்ள தடையேதும் இல்லை.என்றாலும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், குடிமக்கள் நலன் கருதியும் இவ்வகை தற்காப்பு ஆயுத உபயோகத்திற்கான அனுமதி நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.

பன்னாட்டு ஆயுத சட்டங்கள் மீறப்படாமல் கட்டுக்குள் வைக்க ஆயுத வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. மனித உரிமை மீறல், மனிதநேயம் ஆகியவற்றின் பன்னாட்டு சட்ட விதிகளின் அடிப்படையில் ஆயுத வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட்டுள்ளது. மரபுவழி ஆயுத பரிவர்த்தனையின் மீது செம்மைப் படுத்தப்பட்ட உலகளாவிய பொது விதிகளை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இவ்ஒப்பந்தத்தின்படி உலக நாடுகளில் மனித உரிமை மீறல் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு ஆயுதப் பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்க முடியும்.

Friday, November 20, 2009

பயணங்களின் வழியே கிளைக்கும் சாலைத் திரைமொழி

road movie 1

(இக்கட்டுரையின் சுருக்கமான வடிவம் ‘உன்னதம்‘ நவம்பர் 2009 இதழில் ‘அறிமுகம் - சாலைத் திரைப் படங்கள்‘  என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இப்பதிவில் உள்ள படங்கள் பொதுவானவை. ‘டொரன்ட்டோ பாலஸ்தீன திரைப்பட விழா‘ இலச்சினை மட்டும் பதிவு தொடர்பானது.)

                                                                                                                                   - பொன்.வாசுதேவன்

சாலை வழிப்பயணங்களின் போது அறியக்கிடைக்கும் எழுத்து வடிவ, கேட்கிற வாய்மொழிக் காவியங்களையும் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைமொழி வடிவமான “சாலைத் திரைப்படங்கள்“ (Road Movie) இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஆரம்பித்த ஒன்று. கிரேக்க காவியங்களான ஒடிசி (Odyssey), அனெய்ட் (Aeneid) போன்றவற்றை திரைப்படமாக்குவதை ஒத்தது சாலைத் திரைப்படங்கள்.

அமெரிக்க சினிமாவின் தொடக்க காலங்களில் அறிமுகமான சாலைத் திரைமொழி என்கிற கலை வடிவம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பரவலாக அறியப்பட்டது. அந்த காலகட்டத்தில் புதிதாக பெருகிவந்த தானியங்கி தொழில்நுட்பம் குறித்தும், அமெரிக்க இளைஞர்களின் கலாச்சார ரீதியான வளர்ச்சிகள் குறித்தும் சாலைத் திரைப்படங்கள் பிரதிபலித்தன.

சாலைத் திரைப்படங்களின் நாயகர்கள் திரைக்கதையின் போக்கிற்கேற்ப ஒருவராகவே இல்லாமல் வேறுவேறாக மாறிக்கொண்டும், வளர்ச்சியடைந்து கொண்டே செல்லும். திரைக்கதை மொழியாளர்தான் திரைப்படம் நகர்வதை தீர்மானிப்பவாக இருக்கிற இந்த சாலைத்திரை வடிவம் 1960களில் சிறிது சிறிதான வளர்ச்சியை நோக்கி நகர ஆரம்பித்து, பயணங்களினூடே காணக்கிடைக்கிற சகப் பிரச்சனைகள், நிகழ்வுகளை திரைப்படமாக்குவதாக உருப்பெற்றது.

road movie 2 சாலைத் திரைப்படங்களில் திரைக்கதை பொதுவாக நான்கு முனைக்களமாக வடிவமைக்கப்பட்டது. முதலில் கதையின் நாயகன் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டு, அவன் மேற்கொள்கிற பயணம், பயணத்தில் ஊடாக அவன் காணும் மக்களின் வாழ்க்கை முறை, பேச்சு, எழுத்துவழி காவியங்கள் பற்றிய அறிமுகம், சிறு கதாபாத்திரங்கள் கதையினுள் கொண்டுவரப்பட்டு இறுதியாக பயணத்தின் முடிவில் கதையின் நாயகன் உணர்ந்தறிகிற வாழ்க்கை கூறப்படுகிறது. இப்பயணம் முடிவில்லாதது. வேறு களம், புதிய மனிதர்கள் என்று தொடர்ந்து நீள்வதற்கான சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியது ‘சாலைத் திரைப்படங்கள்‘

road movie 3 செப்டம்பர் 2009ல் கனடாவில் நடைபெற்ற டொரன்ட்டோ பாலஸ்தீனிய திரைப்பட விழா சாலைத் திரைமொழிக்கு முக்கியத்துவத்துடன் நிகழ்ந்தது. சாலைத் திரைப்படங்களின் வேர்களான பேச்சு மற்றும் எழுத்துவழியே கிளைக்கும் காவியங்களை உள்ளடக்கிய சிறப்பு காட்சியளிப்பாக எட்டு பாகங்களைக்கொண்ட பாலஸ்தீனிய சாலைத் திரைப்படங்கள் குறும்படங்களாக இவ்விழாவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்விற்கென 12 திரைகளில் பன்ஊடக பொருத்தல் ஏற்பாடுகளுடன் எல் பிளாண்டர்ஸ் (Elle Flanders) மற்றும் டமிரா ஸவாட்ஸ்கி (Tamira Sawatzky) ஆகியோரால் தனித்து வடிவமைக்கப்பட்டிருந்தது.

