
= அகநாழிகை என்றால் என்ன ? =
என்னைச் சந்திக்கின்ற, தொலைபேசியில் தொடர்பு கொள்கின்ற நண்பர்கள் அனைவரும் தவறாமல் கேட்கிற ஒரு கேள்வி “அகநாழிகை என்றால் என்ன அர்த்தம் ?“
‘அகத்துள் ஏற்படும் நினைவுக் கணங்கள்‘ இதுவே அகநாழிகை என்பதன் பொதுவான பொருள். இதோ இந்த பதிவை எனது விரல்களின் வழியே கணிணியின் தட்டச்சிடப்படுவதற்கு முன்பாக என் மனதில் தோன்றி அது பதிவு வடிவமாகி வெளிவரும் கணங்களை அகநாழிகை எனப் புரிந்து கொள்ளலாம்.
அகநாழிகை என்பதன் உண்மையான பொருள், கருவிலிருக்கும் குழந்தை உலகிற்கு பிரசவமாவதற்கு முன்பாக, கடைசி சில தினங்களில் அதற்கு சிந்தனையும், உணர்வும் தோன்றியிருக்கும். சிந்திக்கத் துவங்கிய குழந்தை உலகைக் காண்பதற்கு முன்பான கடைசிக் கணங்களே ‘அகநாழிகை‘
பல வருடங்களுக்கு முன் இலக்கியச் சிற்றிதழ் ஆரம்பிக்க விரும்பி அதற்காக தேர்ந்தெடுத்த பெயர்தான் ‘அகநாழிகை‘. பிறகு அம்முயற்சி தோல்வியடைந்ததால், அகநாழிகை என்ற பெயரில் அமைப்பாக செயல்பட்டு குறும்படங்கள் திரையிடும் நிகழ்வுகளும், புத்தக வெளியீடும், இலக்கியக் கூட்டங்களும் நடத்திக் கொண்டிருந்தேன். பிறகு வலைப்பக்கத்தில் எழுத ஆரம்பிக்கும் போது எனக்கே அப்பெயரை வைத்துக் கொண்டேன். சதா துரத்தும் எழுத்துக்களை எழுதியும், பதிவிட்டும் வாழ்க்கையைத் தொடரும் நானே ஒரு சிறுபத்திரிகை போலத்தானே.
(-)(-)(-)(-)(-)

= ‘ஊமைகள் பார்க்கிறார்கள்‘ ‘செவிடர்கள் பேசுகிறார்கள்‘ =
முன்பெல்லாம் சினிமாவில் சேர்வதற்கு ஒரு அறிமுக அட்டையாக குறும்படம் ஒன்றை எடுத்துவிட்டு, அதன் குறுந்தகடுகளுடன் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். இப்போது வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவதற்கு அறிமுக அட்டையாக இலக்கியமும், வலைப்பக்கங்களும் பயன்படுகின்றன. பதிவர்களின் படைப்புகள் தொடர்ந்து வெகுஜனப் பத்திரிகைகளில் வருவதே இதன் சாட்சி. வெகுஜனப் பத்திரிகைகளில் வெளியாவதற்கு படைப்புத்திறன் தவிர வேறு பல வித்தைகளும் தெரிந்திருக்க வேண்டும். கிறித்தவ அமைப்புகள் நடத்தும் எழுச்சிக் கூட்டங்களில் ‘ஊமைகள் பேசுகிறார்கள்‘என்பது போல ‘பதிவர்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள்‘ ‘பதிவர்கள் பிரபலமாகிறார்கள்‘ ‘பதிவர்கள் நடிக்கிறார்கள்‘ ‘பதிவர்கள் பாடுகிறார்கள்‘ என பதிவர்களுக்கு இது எழுச்சிக்காலம். உன்னைப்போல் ஒருவன் படத்தின் வாயிலாக எழுத்தாளர் இரா.முருகன் திரைக்கதை ஆசிரியராகவும், கவிஞர் மனுஷ்யபுத்திரன் பாடலாசிரியராகவும் ஆகிறார்கள் என்பது கூடுதல் சந்தோஷச் செய்தி.
