Sunday, March 22, 2009

யமுனாவின் மனநோய்

யமுனாவின் மனநோய் - சிறுகதை

யமுனாவை இந்த வாரத்திற்குள்ளாக நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அறையிலிருந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பார்வை எதன் மீதும் பதியவில்லை. யோசனையிலேயே புறக்காட்சிகளை மறந்துவிடுகிற பழக்கம் அவனுக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.

யமுனாவைப் பற்றித்தான் நினைவெல்லாம். சமீப காலமாகவே இன்னதென்று உணர முடியாத மாற்றம் அவளிடம் தெரிகிறது. எப்போதும் கவலையும் சோர்வும் சூழ்ந்த முகமாகவே காட்சி தருகிறாள். கல்யாணமான புதிதில் இப்படியில்லை. சிரிப்பும் சந்தோஷமுமாகத்தான் நேரம் கடந்தது. அதிலும், அவள் ஒருவனைக் காதலித்த விஷயத்திருந்து, பேருந்து நெருக்கத்தில் இடுப்பைத் தடவியவனைப் பற்றியெல்லாம் கூட வெளிப்படையாக சொன்னவிதம் அவனை மிகவும் கவர்ந்திருந்தது.

அவனுக்கும் காதலித்த அனுபவங்கள் உண்டு. மகேஸ்வரி, வானதி, கலா மற்றும் சத்யா என நான்கு பேரை, வெவ்வேறு வயதில் வெவ்வேறு சூழ்நிலைகளில் காதலித்திருக்கிறான் என்றாலும், யாரைப் பற்றியும் யமுனாவிடம் சொல்லவில்லை.

‘நீதான் நான் தொட்ட முதல் பெண்‘ என்று முதலிரவன்று ரொம்பவும் சாதாரணமாகச் சொன்னதை அவளும் நம்பி விட்டாள். அவனுக்கு இயல்பாகவே, பொய் சொன்னாலும் பிறர் நம்பி விடும்படி சொல்லக்கூடிய திறன் வாய்த்திருந்தது. மேலும், பெண்மை கலந்த அழகான அவன் முகத்தைப் பார்க்கிற எவருக்குமே ‘இவன் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்‘ என்றொரு நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.

யமுனா தனது காதலைப் பற்றி சொன்னபோது முதலில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. முதலிரவன்றே ‘நான் ஏற்கனவே ஒருவனை காதலித்தேன்‘ என்று சொல்கிற பெண்களை சினிமாவில் மட்டுமே பார்த்துப் பழக்கம். பிறகு இவ்வளவு துணிச்சலா... என்று கோபம் வந்தாலும், அவள் கொஞ்சம் அழகாக வேறு இருந்ததால் கோபத்தையடக்கி ‘இதிலென்ன இருக்கு... பரவாயில்லை‘ என்று சொல்லி சமாளித்தான். கல்யாணமெல்லாம் முடிந்து முதலிரவு வரை வந்து விட்ட பிறகு இனி எதுவும் சொல்லக்கூடாது என்று தீர்மானித்தான். ஐந்து மாதங்கள் போனதே தெரியவில்லை. விருந்து, வெளியூர், சினிமா, ஊர் சுற்றல் என பொழுது ஓடியது.

எதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் மார்பு வரை உருவம் தெரிந்தது. ‘நான் ஏன் இப்படி இருக்கிறேன்...?‘ தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்குள் கேள்வியெழுந்தது. மனதிற்குள் நினைத்திருந்தாலும் பேசியது போல உதடுகள் சப்தமின்றி அசைந்தன.

ஆமாம். யமுனாதான் காரணம். எப்போதும் கலகலப்பாக இருந்த அவள் சில நாட்களாகவே குளிரில் உறைந்த நீராக செயலற்று, ஜீவனற்று இருப்பதுதான் தன்னையும் பாதித்திருக்கிறது என்று அவன் நினைத்துக் கொண்டான்.

யமுனாவின் மனதில் ஆழ்ந்த உள்ளுணர்விற்கும், புற உலகிற்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதோ என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அவனைப் பார்க்கும் போதெல்லாம் தயங்கித் தயங்கி பேசுகிறாள். துணியை அலசிப் பிழிவதைப் போல் தொடர்ச்சியாக வழியும் அவள் பேச்சில் எப்போதுமே அவனுக்கு ஒரு மயக்கம் உண்டு.

இப்போதுகூட, கோயிலுக்குப் போயிருக்கும் அவள் உடன் இல்லாத இந்த நேரத்தின் வெறுமை மனதை கனக்கச் செய்கிறது. வெளியே பார்த்தான்.

