

பொதுவாக நான் வெளியிடங்களுக்கோ, விழாக்களுக்கோ செல்ல விரும்பு வதில்லை. காரணம், அங்கே நடக்கும் சில சம்பவங்கள் பல தினங்களுக்கு என் உறக்கத்தைக் கெடுத்து விடுவதாக இருக்கின்றன. உதாரணமாக, பொன்.வாசுதேவனின் அகநாழிகை பத்திரிகை மற்றும் பதிப்பகத்தின் சார்பாக நான்கு புத்தகங்கள் கே.கே. நகரில் (இந்தப் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்; இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது) உள்ள ஒரு புத்தக நிலையத்தில் வெளியிடப்பட்டன. அந்த நான்கு புத்தகங்களில் நர்சிம்மின் சிறுகதைத் தொகுப்பும் ஒன்று என்பதால் அதற்குச் சென்றிருந்தேன். அதில் என்னைப் பேசவும் சொன்னார்கள் என்பதால் பேசினேன்.
அப்போது நான் ஒரு தவறு செய்து விட்டேன். பொதுவாகவே நான் ஒவ்வொரு நாள் காலை எழுந்து கொள்ளும் போதும் ’ ஜெயமோகன், கமல்ஹாசன், மனுஷ்ய புத்திரன் ஆகிய மூவரைப் பற்றியும் இன்றைய தினம் எழுதக் கூடாது’ என்று நினைத்துக் கொள்வேன். அதேபோல் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஞாநியின் கருத்து எதையும் மறுத்து எழுதி விடக் கூடாது என்ற தீர்மானமும் நிரந்தரமாக எனக்கு உண்டு. காரணம், அவர் எதைச் சொன்னாலும் அதற்கு எதிரான கருத்தையே கொண்டிருப்பவனாக இருக்கிறேன் நான்.
சமீபத்திய உதாரணம், கடற்கரையில் யாரும் கிரிக்கெட் ஆடக் கூடாது என்று போலீஸ் உத்தரவு போட்டது. உடனே ஞாநி போலீஸின் உத்தரவை எதிர்த்து குமுதத்தில் எழுதினார். கடற்கரையில் கிரிக்கெட் விளையாடுவது இளைஞர்களின் பிறப்பு உரிமை என்பது ஞாநியின் கருத்து. நானோ கடற்கரையில் வாக்கிங் செல்லும் போது அந்தக் கிரிக்கெட் பந்தால் பலமுறை அடி வாங்கியிருக்கிறேன். அதனால் இப்போதெல்லாம் காலை நேரத்தில் அந்தப் பக்கமே செல்வதில்லை. ஒருநாள் நானும் அவந்திகாவும் கடற்கரையில் அமர்ந்திருந்தபோது வாலிபால் பந்து ஒன்று அவந்திகாவின் முதுகில் பலமாக விழுந்து எங்களை அதிர்ச்சி அடையச் செய்தது. பார்த்தால் கொஞ்ச தூரத்தில் ஒரு இளைஞர் கூட்டம் வாலிபால் ஆடிக் கொண்டிருந்தது.
ஆனால் இப்படியெல்லாம் அடி வாங்கி சாகிறவர்கள் சாகட்டும்; இளைஞர்கள் கடற்கரையில் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது ஞாநியின் கட்சி.
இப்படியே ஞாநியின் ஒவ்வொரு கருத்தையும் மறுத்துக் கொண்டிருந்தால் ஒவ்வொரு வாரம் குமுதம் வந்ததும் நான் ஞாநியின் ஓ பக்கங்களுக்கு பதிலாக ஔவ் பக்கங்கள் என்று எழுத வேண்டியிருக்கும் என்பதாலேயே ஞாநியின் பக்கமே திரும்பக் கூடாது என்று இருந்தேன். மேலும், என் பார்வையில் ஞாநி ஒரு கலாச்சார தாலிபான். நானோ ஒரு ஹிப்பி. எப்படி ஒத்து வரும்?
