Thursday, March 5, 2009

'பிரிக் லேன்' - பெண்மையின் உணர்வு போராட்டம்


பால்யத்தில் நம்மில் பல் சிறு சிறு முடிவுகளை மனதில் வைத்திருந்திருப்போம். வளர்ந்த பிறகு அதைப்பற்றி யோசித்தால் எல்லாமே விளையாட்டுத்தனமாய் இருந்திருக்கும் அல்லது நடைமுறையில் சாத்தியமில்லாததாக இருக்கும்.
வயல் வெளிகளில் பட்டாம் பூச்சி பிடித்து விளையாடிக்கொண்டிருக்கும் இரு சகோதரிகளின் சந்தோஷ மனோநிலை, தாயின் தற்கொலைக்கு பிறகு மாறுகிறது. கிராமத்து சூழலில் இருந்து 17 வயதில் தன்னை விட இருமடங்கு வயது மூத்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் குடியேற நேரிடும் பெண்ணை பற்றிய கதை 'Brick Lane'
திருமணம் என்ற நிகழ்வு பெண்ணுக்குள் ஏற்படுத்தும் அகசிக்கல்களை பேசும் 'மோனிக்கா அலி' எழுதிய சர்ச்சைக்குரிய 'பிரிக் லேன்' நாவலை தழுவி எடுக்கப்பட்டது. 2007 -ல் வெளியாகிய இப்படத்தை இயக்கியவர் 'சராஃ கவ்ரோன்'
'என் கிராமத்தை விட்டு தூர எங்குமே செல்ல மாட்டேன்' என்ற தன் பால்ய முடிவுக்கு மாறாக அன்பற்ற கணவனோடு வாழ வேண்டிய கட்டாயத்தில் சகோதரியை பிரிந்து லண்டனில் வசிக்கும் பங்களாதேஷ் முஸ்லீம் பெண் 'நஸ்நீன்' (தனிஷ்டா சட்டர்ஜி). 16 வருட லண்டன் வாழ்க்கையில், 32 வயதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகவும், எப்போதும் ஓயாமல் தத்துவம் போதித்து, மனைவி, குழந்தைகள் தனக்கு அடிமைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று கருதும் கணவனை சகித்துக் கொண்டிருக்கிறாள் நஸ்நீன். பதவி உயர்வு தனக்கு கிடைக்காத வெறுப்பில் வேலையை துறந்து விட்டு வரும் கணவன் 'சானு' (சதீஷ் கோசிக்), தன்னுடைய திறமையை புரிந்து மீண்டும் தனக்கு இதைவிட பெரிய வேலை கிடைக்கும் என்று 'வாய் சொல் வீரனாக' காலம் கடத்துகிறான். பிறந்த மண்ணான பங்களாதேஷ் கிராமத்து நினைவுகளையும் அங்கிருக்கும் தன் சகோதரியையும் மறக்க முடியாமல் எப்படியாவது பங்களாதேஷ் திரும்பி விடலாம் என்று நினைக்கிறாள் நஸ்நீன். அவளது யோசனையை மறுத்து பொறுப்பற்று கடனில் கம்ப்யூட்டர் வாங்கி வந்து, புதுப்புது வேலைகளை செய்து பணம் சம்பாதிப்பது பற்றிய முயற்சிகளின் செய்து தோல்வியை சந்திக்கிறான் சானு.
தனக்கு தெரிந்த தையல் தொழிலை கொண்டு வருமானம் ஈட்ட முயல்கிறாள் நஸ்நீன். துணிகளை தைக்க கொண்டு வந்து தரும் இளைஞனான கரீம் அறிமுகம் ஈர்ப்பாகி காதலாகிறது. கரீம் மீதான காதல் உடல் ரீதியான தொடர்பில் முடிகிறது. கணவன் சானு வாங்கிய கடனை அடைத்து முடிக்கிறாள். இடையே அடிக்கடி பங்களாதேஷ் திரும்ப சென்று தன் இளமை கால இனிய வாழ்க்க்கை வாழ முடியாதா என்று ஏங்குகிறாள். பங்களாதேஷில் இருக்கும் நச்நீனின் சகோதரி தான் மிகவும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கடிதத்தில் எழுதுகிறாள், நஸ்நீன் சகோதரி யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் வேறு வேறு நபர்களுடன் வாழ்ந்து கட்டுபாடற்ற சுதந்திரத்துடன் இருக்கிறாள். இதற்கிடையில் திடீரென நச்நீனின் கணவன் சானு 'நாம் பங்களாதேஷ் திரும்பி விடலாம்' என்று கூறி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கிறான். கரீம் மீதான அன்பில் இருக்கும் நஸ்நீன் அதை விரும்பவில்லை, அதை கணவனிடம் சொல்லவும் தயங்குகிறாள்.
நச்நீனின் மூத்த மகளாக வரும் பாத்திரம் மிகவும் கூர்மையானது. பெண்களுக்கு இடையே உள்ள தலைமுறை இடைவெளியை துல்லியமாக வெளிப்படுத்தும் கதா பாத்திரமாக வரும் நச்நீனின் மூத்த மகள், தன் அம்மாவை போல எல்லாவற்றிலும் அப்பாவை ஏற்றுக்கொள்ளாமல் அவரது முரண்களை நேருக்கு நேராக சுட்டிக்காட்டுகிறாள். நஸ்நீன் கணவன் சானு தன் மனைவியை அடக்கி ஏமாற்றுவது போல தன் மகளை தன் ஆதிக்கத்தினுள் கொண்டு வர முயன்று ஒவ்வொரு முறையும் தோற்று விடுகிறான்.
ஒரு கட்டத்தில் நச்நீனின் மூத்த மகள் தன் அம்மாவாவை பார்த்து ' நீ அந்த கரீம் உடன் காதல் கொண்டிருக்கிறாயா..' என்று கேட்கவும் செய்கிறாள். கூர்மையான பார்வையும், வசனங்களும் கொண்ட அப்பெண்ணின் நடிப்பு மிகவும் அருமை. இறுதியில், சானு தன் மனைவி, மற்றும் இரண்டு மகள்களையும் லண்டனில் விட்டு தான் மட்டும் பங்களாதேஷ் செல்கிறான்.
அன்பற்ற கணவனோடு வாழ வேண்டிய சூழலில், கிராமத்து நினைவுகளோடு அடக்கப்பட்ட நிலையில் வளரும் நஸ்நீன் மனப்போராட்டங்கள் துல்லியமாக காட்சிப்ப் படுத்தப்பட்டுள்ளது,