வெட்ட வெளியில் வட்டமிட்டது போன்ற வடிவத்தில் யாருமே விளையாடாமல் வெறுமையாய் காட்சியளித்தது தூரத்து மைதானம். சுற்றுச்சுவரைத் தாண்டி மைதானத்திற்குள் எட்டிப் பார்ப்பது போல் வளைந்து நின்றிருந்தது ஒரு தென்னை மரம். தென்னங்கீற்றின் இடைவெளிகளுக்குள்ளிருந்து கசிந்த சூரிய ஒளி கண் கூசச் செய்தது.

யமுனாவிற்கும் இயற்கையை ரசிப்பது ரொம்பப் பிடிக்கும். அவனைப் போலவே படிப்பது, எழுதுவது, வரைவது என எல்லாவற்றிலும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. அவனுக்குத் தெரியாமல் பத்திரிகைக்கு அனுப்பிய அவளது கவிதையொன்று கூட பிரசுரமாகியிருந்தது. நேர்த்தியான கவிதை. அவனுக்கு கூட அது மாதிரியான நுட்பம் கைவரப்பெறவில்லை.

சொல்லாமல் கவிதையை பிரசுரத்திற்கு அனுப்பியதில் அவனுக்கு வருத்தம்தான் என்றாலும், நண்பர்களிடையே தன் மனைவியின் கவிதையைப் பற்றி சிலாகித்துப் பேசினான், நண்பர்கள் அனைவருமே அவளது கவிதையைப் பற்றி, அதில் தேங்கிக்கிடந்த அழகியல் உணர்வுகளை உன்னதங்களாய்ப் புகழ்ந்தனர். அவனுக்கும் பெருமையாக இருந்தது.

குவிந்த நிழலொன்று அறைக்குள் நீண்டது. நிமிர்ந்து பார்த்தான். யமுனாதான். கதவைத் திறந்த சப்தம் கூட எழவில்லை.

“வா... யமுனா, கோவில்ல நிறைய கூட்டமா...?“

“இல்லே, குறைச்சலாதான் இருந்தது. இந்தாங்க“

உள்ளங்கையில் வைத்திருந்த திருநீற்றையும் குங்குமத்தையும் கலந்து நீட்டினாள். திருநீற்றுடன் கலந்து இயல்பான ஆழ்ந்த சிகப்பு நிறத்தை இழந்திருந்தது குங்குமம். அதையே சிறிது நேரம் பார்த்தான். பிறகு விரலால் தொட்டு உதிர்த் நெற்றியிலும் கழுத்திலும் தடவினான். கைகளில் மீதமிருந்ததை அவன் நெஞ்சிலும் கைகளிலும் தடவினாள் யமுனா. எப்போதும் அவள் இப்படிச் செய்வது வழக்கம். ஒருமுறை காரணம் கேட்ட போது ‘கை, கால்களை நல்லா வைப்பா... கடவுளே‘ என்று சொல்லி அவள் அம்மா சிறுவயதிலிருந்தே தடவி விட்டு வந்ததால் தனக்கும் அதே பழக்கமாகி விட்டது என்று சொன்னாள்.

“ஏன் இப்போதெல்லாம் சரியா பேசறதேயில்ல“

“நீங்கதான எப்பவும் அமைதியா இருக்கீங்க. என் மேல ஏதாவது கோபமிருந்தா சொல்லணும்“

அவனுக்கு சோர்வாக இருந்தது. என்ன இவள்... ஏன் ஒரு மாதிரியா இருக்கேன்னு கேட்டா நான் கோபமாக இருப்பதாக சொல்கிறாளே... சிறிது நேரம் பேச்சேதுமின்றி கழிந்தது.

“நமக்குள்ள ஏதோ ஒரு இடைவெளி ஏற்பட்டுடுச்சுன்னு நினைக்கிறேன். உன்னோட மாறுதலுக்கு அதுதான் காரணமா இருக்கணும். நானே உன்னை மனநல மருத்துவரிடம் அழைச்சுட்டு போகலாமான்னு யோசிச்சுகிட்டிருந்தேன்“ மென்மையாக அதேசமயம் அழுத்தமான முடிவாகச் சொன்னான் அவன்.

யமுனா பதிலேதும் சொல்லவில்லை. இருவருக்கிடையேயான நெருக்கத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்பது போல அமைதியாக இருந்தாள். பிறகு வழக்கம்போல தனது ஆழ்ந்த பார்வையை அவன் மேல் நிறைத்து, “சரி போகலாம், அதுகூட நல்லதாகத்தான் படுகிறது“ என்றாள்.

கொஞ்ச நேரம் கழித்து “என் பிஃரண்டோட கணவர் கூட சைக்ரியாட்ரிஸ்ட்தான். நான் வேணும்னா அவளுக்கு போன் பண்ணி நாளைககு வர்றதா சொல்லட்டுமா“ அனுமதியை எதிர்பார்க்கிற பார்வையோடு கேட்டாள் அவள்.

“சரி போன் பண்ணி சொல்லிடு. காலையில பத்து மணிக்கு

இதுவரை தன்னை அழுத்திக் கொண்டிருந்த உணர்வுகளின் பாரம் குறைந்தது போல இருந்தது அவனுக்கு. இரவு படுத்த பின்னும் அவனுக்கு யோசனையாகவே இருந்தது. மனநல மருத்துவரிடம் போவதாக முடிவாகி விட்டது. ஆனால் அவரிடம் சென்றும் பலனேதும் இல்லையென்றால்... தூக்கமே வரவில்லை. யமுனாவை திரும்பிப்பார்த்தான்.

கால்களை மடக்கி பின்புறத்தோடு லேசாக அழுந்தியவண்ணம் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நிரம்பி வழியத்தயாரான வெண்ணை போல அவளது இடுப்புச் சதை சேலை விலகலில் புலப்பட்டது. பார்ப்பதற்குக் கிளர்ச்சியூட்டிய அக்காட்சி அவனது பாலுணர்வைத் தூண்டியது. பெரும்பாலும் இதுபோன்ற சமயங்களில் அவள் விழித்திருந்தால் மட்டுமே மேற்கொண்டு அவனது அசைவுகள் செயல்படும். இப்போது அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அதுவுமில்லாமல் மனதளவில் சந்தோஷமான நிலையில் அவள் இல்லாததும் அவனை யோசிக்கச் செய்தது.

இரவு கனவில் தென்னை மட்டையொன்றை தலைகீழாகத் திருப்பி கீற்றுகளை கத்தியால்உதிர்த்துக் கொண்டிருந்தான் யாரோ ஒருவன். கவனச் சிதறலில் மட்டையைப் பிடித்திருந்த ஒரு கையின் ஐந்து விரல்களும் துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்தது. ரத்தம் வழியத் துடித்து முகத்தருகே கையை கொண்டு சென்ற போதுதான் கவனித்தான் அவனது முகம் போல இருந்தததை. அவன்தான் அது. அதற்குள் விழிப்பு வந்து விட்டது. இருளில் கடிகாரம் இருந்த திசைநோக்கித் திரும்பினான். மணி மூன்றரை காட்டியது.

இரவு சரியாக தூக்கமில்லாததால் காலையில் எழுந்ததும் கண்கள் எரிச்சலாக இருந்தது. யமுனா சமைப்பதற்கு அடையாளமாக தாளிப்பு வாசனை படுக்கை அறையெங்கும் பரவியிருந்தது. குளித்துவிட்டு வந்ததும்., உணவு மேசையில் உணவைத் தயாராக எடுத்து வைத்திருந்தாள் யமுனா. எப்போதும் இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவது வழக்கம். யமுனாவும் வந்து அமர்ந்தாள்.

“சாப்பிட்ட பத்து மணிக்கு மேல டாக்டர் கிட்டே போகலாமா..?“

“போன் பண்ணி சொல்லியிருக்கேன். பதினொரு மணிக்கு வரச் சொன்னார்“

ஆட்டோ பிடித்து அரை மணி நேரம் முன்பாகவே போய்விட்டோம். அவர்களுக்கு முன்பாகவே ஒருவர் கிளினிக் வெளியே அமர்ந்திருந்தார். வழக்கமாக கிளினிக்களில் காணப்படும் டோக்கன் தரகிற அட்டெண்டர் யாரும் இல்லை. வெளியே அமர்ந்திருப்பவரும் டாக்டரைப் பார்க்க வந்தவராகத்தான் இருக்கும். அவனும் யமுனாவும் உள்ளே நுழைந்தார்கள். ஏற்கனவே அமர்ந்திருந்தவர் திரும்பி யமுனாவைப் பார்த்தார். அவள் மீதேறிய பார்வை அத்தோடு இறங்கவே இல்லை. அவனுக்கு எரிச்சலாக இருந்தது. அவள் மட்டும்தான் அந்த அறைக்குள் நுழைந்த்து போல, பெயரளவுக்கு கூட அவன் மேல் பார்வையைத் திருப்பவில்லை அவர். அவரது பிரச்சனை பெண்களைப் பற்றியதாகத்தான் இருக்குமென்று நினைத்துக் கொண்டான் அவன்.