அகநாழிகை கூட்டத்தில் ஆரம்பத்திலேயே எனக்கு ஞாநியின் தாலிபான் நடவடிக்கைகளால் பிரச்சினை ஏற்பட்டது. ஒரு நண்பர் எங்கள் எல்லோருக்கும் பூச்செண்டு கொடுத்தார். உடனே எழுந்த ஞாநி பூச்செண்டுகளால் என்ன பயன்; இது எவ்வளவு அர்த்தமற்ற காரியம் என்றெல்லாம் லெக்சர் அடித்து விட்டு, தனக்குக் கொடுக்கப்பட்ட பூச்செண்டை ஒரு பெண்மணியிடம் கொடுத்து ‘ இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பயன்படும்’ என்றார்.
( இதிலுள்ள நிலப்பிரபுத்துவ மனோபாவத்தை கவனியுங்கள். பூ என்றால் பெண்ணுக்குரியதாம்! அட, பொக்கேயைக் கொண்டு போய் தலையிலா வைப்பார்கள்?)
இதுதான் ஞாநியின் பிரச்சினை. தனக்குப் பூச்செண்டு பிடிக்காததால் அது எல்லோருக்கும் பிடிக்கக் கூடாது என்று நினைக்கிறார். அப்படிப் பிடித்தால் அவர்கள் முட்டாள்கள், மூடர்கள், அர்த்தமற்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள். என்ன ஒரு தர்க்கம் பாருங்கள்! ஞாநி கேட்டார், ’ பூச்செண்டுக்கு பதிலாக புத்தகங்களைக் கொடுத்திருக்கலாமே?’ என்று. 24 மணி நேரமும் மனிதர்கள் தர்க்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்ன?
எனக்குப் பூச்செண்டுகள் பிடிக்கும். ஆனால் ஞாநிக்குப் பிடிக்காது என்பதால் யாரும் யாருக்கும் பூச்செண்டு கொடுக்கக் கூடாது. இதே சர்வாதிகார மனப்போக்கைத்தான் அவர் எப்போதுமே எல்லா விஷயத்திலுமே கடைப்பிடித்து வருகிறார்.
ஞாநியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மகாத்மா காந்தியின் ஞாபகமே வரும். காந்தி வாழ்ந்த போது நான் பிறக்கவில்லை; அட்லீஸ்ட் ஞாநியையாவது பார்க்கக் கொடுத்து வைத்திருக்கிறதே என்று தோன்றும். முதலில் ஞாநிக்கும் காந்திக்கும் உள்ள பட்டப் பெயர், புனைப்பெயர் ஒற்றுமையை கவனியுங்களேன். காந்திக்கு மகாத்மா, சங்கரனுக்கு ஞாநி. காந்திக்கு மக்கள் கொடுத்த பட்டம் மகாத்மா. சங்கரனுக்கு ஞாநி என்ற புனைப்பெயர் அவரே வைத்துக் கொண்டது.
பெயர் மட்டுமல்ல; இன்னும் பல பொருத்தங்களும் உள்ளன. காந்தி வெறும் லங்கோடும், இடையில் ஒரு துணியும் மட்டுமே அணிந்திருந்தார். ஞாநியும் அவ்வாறே எளிமையின் சிகரமாக விளங்குபவர். லுங்கிதான் கட்டுவார். அது மட்டுமல்ல. தான் லுங்கி கட்டிக் கொண்டு கமலா தியேட்டருக்குப் போனதை குமுதத்தில் எழுதி 50 லட்சம் வாசகர்களுக்கும் அந்தச் செய்தியைத் தெரிவித்தார். ஞாநி மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால் நமது தேசிய உடையே லுங்கிதான் என்று சட்டம் போட்டாலும் போட்டிருப்பார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த எளிமை மேட்டரால் ஆகர்ஷிக்கப்பட்ட நானும் என்னால் முடிந்த ஒரு எளிமையைப் பின்பற்றி ஒருநாள் ஜட்டியே போடாமல் பேண்ட் போட்டுக் கொண்டு என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐநாக்ஸ் தியேட்டருக்குச் சென்றேன். எனக்கும் குமுதத்தில் வாய்ப்பு கிடைத்திருந்தால் இந்த உடைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் எனக்கு நேர்ந்த விளைவுகள் பற்றி எழுதியிருக்கலாம்; ஞாநியின் லுங்கிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என் ஜட்டிக்குக் கிடைக்கவில்லை. விடுங்கள்.
இன்னும் பல ஒற்றுமைகள் உள்ளன. ஞாநி அஞ்சு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க மாட்டார். தன் வீட்டையும் யாராவது தலித்துக்கோ முஸ்லீமுக்கோ அல்லது இதுபோன்ற விளிம்பு நிலை மக்களுக்கோதான் விற்பார். இப்படி பல் துலக்குவதிலிருந்து லுங்கி கட்டுவது வரை நேர்மையை மட்டுமே கடைப்பிடிப்பார்.
இப்படிப்பட்ட மகாத்மாக்களும் ஞாநிகளும் எனக்கு அலர்ஜி என்பதாலேயே ஞாநி என்றால் கொஞ்சம் ஒதுங்கி விடும் வழக்கம் உள்ளவனாக இருந்தேன். அப்படி இருந்தும் கே.கே. நகரில் மாட்டிக் கொண்டேன். ஞாநி சொன்னார், கே.கே. நகர் என்று சொல்வது தப்பு; அது எப்படி பெயர்களைச் சுருக்கலாம்? கலைஞர் கருணாநிதி நகர் என்றே சொல்ல வேண்டும்.
அவருக்குப் பிறகு பேச எழுந்த நான் சொன்னேன்: இந்த அரசியல்வாதிகளெல்லாம் தமக்குத் தாமே ஆளாளுக்கு அறிஞர், கலைஞர், புரட்சித் தலைவி என்று பட்டம் கொடுத்துக் கொள்வார்கள். அதை மக்களாகிய நாம் ஏற்றுக் கொண்டு, கூட்டம் வழியும் பஸ்ஸில் தொங்கியபடியே “’ கலைஞர் கருணாநிதி நகருக்கு ஒரு டிக்கட் குடுங்க’ என்று கேட்க வேண்டுமா? அரசியல்வாதிகள் நம்மீது ஏறி சவாரி செய்யும் போது மக்கள் இப்படித்தான் ‘ கலைஞர் கருணாநிதி நகர்’ என்ற பெயரை ‘ கே.கே. நகர்’ என்று சுருக்கிப் பழிவாங்குவார்கள்.
உடனே இதற்கு பதில் சொல்ல எழுந்த ஞாநி “ பெயரையெல்லாம் சுருக்கக் கூடாது. உதாரணமாக, சாரு நிவேதிதாவை சாநி என்று சுருக்கலாமா?” என்று கேட்டார். அவருடைய பதிலில் மொத்தம் ஆறு தடவை சாநி சாநி என்று குறிப்பிட்டு மகிழ்ந்தார் ஞாநி. என்ன ஒரு வக்கிரம் பாருங்கள்! நான் செய்தது ஒரு பகடி. அதற்கு பதில் குண்டாந்தடியை எடுத்து மண்டையில் ஒரு போடு. கேட்டால் ‘ அப்படிச் சொல்லலாமா?’ என்றுதானே கேட்டேன் என்பார். அப்படியானால் ஒருத்தன் இன்னொருத்தனைப் பார்த்து ’ உன்னை நான் ங்கோத்தா என்று சொல்லவில்லை’ என்றால் ஆயிற்றா?
இப்படி ஒருமுறை பட்டும் புத்தி வராமல் எஸ். ராமகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஞாநி பேசுகிறார் என்று தெரிந்தும் அந்த விழாவுக்குச் சென்றேன். அப்போதுதான் ஞாநி அந்த அராஜகமான காரியத்தைச் செய்தார். தனக்கும் ராமகிருஷ்ணனுக்கும், தனக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும், தான் உயிர்மை நடத்தும் ராமகிருஷ்ணனின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்தது பற்றிக் குறிப்பிட்டவர் தனக்கு மனுஷ்ய புத்திரனின் மேல் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லி அதற்கு ஒரு உதாரணம் கூறினார்.