(-)(-)(-)(-)(-)

= லக்கி லக்கி நீ லக்கி =
தோழர் ‘லக்கிலுக்‘ பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவரது எழுத்து நடை வாசக ஈர்ப்புத்தன்மை கொண்டது. எழுத்தாக இருந்தாலும், காட்சி ஊடகங்களாக இருந்தாலும் சுவாரசியம் குன்றாமல்‘ தெளிவாக, புரியும் விததத்தில் ஒரு விஷயத்தைச் சொல்வதுதான் ஒரு படைப்பாளியின் கடமை. இதில்தான் ஒரு படைப்பின் வெற்றியென்பது நிச்சயிக்கப்படுகிறது. இந்த திறன் லக்கிலுக்கிற்கு இயற்கையாகவே கைகூடியிருக்கிறது. வெறும் லக்கியாகவே மட்டும் இல்லாமல், சரியான புரிதலை வாசிப்பவரிடம் ஏற்படுத்தி, எதிர் கருத்துக்களையும், ஆதரவுகளையும் திரட்டிக் கொள்வதில் லக்கிலுக்கிற்கு நிகர் அவரே. என்ன ஒரு விஷயம்... எந்த அளவிற்கு அவரது எழுத்துக்கள் அவரை நண்பனாக இருந்து உத்வேகப்படுத்துகிறதோ அதே அளவிற்கு அவரது எதிரியாகவும் அவரது எழுத்தே அமைந்து விடுகிறது. ‘ஒருவன் எதை ஆயுதமாக எடுக்கவேண்டும் என்பதை அவனது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்‘ என்பதை லக்கிலுக் எழுத்துக்களின் வாயிலாக உணர்கிறேன். நல்ல விவரிப்புத் திறன், வாசிப்பின் ஆர்வம் தூண்டும் தன்மை அனைத்தும் ஓருங்கே இணையப்பெற்ற லக்கிலுக் இன்னமும் பல உச்சங்களை அடைவது உறுதி. ஆனந்த விகடனில் லக்கிலுக்கின் ஒரு பக்கக் கதையை வாசித்தேன். அதை ஒரு கதையாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வெறும் துணுக்குச் செய்தி அது. எனக்குப் பிடிக்கவில்லை.
(-)(-)(-)(-)(-)
= மொக்கையான தமிழ் =
நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் தனது ‘மிக்ஸ்டு ஊறுகாய்‘ பதிவில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
//ரொம்ப நாளாக எனக்கு இன்னொரு விஷயத்தில் சந்தேகம்.! அதேதான்.. விஷயத்தில்தான் சந்தேகமே.. அனுஜன்யா முதலானோர் விஷயத்தை ‘விதயம்’ என்கிறார்கள். அதிஷா போன்றோர் அதை ‘விடயம்’ என்கிறார்கள். ஏராளமான ஆங்கிலச்சொற்களும், பிறமொழிச்சொற்களும் வழக்கத்தில் உள்ள நிலையில், அவற்றை எந்த தயக்கமும் இல்லாமல் நாம் (மேற்குறித்த அதே பதிவர்கள் உட்பட) பயன் படுத்திவரும் சூழலில், இந்த ‘விஷயம்’ மட்டும் என்ன பாவம் செய்தது? தமிழ் வளர்த்தல் என்றால் ‘செய்தி’ என்ற சொல்லை பயன்படுத்தலாம். மாறாக ஒலிதான் பிரச்சினையென்றால் ‘ஷ’ வின் மிக நெருங்கிய தமிழ் ஒலி வடிவான ‘ச’ வை பயன்படுத்தலாம். அதை விடுத்து ஏன் இப்படி? புரியவில்லை.. விளக்குங்கள்.
அப்புறமென்ன.. விஷம் என்பதை விதம் என்பீர்களா? ஷங்கரை டங்கர் என அழைப்பீர்களா? ஷூவைத்தான் ‘டூ’ என்பீர்களா?//
(நன்றி : ஆதிமூலகிருஷ்ணன்)
ஆதிமூலகிருஷ்ணன் பதிவு குறித்த எனது சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
விஷயம் – விடயம் – விதயம் இவற்றிற்கெல்லாம் இடத்திற்கேற்ப பல பொருள் உண்டு.
‘விஷயம்‘ ‘விடயம்‘‘விசயம்‘ என்பதற்கு ஒரே பொருள்தான் ‘காணப்பட்டவைகள்‘ ‘உரியது‘ ‘அடைக்கலம்‘ ‘ஆராய்வு‘ என்றெல்லாம் பொருள்உள்ளது.
‘விசயம்‘ ‘விஜயம்‘ என்றால் ‘வெற்றி‘ என்னும் பொருளும் உள்ளது.
‘விஷம்‘ ‘விடம்‘ இரண்டிற்குமே ‘நஞ்சு‘ என்ற ஒரே பொருள்தான்.
‘விதம்‘ என்றால் ‘மாதிரி‘ ‘சூத்திரம்‘ ‘இனம்‘ என்று பொருள்.
அதேவிதமாக, சொன்னவிதம், விதம்விதமாக இப்படிப்பட்ட வார்த்தைகளை சொற்சேர்க்கை செய்து புரிந்து கொள்ளலாம்.
விதத்திலிருந்துதான் விதை, வித்து, விதர்ப்பம், விதவை, வித்தகம் என்ற வார்த்தைகள் எழுகின்றன.
அதேபோல, ஷங்கரை ‘டங்கர்‘ என எழுதலாமா என்று ஆதிமூலகிருஷ்ணன் நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.
‘சங்கர்‘ என்றால் ‘போர் புரிபவர்‘ என்று பொருள்.
‘டங்கர்‘ என்றால் ‘போர் புரிபவர்கள் அணியும் தோற்கச்சை‘ என்ற பொருள் தமிழகராதியில் உள்ளது.
பெரும்பான்மை பதிவர்களுக்கு சந்தோஷமளிக்கும் கூடுதல் செய்தி.
‘மொக்கை‘ என்றால் ‘கூர் மழுங்கிய‘ என்பது பொதுவான பொருள். இவ்வார்த்தைக்கு மூல வார்த்தையான ‘மொக்கு‘ என்பதற்கு ‘கூரான‘ ‘குமிழ் போன்ற‘ என பொருள் படுகிறது.
‘மொக்கை‘ என்றால் ‘கூர் மழுங்கிய‘ என்ற பொருள் தவிர ‘பருமை‘ ‘வெட்கம்‘ என இரண்டு பொருளும் உண்டு.
இனி பதிவுகளின் வாசிப்பு வரவேற்புக்கு ஏற்ப ‘மொக்கை‘யான பதிவை பெரியதான, முக்கியமான என பொருள் கொண்ட ‘பருமை‘ எனவும், அதேசமயம் வரவேற்பில்லாத மொக்கையான பதிவிற்கு ‘வெட்கம்‘ எனவும் பொருளிட்டு மகிழ்ந்து கொள்ளலாம்.
என்னைப் பொறுத்தவரையில், எழுத வேண்டும் என்று வந்த பிறகு எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாகவாவது மொழியை சிதைக்காமல் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் கடினமாக இருக்கும் பிறகு சரியாகி விடும். தமிழ் மொழி மீது பண்டிதராக வேண்டாம். ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டால் போதும். ஆங்கிலம் கற்கவும், பேசவும் ஆயிரம் முயற்சிகளைச் செய்யும் நாம் நம் தாய்மொழி அல்லது நாம் எழுதுகின்ற மொழி மீது ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம் என்பது புரியவில்லை. ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயம் ஆங்கில அகராதி என்ற ஒரு புத்தகம் இருக்கும். நம்மில் எத்தனை பேர் தமிழகராதி வாங்கி வைத்திருக்கிறோம். கிரியா, பவானந்தர், கழக தமிழ் அகராதி என எத்தனையோ தமிழகராதிகள் உள்ளன. எல்லோரும் கூட வேண்டாம். எழுதுவதன் மீதும், வாசிப்பதும் மீதும் ஆர்வம் கொண்ட நாமாவது அதைச் செய்யலாமே... மனப்பாடம் செய்ய வேண்டாம், தமிழகராதியில் தினமும் ஒரு பக்கம் வீதம் படித்தால் போதும். அது மட்டுமே மொழியறிவை விரிவு செய்யும். குறைந்தபட்சம் நம் மொழி மீது நாம் காட்டும் நேர்மையான அக்கறை அதுவாகவே இருக்க முடியும்.
(-)(-)(-)(-)(-)
= விட்டுப்போன வார்த்தைகளும், எஞ்சிய நினைவுகளும்...
ஓல்டு மங்க் ரிசர்வ் ரம்மும் =
இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று வெகுநாட்களாகிறது. பொதுவாக இலக்கியக் கூட்டங்களில் நிகழும் குழு அரசியலும், உரையாடல்களில் நிலவும் வறட்சியான தன்மையுமே காரணம். இதையும் மீறி புதுப்புது அறிமுகங்களுக்காகவும், நட்பு பாராட்டலுக்குமாகவென, மது அருந்தக் கிடைக்கும் சுதந்திரத்திற்காகவும் சில கூட்டங்களுக்கு செல்ல நேரிடுகிறது. தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் சார்பில் மறைந்த கவிஞர்கள் சி.மணி, அப்பாஸ் நினைவாக ‘விட்டுப்போன வார்த்தைகளும், எஞ்சிய நினைவுகளும்‘ என்ற தலைப்பிலான அமர்விற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். லீனா மணிமேகலை இதற்கான அழைப்பை மின்மடலில் அனுப்பியிருந்தார். கவிஞரும், பதிவருமான ‘தூறல் கவிதை‘ ச.முத்துவேல் அவர்களும் ‘இந்த நிகழ்விற்கு போகலாமா ?‘ எனக்கேட்டிருந்தார். நாங்கள் இருவரும் கவிஞர் யாத்ரா அவர்களை இந்நிகழ்வில் சந்திப்பதென முடிவு செய்து அவரையும் அழைத்தோம். நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சென்று விட்டோம். வழக்கம் போலவே அங்கங்கே இருந்த கவிஞர்களை புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தேன். கோணங்கி, கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, மனுஷ்யபுத்திரன், அய்யப்ப மாதவன், பா.வெங்கடேசன், ரவி சுப்ரமணியன், கரிகாலன், அசதா, யவனிகா ஸ்ரீராம், ரிஷி, குமார் அம்பாயிரம், சுகிர்தராணி, இன்பா சுப்ரமணியன், நரன், ரிஷி, செல்மா பிரியதர்ஷன், லீனா மணிமேகலை, அ.வெண்ணிலா, அமிர்தம் சூர்யா, சொர்ணம், இளங்கோ கிருஷ்ணன், இசை, லஷ்மி சரவணக்குமார், ‘அடவி‘ முரளி, யாத்ரா, ச.முத்துவேல் இன்னும் பலர் என தமிழின் சமகாலக் கவிஞர்களையும் ஒருமித்து காண முடிந்தது. மனுஷ்யபுத்திரனிடம் பேச வேண்டுமென்று நினைத்தோம். அவரைச் சுற்றிலும் பலர் நின்றிருந்ததால் பேச முடியவில்லை. ‘மண் குதிரை‘ ‘அடவி‘ இரு சிற்றிதழ்களுக்கும் சந்தா செலுத்தினேன்.
3 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்வு 5.30க்கு ஆரம்பித்தது. கவிஞர் சுகிர்தராணி அனைவரையும் வரவேற்றும், சமகால கவிதைச் சூழல் குறித்தும் உரை நிகழ்த்தினார். ஆஸ்திரேலிய பழங்குடியின இசை வடிவமான (டிஜிருடு) மூங்கில் போன்ற நீண்ட கருவியைக் கொண்டு குமார் அம்பாயிரம் நிகழ்த்து கலை வழங்கி கவிஞர்களை இசையால் அஞ்சலித்தார். இசையஞ்சலி வித்தியாசமானதாகவும், மனதில் சேமித்து ரசிக்கக்கூடியதாகவும் இருந்தது. கவிஞர் அப்பாஸ் நினைவாக நிகழ்த்தப்பட்ட முதல் அமர்வில் யவனிகா ஸ்ரீராம் நெறியாளுகை வழங்கினார். மனுஷ்யபுத்திரன் கவிஞர்களின் படங்களுக்கு மலரஞ்சலி செய்தார். கோணங்கி கட்டுரை வாசிக்கத் தொடங்கினார். மிக நீண்ட நினைவுக் கட்டுரை. அவ்வப்போது அய்யப்ப மாதவன் பக்கமாக திரும்பி ‘இதோ முடித்து விடுகிறேன்‘ என்பதாக அடிக்கடி கூறிக் கொண்டிருந்தார். கோணங்கிக்குப் பிறகு பேச வந்த ரிஷி நேர்மையாக தனக்கு அப்பாஸ் குறித்து அவ்வளவாக தெரியாது என்று கூறியபடியே தன் கட்டுரையை வாசித்தார். அரங்க மேடையில் மிகவும் சந்தோஷமாக இருந்தவர் கவிஞர் அய்யப்ப மாதவன் மட்டுமே. அவர் முகத்தைத் தவிர மற்றெல்லாரும் இறுக்கமான தோற்றத்திலேயே இருந்தார்கள். ரவி சுப்ரமணியன் அமர்வு ஆரம்பித்த சிறிது நேரத்தில் வந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்கிறேன். முன்பு அவரது அறையில் சென்று தங்கியதைப் பற்றிய சிறு நினைவூட்டலுக்குப் பிறகு, இருவரும் மின்மடல் முகவரி பரிமாறிக்கொண்டு பேசியபடியிருந்தோம். பிறகு அ.வெண்ணிலா, மு.முருகேஷ் இருவரையும் நலம் விசாரித்தேன். பிறகு கரிகாலன், அசதா என சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன். குமார் அம்பாயிரம், அடவி முரளி எனச்சிலர் வெளியே வந்தார்கள். எனக்கும் அதற்குமேல் உள்ளே அமர முடியவில்லை. வெளியே லீனா மணிமேகலையும், செல்மா பிரியதர்ஷனும் ஒரு கவிதைப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து ஆழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ச.முத்துவேல், யாத்ரா, நான் மூவரும் வெளியே வந்தோம். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மது அருந்தலாமா என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டோம். சரியென்று முடிவாகி அங்கிருந்து வெளியேறி ஆட்டோ மூலமாக மதுக்கூடத்திற்கு சென்றோம். எனக்குப் பிடித்தமான ‘கொண்டாட்டம்‘ ரம் கிடைக்காததால் ஓல்டு மங்க் ரிசர்வ் ரம் வாங்கிச் சென்றமர்ந்தோம். யாத்ரா அவரது கவிதைகளைப் போலவே மிகவும் மென்மையாகப் பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தார். இலக்கியம், வலைப் பக்கங்கள், சினிமா, படித்தவை என பேச்சு ஒரு புள்ளியில்லாமல் எங்கள் பேச்சு அந்த கூடத்தில் அலைந்து கொண்டிருந்தது. பிறகு, யாத்ரா திடீரென எனக்கு பாட வரும் என்றார். மென்மையான குரலில் மிகவும் அழகாகப் பல பாடல்களை தேடித்தேடி பாடினார். எதிர்பாராத ஆச்சரியமாக ச.முத்துவேல் தனக்கும் பாடத்தெரியும் என்று கூறி பாடியும் காட்டினார். மதுக்கூடத்தின் பக்கத்து மேசை நண்பர்களும் இவர்களின் பாடலில் ஆர்வமாகி, அவர்களுக்கு பிடித்த பாடல் முதல் வரிகளை நினைவிலிருந்து எடுத்தளித்தபடி யிருந்தார்கள். சலிக்காமல் பாடிக் கொண்டும், இடையிடையே மது அருந்திக் கொண்டும் ஒன்றரை மணி நேரம் சந்தோஷமாகப் போனது. அங்கிருந்து கிளம்பி மறுபடியும் நிகழ்வு அரங்கிற்கு செல்வதென முடிவானது. இலயோலா கல்லூரி அருகிலிருந்த கூட்ட அரங்கை சென்றடைந்த போது கூட்டம் முடிந்து அனைவரும் வெளியே பேசிக்கொண்டிருந்தார்கள். அரங்கிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த சுகிர்தராணியிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு நாங்களும் விட்டுப்போன வார்த்தைகளுடனும்,எஞ்சிய நினைவுகளுடனும் கிளம்பினோம்,
(-)(-)(-)(-)(-)
பொன்.வாசுதேவன்