அமர்ந்த சிறிது நேரத்தில் உள்ளேயிருந்து வயதான ஒருவர் வெளியே வந்தார். இவருக்கு சைக்ரியாட்ரிஸ்ட்டை பார்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கும் என்று யோசித்துப் பார்த்தான் அவன்.

தலையைக் கவிழ்ந்து கண்களை மூடியடியிருந்தாள் யமுனா. எதுவும் பேசவில்லை.

மணியொலி கேட்டது. எதிரே அமர்ந்திருப்பவர் அடுத்து உள்ளே போவார் என்று நினைத்தான் அவன். அவர் யமுனா மேலிருந்த பார்வையை இன்னும் நகர்த்தவில்லை. மறுபடியும் மணியொலி கேட்டது. அவர் போவதாக தெரியவில்லை. யமுனாவும் அவனும் எழுந்து உள்ளே சென்றார்கள். கூடவே அவர் பார்வையும் தொடர்ந்தது.

நீளமான அல்லது குறுந்தாடியுடன் கருமை சூழ்ந்த விழிகள் உள்ளிடுங்கியிருக்கும் மனநல மருத்துவரை கற்பனை செய்திருந்த அவனுக்கு உள்ளே நுழைந்ததும், விற்பனை பிரதிநிதி போன்று பளிச்சென்று மருத்துவர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. சிரித்த முகத்தோடு அமரச் சொன்னார்.

அவன் யமுனாவைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததும், “அதெல்லாம் தேவையில்லை. உங்க இரண்டு பேரோட பேசினால் மட்டும் போதும். பிரச்சனை என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்“ என்றார் மருத்துவர்.

அவனுக்கு நம்பிக்கையேற்படவில்லை. எப்படி பேசுவதை மட்டுமே கவனித்து பிரச்சனையை உணர முடியும். யமுனாவைப் பற்றி எதுவும் சொல்லவிடாமல் செய்தது அவனுக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது.

தன்னிடம் கேட்கப்பட்டதெற்கெல்லாம் உணர்ச்சிகளின் உந்துதல் ஏதுமின்றி கவனமாக பதில் பேசினான் அவன். யமுனாவும் அவர் கேட்டதற்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளிடம்தான் மருத்துவர் நிறையப் பேசினார். டாக்டரின் இந்தச் செயல் அவனுக்குள் கொஞ்சம் நம்பிக்கையூட்டியது. எப்படியும் பிரச்சனையைத் தீர்த்து விடுவார். அவனுக்கு வேண்டியதெல்லாம் பழைய கலகலப்பான யமுனா. அரை மணி நேரத்திற்கும் மேலாக இருவரிடமும் பேசினார் மருத்துவர்.

‘நன்றி‘ சொல்லிவிட்டு மருந்துச் சீட்டில் ஏதோ எழுதத் தொடங்கினார். மனநல மருத்துவத்திற்கு கூட மருந்துகள் சாப்பிட வேண்டியுள்ளது பற்றி அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனது முகமாற்றத்தை உணர்ந்தவராக “பொதுவான மருந்துகள்தான்“ என்றார் மருத்துவர்.

பணம் செலுத்தி மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு விடை பெற்று வெளியே வந்தார்கள். வெளியே அமர்ந்திருந்தவர் இன்னும் அங்கேயே இருந்தார். மறுபடியும் அவர் பார்வை யமுனாவை மொய்க்கத் தொடங்கியது. வாசலை விட்டு இறங்கும் போது மணியொலி கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். அவர் உள்ளே போகாமல் இன்னும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு குணமாகும் வாய்ப்பே இல்லை என்று தோன்றியது.

கிளினிக்கிற்கு எதிரே மருந்து கடை தென்பட்டது. யமுனாவைப் பார்த்து “நீ இப்படியே ஓரமாக நில். நான் மருந்து வாங்கி வரேன்“ என்று சொல்லிவிட்டு சாலையைக் கடந்து சென்றான்.

மருந்துகளை வாங்கிவிட்டு பணம் கொடுத்ததும் மருந்து சீட்டை பார்த்து மருந்துகள் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு சீட்டின் மேலே பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

மருந்துச் சீட்டின் மேலே ‘திரு.சுந்தரம்‘ என்று அவன் பெயர் எழுதப்பட்டிருந்தது.


*****

40 comments:

  1. //. மகேஸ்வரி, வானதி, கலா மற்றும் சத்யா என நான்கு பேரை, வெவ்வேறு வயதில் வெவ்வேறு சூழ்நிலைகளில் காதலித்திருக்கிறான் என்றாலும்,//

    கண்டிப்பா தேவைதான்

    ReplyDelete
  2. அழகாக சொன்னீர்கள் அகநாழிகை. மன நலத்தைப் பொருத்த அளவில் பிரச்சனை அடுத்தவருக்குத்தான், நமக்கல்ல என்கிற எண்ணம் அனைவருக்கும் உண்டு.

    உடலளவில் சிறு காய்ச்சல் என்றாலும் உடனே ஓடோடிச் சென்று மருத்துவரைப் பார்க்கும் நாம், மனதளவில் எத்தனை பெரும் சிக்கல் வந்தாலும் அதற்கு சரியான முறையில் தீர்வு காண மறுத்து விடுகின்றோம்....என்பது வேதனையான உண்மை.

    ReplyDelete
  3. மிகவும் அழகாக சொன்னிர்கள் பொங்கல் http://tinyurl.com/dctk7l

    கடவுளே sania Mirza, Wimbeldon ல வெற்றி பெறனும்..

    ReplyDelete
  4. கதை பிரமாதம் அகநாழிகை.. அந்த திருப்பம், மருந்து எது என்பது அழகாக முடிந்திருப்பது தேர்ந்த நடை.

    மனநோய்க்கு சில சமயம் நாமே மருந்தாகிறோம்.

    ஆட்டோ பிடித்து அரை மணி நேரம் முன்பாகவே போய்விட்டோம்.

    இந்த இடத்தில் போனார்கள் என்று வரவேண்டுமென்று நினைக்கிறேன்...

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நன்றாக இருக்கிறது கதையின் கரு.தொய்வில்லாத கதை ஓட்டம்.மனோதத்துவப் பிரச்சினை என்ன என்பதையும் கதை சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.ஆனால் இல்லாமல் இருப்பது குறையாகத் தோன்றவில்லை.

    வாழ்த்துக்கள் அக நாழிகை.தொடர்ந்து உங்கள் கவிதைகளையும் பார்க்க ஆவல்.

    ReplyDelete
  6. சிறப்பான கதைக் கரு... இரசித்தேன்...

    ReplyDelete
  7. உண்மைதான், சில சமயங்களில் பிரச்சனை என்ன‌வென்று தெரியாமல் நாமும் குழம்பி அடுத்தவரையும் குழப்பும் சுந்தரத்திற்கு மருந்து அவசியம்தான்.நல்ல திருப்பமான கதை வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  8. Tamilish Service to me

    Hi aganazhigai,

    Congrats!

    Your story titled 'அகநாழிகை: யமுனாவின் மனநோய்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd March 2009 09:00:07 AM GMT

    Here is the link to the story: http://www.tamilish.com/story/43331

    Thank you for using Tamilish.com

    Regards,
    -Tamilish Team

    ReplyDelete
  9. Kummachi commented on your story 'அகநாழிகை: யமுனாவின் மனநோய்'

    'எதிர் பார்த்த திருப்பம்தான், ஆனால் கதையின் நடையும், சொல் வீச்சும் அபாரமாக உள்ளது. '

    Here is the link to the story: http://www.tamilish.com/story/43331

    Thank your for using Tamilish!

    - The Tamilish Team

    ReplyDelete
  10. அகநாழிகை,கதை அதன் வர்ணணை அழகு.மெருகூட்டி நிற்கிறது.சில இழப்புக்களே மன அழுத்தங்களாக மாறுகிறது.ஆனால் ஒத்துக் கொள்ள முடிவதில்லை.எங்களை நாங்கள் முதலில் உணர்ந்துகொண்டால் எங்களை நாங்கள் தேற்றிக் கொள்ள முடியும்.

    ReplyDelete
  11. //துணியை அலசிப் பிழிவதைப் போல் தொடர்ச்சியாக வழியும் அவள் பேச்சில் எப்போதுமே அவனுக்கு ஒரு மயக்கம் உண்டு//

    :-))))

    ReplyDelete
  12. SUREஷ் said...
    //. மகேஸ்வரி, வானதி, கலா மற்றும் சத்யா என நான்கு பேரை, வெவ்வேறு வயதில் வெவ்வேறு சூழ்நிலைகளில் காதலித்திருக்கிறான் என்றாலும்,//

    //கண்டிப்பா தேவைதான்//

    காதல் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா..?

    நன்றி...SUREஷ்

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  13. இமைசோரான் said...
    //உடலளவில் சிறு காய்ச்சல் என்றாலும் உடனே ஓடோடிச் சென்று மருத்துவரைப் பார்க்கும் நாம், மனதளவில் எத்தனை பெரும் சிக்கல் வந்தாலும் அதற்கு சரியான முறையில் தீர்வு காண மறுத்து விடுகின்றோம்....என்பது வேதனையான உண்மை.//

    ஆம், இமைசோரான். மனச்சிக்கல் உடனே தீர்க்க வேண்டிய ஒன்று.
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  14. Anonymous said...
    //மிகவும் அழகாக சொன்னிர்கள் பொங்கல் http://tinyurl.com/dctk7l

    கடவுளே sania Mirza, Wimbeldon ல வெற்றி பெறனும்..,,

    வருகைக்கு நன்றி நண்பா, (பெயர் சொல்லக்கூடாதா)//

    ‘பொங்கல்‘ என்றதும் பயந்து விட்டேன்.

    உங்கள் மனப்பிரார்த்தனை நிறைவேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. ஆதவா said...
    //கதை பிரமாதம் அகநாழிகை.. அந்த திருப்பம், மருந்து எது என்பது அழகாக முடிந்திருப்பது தேர்ந்த நடை.

    மனநோய்க்கு சில சமயம் நாமே மருந்தாகிறோம்.

    ஆட்டோ பிடித்து அரை மணி நேரம் முன்பாகவே போய்விட்டோம்.

    இந்த இடத்தில் போனார்கள் என்று வரவேண்டுமென்று நினைக்கிறேன்...

    வாழ்த்துக்கள்.//

    ஆதவா, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
    (சரியாகத்தானே உள்ளது)

    ReplyDelete
  16. மணிமேகலா said...
    //நன்றாக இருக்கிறது கதையின் கரு.தொய்வில்லாத கதை ஓட்டம்.மனோதத்துவப் பிரச்சினை என்ன என்பதையும் கதை சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.ஆனால் இல்லாமல் இருப்பது குறையாகத் தோன்றவில்லை.

    வாழ்த்துக்கள் அக நாழிகை.தொடர்ந்து உங்கள் கவிதைகளையும் பார்க்க ஆவல்.//


    அதீத யோசனையும், தேவையற்ற மனக்குழப்பமும்தான் பிரச்சனை. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.... நன்றி, மணிமேகலா.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  17. VIKNESHWARAN said...
    //சிறப்பான கதைக் கரு... இரசித்தேன்...//

    வாங்க விக்கி,
    நலம்தானே..? உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  18. //சொல்லரசன் said...
    உண்மைதான், சில சமயங்களில் பிரச்சனை என்ன‌வென்று தெரியாமல் நாமும் குழம்பி அடுத்தவரையும் குழப்பும் சுந்தரத்திற்கு மருந்து அவசியம்தான்.நல்ல திருப்பமான கதை வாழ்த்துகள் நண்பரே.//


    சொல்லரசன், உங்கள் வருகைக்கும் பின்மொழிக்கும் நன்றி. தற்செயலா தொலைபேசியில் உங்களோட பேசியதிலும் ரொம்ப சந்தோஷம். உங்க பதிவுகளை பார்த்தேன். அங்கே வரேன்.

    ReplyDelete
  19. ஹேமா said...
    //அகநாழிகை,கதை அதன் வர்ணணை அழகு.மெருகூட்டி நிற்கிறது.சில இழப்புக்களே மன அழுத்தங்களாக மாறுகிறது.ஆனால் ஒத்துக் கொள்ள முடிவதில்லை.எங்களை நாங்கள் முதலில் உணர்ந்துகொண்டால் எங்களை நாங்கள் தேற்றிக் கொள்ள முடியும்.//

    உங்கள் சரியான புரிதலுக்கும், விமர்சனத்திற்கும் நன்றி ஹேமா.

    //எங்களை நாங்கள் முதலில் உணர்ந்துகொண்டால் எங்களை நாங்கள் தேற்றிக் கொள்ள முடியும்.//


    இது என்ன...? எனக்குப் புரியவில்லை.


    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  20. T.V.Radhakrishnan said...
    //துணியை அலசிப் பிழிவதைப் போல் தொடர்ச்சியாக வழியும் அவள் பேச்சில் எப்போதுமே அவனுக்கு ஒரு மயக்கம் உண்டு//

    :-))))



    மிக்க நன்றி, டிவிஆர்.

    - பொன். வாசுதேவன்

    ReplyDelete
  21. நல்ல கதைங்க..கடைசியில் எதிர்ப்பாராத திருப்பம்..

    ReplyDelete
  22. நல்ல கதை நண்பா.. நான் இந்தக் கதையின் முடிவை முதலிலேயே யூகித்து விட்டேன்.. காரணம் - உங்களுடைய வர்ணனை.. நீங்கள் கதாநாயகன் எந்த அளவுக்கு மனப் பிறழ்வு உடையவன் என்பதை ஆரம்பம் முதல் சின்ன சின்ன வார்த்தைகளில் அங்கங்கே தெளித்து உள்ளீர்கள்.. நடை ரொம்ப அருமை..

    ReplyDelete
  23. சாப்பிட்ட பத்து மணிக்கு மேல டாக்டர் கிட்டே போகலாமா..?“
    “போன் பண்ணி சொல்லியிருக்கேன். பதினொரு மணிக்கு வரச் சொன்னார்“
    ஆட்டோ பிடித்து அரை மணி நேரம் முன்பாகவே போய்விட்டோம்.


    கதையில் அவன், அவள் என்று மூன்றாவது (படர்க்கை?) மனிதரையே குறிப்பிட்டு செல்லுகிறீர்கள். அதாவது,

    ...நினைத்துக் கொண்டான்.
    ....அவனை மிகவும் கவர்ந்திருந்தது.
    .....அவனைப் போலவே படிப்பது,

    போன்று... நான் குறிப்பிட்ட அந்தவரிகள் வந்ததும் கதை திடீரென்று இறங்கி, சுய ஓட்டத்தில் நகர்ந்துவிடுகிறது..

    .... முன்பாகவே போய்விட்டோம்...

    அந்த இடத்தில் நீங்கள் எழுத வேண்டியது : " அரைமணி நேரம் முன்பே சென்றடைந்துவிட்டனர் (அ) போய்விட்டனர்..

    இப்போ மறுபடியும் மாற்றி எழுதி படித்துப் பாருங்களேன்...
    (கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமோ/??)

    ReplyDelete
  24. அட! வித்தியாசமா முடிச்சிட்டீங்களே!

    ஒருத்தர் தன் மனைவிக்கு காது குறைபாடு இருக்கலாம்னு நினைச்சி அதுபற்றி விசாரிக்க டாக்டர் கிட்ட போனாராம்...

    டாக்டரும் அவர் மனைவியின் காது குறைபாடு எந்த அளவிற்கு உள்ளது என்று தெரிஞ்சிக்கனும் என்பதற்காக மூன்று விதமான வழிகளை சொல்லி இது போல செய்து என்ன ஆச்சுன்னு எனக்கு வந்து சொல்லுங்கனு சொன்னாராம்...

    நேரா வீட்டுக்கு வந்தவர் வாசல்ல இருந்து சமையல்கட்டுல இருந்த தன் மனைவியை நோக்கி "ஏண்டி மரகதம்.. இன்னைக்கு என்ன சமையல்னு கேட்டாராம்... சத்தமே கேட்கல!

    ஹால்ல வந்து மறுபடியும் அழைத்தாராம்... சத்தமே கேட்கல!

    இப்ப சமையல் கட்டுக்குள்ள போயி மறுபடியும் சத்தமால அழைத்தாராம்...

    உள்ளேயிருந்து மனைவியோட குரல் வந்தது..

    "மூதேவி மூணு தடவை சொல்லிட்டேன்.. இட்லியும், தக்காளி சட்னியும்னு"

    உங்க கதையின் லாவகம் படிப்பவரை சலிப்படைய செய்யவில்லை..

    அதுபோன்ற கதை நடையில்தான் கதாசிரியரின் வெற்றி அடங்கியுள்ளது.

    வாழ்த்துக்கள் வாசுதேவரே!

    ReplyDelete
  25. இந்த கதையைப் படிக்கும்போது எனக்கு மேலே கூறின நகைச்சுவை கதை ஞாபகத்திற்கு வந்தது :)

    ReplyDelete
  26. vinoth gowtham said...
    //நல்ல கதைங்க..கடைசியில் எதிர்ப்பாராத திருப்பம்..//

    வினோத் கௌதம், வணக்கம். உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா...!

    ReplyDelete
  27. கார்த்தி,
    உங்கள் ஊக்கத்திற்கும், அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றி நண்பா.