10 comments:

  1. வணக்கம்

    திரைப்பட விமர்சனம் நல்லாத்தான் இருக்கு-- ஒரு திரைப்படம் என்றவிதத்தில்


    ஆனால் இதற்கு பேர் இங்கு கல்லகாதல்

    நன்றி
    இராஜராஜன்

    ReplyDelete
  2. நண்பரே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.திருமணத்திற்கு பிறகு பெண்ணின் மனதில் ஏற்படும் நுண்ணுணர்வுகளை விவரிக்கும் இந்த படம் கள்ளக் காதல் பற்றியது அல்ல. ஆண், பெண் இடையே ஏற்படும் திருமணத்திற்கு பிறகான உறவுகள், உடல், மன தொடர்புகள் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. பொதுமைப் படுத்தி பேசக்கூடிய விக்ஷயமல்ல.

    ReplyDelete
  3. பெண்களின் அக உலகை பற்றி பேசும் படமோ.. நன்றாக விமர்சித்து உள்ளீர்கள் நண்பா.. பார்க்க முயற்சி செய்கிறேன்.. கொஞ்சம் மற்ற விவரங்களையும் (technical) தெரிவியுங்க..

    ReplyDelete
  4. இன்னும் இந்த படம் பார்க்கவில்லை

    நல்ல அறிமுகத்திற்கு நன்றி.

    நண்பரே.. சில படங்கள் நம்ம வலையிலும் உள்ளது.

    பார்த்து நிறை / குறை சொல்லவும்.

    ReplyDelete
  5. நண்பரே. இந்த பதிவு யூத்வுல்விகடன்.காம் பகுதியில் ""குட்பிளாக்" என்று வெளி வந்துள்ளது..

    என் சார்பிலும் தோழி உமாஷக்தி சார்பிலும் மனதார வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வண்ணத்துப்பூச்சியார், உங்கள் வருகைக்கும், அன்புக்கும் மிக்க நன்றி. உங்கள் பதிவுகளை படித்து விட்டு தொடர்பு கொள்கிறேன்.

    ReplyDelete
  7. வணக்கம்

    நீங்கள் சொன்னது மிகவும் சரி

    \\பொதுமைப் படுத்தி பேசக்கூடிய விக்ஷயமல்ல.\\


    இந்த பதிவு படித்த கொபத்தில் எழுதியதுதான் என்னுடைய முதல் பின்னூட்டம்.

    அதில் கள்ளக்காதல் என்று எதை குறிப்பிட்டுள்ளார்கள் என கவணித்தால் தெறியும்.


    என்னைப்பொருத்த வரையில் அந்த பெண் அவள் கணவனுடன் வாழ்ந்திருந்தால்தான் அது கள்ளகாதல்

    ஆம் எதுவும் பொதுமைப் படுத்தி பேசக்கூடிய விக்ஷயமல்ல.


    நன்றி
    இராஜராஜன்

    ReplyDelete
  8. மண்ணிக்கவும் போன பின்னூட்டத்தில் சுட்டி கொடுக்க தவறிவிட்டேன்

    http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=2645:-10---------&catid=48:2008-11-01-19-23-48&Itemid=115

    இந்த இரு பின்னூட்டங்களையும் நீங்கள் உங்கள் வலையில் இடம்பெறச்சேய்ய வேண்டும் என்பது உங்கள் விருப்பம் சார்ந்தது

    நன்றி

    ReplyDelete
  9. கிட்டத்தட்ட இம்மாதிரி படங்கள்தான் பார்க்கவேண்டும்...

    உங்கள் எழுத்துக்கள் நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  10. தங்கள் வருகைக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி... ஆதவா,

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname