Thursday, December 31, 2009

புத்தக கண்காட்சியில் அகநாழிகை வெளியீடுகள்


33ஆவது சென்னை புத்தக கண்காட்சி 30.12.09 முதல் 10.1.2010 வரை

சென்னையில் நடைபெறவுள்ளது.

இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் மேல்நிலைப்பள்ளி

(பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

விடுமுறை தினங்களில் காலை 11 மணிமுதல் இரவு 8.30 வரை

மற்ற நாட்களில் மதியம் 2.மணிமுதல் இரவு 8.மணி வரை

இந்த ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சிக்கு அகநாழிகை பதிப்பகம் ஒன்பது புதிய நூல்களைக் கொண்டு வருகிறது.

புதிய எழுத்துக்களை அடையாளப்படுத்தும் விதமாக இணையம் மற்றும் சிற்றிதழ்களில் சிறப்பாக கவனம் பெற்று எழுதிவரும் படைப்பாளிகளான பா.ராஜாராம், நர்சிம், என்.விநாயகமுருகன், லாவண்யா சுந்தரராஜன், டிகேபி காந்தி, மதன் ஆகியோரது புத்தகங்களுடனும், ஏற்கனவே சிறப்பான எழுத்துகளின் வழியே அறியப்பட்டுள்ள வளர்மதி, பாரதிவசந்தன் ஆகிய படைப்பாளிகளின் படைப்புகளுடனும் இந்த புத்தக கண்காட்சியில் அகநாழிகை வெளியீடுகள் விற்பனைக்கு கிடைக்கும்.

புத்தக கண்காட்சியில் சிறப்புச் சலுகை விலையில் அகநாழிகை வெளியிட்டுள்ள நூல்களை பெற்றுக்கொள்ளலாம்

அகநாழிகை இதழின் ஆண்டுச் சந்தா கண்காட்சியில் பதிவு செய்பவர்களுக்கு ரூ.150 மட்டும்.

அகநாழிகையின் வாசகர்களோடும், இணைய எழுத்தாள நண்பர்களோடும் சந்தித்து உரையாடும் வாய்ப்பையும் புத்தக கண்காட்சி அளிப்பது மகிழ்வுக்குரியது.

கண்காட்சி நாட்களில் நண்பர்கள் என்னை இந்தத் தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். 999 454 1010

அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகள் கீழ்க்கண்ட ஸ்டால்களில் கிடைக்கும்.
........................................................................................................................

உயிர்மை அரங்கு எண்.12

பரிசல் புத்தக நிலையம் அரங்கு எண்.386

இருவாட்சி பதிப்பகம் அரங்கு எண்.121

மற்றும் பல அரங்குகளிலும் அகநாழிகை வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
.........................................................................................................................

1. கருவேல நிழல் - பா.ராஜாராம் (ரூ.40)

2. கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் (ரூ.40)

3. நீர்க்கோல வாழ்வை நச்சி - லாவண்யா சுந்தரராஜன் (ரூ.40)

4. கூர்தலறம் - டிகேபி காந்தி (ரூ.40)

5. அய்யனார் கம்மா - நர்சிம் (ரூ.40)

..........................................................................................................................

புத்தக கண்காட்சியில் சிறப்பு விலையாக ரூ.35 க்கு கிடைக்கும்.

ஐந்து புத்தகங்களும் சேர்த்து விலை ரூ.175

..........................................................................................................................


உறவும் நட்புமாக அனைவரும் வருக !

- பொன்.வாசுதேவன்

Monday, December 28, 2009

‘குரலற்றவனின் குரல்‘ புத்தக வெளியீட்டு விழா

28.12.2009 திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் தேவநேயப்பாவாணர் அரங்கில் (LLA  Building. அண்ணா சாலை, சென்னை-2) ‘இருவாட்சி‘ பதிப்பகத்தின் நடத்தும் யாழினி முனுசாமி தொகுத்துள்ள ‘குரலற்றவனின் குரல்‘ – தலித் பண்பாட்டு அரசியல் கதைகள் நூல் அறிமுக விழா நடைபெற உள்ளது அனைவரும் வருக..

iruvatchi invitaiton

Friday, December 25, 2009

உக்காந்து யோசிச்சது & நகுலன் வீட்டில் யாருமில்லை, அகநாழிகை மற்றும் சில

அகநாழிகை டிசம்பர் 2009 பற்றிய நண்பர்களின் பதிவுகள்

உக்கார்ந்து யோசிச்சது (25-12-09)..!!! - கார்த்திகைப்பாண்டியன்

குறிப்பும் முன்னொழுக்கமும் என்ற பொன்.வாசுதேவனின் தலையங்கத்துடன் "அகநாழிகை"யின் இரண்டாம் இதழ் வெளிவந்து விட்டது. முதல் இதழில் குறையாக சொல்லப்பட்ட சின்ன எழுத்துரு மாற்றப்பட்டு இப்பொழுது பெரிய எழுத்துருவை பயன்படுத்தி இருப்பதால் படிக்க எளிதாக இருக்கிறது. நம் பதிவுலகை சேர்ந்த அன்பர்கள்அ.மு.செய்யதுவும், அதி பிரதாபனும் அறிமுக எழுத்தாளர்களாக தங்கள் சிறுகதைகளுடன் களம் இறங்கி இருக்கிறார்கள். நிலாரசிகனின் "சங்கமித்திரை" என்னும் கதையும், நண்பர் உழவனின் கவிதையும் வெளியாகி இருக்கிறது.அனைவருக்கும் வாழ்த்துகள். லாவண்யா சுந்தரரராஜன், பா.ராஜாராம், என்.விநாயகமுருகன் ஆகிய பதிவர்களோடு, விக்கிரமாதித்தயன், உமாஷக்தி, சந்திரா, நலன், சுகிர்தா ஆகியோருடைய கவிதைகளும் வெளியாகி இருக்கின்றன.

"அமுதமும் அமைதியும்" என்ற பாவண்ணனின் கட்டுரை என்னை மிகவுமே பாதித்தது. கதை, கட்டுரை எதுவானாலும் மனிதர் அசத்துகிறார். இசை பற்றிய ரா.கிரிதரன் கட்டுரையும் , தாணு பிச்சையாவின் புத்தகம் பற்றிய ஜெயமோகனின் கட்டுரையும் இருக்கின்றன. குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு கட்டுரை - அஜயன் பாலாவின் அல்ஜீரிய சுதந்திரப் போர் பற்றியது. புத்தகத்தின் ஹைலைட்டான விஷயங்கள் இரண்டு. அவை, மனுஷ்யபுத்திரனின் நேர்காணல் மற்றும் லக்ஷ்மி சரவணக்குமாரின் சிறுகதை. புதிதாக சில பிரச்சினைகளை மனுஷ்யபுத்திரனின் பேட்டி தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. "காலச்சுவடு" கண்ணன் மற்றும் "உயிர் எழுத்து" சுதீர் செந்தில் ஆகிய இருவரையும் மனிதர் வாங்கு வாங்கென்று வாங்கியிருக்கிறார். பேட்டியின் முதல் பகுதி மட்டுமே இந்த இதழில் வெளியாகி இருக்கிறது. அடுத்த புத்தகத்துக்கு ஆவலுடன் வெயிட்டிங்.
000
அகநாழிகை said...

கார்த்திகைபாண்டியன்,
அகநாழிகை பற்றிய விமர்சனத்திற்கு நன்றி. புதிய எழுத்தாளராக அறிமுகம் பெற்றிருக்கும் சாரதா என்பவர் ‘அமிதவர்ஷினி அம்மா‘ என்ற பதிவர் என்பது கூடுதல் தகவல். பதிவர்களின் ஆகச்சிறந்த படைப்புகளுக்கு அகநாழிகையில் முன்னுரிமை உண்டு. பதிவர்களின் தொகுப்புகளை வெளியிடுவதற்கும் முன்னுரிமை உண்டு.

- பொன்.வாசுதேவன்

Thursday, December 24, 2009

இயேசுநாதரும் வாசுதேவனும்

பல்வேறு மதங்கள் மனித மனங்களை ஆளுகையில் வைத்திருந்தாலும் மதப்புனைவுகளுக்கிடையேயான ஒற்றுமை விசித்திரமானது... வியப்புக்குரியதும்கூட. சமுக மானுடவியல் ஆய்வாளர்கள் மதங்களை ஒப்பு நோக்கி ஆய்வு செய்து, ஒரே வித நிகழ்வுகள் பரவலாகவும், பொதுவாகவும் மதங்களில் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கி.பி.1783-ம் ஆண்டு சியாம் (இன்றைய தாய்லாந்து) நாட்டினை ஆண்ட மன்னர் முதலாவது ராமா என்றழைக்கப்பட்டார். தாய்லாந்தில் ஆளும் மன்னரின் பெயர் ராமா -1, 2, 3, என தொடர்கிறது. பெரும்பான்மை மக்களள் லிங்கம் போன்ற வடிவை கடவுளாக இன்றும் வழிபட்டு வருவதை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். தாய்லாந்தின் அண்மையில் உள்ள கம்போடியாவின் கட்டிடக்கலை உன்னதங்களாக விளங்கும் கோயில்கள் இந்து மதம் சார்ந்து கட்டப்பட்டு, மதங்களின் எல்லை அளப்பிட முடியாத தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. அக்காலத்தில் ‘பௌங் பேங் பெஃய்‘ என்ற பௌத்த வேளாண் பண்டிகையின் போது நம் தீபாவளி பண்டிகை போல வாண வேடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடப்பட்டுள்ளது.

1854-ல் நைல் நதிப்படுகையில் கண்டெடுக்கப்பட்ட சிலை இரண்டாம் ராம்செஸ் என்ற மன்னருடையது என அறியப்பட்டுள்ளது. ஆதி நாட்களில் ‘ராமபிதிகஸ்‘ என்றொரு மனிதக் குரங்கினம் இருந்துள்ளது. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்திருந்த இக்குரங்கினத்தின் படிவங்கள் வட இந்தியாவில் சிவாலிக் என்ற இடத்தில் 1910-ல் கண்டறியப்பட்டுள்ளது. மதங்களுக்கென உருவாக்கப்பட்ட வேதங்கள் பலவானாலும் அவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

மொழியியல் ஆய்வாளர் கருத்துப்படி, ஈரானிய மொழியும், சமஸ்கிருத மொழியும் ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்று தெரிகிறது. ‘ஆர்ய‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு இந்து மற்றும் ஈரானிய மக்கள் என்ற பொருள் உண்டு. ‘ஈரன்‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ‘பாலை நிலம்‘ என அர்த்தம். துருக்கியின் ஒரு பகுதியான ‘அனடோலியா‘ என்ற இடத்தின் வழிவந்த ‘ஈரண்‘ மக்கள் இந்திய மண்ணில் ‘ஆரண்‘ என்றாகி ‘ஆர்யன்‘ என மருவியிருக்கக்கூடும், (ஆய்வுச்செய்தி – துருக்கியில் வேதகால நாகரீகம்)

images (41)

ஆபிரகாம் – இப்ராகிம், யாகோப் – யூசூப் என கிறித்தவ, முஸ்லிம் மதங்களின் பெயர்களின் ஒற்றுமை நாம் அறிந்ததுதான். அதே போல ஏசுவிற்கும், கிருஷ்ணருக்கும் பல வியப்பான ஒற்றுமைகள் உண்டு. ஏசுநாதர் – கிருஷ்ணர் இருவருமே ஆட்டிடையர் குலத்தில் தோன்றியவர்கள். இவர்கள் இருவரின் பிறப்பின் போதும் வானத்தில் நட்சத்திரம் விசேஷமாக தோன்றியுள்ளன. ஏசுவும், வாசுதேவனும் இளமையில் தர்க்க சாஸ்திரத்தில் சிறந்து இருந்திருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக கம்சன் வாசுதேவனை கொல்ல முயற்சித்தது போலவே, ஏரோது மன்னன் முன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொல்ல கட்டளையிட்டான். யமுனை நதி இரண்டாகப் பிரிந்து வாசுதேவனுக்கு வழி விட்டது போலவே, செங்கடல் பிளந்து மோசேயிற்கு வழிவிட்டது. ஒரு பருக்கை சோறுண்டு பல முனிவர்களின் பசியாற்றிய கண்ணனின் லீலை போல, ஒரு அப்பத்தை ஆயிரமாக பல்கச் செய்து வழங்கிய அற்புதத்தை ஏசுநாதரும் செய்துள்ளார்.