பாலஸ்தீனம் அல்லது யூத மக்களுக்கிடையே பல மணி நேர பயணவெளி களங்களில் நிகழும் கதைகளாக வடிவமைக்கப்பட்ட இந்த சாலை திரைப்படங்கள் நிமிடங்களாக சுருக்கப்பட்டு, அச்சமூகத்தின் நிலையை துல்லியமாக பிரதிபலிக்கும் விதமாக ஆக்கப்பட்டிருந்தது. சமகால பாலஸ்தீனிய அரசியல் சூழல் குறித்த பார்வையை இக்குறும்படங்கள் எளிதாக உணர்ந்தறிய செய்கிறது.

இவ்விழாவில் திரையிடப்பட்ட எட்டு சாலைத்திரைப்படங்கள் பற்றி காணலாம்.

ஓபல் கேடட் (Opal Cadet) - 3 நிமிடங்கள்

road movie 5 பாலஸ்தீனிய உரிமைகளுக்கான வழக்குரைஞராகவும், சமூகம் குறித்த நுண்பார்வையும், பேச்சுத்திறனுள்ள எழுத்தாளருமான ராஜா ஷிஹாதி, பாலஸ்தீன ஆக்கிரமிப்பு எல்லைப்பகுதிகளில் இருக்கும் இனரீதியாக தனித்து விடப்பட்ட சாலைகள் குறித்து இஸ்ரேல் ஏற்படுத்தவிருக்கும் சாலைத்திட்டம் பற்றி அறிய வருகிறார். பாலஸ்தீனிய எல்லைப் பகுதிகளை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி, சட்ட ரீதியாகவும் தன்னாளுகைக்கு கொண்டு வந்துவிட செயல்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு ராஜா ஷிஹாதி வாழ்சாட்சியாக இருக்கிறார். யூத மக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமேயான ஜஃபா என்ற சாலையின் ஊடாக ஓபல் கேடட் என்ற சீருந்தில் பயணிக்கும் போது ராஜா ஷிஹாதி நினைவில் விரியும் காட்சிப்பின்புலத்தில் இக்குறும்படம் நிகழ்கிறது.

மித அவசரம் (Slow Emergency) - 3 நிமிடங்கள்

road movie 6 பாலஸ்தீனத்தின் வடகிழக்கு பகுதியான ரமல்லாவிலிருந்து 15 நிமிட பயண தொலைவில் இருக்கும் ஸில்வத் என்ற நகரில் விபத்து வாகன ஓட்டியாக பணி புரிகிறான் யேஹியா. ஸில்வத் நகர் இஸ்ரேலின் வடக்கு ஜெருசலேம் அருகாமைப் பகுதியாகும். செயற்கை சிறுநீரக சிகிச்சைக்காக ஒரு நோயாளியை அழைத்துச் செல்கிற அவனது ஆம்புலன்ஸ், இனரீதியாக தனித்து ஆக்கிரமிக்கப்பட்ட சாலைகளில், குறித்த நேரத்தில் அடைந்துவிடக்கூடிய சாத்தியமற்ற சீரில்லாத வழியில் ரமல்லா மருத்துவமனைக்கு நாற்பது நிமிடங்கள் மிதவேகத்துடன் செல்வதை திரைப்படமாக்கப்பட்டுள்ளது.

ஜெரிகோ செல்லும் புதிய-பழைய சாலை (The New-Old Road to Jericho) - 3 நிமி.

மிகப்பழமையான பாலஸ்தீனிய குடியேற்ற நகரங்களில் விளங்கிய ஜெரிகோ, ரமல்லா நகர மக்களுக்கான ‘பாலஸ்தீனிய குளிர் வீடு‘ என வழங்கப்பட்டது. பரபரப்பான ஜெரிகோ நகரின் பழச் சந்தையில் ஹுடோ உடன் ஒரு தினத்தை கழித்த எழுபது வயது முதியவரின் நினைவோடையில் கிறிஸ்டியன் டேபே வரை நீளும் ஜெரிகோவின் பழைய சாலை பற்றிய நினைவுகள் பரிமாறப்படுகிறது.

ஓ கேமின்ஹோ (O Caminho) - 3 நிமிடங்கள்

road movie 7 பிரேசிலின் மேடோ கிரஸ்ஸோ என்ற ஊரிலிருந்து வெகு தொலை உள்ளது பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரம். இவ்விரு நகரங்களிலும் வசித்திருந்த அய்மன் ரமல்லாவிலேயே நிரந்தரமாக வசிக்க எண்ணுகிறான். அவனது முடிவு சரியானதுதானா என்ற குழப்பமும் இருக்கிறது. டாக்ஸி ஓட்டுரான அவனுக்கு பாலஸ்தீனிய தலைமையின் செயல்பாடுகள் ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. சில சதுர மைல்களிலேயே அவனது டாக்ஸி சவாரி முடிந்து விடுகிறது. ஜெருசலேம் வழியே பெத்லகேம் சவாரி சென்று 20 நிமிட தொலைவில் சென்று வந்து கொண்டிருக்கிறான். ஆனால் பாலஸ்தீனியர்கள் ஜெருசலேம் மற்றும் சுற்று வட்டார சாலை வழிகளில் புழங்க தடையிருப்பதால், 20 நிமிடமே ஆகக்கூடிய பயண நேரம் ஒன்றரை மணி நேரம் வரை ஆகிறது. ஆக்கிரமிப்பு சாலைப் பிரச்சனைகளைப் பற்றிய கூரிய பார்வையை இத்திரைப்படம் முன் வைக்கிறது.

அல் அல்மேனி (ஜெர்மன்) (Al Almanie – The German) - 3 நிமிடங்கள்

குறைந்து வரும் பாலஸ்தீனத்தின் நீராதாரம் பற்றி க்ளீமன்ஸ் என்ற ஜெர்மன் புவியிலாளர் பார்வையில் எடுக்கப்பட்ட படம். ரமல்லாவிலிருந்து க்வால்கில்யா என்ற இடத்திற்கு பயணம் செய்கிற க்ளீமன்ஸ், பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிடம் இழந்த நீர்வளங்களைப் பற்றி கூறுகிறார். படத்தில் இறுதியில் இன ஆக்கிரமிப்பு பகுதியிலிருக்கிற க்வால்கில்யா என்ற இடத்திற்கும் அவர் செல்ல முடியாமல் போகிறது.

டு பிட்டோ (To Biddo) - 3 நிமிடங்கள்

பாலஸ்தீனத்தில் வசிக்கும் அரேபிய ஆசிரியை ஒருவரின் மகிழ்ச்சியான பயணத்தின் போது பாலஸ்தீன எல்லைப் பகுதியில் காண நேரிடும் வாழ்க்கை பற்றிய கதை.

பாதாம் அரும்பு போல் (Like Almond Blossoms) - 3 நிமிடங்கள்

தான் வசித்த ஜெனின் நகரை விட்டு பெருநகரான ரமல்லாவிற்கு குடியேறிய 70 வயதாகும் சோனியா என்னும் பெண்மணி தனது தாயாரை காண மீண்டும் ஜெனின் நகருக்கு செல்லும் பயணமே கதை. தனது பால்யத்தில் ஹிப்பி கலாச்சாரப் பிரியையாக இருந்து 19 வயதில் ஒரு மாணவர் இயக்கத்தில் இருந்ததற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சோனியா, தனது பயணத்தின் போது ஜெனின் செல்லும் பாதையில் உள்ள பெரும் மாற்றங்கள் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

எஸ்ரா (Ezra) - 3 நிமிடங்கள்

road movie 8 வரையறுக்கப்பட்ட சுதந்திரங்களுடன் பாலஸ்தீனியர்கள் புழங்கும் பகுதியான ஹெப்ரன், ரமல்லாவிலிருந்து வெகுதொலைவில் உள்ள ஒரு நகரம். ஈராக்கை சேர்ந்த இஸ்ரேலிய யூதரான எஸ்ரா ஆக்கிரமிப்பு செயல்களால் மக்களுக்கும், நாட்டுக்கும் ஏற்படும் அழிவு குறித்து வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க இயலாது என்கிறார். இஸ்ரேலில் வசித்துக் கொண்டு பாலஸ்தீன விடுதலைக்காக சிறை சென்று போராடும் எஸ்ரா, மார்டின் லூதர் கிங்குடன் ஒப்பிட்டுப் பேசப்படுபவர். இதுபற்றிய தொகுப்பாக இக்குறும்படம் உள்ளது.

000

Tuesday, November 10, 2009

யமுனாவின் மனநோய் - சிறுகதை

 

யமுனாவின் மனநோய் – சிறுகதை ………………………………………. பொன்.வாசுதேவன்

thumbnail.aspx யமுனாவை இந்த வாரத்திற்குள்ளாக நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அறையிலிருந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லும் படியாக பார்வை எதன் மீதும் பதியவில்லை. யோசனையிலேயே புறக்காட்சிகளை மறந்துவிடுகிற பழக்கம் அவனுக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.

யமுனாவைப் பற்றித்தான் நினைவெல்லாம். சமீப காலமாகவே இன்னதென்று உணர முடியாத மாற்றம் அவளிடம் தெரிகிறது. எப்போதும் கவலையும் சோர்வும் சூழ்ந்த முகமாகவே காட்சி தருகிறாள். கல்யாணமான புதிதில் இப்படியில்லை. சிரிப்பும் சந்தோஷமுமாகத்தான் நேரம் கடந்தது. அதிலும், அவள் ஒருவனைக் காதலித்த விஷயத்திருந்து, பேருந்து நெருக்கத்தில் இடுப்பைத் தடவியவனைப் பற்றியெல்லாம் கூட வெளிப்படையாக சொன்னவிதம் அவனை மிகவும் கவர்ந்திருந்தது.

அவனுக்கும் காதலித்த அனுபவங்கள் உண்டு. மகேஸ்வரி, வானதி, கலா மற்றும் சத்யா என நான்கு பேரை, வெவ்வேறு வயதில் வெவ்வேறு சூழ்நிலைகளில் காதலித்திருக்கிறான் என்றாலும், யாரைப் பற்றியும் யமுனாவிடம் சொல்லவில்லை.

‘நீதான் நான் தொட்ட முதல் பெண்‘ என்று முதலிரவன்று ரொம்பவும் சாதாரணமாகச் சொன்னதை அவளும் நம்பி விட்டாள். அவனுக்கு இயல்பாகவே, பொய் சொன்னாலும் பிறர் நம்பி விடும்படி சொல்லக்கூடிய திறன் வாய்த்திருந்தது. மேலும், பெண்மை கலந்த அழகான அவன் முகத்தைப் பார்க்கிற எவருக்குமே ‘இவன் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்‘ என்றொரு நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.

0016 யமுனா தனது காதலைப் பற்றி சொன்னபோது முதலில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. முதலிரவன்றே ‘நான் ஏற்கனவே ஒருவனை காதலித்தேன்‘ என்று சொல்கிற பெண்களை சினிமாவில் மட்டுமே பார்த்துப் பழக்கம். பிறகு இவ்வளவு துணிச்சலா... என்று கோபம் வந்தாலும், அவள் கொஞ்சம் அழகாக வேறு இருந்ததால் கோபத்தையடக்கி ‘இதிலென்ன இருக்கு... பரவாயில்லை‘ என்று சொல்லி சமாளித்தான். கல்யாணமெல்லாம் முடிந்து முதலிரவு வரை வந்து விட்ட பிறகு இனி எதுவும் சொல்லக்கூடாது என்று தீர்மானித்தான். ஐந்து மாதங்கள் போனதே தெரியவில்லை. விருந்து, வெளியூர், சினிமா, ஊர் சுற்றல் என பொழுது ஓடியது.

எதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் மார்பு வரை உருவம் தெரிந்தது. ‘நான் ஏன் இப்படி இருக்கிறேன்...?‘ தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்குள் கேள்வியெழுந்தது. மனதிற்குள் நினைத்திருந்தாலும் பேசியது போல உதடுகள் சப்தமின்றி அசைந்தன.

ஆமாம். யமுனாதான் காரணம். எப்போதும் கலகலப்பாக இருந்த அவள் சில நாட்களாகவே குளிரில் உறைந்த நீராகசெயலற்று, ஜீவனற்று இருப்பதுதான் தன்னையும் பாதித்திருக்கிறது என்று அவன் நினைத்துக் கொண்டான்.

யமுனாவின் மனதில் ஆழ்ந்த உள்ளுணர்விற்கும், புற உலகிற்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதோ என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அவனைப் பார்க்கும் போதெல்லாம் தயங்கித் தயங்கி பேசுகிறாள். துணியை அலசிப் பிழிவதைப் போல் தொடர்ச்சியாக வழியும் அவள் பேச்சில் எப்போதுமே அவனுக்கு ஒரு மயக்கம் உண்டு.

இப்போதுகூட, கோயிலுக்குப் போயிருக்கும் அவள் உடன் இல்லாத இந்த நேரத்தின் வெறுமை மனதை கனக்கச் செய்கிறது. வெளியே பார்த்தான்.

0034 வெட்ட வெளியில் வட்டமிட்டது போன்ற வடிவத்தில் யாருமே விளையாடாமல் வெறுமையாய் காட்சியளித்தது தூரத்து மைதானம். சுற்றுச்சுவரைத் தாண்டி மைதானத்திற்குள் எட்டிப் பார்ப்பது போல் வளைந்து நின்றிருந்தது ஒரு தென்னை மரம். தென்னங்கீற்றின் இடைவெளிகளுக் குள்ளிருந்து கசிந்த சூரிய ஒளி கண் கூசச் செய்தது.

யமுனாவிற்கும் இயற்கையை ரசிப்பது ரொம்பப் பிடிக்கும். அவனைப் போலவே படிப்பது, எழுதுவது, வரைவது என எல்லாவற்றிலும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. அவனுக்குத் தெரியாமல் பத்திரிகைக்கு அனுப்பிய அவளது கவிதையொன்று கூட பிரசுரமாகியிருந்தது. நேர்த்தியான கவிதை. அவனுக்கு கூடஅது மாதிரியான நுட்பம் கைவரப்பெறவில்லை.

சொல்லாமல் கவிதையை பிரசுரத்திற்கு அனுப்பியதில் அவனுக்கு வருத்தம்தான் என்றாலும், நண்பர்களிடையே தன் மனைவியின் கவிதையைப் பற்றி சிலாகித்துப் பேசினான், நண்பர்கள் அனைவருமே அவளது கவிதையைப் பற்றி, அதில் தேங்கிக்கிடந்த அழகியல் உணர்வுகளை உன்னதங்களாய்ப் புகழ்ந்தனர். அவனுக்கும் பெருமையாக இருந்தது.

குவிந்த நிழலொன்று அறைக்குள் நீண்டது. நிமிர்ந்து பார்த்தான். யமுனாதான். கதவைத் திறந்த சப்தம் கூட எழவில்லை.

“வா... யமுனா, கோவில்ல நிறைய கூட்டமா...?“

“இல்லே, குறைச்சலாதான் இருந்தது. இந்தாங்க“

0026 உள்ளங்கையில் வைத்திருந்த திருநீற்றையும் குங்குமத்தையும் கலந்து நீட்டினாள். திருநீற்றுடன் கலந்து இயல்பான ஆழ்ந்த சிகப்பு நிறத்தை இழந்திருந்தது குங்குமம். அதையே சிறிது நேரம் பார்த்தான். பிறகு விரலால் தொட்டு உதிர்த் நெற்றியிலும் கழுத்திலும் தடவினான். கைகளில் மீதமிருந்ததை அவன் நெஞ்சிலும் கைகளிலும் தடவினாள் யமுனா. எப்போதும் அவள் இப்படிச் செய்வது வழக்கம். ஒருமுறை காரணம் கேட்ட போது ‘கை, கால்களை நல்லா வைப்பா... கடவுளே‘ என்று சொல்லி அவள் அம்மா சிறுவயதிலிருந்தே தடவி விட்டு வந்ததால் தனக்கும் அதே பழக்கமாகி விட்டது என்று சொன்னாள்.

“ஏன் இப்போதெல்லாம் சரியா பேசறதேயில்ல“

“நீங்கதான எப்பவும் அமைதியா இருக்கீங்க. என் மேல ஏதாவது கோபமிருந்தா சொல்லணும்“

அவனுக்கு சோர்வாக இருந்தது. என்ன இவள்... ஏன் ஒரு மாதிரியா இருக்கேன்னு கேட்டா நான் கோபமாக இருப்பதாக சொல்கிறாளே... சிறிது நேரம் பேச்சேதுமின்றி கழிந்தது.

“நமக்குள்ள ஏதோ ஒரு இடைவெளி ஏற்பட்டுடுச்சுன்னுநினைக்கிறேன். உன்னோட மாறுதலுக்கு அதுதான் காரணமா இருக்கணும். நானே உன்னை மனநல மருத்துவரிடம் அழைச்சுட்டு போகலாமான்னு யோசிச்சுகிட்டிருந்தேன்“ மென்மையாக அதேசமயம் அழுத்தமான முடிவாகச் சொன்னான் அவன்.

யமுனா பதிலேதும் சொல்லவில்லை. இருவருக்கிடையேயான நெருக்கத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்பது போல அமைதியாக இருந்தாள். பிறகு வழக்கம்போல தனது ஆழ்ந்த பார்வையை அவன் மேல் நிறைத்து, “சரி போகலாம், அதுகூட நல்லதாகத்தான் படுகிறது“ என்றாள்.

கொஞ்ச நேரம் கழித்து “என் பிஃரண்டோட கணவர் கூட சைக்ரியாட்ரிஸ்ட்தான். நான் வேணும்னா அவளுக்கு போன் பண்ணி நாளைககு வர்றதா சொல்லட்டுமா“ அனுமதியை எதிர்பார்க்கிற பார்வையோடு கேட்டாள் அவள்.

“சரி போன் பண்ணி சொல்லிடு. காலையில பத்து மணிக்கு

138276 இதுவரை தன்னை அழுத்திக் கொண்டிருந்த உணர்வுகளின் பாரம் குறைந்தது போல இருந்தது அவனுக்கு. இரவு படுத்த பின்னும் அவனுக்கு யோசனையாகவே இருந்தது. மனநல மருத்துவரிடம் போவதாக முடிவாகி விட்டது. ஆனால் அவரிடம் சென்றும் பலனேதும் இல்லையென்றால்... தூக்கமே வரவில்லை. யமுனாவை திரும்பிப் பார்த்தான்.

கால்களை மடக்கி பின்புறத்தோடு லேசாக அழுந்தியவண்ணம் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நிரம்பி வழியத்தயாரான வெண்ணை போல அவளது இடுப்புச் சதை சேலை விலகலில் புலப்பட்டது. பார்ப்பதற்குக் கிளர்ச்சியூட்டிய அக்காட்சி அவனது பாலுணர்வைத் தூண்டியது. பெரும்பாலும் இதுபோன்ற சமயங்களில் அவள் விழித்திருந்தால் மட்டுமே மேற்கொண்டு அவனது அசைவுகள் செயல்படும். இப்போது அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அதுவுமில்லாமல் மனதளவில் சந்தோஷமான நிலையில் அவள் இல்லாததும் அவனை யோசிக்கச் செய்தது.