ஒரு வாரத்திற்கு முன்பு உடல் ஊனமுற்றோரின் நிகழ்ச்சி ஒன்றுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டாராம். (ஞாநியின் வார்த்தைகளிலேயே தருகிறேன்). அவருக்கு முன்னே அமர்ந்திருந்த 300 பேருமே ஏதோ ஒரு விதத்தில் உடல் ஊனமுற்றோர். அவர்கள் எல்லோருமே மாதம் 2000 ரூ. கிடைத்தால் போதும் என்ற நிலையில் இருப்பவர்கள். ’ லாட்டரி சீட்டு விற்று கூட பிழைத்துக் கொள்வோம்; அதற்கான ஒரு அடிப்படைப் பண உதவி தேவை’ என்பதே அவர்களுடைய வேண்டுகோளும் கோரிக்கையுமாக இருந்தது. நான் (ஞாநி) அவர்களிடம் சொன்னேன். நீங்களெல்லாம் மனுஷ்ய புத்திரனை ரோல் மாடலாகக் கொள்ள வேண்டும். அவர் கல்வி என்ற ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தார். இன்று தமிழர்கள் எல்லோருக்கும் தெரிந்த பதிப்பாளராக இருக்கிறார். அதே போல் நீங்களும் கல்வியைக் கற்று முன்னேறுங்கள்.
என்று அந்த ஊனமுற்றவர்களிடம் மனுஷ்ய புத்திரனை உதாரணம் காட்டிச் சொன்னேன். அந்த அளவுக்கு நான் (ஞாநி) மனுஷ்ய புத்திரனை மதிக்கிறேன். அவர் மட்டும் கல்வியைத் தன் கையில் எடுக்காமல் இருந்திருந்தால் அவரும் லாட்டரிச் சீட்டு தானே விற்றுக் கொண்டு இருந்திருப்பார்?
ஞாநியின் வார்த்தைகளை அப்படியே மேற்கோள் காட்டியிருக்கிறேன்.
சாரு நிவேதிதாவாகிய நான் சுரணையற்றுப் போய் விட்டேன். மானம் கெட்டுப் போய் விட்டேன். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட அருவருப்பான, ஆபாசமான, அயோக்கியத்தனமான வசையை ஒரு ஆள் மனுஷ்ய புத்திரனின் மீது வீசும் போது கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டேன். தமிழ்ச் சமூகத்தைப் போலவே நானும் மானம் கெட்டுப் போய் விட்டேன்.
அமெரிக்காவில் இருப்பவர்கள் தயவு செய்து சொல்லுங்கள். உங்கள் ஊரில் ஒரு கறுப்பின மனிதனை நீக்ரோ என்று அழைத்தால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும்? அத்தனை ஆண்டுகள் ஞாநியை சிறையில் அடைக்க வேண்டும். ஏனென்றால் அவர் மனுஷ்ய புத்திரனின் தேக அடையாளத்தைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டார். அது மட்டுமல்ல; கல்வி இல்லாவிட்டால் அவர் தெருவில் லாட்டரிச் சீட்டு விற்றுக் கொண்டிருந்திருப்பார் என்று சொல்லி விட்டார். ஒரு தலித்தை அந்த சாதியைச் சொல்லித் திட்டும் ஒரு வார்த்தையால் குறிப்பிட்டால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனையோ அத்தனை ஆண்டுகள் ஞாநியை சிறையில் தள்ள வேண்டும்.
நான் கேட்கிறேன்; சொல் புதிது பத்திரிகையில் ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனைப் பற்றி எழுதிய வசைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? தமிழின் மிக முக்கியமான கவிஞனாகிய மனுஷ்ய புத்திரனின் ஒட்டு மொத்த அடையாளமே அவருடைய உடல்தானா? அவர் தன்னுடைய எழுத்துகள் வழியே உருவாக்கியவை எல்லாம் அவருடைய உடலை மீறிச் செல்லும் ஒரு முயற்சி மட்டும்தானா? அல்லது உடல் ரீதியான ஒரு தடையை, பிரச்சினையை ஒருவர் கல்வி கற்பதன் வழியாக கடந்து சென்றுவிடத்தான் முடியுமா?
உடல்ரீதியான பிரச்சினைகள் கொண்டவர்களின் துன்பங்கள் என்பது நம்முடைய நாட்டில் முழுக்க முழுக்க சமூகரீதியானவை. மொத்த அமைப்பும் அவர்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அரசுப் பணிகளில் அவர்களுக்கு ஒதுக்கபட்டுள்ள இடஒதுக்கீட்டிற்கான இடங்கள் கூட நிரப்பப்படுவதில்லை என்பதுதான் உணமை. இதற்காக அவர்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள். நம்முடைய வீடுகள், பொது இடங்கள், போக்குவரத்து அமைப்புகள் யாவும் அவர்களுக்கு எதிராக இருக்கின்றன. எல்லவற்றையும்விட மாற்றுத்திறன் கொண்டவர்களைப் பற்றிய சமூக மனோபாவம். ஒரு தலித் இந்த சமூகத்தில் எவ்வளவு பெரிய ஸ்தானத்தை அடைந்தாலுல் அவருடைய சாதிய இழிவிலிருந்து எப்படி விடுபட முடியவில்லையோ அதேபோல மாற்றுத் திறன்கொண்ட ஒருவர் எத்தகைய சாதனைகளைச் செய்தாலும் அவர் ஒரு குறைவுபட்ட மனிதராகத்தான் பார்க்கப்படுகிறார். அவர் பிற குறைவுபட்ட மனிதர்களுக்கு மட்டுமே ஒரு முன்னுதாரணம். இத்த்கைய பார்வை கொண்டவர்களுக்கு ஞாநி ஒரு சிறந்த உதாரணம். ஞாநி மனுஷ்ய புத்திரனிடம் காட்டும் மனோபாவம் என்பது அவரது சாதிய மனோபவத்தின் ஒரு நீட்சியே. அவர்களால் மனிதர்களை வேறு எப்படியும் பார்க்கவோ வகைப்படுத்தவோ முடியாது. வேண்டுமானால் யாராவது ஒரு பிராமணர் சங்க கூட்டத்தில் போய் ‘ சங்கரன்தான் நீங்கள் பின்பற்ற வேண்டிய முன்உதாரணம். உங்களுடைய சாதித் திமிரை எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்காமல், அதே சமயம் ஒரு போலி ஜனநாயக, போலி முற்போக்கு முகமூடியையும் அணிந்துகொண்டு வெற்றிகரமாக உலா வரவேண்டுமானால் நீங்கள் ஞாநியை பின் பற்றுங்கள் ’ என்று உரையாற்றலாம்.
மனுஷ்ய புத்திரன் ஒரு முன்னுதாரமே அல்ல என்பதுதான் இதில் வேடிக்கை. அவருடைய முதல் கவிதைத் தொகுப்பை அவர் எழுதியபோது அவர் 5-ஆம் வகுப்பு ஸ்கூல் drop out . அவர் எம்.ஏ. ஜர்னலிசம் படித்தபோது அவரது மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருந்தன. காலச்சுவடின் ஆசிரியர் குழுவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். என்னய்யா சம்பந்தம் அவர் கல்விக்கும் இலக்கியத்துக்கும்? தனிபட்ட அவரது வாழ்வில் அவர் எவ்வளவோ பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். மாற்றுத் திறன்கொண்ட ஒருவர் தனிப்பட்ட வாழ்விலோ சமூகரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ அடையக்கூடிய பிரச்சினைகள் பெரும்பாலானவற்றை அவர் சந்தித்ததே இல்லை என்பதை அவருடனான நேர்ப் பேச்சுகளில் அறிந்திருக்கிறேன்.. ஆனால் ஞாநியைப் பொறுத்தவரை மாற்றுத்திறன் கொண்ட அனைவரும் 2 ஆயிரம் ரூபாய்க்கு லாட்டரிச்சீட்டு விற்கும் ஒரு கும்பல். இப்படி மனிதர்களை கும்பலாகப் பார்க்கும் மனோபாவம் சாதித் திமிருக்கு மட்டுமே உண்டு. எம்.எஸ். உதயமூர்த்தி, அப்துல் கலாம் வகை மிடில் கிளாஸ் வாழ்க்கை முன்னேற்றப் புனைகதைகளை ஒரு இலக்கியக் கூட்டத்தில் ஞாநியைப் போன்ற ஒரு பாமரன் வந்து உளறினால் நாமும் அதை கேட்டுக் கொண்டிருக்கிறோம்
ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனை வெறுக்கிறார். ஞாநி மனுஷ்ய புத்திரனை வெறுக்கிறார். இன்னும் எனக்குத் தெரியாத பலர் இருக்கக் கூடும். அவர்கள் ஒரே ஆயுதத்தைத்தான் கையில் எடுக்கிறார்கள். அவரை உடல்ரீதியாகத் தாக்குவது. அவரது உடலின் வழியாகவே ஒரு கலைஞனாக அவர் அடைந்த சாதனைகளை மதிப்பிடுவதன் மூலம் அவருடைய இடத்தைக் கீழிறக்குவது. நான் மனுஷ்ய புத்திரனுக்காகப் பேசவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. ஆனால் உடல்தீயான அதிகாரம், மேல் நிலை நோக்கு, வன்முறை ஆகியவை குறித்தே நான் இங்கே விவாதிக்க விரும்புகிறேன்.