இதெல்லாம் சரி... பெண்களிடம் கண்ணன் குறும்பு செய்ததை போல ஏசுநாதர் செய்திருக்கிறாரா..? என்று கேள்வியெழுப்புபவர்களுக்கும் பதில் உள்ளது. ஏசுநாதரின் இளம் பருவ வரலாறு நமக்கு கிடைக்கவில்லை என்பதுதான் அது. வீட்டை விட்டு மலை வனப்பகுதிக்கு வெளியேறும் ஏசுநாதர் அதன் பிறகு என்னவானார் என்ற தகவல் இன்றி, தேவகுமாரனாக மட்டுமே நமக்கு அறியக் கிடைக்கிறார்.

images (42)

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தாவரங்களின் உரையாடல்‘ தொகுப்பில் உள்ள ‘நட்சத்திரங்களோடு சூதாடுபவர்கள்‘ கதையை தற்போது மீண்டும் படித்த போது தோன்றிய எண்ணம்தான் இந்தப் பதிவு. இயேசுவுக்கும் அவரது தந்தைக்கும் இடையேயான உறவு எப்படியிருந்திருக்கக்கூடும் என்பதையொட்டிய புனைவு அக்கதை.

இது பல சிறு குறிப்புகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. மேலதிக தகவல்கள் இருப்பின் நீங்களும் விரிவான பதிவிடலாம்.

- பொன். வாசுதேவன்

Saturday, December 19, 2009

"ஞாநியின் பூச்செண்டு”

சாருவின் வலைப்பதிவில் 'ஞாநி பூச்செண்டு' மேட்டர் பற்றி எழுதியதற்கு ஞாநியின் விளக்கம் அல்லது மறுப்பு. நண்பர் ஒருவருக்கு ஞாநி அனுப்பிய மடல் இங்கே...

gnani என் பேச்சு திரித்தும் வெட்டியும் போடப்பட்டு அவதூறு செய்யப்படுகிறேன், இலக்கிய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் பரிசுகளாக புத்தகங்களைத்தான் தரவேண்டுமென்பதே என் பேச்சின் அழுத்தம். எல்லா நிகழ்ச்சிகளிலுமே நூல்களை நினைவுப்பரிசுகளாகத்தருவதையே நான்வக்லியுறுத்துகிறேன் வலியுறுத்துகிறேன். எனக்கு மேடையில் தரப்படும் பூச்செண்டை நான் எடுத்துப் போய் ப்யன்படுத்த வழியில்லை. அவற்றில் உள்ள பூக்களை பூ வைக்கும் பழக்கத்தில் உள்ள பெண்களுக்குக் கொடுத்துவிடுவது வழக்கம். அதைத்தான் அன்றும் செய்தேன். எனக்குப் பயன்படாத பூச்செண்டை தருவதற்கு பதில், பொன்னாடை என்று பொய் சொல்லிப் போர்த்தும் கைத்தறி துண்டு தந்தால் கூட டவலாகப் பயன்படுத்துவேன் என்று சொன்னேன்.
எழுத்தில் தரும் பூச்செண்டு என்பது ஓர் அடையாளம் . பாராட்டின் அடையாளம். ஆஹா, பேஷ் பேஷ் , பலே என்பது போல அது ஒரு சொல் குறியீடு அவ்வளவுதான். எழுத்தில் தரும் குட்டு என்ன அசல் குட்டா ? அதுவும் கண்டனத்தின் குறியீடு மட்டுமே.
நான் பூச்செண்டுக்கு எதிரி அல்ல, அது பயன்படக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுத்தால் எனக்கு ஆட்சேபனையில்லை. நான் அந்தக் காசில் புத்தகம் வாங்கித்தரவே விரும்புவேன்.
ஞாநி

நன்றி : http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_17.html

idly vadai

000

சாருநிவேதிதா மற்றும் ஞாநி இருவரது பதிவுகளையும் இங்கு வெளியிட காரணம் அதில் ‘அகநாழிகை‘ தொடர்பான விஷயம் இடம் பெற்றிருந்தது மட்டுமே என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

- பொன்.வாசுதேவன்

Thursday, December 17, 2009

அஞ்ஞாநியின் அராஜகம் - சாருநிவேதிதா

 

charu

பொதுவாக நான் வெளியிடங்களுக்கோ, விழாக்களுக்கோ செல்ல விரும்பு வதில்லை. காரணம், அங்கே நடக்கும் சில சம்பவங்கள் பல தினங்களுக்கு என் உறக்கத்தைக் கெடுத்து விடுவதாக இருக்கின்றன. உதாரணமாக, பொன்.வாசுதேவனின் அகநாழிகை பத்திரிகை மற்றும் பதிப்பகத்தின் சார்பாக நான்கு புத்தகங்கள் கே.கே. நகரில் (இந்தப் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்; இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது) உள்ள ஒரு புத்தக நிலையத்தில் வெளியிடப்பட்டன. அந்த நான்கு புத்தகங்களில் நர்சிம்மின் சிறுகதைத் தொகுப்பும் ஒன்று என்பதால் அதற்குச் சென்றிருந்தேன். அதில் என்னைப் பேசவும் சொன்னார்கள் என்பதால் பேசினேன்.