இரவு கனவில் – தென்னை மட்டையொன்றை தலைகீழாகத் திருப்பி கீற்றுகளை கத்தியால்உதிர்த்துக் கொண்டிருந்தான் யாரோ ஒருவன். கவனச் சிதறலில் மட்டையைப் பிடித்திருந்த ஒரு கையின் ஐந்து விரல்களும் துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்தது. ரத்தம் வழியத் துடித்து முகத்தருகே கையை கொண்டு சென்ற போதுதான் கவனித்தான் அவனது முகம் போல இருந்தததை. அவன்தான் அது. அதற்குள் விழிப்பு வந்து விட்டது. இருளில் கடிகாரம் இருந்த திசைநோக்கித் திரும்பினான். மணி மூன்றரை காட்டியது.

இரவு சரியாக தூக்கமில்லாததால் காலையில் எழுந்ததும் கண்கள் எரிச்சலாக இருந்தது. யமுனா சமைப்பதற்கு அடையாளமாக தாளிப்பு வாசனை படுக்கை அறையெங்கும் பரவியிருந்தது. குளித்துவிட்டு வந்ததும்., உணவு மேசையில் உணவைத் தயாராக எடுத்து வைத்திருந்தாள் யமுனா. எப்போதும் இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவது வழக்கம். யமுனாவும் வந்து அமர்ந்தாள்.

“சாப்பிட்டு பத்து மணிக்கு மேல டாக்டர் கிட்டே போகலாமா..?“

“போன் பண்ணி சொல்லியிருக்கேன். பதினொரு மணிக்கு வரச் சொன்னார்“

465921 ஆட்டோ பிடித்து அரை மணி நேரம் முன்பாகவே போய்விட்டோம். அவர்களுக்கு முன்பாகவே ஒருவர் கிளினிக் வெளியே அமர்ந்திருந்தார். வழக்கமாக கிளினிக்களில் காணப்படும் டோக்கன் தரகிற அட்டெண்டர் யாரும் இல்லை. வெளியே அமர்ந்திருப்பவரும் டாக்டரைப் பார்க்க வந்தவராகத்தான் இருக்கும். அவனும் யமுனாவும் உள்ளே நுழைந்தார்கள். ஏற்கனவே அமர்ந்திருந்தவர் திரும்பி யமுனாவைப் பார்த்தார். அவள் மீதேறிய பார்வை அத்தோடு இறங்கவே இல்லை. அவனுக்கு எரிச்சலாக இருந்தது. அவள் மட்டும்தான் அந்த அறைக்குள் நுழைந்த்து போல, பெயரளவுக்கு கூட அவன் மேல் பார்வையைத் திருப்பவில்லை அவர். அவரது பிரச்சனை பெண்களைப் பற்றியதாகத்தான் இருக்குமென்று நினைத்துக் கொண்டான் அவன்.

அமர்ந்த சிறிது நேரத்தில் உள்ளேயிருந்து வயதான ஒருவர் வெளியே வந்தார். இவருக்கு சைக்ரியாட்ரிஸ்ட்டை பார்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கும் என்று யோசித்துப் பார்த்தான் அவன்.

தலையைக் கவிழ்ந்து கண்களை மூடிய படியிருந்தாள் யமுனா. எதுவும் பேச வில்லை.

மணியொலி கேட்டது. எதிரே அமர்ந்திருப்பவர் அடுத்து உள்ளே போவார் என்று நினைத்தான் அவன். அவர் யமுனா மேலிருந்த பார்வையை இன்னும் நகர்த்தவில்லை. மறுபடியும் மணியொலி கேட்டது. அவர் போவதாக தெரியவில்லை. யமுனாவும் அவனும் எழுந்து உள்ளே சென்றார்கள். கூடவே அவர் பார்வையும் தொடர்ந்தது.

3121827660_0f13163c58_m நீளமான அல்லது குறுந்தாடியுடன் கருமை சூழ்ந்த விழிகள் உள்ளிடுங்கியிருக்கும் மனநல மருத்துவரை கற்பனை செய்திருந்த அவனுக்கு உள்ளே நுழைந்ததும், விற்பனை பிரதிநிதி போன்று பளிச்சென்று மருத்துவர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. சிரித்த முகத்தோடு அமரச் சொன்னார்.

அவன் யமுனாவைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததும்,“அதெல்லாம் தேவையில்லை. உங்க இரண்டு பேரோட பேசினால் மட்டும் போதும். பிரச்சனை என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்“ என்றார் மருத்துவர்.

அவனுக்கு நம்பிக்கையேற்படவில்லை. எப்படி பேசுவதை மட்டுமே கவனித்து பிரச்சனையை உணர முடியும். யமுனாவைப் பற்றி எதுவும் சொல்லவிடாமல் செய்தது அவனுக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது.

தன்னிடம் கேட்கப்பட்டதெற்கெல்லாம் உணர்ச்சிகளின் உந்துதல் ஏதுமின்றி கவனமாக பதில் பேசினான் அவன். யமுனாவும் அவர் கேட்டதற்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளிடம்தான் மருத்துவர் நிறையப் பேசினார். டாக்டரின் இந்தச் செயல் அவனுக்குள் கொஞ்சம் நம்பிக்கையூட்டியது. எப்படியும் பிரச்சனையைத் தீர்த்து விடுவார். அவனுக்கு வேண்டியதெல்லாம் பழைய கலகலப்பான யமுனா. அரை மணி நேரத்திற்கும் மேலாக இருவரிடமும் பேசினார் மருத்துவர்.

‘நன்றி‘ சொல்லிவிட்டு மருந்துச் சீட்டில் ஏதோ எழுதத் தொடங்கினார். மனநல மருத்துவத்திற்கு கூட மருந்துகள் சாப்பிட வேண்டியுள்ளது பற்றி அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனது முகமாற்றத்தை உணர்ந்தவராக “பொதுவான மருந்துகள்தான்“ என்றார் மருத்துவர்.

3599012355_a36fefd5ce_m பணம் செலுத்தி மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு விடை பெற்று வெளியே வந்தார்கள். வெளியே அமர்ந்திருந்தவர் இன்னும் அங்கேயே இருந்தார். மறுபடியும் அவர் பார்வை யமுனாவை மொய்க்கத் தொடங்கியது. வாசலை விட்டு இறங்கும் போது மணியொலி கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். அவர் உள்ளே போகாமல் இன்னும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு குணமாகும் வாய்ப்பே இல்லை என்று தோன்றியது.

கிளினிக்கிற்கு எதிரே மருந்து கடை தென்பட்டது. யமுனாவைப் பார்த்து “நீ இப்படியே ஓரமாக நில். நான் மருந்து வாங்கி வரேன்“ என்று சொல்லிவிட்டு சாலையைக் கடந்து சென்றான்.

மருந்துகளை வாங்கிவிட்டு பணம் கொடுத்ததும் மருந்து சீட்டை பார்த்து மருந்துகள் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு சீட்டின் மேலே பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

மருந்துச் சீட்டின் மேலே ‘திரு.சுந்தரம்‘ என்று அவன் பெயர் எழுதப்பட்டிருந்தது.

000

Friday, November 6, 2009

ஆண் ஏன் சம்பாதிக்க வேண்டும்...?


பொருளாதாரம் என்பதற்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம், இருத்தலுக்கு படும் அவஸ்தைகள், பணம் சம்பாதிப்பது என்பது எவ்வளவு முக்கியமானது இப்படி பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

ணோ, பெண்ணோ வெற்றிகரமான, நிம்மதியான வாழ்க்கையை ஏன் நடத்த வேண்டும்? வாழ்வாதாரத்திற்கு அல்லல்பட்டு துயருற்று ஏன் பணத்தைத் தேடியலைய வேண்டும்? வாழ்வில் பணம் முக்கியமா.. நிம்மதி முக்கியமா.. பணத்தினால் நாம் தேடும் நிம்மதி கிடைத்து விடுகிறதா என்ற கேள்விகளை எழுப்பிய படம் Pursuit of Happiness.

னது குடும்ப சேமிப்புகளை முதலீடாகக் கொண்டு ‘எலும்புகளின் அடர்திறன் வருடி‘ (ஸ்கேனர்) மருத்துவ உபகரண விற்பனை பணி செய்து வருகிறான் கிறிஸ் கார்டனர் (வில் ஸ்மித்). எக்ஸ்ரே கருவியை விட அதிக விலை என்பதால் அதற்கு அதிக வரவேற்பில்லை. பொருளாதார ரீதியாக திருப்திகரமான வாழ்க்கையை தர இயலாத காரணத்தால் அவனை விட்டுப் பிரிந்து நியூயார்க் சென்று விடுகிறாள் மனைவி லிண்டா (டான்டி நியூட்டன்). ஐந்து வயது மகனான கிறிஸ்டோபர் (ஜேடன் ஸ்மித்) உடன் சான் பிரான்சிஸ்கோவில் வாழ்வைத் தொடரும் கிறிஸ் எதிர் கொள்ளும் துயரமான நிகழ்வுகளை பின்னணியாக கொண்ட படம்.

பொருளாதார ஸ்திரத்தன்மை எந்த அளவிற்கு வாழ்வின் சுகதுக்கங்களை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது என்பதை மிக தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விற்பனையாளனாக, கிறிஸ் சந்திக்கும் அவநம்பிக்கை, தோல்விகள், மனைவியுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை, விரக்தியின்றி, விடாமுயற்சியுடன் எப்படி வெற்றி கொண்டான் என்பதே கதையின் மையக்கரு. கதையின் முக்கிய பாத்திரங்கள் கிறிஸ் மற்றும் அவனது மகன் இருவர் மட்டுமே.

ன் மருத்துவ உபகரண தொழிலின் எதிர்காலம் மோசமாகி விட்ட நிலையில், மனைவி பிரிந்து சென்று விட, வீடை இழந்து வசிக்க இடமற்று, மகனுடன் தங்க இடம் தேடி அலையும் கிறிஸ், மகனிடம் அடிக்கடி ‘நீ என்னை நம்புகிறாயா..? நம்பு‘ என்கிறான். ஜுனியர் கிறிஸ் கூரிய பார்வையுடன் தன் வயதுக்கே உரிய கேள்விகளை கேட்டாலும், அவை கிறிஸ் மனதுள் ஊடுருவித் துளைக்கின்றன. எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில், மகனின் நம்பிக்கையை பொய்யாக்காமல் சிறு சிறு சந்தோஷங்களை வாய்க்கச் செய்கிறான் கிறிஸ். படம் நெடுக கிறிஸ் செல்லுமிடமெல்லாம் அவனது மகனும் ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்புடன் உடன் சுற்றி வருகிறான்.

ங்க இடமற்று, கையில் பணமின்றி, மகனிடம் தான் வைத்திருக்கும் மருத்துவ உபகரணம் ஒரு ‘கால இயந்திரம்‘ என்று கூறி... ‘டைனோசர் உலகை நாம் இப்போது காண்கிறோம்‘ என இரயில் நிலைய கழிப்பறைக்குள் மகனை உறங்க வைத்து, கண்ணீர் வழிய கிறிஸ் அமர்ந்திருக்கும் காட்சி உணர்த்துவது சொற்களில் அடங்காதது.

ருத்துவ உபகரண தொழில் செய்துகொண்டே, பங்கு விற்பனை முகவராக முயலும் கிறிஸ், அதற்காக ஊதியம் ஏதுமின்றி ஆறு மாத பயிற்சியில் சேர்கிறான். இருக்கின்ற ஒரு காலியிடத்திற்கு இருபது பேர் பயிற்சி பெறுகின்றனர். தன்னிடமிருக்கும் கடைசி ‘ஸ்கேனர்‘ விற்பனையாவதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது, அதை வாங்கும் மருத்துவர் முன் செயல்படாமல் போகிறது. ‘சிறு பிரச்சனைதான், சரி செய்து கொண்டு வருகிறேன்‘ என அவகாசம் கேட்டு செல்கிறான் கிறிஸ். ஸ்கேனரை பரிசோதனை செய்ததில், அதன் ‘வருடல் விளக்கு‘ செயலிழந்திருக்கிறது. அதை மாற்றி புதுப்பிக்கபணமின்றி, இரத்தம் கொடுத்து பணம் பெற்று, விளக்கினை மாற்றி பின்னர் விற்றும் விடுகிறான். கையில் கிடைத்த பணம் செலவாகி மறுபடியும், வருமானம் ஏதுமின்றி சிரமத்துடன் வாழ்க்கை நகர்கிறது.

வாழ்வில் வெற்றி பெறும் பெரிய கனவுகளுடன் தன் முயற்சிகளில் சிறிதும் தளராமல், உள்ளுக்குள் தோய்ந்திருக்கும் சோகத்தை சந்திப்பவர்களிடம் வெளிக்காட்டாமல் புன்னகையுடன் வலம் வருகிறான். பயிற்சியின் நிறைவில் பங்கு முகவராக பணி கிடைத்து விடுகிறது. அதன் பிறகு எல்லாமே தலைகீழ், கிறிஸ்க்கு வாய்ப்புகளும் வசதியும் குவிகிறது என்பதாக படம் நிறைவடைகிறது.

ன் கதையை தானே சொல்லிச் செல்லும் உத்தியில் நீளும் படம் நெடுக வில் ஸ்மித்தின் இயல்பான முகபாவங்கள் திரைப்படம் என்ற உணர்வையழித்து, யாருடைய வாழ்க்கையையோ நேரில் காண்கிறோமோ என்று எண்ணத்தோன்றுகிறது. மகனாக வரும் ஜேடன் ஸ்மித் மிக அருமையான உணர்வு பெருக்கினை நமக்களிக்கிறான்.

1981-களில் ‘கிறிஸ் கார்டனர்‘ என்பவர் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கோர்த்து ‘Memoir’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதினார். ஒரு சாதாரண விற்பனையாளராக தனது வாழ்வை துவங்கி அதில் தோல்வியுற்று, பின்னர் பங்கு முகவராக தொழில் புரிந்து கோடீஸ்வரரான கிறிஸ் கார்டனரின் உண்மைக்கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது இப்படம்.

டுத்தர வர்க்கத்து ஆண்களின் பொருளீட்டல் சிரமங்களையும், அவனுள் புதைந்திருக்கும் தந்தைமை உணர்வின் உள்ளார்ந்த வெளிப்பாடாகவும் இப்படம் சிறப்பாக உள்ளது. குழந்தைகளுடன் பார்க்க தகுதியான படம்.


ஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளுக்கு பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது இப்படம். வில் ஸ்மித் நடித்து தற்போது வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘Seven Pounds’ என்ற படத்தையும் ‘கேப்ரியேல் முசினோ‘ இயக்கியுள்ளார்.


திரைப்பட இரசனை கொண்டவர்கள் பொதுவாக யோசிக்கும் ‘ஏன் இது போன்ற திரைப்படங்கள் நம் மொழியில் எடுக்கப்படுவதில்லை‘ என்ற கேள்வியை இப்படமும் நமக்குள் ஆழ ஏற்படுத்துகிறது.

THE PURSUIT OF HAPPYNESS

இயக்குநர் : கேப்ரியேல் முசினோ

வெளியான வருடம் : டிசம்பர் 2006


Comments system

Disqus Shortname