அடுத்து, ராமகிருஷ்ணனையும் விடவில்லை. ’ இவர் கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி விட்டுப் புனைகதைகள் எழுத வேண்டும்’ என்ற புத்திமதியையே அரை மணி நேரம் மாற்றி மாற்றி வெவ்வேறு வார்த்தைகளில் சொன்னார் ஞாநி. ராமகிருஷ்ணன் தொடர்ந்து சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதிக் கொண்டே இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யாமம் நாவல். சென்ற ஆண்டு பதினெட்டாம் நூற்றாண்டின் மழை என்ற சிறுகதைத் தொகுப்பு. இந்த ஆண்டு 50 குறுங்கதைகள். இதெல்லாம் பற்றி எழுதுவுமே தெரிந்து கொள்ளாமல் ‘ நீங்கள் கட்டுரை எழுதாமல் கதை எழுதுங்கள்’ என்று என்ன புத்திமதி? கதைகளை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் வந்து ‘ நீ கதை எழுது’ என்று சொல்ல எவ்வளவு திமிரும், ஆணவமும், தடித்தனமும் இருக்க வேண்டும்? அதுவும் ஞாநியைப் போன்ற தோல்வியடைந்த, இலக்கிய வாசகர்களால் துரத்தியடிக்கப்பட்ட ஒரு அரைவேக்காட்டு எழுத்தாளன் தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரைப் பார்த்து இந்தப் புத்திமதிகளை அள்ளிவிடுகிறார்.
ஒரு எழுத்தாளனிடம் இப்படி வந்து புத்திமதியும் அறிவுரையும் சொல்ல ஞாநிக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒரே தகுதிதான். அவர் தன்னை உண்மையிலேயே ஞாநியாகவும், மற்றவர்களை அஞ்ஞாநிகளாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் எல்லோருக்கும் எப்போதும் புத்திமதிகளையும், அறிவுரைகளையும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். ஒருமுறை தமிழக முதல்வர் கருணாநிதியை ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுரை வழங்கினார் ஞாநி. அதற்கு அவர் சொன்ன காரணம், கருணாநிதியின் வேட்டியில் மூத்திரக் கறை படிகிறது; அவருக்கு வயதாகி விட்டது.
அது ஏன் ஐயா எல்லோரையும் பார்த்து எழுதாதே, வேலை செய்யாதே, வீட்டுக்குப் போ என்றே எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்?
இப்போது ஞாநிக்கு என் வயதுதான். 55. ஆனால் மைக்கின் முன்னால் பேச முடியாமல் திணறிக் கொண்டே இருக்கிறார். பார்த்தால் ரத்தக் கண்ணீர் வருகிறது. 95 வயது கிழவர் பேசுவது போல் அப்படிக் கமறிக் கமறிப் பேசுகிறார். ஏன், இவர் ஓய்வு எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழலாமே? குமுதம் பத்தியிலும் வாராவாரம் கருணாநிதியைத் திட்டுவதே இவருக்குப் பிழைப்பாக இருக்கிறது. ஆக, வேறு எந்த சப்ஜெக்டும் இவருக்குக் கிடைப்பதில்லை. அப்படியானால் எழுதுவதையும் நிறுத்தி விட்டு ஞாநி ஓய்வெடுக்கப் போகலாமே?
எஸ்.ரா. விஷயம் இருக்கட்டும். மனுஷ்ய புத்திரனை இப்படி ஒரு இலக்கிய மேடையில் அவமானப்படுத்திய ஞாநியை என்ன செய்தால் தகும்? சொல்லுங்கள்...
14.12.2009. 8.46 p.m.
www.charuonline.com