அப்போது நான் ஒரு தவறு செய்து விட்டேன். பொதுவாகவே நான் ஒவ்வொரு நாள் காலை எழுந்து கொள்ளும் போதும் ’ ஜெயமோகன், கமல்ஹாசன், மனுஷ்ய புத்திரன் ஆகிய மூவரைப் பற்றியும் இன்றைய தினம் எழுதக் கூடாது’ என்று நினைத்துக் கொள்வேன். அதேபோல் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஞாநியின் கருத்து எதையும் மறுத்து எழுதி விடக் கூடாது என்ற தீர்மானமும் நிரந்தரமாக எனக்கு உண்டு. காரணம், அவர் எதைச் சொன்னாலும் அதற்கு எதிரான கருத்தையே கொண்டிருப்பவனாக இருக்கிறேன் நான்.

சமீபத்திய உதாரணம், கடற்கரையில் யாரும் கிரிக்கெட் ஆடக் கூடாது என்று போலீஸ் உத்தரவு போட்டது. உடனே ஞாநி போலீஸின் உத்தரவை எதிர்த்து குமுதத்தில் எழுதினார். கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவது இளைஞர்களின் பிறப்பு உரிமை என்பது ஞாநியின் கருத்து. நானோ கடற்கரையில் வாக்கிங் செல்லும் போது அந்தக் கிரிக்கெட் பந்தால் பலமுறை அடி வாங்கியிருக்கிறேன். அதனால் இப்போதெல்லாம் காலை நேரத்தில் அந்தப் பக்கமே செல்வதில்லை. ஒருநாள் நானும் அவந்திகாவும் கடற்கரையில் அமர்ந்திருந்தபோது வாலிபால் பந்து ஒன்று அவந்திகாவின் முதுகில் பலமாக விழுந்து எங்களை அதிர்ச்சி அடையச் செய்தது. பார்த்தால் கொஞ்ச தூரத்தில் ஒரு இளைஞர் கூட்டம் வாலிபால் ஆடிக் கொண்டிருந்தது.

ஆனால் இப்படியெல்லாம் அடி வாங்கி சாகிறவர்கள் சாகட்டும்; இளைஞர்கள் கடற்கரையில் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது ஞாநியின் கட்சி.

இப்படியே ஞாநியின் ஒவ்வொரு கருத்தையும் மறுத்துக் கொண்டிருந்தால் ஒவ்வொரு வாரம் குமுதம் வந்ததும் நான் ஞாநியின் ஓ பக்கங்களுக்கு பதிலாக ஔவ் பக்கங்கள் என்று எழுத வேண்டியிருக்கும் என்பதாலேயே ஞாநியின் பக்கமே திரும்பக் கூடாது என்று இருந்தேன். மேலும், என் பார்வையில் ஞாநி ஒரு கலாச்சார தாலிபான். நானோ ஒரு ஹிப்பி. எப்படி ஒத்து வரும்?

அகநாழிகை கூட்டத்தில் ஆரம்பத்திலேயே எனக்கு ஞாநியின் தாலிபான் நடவடிக்கைகளால் பிரச்சினை ஏற்பட்டது. ஒரு நண்பர் எங்கள் எல்லோருக்கும் பூச்செண்டு கொடுத்தார். உடனே எழுந்த ஞாநி பூச்செண்டுகளால் என்ன பயன்; இது எவ்வளவு அர்த்தமற்ற காரியம் என்றெல்லாம் லெக்சர் அடித்து விட்டு, தனக்குக் கொடுக்கப்பட்ட பூச்செண்டை ஒரு பெண்மணியிடம் கொடுத்து ‘ இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பயன்படும்’ என்றார்.

( இதிலுள்ள நிலப்பிரபுத்துவ மனோபாவத்தை கவனியுங்கள். பூ என்றால் பெண்ணுக்குரியதாம்! அட, பொக்கேயைக் கொண்டு போய் தலையிலா வைப்பார்கள்?)

இதுதான் ஞாநியின் பிரச்சினை. தனக்குப் பூச்செண்டு பிடிக்காததால் அது எல்லோருக்கும் பிடிக்கக் கூடாது என்று நினைக்கிறார். அப்படிப் பிடித்தால் அவர்கள் முட்டாள்கள், மூடர்கள், அர்த்தமற்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள். என்ன ஒரு தர்க்கம் பாருங்கள்! ஞாநி கேட்டார், ’ பூச்செண்டுக்கு பதிலாக புத்தகங்களைக் கொடுத்திருக்கலாமே?’ என்று. 24 மணி நேரமும் மனிதர்கள் தர்க்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன?

எனக்குப் பூச்செண்டுகள் பிடிக்கும். ஆனால் ஞாநிக்குப் பிடிக்காது என்பதால் யாரும் யாருக்கும் பூச்செண்டு கொடுக்கக் கூடாது. இதே சர்வாதிகார மனப்போக்கைத்தான் அவர் எப்போதுமே எல்லா விஷயத்திலுமே கடைப்பிடித்து வருகிறார்.

ஞாநியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகாத்மா காந்தியின் ஞாபகமே வரும். காந்தி வாழ்ந்த போது நான் பிறக்கவில்லை; அட்லீஸ்ட் ஞாநியையாவது பார்க்கக் கொடுத்து வைத்திருக்கிறதே என்று தோன்றும். முதலில் ஞாநிக்கும் காந்திக்கும் உள்ள பட்டப் பெயர், புனைப்பெயர் ஒற்றுமையை கவனியுங்களேன். காந்திக்கு மகாத்மா, சங்கரனுக்கு ஞாநி. காந்திக்கு மக்கள் கொடுத்த பட்டம் மகாத்மா. சங்கரனுக்கு ஞாநி என்ற புனைப்பெயர் அவரே வைத்துக் கொண்டது.

பெயர் மட்டுமல்ல; இன்னும் பல பொருத்தங்களும் உள்ளன. காந்தி வெறும் லங்கோடும், இடையில் ஒரு துணியும் மட்டுமே அணிந்திருந்தார். ஞாநியும் அவ்வாறே எளிமையின் சிகரமாக விளங்குபவர். லுங்கிதான் கட்டுவார். அது மட்டுமல்ல. தான் லுங்கி கட்டிக் கொண்டு கமலா தியேட்டருக்குப் போனதை குமுதத்தில் எழுதி 50 லட்சம் வாசகர்களுக்கும் அந்தச் செய்தியைத் தெரிவித்தார். ஞாநி மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் நமது தேசிய உடையே லுங்கிதான் என்று சட்டம் போட்டாலும் போட்டிருப்பார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த எளிமை மேட்டரால் ஆகர்ஷிக்கப்பட்ட நானும் என்னால் முடிந்த ஒரு எளிமையைப் பின்பற்றி ஒருநாள் ஜட்டியே போடாமல் பேண்ட் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐநாக்ஸ் தியேட்டருக்குச் சென்றேன். எனக்கும் குமுதத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்த உடைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் எனக்கு நேர்ந்த விளைவுகள் பற்றி எழுதியிருக்கலாம்; ஞாநியின் லுங்கிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என் ஜட்டிக்குக் கிடைக்கவில்லை. விடுங்கள்.

இன்னும் பல ஒற்றுமைகள் உள்ளன. ஞாநி அஞ்சு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க மாட்டார். தன் வீட்டையும் யாராவது தலித்துக்கோ முஸ்லீமுக்கோ அல்லது இதுபோன்ற விளிம்பு நிலை மக்களுக்கோதான் விற்பார். இப்படி பல் துலக்குவதிலிருந்து லுங்கி கட்டுவது வரை நேர்மையை மட்டுமே கடைப்பிடிப்பார்.

இப்படிப்பட்ட மகாத்மாக்களும் ஞாநிகளும் எனக்கு அலர்ஜி என்பதாலேயே ஞாநி என்றால் கொஞ்சம் ஒதுங்கி விடும் வழக்கம் உள்ளவனாக இருந்தேன். அப்படி இருந்தும் கே.கே. நகரில் மாட்டிக் கொண்டேன். ஞாநி சொன்னார், கே.கே. நகர் என்று சொல்வது தப்பு; அது எப்படி பெயர்களைச் சுருக்கலாம்? கலைஞர் கருணாநிதி நகர் என்றே சொல்ல வேண்டும்.

அவருக்குப் பிறகு பேச எழுந்த நான் சொன்னேன்: இந்த அரசியல்வாதிகளெல்லாம் தமக்குத் தாமே ஆளாளுக்கு அறிஞர், கலைஞர், புரட்சித் தலைவி என்று பட்டம் கொடுத்துக் கொள்வார்கள். அதை மக்களாகிய நாம் ஏற்றுக் கொண்டு, கூட்டம் வழியும் பஸ்ஸில் தொங்கியபடியே “’ கலைஞர் கருணாநிதி நகருக்கு ஒரு டிக்கட் குடுங்க’ என்று கேட்க வேண்டுமா? அரசியல்வாதிகள் நம்மீது ஏறி சவாரி செய்யும் போது மக்கள் இப்படித்தான் ‘ கலைஞர் கருணாநிதி நகர்’ என்ற பெயரை ‘ கே.கே. நகர்’ என்று சுருக்கிப் பழிவாங்குவார்கள்.

உடனே இதற்கு பதில் சொல்ல எழுந்த ஞாநி “ பெயரையெல்லாம் சுருக்கக் கூடாது. உதாரணமாக, சாரு நிவேதிதாவை சாநி என்று சுருக்கலாமா?” என்று கேட்டார். அவருடைய பதிலில் மொத்தம் ஆறு தடவை சாநி சாநி என்று குறிப்பிட்டு மகிழ்ந்தார் ஞாநி. என்ன ஒரு வக்கிரம் பாருங்கள்! நான் செய்தது ஒரு பகடி. அதற்கு பதில் குண்டாந்தடியை எடுத்து மண்டையில் ஒரு போடு. கேட்டால் ‘ அப்படிச் சொல்லலாமா?’ என்றுதானே கேட்டேன் என்பார். அப்படியானால் ஒருத்தன் இன்னொருத்தனைப் பார்த்து ’ உன்னை நான் ங்கோத்தா என்று சொல்லவில்லை’ என்றால் ஆயிற்றா?

இப்படி ஒருமுறை பட்டும் புத்தி வராமல் எஸ். ராமகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஞாநி பேசுகிறார் என்று தெரிந்தும் அந்த விழாவுக்குச் சென்றேன். அப்போதுதான் ஞாநி அந்த அராஜகமான காரியத்தைச் செய்தார். தனக்கும் ராமகிருஷ்ணனுக்கும், தனக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும், தான் உயிர்மை நடத்தும் ராமகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்தது பற்றிக் குறிப்பிட்டவர் தனக்கு மனுஷ்ய புத்திரனின் மேல் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லி அதற்கு ஒரு உதாரணம் கூறினார்.

ஒரு வாரத்திற்கு முன்பு உடல் ஊனமுற்றோரின் நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டாராம். (ஞாநியின் வார்த்தைகளிலேயே தருகிறேன்). அவருக்கு முன்னே அமர்ந்திருந்த 300 பேருமே ஏதோ ஒரு விதத்தில் உடல் ஊனமுற்றோர். அவர்கள் எல்லோருமே மாதம் 2000 ரூ. கிடைத்தால் போதும் என்ற நிலையில் இருப்பவர்கள். ’ லாட்டரி சீட்டு விற்று கூட பிழைத்துக் கொள்வோம்; அதற்கான ஒரு அடிப்படைப் பண உதவி தேவை’ என்பதே அவர்களுடைய வேண்டுகோளும் கோரிக்கையுமாக இருந்தது. நான் (ஞாநி) அவர்களிடம் சொன்னேன். நீங்களெல்லாம் மனுஷ்ய புத்திரனை ரோல் மாடலாகக் கொள்ள வேண்டும். அவர் கல்வி என்ற ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தார். இன்று தமிழர்கள் எல்லோருக்கும் தெரிந்த பதிப்பாளராக இருக்கிறார். அதே போல் நீங்களும் கல்வியைக் கற்று முன்னேறுங்கள்.

என்று அந்த ஊனமுற்றவர்களிடம் மனுஷ்ய புத்திரனை உதாரணம் காட்டிச் சொன்னேன். அந்த அளவுக்கு நான் (ஞாநி) மனுஷ்ய புத்திரனை மதிக்கிறேன். அவர் மட்டும் கல்வியைத் தன் கையில் எடுக்காமல் இருந்திருந்தால் அவரும் லாட்டரிச் சீட்டு தானே விற்றுக் கொண்டு இருந்திருப்பார்?

ஞாநியின் வார்த்தைகளை அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

சாரு நிவேதிதாவாகிய நான் சுரணையற்றுப் போய் விட்டேன். மானம் கெட்டுப் போய் விட்டேன். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட அருவருப்பான, ஆபாசமான, அயோக்கியத்தனமான வசையை ஒரு ஆள் மனுஷ்ய புத்திரனின் மீது வீசும் போது கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டேன். தமிழ்ச் சமூகத்தைப் போலவே நானும் மானம் கெட்டுப் போய் விட்டேன்.

அமெரிக்காவில் இருப்பவர்கள் தயவு செய்து சொல்லுங்கள். உங்கள் ஊரில் ஒரு கறுப்பின மனிதனை நீக்ரோ என்று அழைத்தால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்? அத்தனை ஆண்டுகள் ஞாநியை சிறையில் அடைக்க வேண்டும். ஏனென்றால் அவர் மனுஷ்ய புத்திரனின் தேக அடையாளத்தைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டார். அது மட்டுமல்ல; கல்வி இல்லாவிட்டால் அவர் தெருவில் லாட்டரிச் சீட்டு விற்றுக் கொண்டிருந்திருப்பார் என்று சொல்லி விட்டார். ஒரு தலித்தை அந்த சாதியைச் சொல்லித் திட்டும் ஒரு வார்த்தையால் குறிப்பிட்டால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அத்தனை ஆண்டுகள் ஞாநியை சிறையில் தள்ள வேண்டும்.

நான் கேட்கிறேன்; சொல் புதிது பத்திரிகையில் ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனைப் பற்றி எழுதிய வசைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? தமிழின் மிக முக்கியமான கவிஞனாகிய மனுஷ்ய புத்திரனின் ஒட்டு மொத்த அடையாளமே அவருடைய உடல்தானா? அவர் தன்னுடைய எழுத்துகள் வழியே உருவாக்கியவை எல்லாம் அவருடைய உடலை மீறிச் செல்லும் ஒரு முயற்சி மட்டும்தானா? அல்லது உடல் ரீதியான ஒரு தடையை, பிரச்சினையை ஒருவர் கல்வி கற்பதன் வழியாக கடந்து சென்றுவிடத்தான் முடியுமா?

உடல்ரீதியான பிரச்சினைகள் கொண்டவர்களின் துன்பங்கள் என்பது நம்முடைய நாட்டில் முழுக்க முழுக்க சமூகரீதியானவை. மொத்த அமைப்பும் அவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அரசுப் பணிகளில் அவர்களுக்கு ஒதுக்கபட்டுள்ள இடஒதுக்கீட்டிற்கான இடங்கள் கூட நிரப்பப்படுவதில்லை என்பதுதான் உணமை. இதற்காக அவர்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். நம்முடைய வீடுகள், பொது இடங்கள், போக்குவரத்து அமைப்புகள் யாவும் அவர்களுக்கு எதிராக இருக்கின்றன. எல்லவற்றையும்விட மாற்றுத்திறன் கொண்டவர்களைப் பற்றிய சமூக மனோபாவம். ஒரு தலித் இந்த சமூகத்தில் எவ்வளவு பெரிய ஸ்தானத்தை அடைந்தாலுல் அவருடைய சாதிய இழிவிலிருந்து எப்படி விடுபட முடியவில்லையோ அதேபோல மாற்றுத் திறன்கொண்ட ஒருவர் எத்தகைய சாதனைகளைச் செய்தாலும் அவர் ஒரு குறைவுபட்ட மனிதராகத்தான் பார்க்கப்படுகிறார். அவர் பிற குறைவுபட்ட மனிதர்களுக்கு மட்டுமே ஒரு முன்னுதாரணம். இத்த்கைய பார்வை கொண்டவர்களுக்கு ஞாநி ஒரு சிறந்த உதாரணம். ஞாநி மனுஷ்ய புத்திரனிடம் காட்டும் மனோபாவம் என்பது அவரது சாதிய மனோபவத்தின் ஒரு நீட்சியே. அவர்களால் மனிதர்களை வேறு எப்படியும் பார்க்கவோ வகைப்படுத்தவோ முடியாது. வேண்டுமானால் யாராவது ஒரு பிராமணர் சங்க கூட்டத்தில் போய் ‘ சங்கரன்தான் நீங்கள் பின்பற்ற வேண்டிய முன்உதாரணம். உங்களுடைய சாதித் திமிரை எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்காமல், அதே சமயம் ஒரு போலி ஜனநாயக, போலி முற்போக்கு முகமூடியையும் அணிந்துகொண்டு வெற்றிகரமாக உலா வரவேண்டுமானால் நீங்கள் ஞாநியை பின் பற்றுங்கள் ’ என்று உரையாற்றலாம்.

மனுஷ்ய புத்திரன் ஒரு முன்னுதாரமே அல்ல என்பதுதான் இதில் வேடிக்கை. அவருடைய முதல் கவிதைத் தொகுப்பை அவர் எழுதியபோது அவர் 5-ஆம் வகுப்பு ஸ்கூல் drop out . அவர் எம்.ஏ. ஜர்னலிசம் படித்தபோது அவரது மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருந்தன. காலச்சுவடின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். என்னய்யா சம்பந்தம் அவர் கல்விக்கும் இலக்கியத்துக்கும்? தனிபட்ட அவரது வாழ்வில் அவர் எவ்வளவோ பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். மாற்றுத் திறன்கொண்ட ஒருவர் தனிப்பட்ட வாழ்விலோ சமூகரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ அடையக்கூடிய பிரச்சினைகள் பெரும்பாலானவற்றை அவர் சந்தித்ததே இல்லை என்பதை அவருடனான நேர்ப் பேச்சுகளில் அறிந்திருக்கிறேன்.. ஆனால் ஞாநியைப் பொறுத்தவரை மாற்றுத்திறன் கொண்ட அனைவரும் 2 ஆயிரம் ரூபாய்க்கு லாட்டரிச்சீட்டு விற்கும் ஒரு கும்பல். இப்படி மனிதர்களை கும்பலாகப் பார்க்கும் மனோபாவம் சாதித் திமிருக்கு மட்டுமே உண்டு. எம்.எஸ். உதயமூர்த்தி, அப்துல் கலாம் வகை மிடில் கிளாஸ் வாழ்க்கை முன்னேற்றப் புனைகதைகளை ஒரு இலக்கியக் கூட்டத்தில் ஞாநியைப் போன்ற ஒரு பாமரன் வந்து உளறினால் நாமும் அதை கேட்டுக் கொண்டிருக்கிறோம்

ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனை வெறுக்கிறார். ஞாநி மனுஷ்ய புத்திரனை வெறுக்கிறார். இன்னும் எனக்குத் தெரியாத பலர் இருக்கக் கூடும். அவர்கள் ஒரே ஆயுதத்தைத்தான் கையில் எடுக்கிறார்கள். அவரை உடல்ரீதியாகத் தாக்குவது. அவரது உடலின் வழியாகவே ஒரு கலைஞனாக அவர் அடைந்த சாதனைகளை மதிப்பிடுவதன் மூலம் அவருடைய இடத்தைக் கீழிறக்குவது. நான் மனுஷ்ய புத்திரனுக்காகப் பேசவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் உடல்தீயான அதிகாரம், மேல் நிலை நோக்கு, வன்முறை ஆகியவை குறித்தே நான் இங்கே விவாதிக்க விரும்புகிறேன்.

அடுத்து, ராமகிருஷ்ணனையும் விடவில்லை. ’ இவர் கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி விட்டுப் புனைகதைகள் எழுத வேண்டும்’ என்ற புத்திமதியையே அரை மணி நேரம் மாற்றி மாற்றி வெவ்வேறு வார்த்தைகளில் சொன்னார் ஞாநி. ராமகிருஷ்ணன் தொடர்ந்து சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதிக் கொண்டே இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யாமம் நாவல். சென்ற ஆண்டு பதினெட்டாம் நூற்றாண்டின் மழை என்ற சிறுகதைத் தொகுப்பு. இந்த ஆண்டு 50 குறுங்கதைகள். இதெல்லாம் பற்றி எழுதுவுமே தெரிந்து கொள்ளாமல் ‘ நீங்கள் கட்டுரை எழுதாமல் கதை எழுதுங்கள்’ என்று என்ன புத்திமதி? கதைகளை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் வந்து ‘ நீ கதை எழுது’ என்று சொல்ல எவ்வளவு திமிரும், ஆணவமும், தடித்தனமும் இருக்க வேண்டும்? அதுவும் ஞாநியைப் போன்ற தோல்வியடைந்த, இலக்கிய வாசகர்களால் துரத்தியடிக்கப்பட்ட ஒரு அரைவேக்காட்டு எழுத்தாளன் தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரைப் பார்த்து இந்தப் புத்திமதிகளை அள்ளிவிடுகிறார்.

ஒரு எழுத்தாளனிடம் இப்படி வந்து புத்திமதியும் அறிவுரையும் சொல்ல ஞாநிக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒரே தகுதிதான். அவர் தன்னை உண்மையிலேயே ஞாநியாகவும், மற்றவர்களை அஞ்ஞாநிகளாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் எல்லோருக்கும் எப்போதும் புத்திமதிகளையும், அறிவுரைகளையும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். ஒருமுறை தமிழக முதல்வர் கருணாநிதியை ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுரை வழங்கினார் ஞாநி. அதற்கு அவர் சொன்ன காரணம், கருணாநிதியின் வேட்டியில் மூத்திரக் கறை படிகிறது; அவருக்கு வயதாகி விட்டது.

அது ஏன் ஐயா எல்லோரையும் பார்த்து எழுதாதே, வேலை செய்யாதே, வீட்டுக்குப் போ என்றே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்?

இப்போது ஞாநிக்கு என் வயதுதான். 55. ஆனால் மைக்கின் முன்னால் பேச முடியாமல் திணறிக் கொண்டே இருக்கிறார். பார்த்தால் ரத்தக் கண்ணீர் வருகிறது. 95 வயது கிழவர் பேசுவது போல் அப்படிக் கமறிக் கமறிப் பேசுகிறார். ஏன், இவர் ஓய்வு எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழலாமே? குமுதம் பத்தியிலும் வாராவாரம் கருணாநிதியைத் திட்டுவதே இவருக்குப் பிழைப்பாக இருக்கிறது. ஆக, வேறு எந்த சப்ஜெக்டும் இவருக்குக் கிடைப்பதில்லை. அப்படியானால் எழுதுவதையும் நிறுத்தி விட்டு ஞாநி ஓய்வெடுக்கப் போகலாமே?

எஸ்.ரா. விஷயம் இருக்கட்டும். மனுஷ்ய புத்திரனை இப்படி ஒரு இலக்கிய மேடையில் அவமானப்படுத்திய ஞாநியை என்ன செய்தால் தகும்? சொல்லுங்கள்...

14.12.2009. 8.46 p.m. 

www.charuonline.com

கொண்டாடிச் செல்கிறேன் (வார்த்தை டிசம். 09)

 

pv vaarthai1

Monday, December 14, 2009

ஒரு வெளியீடும் பல பதிவுகளும்

அனைவருடைய அன்பிற்கும் மிக்க நன்றி.

http://www.jeyamohan.in/?p=5545

http://tvrk.blogspot.com/2009/12/blog-post_6945.html

http://www.narsim.in/2009/12/11-12-09.html

http://nvmonline.blogspot.com/2009/12/blog-post_02.html

http://nvmonline.blogspot.com/2009/12/blog-post_08.html

http://karuvelanizhal.blogspot.com/2009/12/blog-post_10.html

http://uyirodai.blogspot.com/2009/12/blog-post_08.html

http://yerumbu.blogspot.com/2009/12/blog-post_09.html

http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_12.html

http://www.aathi-thamira.com/2009/12/blog-post.html

http://jackiesekar.blogspot.com/2009/12/blog-post_11.html

http://www.nilaraseeganonline.com/2009/12/blog-post_12.html

http://www.viruba.com/chiththan/event.aspx?id=11

http://cablesankar.blogspot.com/2009/12/blog-post_13.html

http://www.luckylookonline.com/2009/12/blog-post_2929.html

http://cablesankar.blogspot.com/2009/12/blog-post_11.html

http://ashokpakkangal.blogspot.com/2009/12/blog-post_14.html

http://anujanya.blogspot.com/2009/12/blog-post_14.html

http://veeduthirumbal.blogspot.com/2009/11/blogger_26.html

http://navishsenthilkumar.blogspot.com/2009/12/blog-post.html

http://nesamithran.blogspot.com/2009/12/blog-post_03.html

Thursday, December 3, 2009

அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்

டிசம்பர் 30 முதல் ஜ‌ன‌வரி 10 வரை நடைபெற உள்ள 33வது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் வெளிவர உள்ளது.

புத்தக வெளியீட்டு விழா

நாள் : டிசம்பர் 11, 2009 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி

இட‌ம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
6, மகாவீர் வணிக வளாகம், முனுசாமி சாலை,  கே.கே.நகர் (மேற்கு), பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்), சென்னை - 78.

அகநாழிகையின் இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். அனைத்து புத்தகங்களும் வெளியீட்டு விழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும்.

அனைவரும் வருக !

கவிதைகள்

1. கருவேல நிழல் - பா.ராஜ‌ாராம்   (விலை : ரூ.40/-)

books3

2. கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் (விலை : ரூ.40/-)

books7 

3. நீர்க்கோல வாழ்வை நச்சி - உயிரோடை லாவண்யா (விலை : ரூ.40/-)

wrapper 8a 

4. கூர்தலறம் - TKB காந்தி  (விலை : ரூ.40/-)

wrapper1 

சிறுகதைகள்

1. அய்யனார் கம்மா – நர்சிம் (விலை : ரூ.40/-)

books4

கட்டுரைகள்

1.பார்ப்பன சிபிஎம் + அமார்க்சியம்= ஈழவிடுதலை எதிர்ப்பு அரசியல் - தொகுப்பாசிரியர் : வளர்மதி
(கட்டுரையாளர்கள் : யமுனா ராஜேந்திரன், டி.அருள்எழிலன், வளர்மதி, ச.பாலமுருகன், இரா.முருகவேள்)  (விலை : ரூ.90/-)

wrapper

000

தமிழ் இலக்கிய படைப்புலகத்தின் ஆகச்சிறந்த படைப்புகளுடன், அகநாழிகை (டிசம்பர் 2009) இரண்டாவது இதழ் வெளியாகியிருக்கிறது.

கட்டுரைகள்
பாவண்ணன் - ஜெய‌மோகன் - சு.தமிழ்ச்செல்வி - அஜ‌யன்பாலா சித்தார்த் - ரிஷான் ஷெரீப் - செந்தி - யாழினி முனுசாமி - ரா.கிரிதரன்

சிறுகதை
எஸ்.ஷ‌ங்கர நாராயணன் ‍- லஷ்மி சரவணக்குமார் - கே.பாலமுருகன் - நிலா ரசிகன் - சாரதா - அ.மு.செய்யது - அதிபிரதாபன்

நாடகம்
வளர்மதி

கவிதைகள்
விக்ரமாதித்யன் - அய்யப்பமாதவன் - பெருந்தேவி - திலகபாமா - பா.ராஜ‌ாராம் - என்.விநாயகமுருகன் - உயிரோடை லாவண்யா - டிகேபி காந்தி - உமாஷக்தி - உழவன் - சுகிர்தா - த.அரவிந்தன் - பாரதி வசந்தன் - சந்திரா - வெ.எழிலரசு - ஜெ.நிஷாந்தினி - மாதங்கி - மயூரா - மதுமிதா - நளன் - அண்ணல் - சஹாரா தென்றல் - கதிர்பாரதி - ஆங்கரை பைரவி - நதியலை - சாந்தாதத்

அகநாழிகை இதழிற்கு படைப்புகள் / சந்தா / புரவலர் கட்டணம் / விளம்பரங்கள் அளிக்க :

அகநாழிகை
ஆசிரியர் : பொன்.வாசுதேவன்
33, மண்டபம் தெரு,
மதுராந்தகம் - 603306.

மின்னஞ்சல் : aganazhigai@gmail.com

ஆண்டு சந்தா 150 / இரண்டாண்டு சந்தா 275 / ஐந்தாண்டு சந்தா 600

ஆயுள் சந்தா 3000 / புரவலர் கட்டணம் 1000

அகநாழிகை பதிப்பக புத்தகங்களை வாங்க மற்றும் சந்தா தொகை செலுத்த :

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண். 155501500097

P.VASUDEVAN – MADURANTAKAM BRANCH

Comments system

Disqus Shortname