    ReplyDelete
  28. //நான் குறிப்பிட்ட அந்தவரிகள் வந்ததும் கதை திடீரென்று இறங்கி, சுய ஓட்டத்தில் நகர்ந்துவிடுகிறது.. //


    ஆதவா, உங்கள் கருத்து சரிதான். அந்த இடத்திலிருந்து கதை வேறு பார்வையில் நகர்கிறது. உங்களோட நுண்ணிய விமர்சனத்திற்கு நன்றி.

    (கொஞ்சம் அதிகபிரசங்கித்தனமோ/??)

    அப்படியெல்லாம் இல்ல நண்பா, உங்க கருத்தை ஏற்கிறேன்.

    ‘குழந்த முகத்த‘ (நன்றி : கார்த்தி) வெச்சுகிட்டு பேச்ச பாரு...?

    ReplyDelete
  29. ஷீ-நிசி said...
    //அட! வித்தியாசமா முடிச்சிட்டீங்களே!//

    ஷி-நிசி.. வாழ்த்துக்கு நன்றி. இப்போதான் உங்க பின்னூட்டத்தை பார்த்தேன். உங்க கதையும் அருமை. அசோகமித்திரனின் ‘ரிக் ஷா‘ என்ற சிறுகதை நினைவுக்கு வருகிறது. தன்னுடைய மகனுக்கு ‘ரிக் ஷா‘ காலையிலிருந்து சொல்லிக் கொடுக்க முயற்சிக்கும் தகப்பனின் கதை. எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் பையன் ‘ரிஷ்கா‘ என்றுதான் சொல்வான். இரவு வரை சொல்லிக் கொடுத்து களைப்பாகி, நாளைக்கு சொல்லித்தரலாம் என தூங்கி விடுவான். காலையில் எழுந்து மகனை அழைத்து “இப்பவாச்சும் சரியா சொல்லுடா.. ‘ரிஷ்கா‘ அப்படின்னு“ என்பான். நாள் முழுக்க மகனுக்கு சொல்லிக் கொடுக்க முயன்று இறுதியில் இவன் உச்சரிப்பு மாறிப் போயிருக்கும்.

    ReplyDelete
  30. ஆஹா....!!! கத நெம்ப அருமையா இருக்குதுங்கோ தம்பி...!!!

    ReplyDelete
  31. அகநாழிகை.. அழகாக இருக்கிறது அனைத்தும் ..இலக்கணம் மீறாசிறுகதை..யூகிக்க முடியா முடிவு.. வாழ்த்துக்கள்

    http://www.thendaralsakthi.blogspot.com

    ReplyDelete
  32. நல்லா இருக்கு வாசு. எதிர் பார்த்த முடிவென்றாலும், நடை சரளம். வாழ்த்துகள்.

    அனுஜன்யா

    ReplyDelete
  33. லவ்டேல் மேடி said...
    //ஆஹா....!!! கத நெம்ப அருமையா இருக்குதுங்கோ தம்பி...!!!//


    ரொம்ப நன்றி, அண்ணா.

    ReplyDelete
  34. thendral said...
    //அகநாழிகை.. அழகாக இருக்கிறது அனைத்தும் ..இலக்கணம் மீறாசிறுகதை..யூகிக்க முடியா முடிவு.. வாழ்த்துக்கள்//

    வாழ்த்துக்கும், முதல் வருகைக்கும் மிக்க நன்றி, தென்றல்.

    ReplyDelete
  35. அனுஜன்யா said...
    //நல்லா இருக்கு வாசு. எதிர் பார்த்த முடிவென்றாலும், நடை சரளம். வாழ்த்துகள். //

    வாழ்த்துக்கு நன்றி, அனுஜன்யா.

    ReplyDelete
  36. நண்பர் அகநாழிகை உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

    ReplyDelete
  38. பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சார்!! இனி இங்கும் நான் உலாவுவேன்!

    ReplyDelete
  39. நல்லாருக்கு வாசு..
    கேபிள் சங்கர்

    ReplyDelete
  40. வாசுதேவன்,
    உங்கள் சிறுகதை யமுனாவின் மனநோய் அருமையாக இருக்கிறது. சிறுகதையின் முடிவில வரும் திருப்பத்திற்காக ஆங்கில எழுத்தாளர் ஓஹென்றியின் சிறுகதைகளை விரும்பிப்படித்ததுண்டு. உஙங்கள் கதைமுடிவும் அது போன்றதெ. எதிர்பாராத ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவு. வாழ்த்துக்கள்
    கே.எஸ்.பாலச்சந்திரன்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname