Friday, April 10, 2009

“ போடா ஒம்போது “


பங்குனி உத்திரத்தை முன்னிட்டு எங்கள் தெருவில் இருக்கும் 1200 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவிலில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவை காணச் சென்றிருந்தேன். பல வருடங்களாக நடத்தப்படாமல் நின்று போயிருந்த தெப்பத் திருவிழா கடந்த ஆண்டு முதல் மறுபடியும் தொடங்கியிருக்கிறது.

சிறுவயதுகளில் தெப்பம் குளத்தில் மிதந்து செல்வதைக் காண்பது வியப்பும், விந்தையுமானதொரு அனுபவத்தைத் தந்திருக்கிறது. எதையுமே தன்னிச்சையாக அனுபவித்து, ரசிப்பதில் உள்ள சுகம் வேறெதிலும் இல்லை. அதுபோன்ற மனோநிலையுடன் மாலை 5 மணிக்குச் சென்று குளத்தருகில் அமர்ந்து வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
தெப்பம் கட்டும் வேலை காலை முதல் நடந்து கொண்டிருக்கிறது.
மொழிக்கவர்ச்சி காரணமாக வார்த்தைகள் எப்படித் தோன்றியிருக்கக்கூடும் என்று அறிந்து கொள்வதில் கடந்த சில வருடங்களாக எனக்கு ஆர்வமும், வசீகரமும் இருந்தததால் அது சார்ந்து பல புத்தகங்களை வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். காலையில் ‘பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி‘யில் தெப்பம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடி, ‘புணை‘ அல்லது ‘மரக்கலம்‘ என்பதே பொருள் என அறிந்தேன். ஆனால் தெப்பம் மரங்களை மட்டும் பிணைத்துக் கட்டப்படவில்லை. காலமாற்றத்திற்கேற்ப பிளாஸ்டிக் தண்ணீர் டிரம்களை ஒன்றோடொன்று கயிற்றினால் இறுக்கி கூடவே மரக்கட்டைகளையும் சேர்த்து தெப்பம் செய்திருந்தார்கள்.

பூக்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் வண்ணக்கலவையாக காட்சியளித்தது. குளத்தைச் சுற்றிலும் சிறுவர்கள் கூட்டாக விளையாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள். பள்ளி விடுமுறையாதலால் அவர்களின் கொண்டாட்டம் கூடுதலாயிருந்தது. விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஒருவரை ஒருவர் சேட்டை செய்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் மற்றொரு சிறுவனைப் பார்த்து திடீரென ‘போடா ஒம்போது‘ என்று கத்தினான். எதற்காக சொன்னான் என்பது தெரியவில்லை. பதிலுக்கு அவன் துரத்த இருவரும் தொலைவில் ஒருவரையொருவர் விரட்டி ஓடிக் கொண்டிருந்தார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வார்த்தையை கேட்க நேரிட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த வார்த்தைப் பிரயோகமெல்லாம் இப்போது கிடையாது திருநங்கைகள் உரிய அங்கீகாரத்துடன் உலா வரத் தொடங்கியிருக்கும் காலம் இது என எண்ணிக் கொண்டிருந்தேன்.

பள்ளிக் காலங்களில் பலமுறை கேட்ட வார்த்தைதான். திருநங்கைகள் என்றாலே மனதில் இனம்புரியாத பயம் தோன்றியிருந்த காலம் அது. அப்போதெல்லாம் ‘ஒன்பது‘ ‘பொட்டை‘ ‘ரெண்டுங்கெட்டான்‘ ‘ஏழரை... ஒன்றரை‘ என பல வார்த்தைகள் புழக்கத்திருந்தது. பள்ளியில் மிகச் சாதாரணமாக இந்த வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.

எங்கள் பகுதியில் பெரும்பாலும் ரிக் ஷா ஓட்டிகளிடமிருந்துதான் இந்த வார்த்தைகள் புழக்கத்திற்கு வந்து கொண்டிருந்தன என மாணவப் பருவத்தில் நாங்களும் யூகித்திருந்தோம். திங்கட் கிழமைகளில் நடக்கும் வாரச் சந்தையில் கடைகளில் காசு கேட்க வரும் திருநங்கைகள் அனைவரும் ரிக் ஷா ஓட்டிகளுக்கு பரிச்சயமானவர்களாக இருந்தார்கள்.

சிறுவயதில் தெருச்சண்டைகளை வேடிக்கைப் பார்ப்பதிலும் தீராக்காதல் இருந்தது. ‘அவனை என்ன செய்யறேன் பாரு‘ என்று பலமுறை சொல்லி, மேற்கொண்டு எதுவுமே செய்யாமல் இருப்பவர்களையும், இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் இழுக்கும் போது ‘என்னை விடுடா விடுடா‘ என்று சொல்லி கத்திக் கொண்டிருப்பவர்களையும் பார்க்க உற்சாகமாயிருக்கும். திருநங்கைகளை போல பயமூட்டிய மற்றொரு சொல் ‘மாங்காத் தல‘ “சாப்பிடலைன்னா... மாங்காய்த்தலை கிட்டே பிடிச்சு கொடுத்திடுவேன்‘னு சொன்ன பிறகு பயந்து மாயமாய் உணவு உண்ட காலங்கள் உண்டு. மாங்காய்த்தலை மனிதர்களை பார்த்திருக்கிறேன், விரை போல சுருங்கிய தலையுடன், நீண்ட கழுத்தும், ஒல்லியான.. உயர்ந்த கருத்த உருவத்துடன், கோமணம் மட்டுமே ஆடையாக சற்றே கூன் வளைந்து நடந்து செல்லும் உருவம் அது. அவர்களை கல்லால் அடித்து விரட்டும் துணிச்சலான சிறுவர்களும் உண்டு. அவர்களெல்லாம் ஓணானை நூலில் கட்டி பிடிப்பது, கழுதை வாலில் பட்டாசு கட்டுவது போன்ற வீரச்செயல்களுக்காக அவரவர் வீடுகளில் விழுப்புண் பெற்றவர்கள். இப்போதெல்லாம் மாங்காய்த்தலை என்று யாருமே இல்லை. என் போன்றவர்களின் ஞாபகங்களில் இருந்து மீட்டியெடுத்தால் மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன். இன்று இதை எழுதும்போது நினைவுக்கு வருகிறதே தவிர இதுநாள் வரை நானும் மாங்காய்த்தலை என்பது யார்... ஏன் அவர்கள் இப்படியிருந்தார்கள் என்று யோசித்ததில்லை.

பயமாகவும், புதிராகவும் பின்பு ஆர்வமாகவுமே இருந்த திருநங்கைகளைப் பற்றிய தெளிவு ஓரளவு வந்தது 2006ம் ஆண்டில்தான். 2006-ல் நானும் எனது நண்பர் மனோவும் சென்னை தியாகராய நகரில் இரவு 10 மணிக்கு ‘விருதுநகர் ஓட்டலில்‘ சாப்பிட்டு வெளியே வந்தோம். மிதமான போதையில் இருந்த நாங்கள் பீடா வாங்குவதற்காக அருகே இருந்த கடையில் நின்றோம். அப்போது எங்களைத்தாண்டி சிறிது தொலைவில் சென்று நின்ற காரில் தெருவோரம் நின்றிருந்த அழகான பெண் ஒருத்தி ஏறினாள். காரில் ஏறிய பெண்ணின் நடை, உடை, பாவனை வித்தியாசமாக இருந்ததால் அது பெண்ணாக இருக்க முடியாது, திருநங்கையாகத்தான் இருக்கும் என்றேன் நான். பிறகு நாங்கள் கிளம்பி விட்டோம். ஒரு மாதம் கழித்து அதே பகுதியில் நானும் நண்பர் மனோவும் வந்திருந்த போது அங்கு நின்றிருந்த ஒரு திருநங்கையைப் பார்த்தோம். அருகில் சென்று பேசினோம். அவரை நேரில் பார்த்தால் திருநங்கை என்றே கருத இயலாது. அவர் தான் பாலியல் தொழில் புரிவதாகக் கூறினார். எங்களோடு வந்து காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தால் பணம் தருகிறோம் என்று கூறினோம். அவரும் சம்மதித்தார். பிறகு நாங்கள் மூவரும் மது (பியர்) அருந்திக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். பல கேள்விகளுக்கு விடையாக தெளிவான பேச்சு ‘ஹேமா‘ என்ற அவரிடமிருந்து கிடைத்தது. தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டது பற்றியும், ஆண் உருவத்தில் நடமாடும் ‘கோத்திகள்‘ பற்றியும் விளக்கினார். மும்பை, புனே உள்பட பல பகுதிகளில் வசித்து வந்த அந்த திருநங்கை பி.ஏ., வரை படித்திருப்பதாகக் கூறினார். தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசினார். ‘தாய்‘ என்ற அமைப்பு அவர்களைப் போன்றவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறினார். இதுபோல் பாலியல் தொழில் செய்வது ஏன் என்ற கேள்விக்கு அவர் சரியான பதிலைச் சொல்லவில்லை. பெரிய மனிதர்கள், காரில் வருபவர்கள் என அவரது பாலியல் தொழில் ஹை-டெக் முறையில் இருந்தது. அவர்களின் சில நிமிட இச்சைகளைப் பூர்த்தி செய்வதன் வாயிலாக ஓரிரு மணி நேரங்களில் ஆயிரம் ரூபாய் வரை தினசரி கிடைத்து விடுவதாகவும், மாதம் ஐந்தாயிரம் ரூபாய் விடுதிக்கு செலுத்தி விடுவதாகவும் கூறினார். கடலூரைச் சேர்ந்த அவர் தனது வீட்டிற்கும் பணம் அனுப்புவதாகக் கூறினார். வேலை கிடைக்காத நிலை உள்ளதால்தான் இதெல்லாம் என்று ஜுவனற்றக் குரலில் தெரிவித்தார். பிறகு அவரிடம் கூவாகம் பற்றி கேட்டதற்கு எங்களுக்கு சித்திரை மாதத்தில் நடக்கவிருக்கும் ‘தாலியறுப்பு‘ விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அவரது அலைபேசி எண்ணை பெற்றுக் கொண்டு விடைபெற்றோம். அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ளவில்லை.

2007 சித்திரை மாதம் பௌர்ணமியன்று கூவாகம் சென்று என்னதான் நடக்கிறதென்று பார்த்து விடுவதென முடிவு செய்து மனோவும் நானும் புறப்பட்டோம். போகும்போதே கடுமையான மனத்தயக்கங்கள்... போகலாமா... கூடாதா... இதற்கு போய்த்தான் ஆக வேண்டுமா என்றெல்லாம் எங்களுக்குள் கேள்விகள். விழுப்புரம் நகரம் கோலாகலமாக இருந்தது. திருநங்கைகளின் நடமாட்டம் பரவலாக இருந்தது. விழுப்புரத்தைத் தாண்டியதும் கூவாகம் செல்லும் வழி கேட்டு வலது புறமாக திரும்பி பயணித்தோம். எதிரில் வளையல், பொட்டு விற்பவர்கள் தள்ளுவண்டியில் வந்து கொண்டிருந்தார்கள். கூவாகத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று அவர்களிடம் வழி கேட்ட போது, ஒரு வாரமாக திருவிழா நடந்து முதல் நாள் இரவோடு முடிந்து விட்டது என்றார்கள். எங்களுக்கு பெரும் ஏமாற்றமாகி விட்டது. வந்ததற்கு கோவில் அருகிலாவது சென்று பார்த்து விட்டு வரலாமென, ஊருக்குள் திரும்பும் மண் சாலையில் பயணித்தோம். தண்ணீர் பாக்கெட் உறை, பான்பராக், சாப்பிட்ட இலைகள், கற்களை முக்கோணமாக்கி அதன் மேல் பொங்கல் வைத்ததற்கான அடையாளமாக கரி என குப்பையாகக் காட்சியளித்தது. மிகவும் சிறிய ஊர். கோவிலும் சிறியதுதான். கோவில் அடைக்கப்பட்டிருந்தது. பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம். விழுப்புரத்தை வந்தடைந்ததும், ஏற்கனவே எங்களுக்குப் பரிச்சயமான திருநங்கை ஹேமாவையாவது பார்க்க முடியுமா என யோசித்து அலைபேசியில் தொடர்பு கொண்டோம். தொடர்பு கொள்ள இயலவில்லை. பிறகு, அவர் கூறியிருந்த விடுதியின் பெயரை விசாரித்து செல்ல முடிவெடுத்து ‘ஆண்டவர் லாட்ஜ்‘ எங்குள்ளது எனக்கேட்டு, பாண்டிச்சேரி செல்லும் சாலையை அடைந்து ஆண்டவர் லாட்ஜிற்கு சென்று சேர்ந்தோம்.

‘ஆண்டவர் லாட்ஜ்‘ வழியெங்கும் திருநங்கைகள் கூட்டமாக நிரம்பியிருந்தது. அந்தச் சூழலில் நாங்கள்தான் வினோதப் ஜீவன்களாக ஆகியிருந்தோம். விடுதியின் வாசலை நாங்கள் அடைந்ததும் எங்களை நான்கைந்து பேர் சூழ்ந்து கொண்டு யாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டனர். நாங்கள் சென்னையிலிருந்து வந்திருக்கும் திருநங்கையின் தோழர்கள், அவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும் வேறேதும் கேட்காமல் இரண்டாவது மாடியின் ஒரு அறை எண்ணைச் சொல்லி போகச் சொன்னார்கள். அந்த விடுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட திருநங்கைகளை காண நேரிட்டது.

படிகளில் ஏறும் போதே ஒவ்வொரு அறையும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. மனதில் பயம் கலந்த உணர்வுடன், சென்றோம். குறிப்பிட்ட அறையில் நாங்கள் தேடி வந்த திருநங்கை இல்லை, வெளியே சென்றிருந்தார். வேறு நான்கு திருநங்கைகள் இருந்தனர். திருநங்கை ஹேமாவை தேடி வந்ததையும், கோவில் வரை சென்று திரும்பி வந்ததையும் கூறியதும் நட்பாக பேசினார்கள்.


அங்கு இருந்தவர்களில் ஒரு திருநங்கை ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சரளமாகப் பேசினார். மாலினி என்ற பெயர் கூறிய அவர் சேலத்தை சொந்த ஊராகக் கொண்டவர். ஹைதராபாத்தில் கணிணி சார்ந்த பணி புரிவதாகக் கூறிய அவர் கூவாகம் திருவிழா நடைபெறும் பத்து நாட்கள் மட்டும் பெண் உடையில் இருப்பதாகச் சொன்னார். அவர் பணிபுரியும் அலுவலகத்திற்கு தான் ஒரு திருநங்கை என்பது தெரியாது என்றார்.

சமூகத்தின் மீதான அவர்களது பயம், ‘நிர்வாணம்‘ (அறுவை சிகிச்சை) செய்து கொள்வதில் ஆர்வமிருந்தாலும், இருத்தல் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதால் பல நேரங்களில் ‘கோத்தி‘யாகவும், கூவாகம் வந்தால் மட்டும் பெண்ணாகவும் இரட்டை வேட வாழ்க்கை வாழ்வது என பல விஷயங்களைப் பற்றி பேசினார் மாலினி. அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளுக்கு வடிகாலாகவே வருடத்திற்கொருமுறை கூவாகம் வந்து செல்வதாக கூறிய அவர், இந்த சந்தோஷத்திற்கு இணையான சுகம் வேறெதிலும் இல்லை என்றார். ஒவ்வொருவருக்கும் ஒரு அம்மா (அவரும் திருநங்கைதான்) இருக்கிறார்கள். ‘எல்லோரையும் தாய்தான் பிரசவிக்கிறாள், நாங்கள் ‘ரீத்து‘ செய்து எங்களுக்கான தாயையே பிரசவித்துக் கொள்கிறோம்‘ என்றார்.


நெடுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு விடுதியை விட்டு கீழிறங்கி இரவு 7.30 மணிக்கு வந்தோம். அருகிலிருந்த பாருக்கு செல்லலாம் என்று மாலினி கூறியதும், அவருடன் அவரது குருவும் கூட வந்தார். சுமார் 60 வயதிருக்கும் அவருக்கு... ‘பியர்‘ அருந்தியதும், ‘வாழ்க்கையில் பல சுகதுக்கங்களை அனுபவித்திருக்கிறேன். எங்களைப் போல வாழ்வு யாருக்கும் வரக்கூடாது‘ என்றெல்லாம் சுய இரக்கத்துடன் பேசினார்.

தெருவெங்கும் விழாக்கோலமாக இருந்தது. பெரும்பாலான திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். மாலினியிடம் ‘இவ்வாறு உடல் தொடர்புகள் வைத்துக் கொள்வதால் உடல்நலக் கேடுகள்‘ என்றதற்கு... ‘தனியார் தொண்டு நிறுவனங்களும், அரசும் வழங்கும் ஆணுறை மற்றும் ‘ஜெல்‘ போன்றவற்றை பயன்படுத்துவதில் சமீபகாலமாக அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, வேறு வழியில்லாமல்தான் இதைச் செய்கிறார்கள்‘ என்றார். பாலியல் தொழிலே புரியாத பலரும் அங்கிருந்தார்கள்.
பெரும்பான்மை திருநங்கைகள் பெண்கள் என்றே நம்பிவிடக் கூடிய அளவிற்கு அழகுடையவர்களாக இருந்தார்கள். சில சிறுவயதுப் பையன்களையும் அங்கே காண முடிந்தது. இன்னதென்று விவரிக்க முடியாத மன உணர்வுடன், அவர்களிடமிருந்து விடைபெற்றுத் திரும்பினோம்.


திருநங்கைகளுக்காக நாம் இரக்கப்பட்டும், இயல்பூட்டத்துடன் நடந்து கொண்டாலும் இதுவரை அவர்களுக்காக, சிறு பண உதவிகள், அவர்களைப் பற்றி எழுதி நாம் பிரபலமாதல் என்பது தவிர்த்து வேறென்ன நாம் என்ன செய்திருக்கிறோம் ?

‘போடா ஒம்போது‘ என்ற சிறுவனின் வார்த்தையை கேட்ட பிறகு இந்தக் கேள்விதான் என்னைத் துரத்தியது. திருநங்கைகள் பற்றிய தெளிவானதொரு பார்வையாவது ஏற்படுத்தியிருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. நாம் படிக்கிறோம், எழுதுகிறோம், பேசுகிறோம், பரிதாபப் படுகிறோம்... இதையேதான் செய்து கொண்டிருக்கிறோம்.

திருநங்கைகள் பற்றிய திருநங்கையே எழுதிய முதல் புத்தகம் ‘உணர்வும் உருவமும்‘. திருநங்கை ரேவதி தொகுத்து எழுதியது. (அடையாளம் வெளியீடு) (2006). அதன் பிறகு வெளியானது ‘நான் (சரவணன்) வித்யா‘ திருநங்கை ‘லிவிங் ஸ்மைல் வித்யா‘ எழுதியது. (கிழக்கு பதிப்பகம்) (2007). அடுத்ததாக, ‘எஸ்.பாலபாரதி‘ எழுதிய ‘அவன் – அது = அவர்கள்‘ (தோழமை வெளியீடு) (2008)
கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று புத்தகங்கள் திருநங்கைகள் பற்றி வெளிவந்துள்ளது. (நானறிந்த வகையில்)

தாய்லாந்து சென்றிருந்த போது, அங்கு பெரும்பாலான பல்பொருள் அங்காடிகளில் திருநங்கைகளை பணிக்கு வைத்திருந்ததைக் கண்டேன். (அவர்களை அங்கு ‘Ladyboy’ என அழைக்கின்றனர்) இங்கு ஏன் அத்தகையதொரு சூழல் உருவாகவில்லை. நாம் என்னதான் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் மக்களிடையே சரியான புரிதலற்ற சூழலில் நமது செய்கைகள் கேலிக்குறியதாக ஆகிவிடக்கூடாது. திருநங்கைகளும் நம்மில் ஒருவர்தான் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மீதான நமது வக்கிரப் பார்வைகளையும், எள்ளலையும் கைவிட்டு அவர்களுடன் அணுக்கமான சூழலை உருவாக்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் திருநங்கைகளுக்கு தகுந்த பணியிடங்களை அளிக்க முன்வர வேண்டும். இதற்கான ஆரம்பத்தை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அரசு செயல்படுத்தி திருநங்கைகள் வாழ்வை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இப்படிப் பல ‘வேண்டும்‘ இருக்கிறது. அரசு சார்ந்த அங்கீகாரங்கள், சலுகைகள் வழங்கப்படுவதன் வாயிலாக பொதுமக்களிடம் திருநங்கைகளைப் பற்றிய சரியான புரிந்துணர்வு ஏற்படும். ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ‘நடராஜபுரம்‘ என்ற இடத்தில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ‘கண்ணாடி கலைக்குழு‘ என்ற பெயரில் அங்கிருக்கும் திருநங்கைகள் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். மேலும், திருநங்கைகள் என்பதற்காக அவர்களுக்கான கல்வி மறுக்கப்படக்கூடாதெனவும், அத்தகைய நிலை இருப்பது குறித்து கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் குறிப்பிட்ட அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

ஆஷா பாரதி, பிரியா பாபு உள்ளிட்ட திருநங்கைகள் கூட்டாக இணைந்து தமிழ்நாடு அரவாணிகள் சங்கத்தின் சார்பில் தொடுத்த பொதுநல வழக்கின் பலனாக இன்று ‘மூன்றாவது பாலினம்‘ என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இதன் பிரதிபலனாக சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு, வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். திருநங்கைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நிகழ்வில் இது முக்கிய நகர்வு.

ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தின் சோஹாபூர் தொகுதியில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட்டு ‘ஷப்னம் மௌஸி‘ என்ற திருநங்கை 2000-த்தில் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் மத்தியப் பிரதேசம் ‘கட்னி‘ நகரின் மேயராக ‘கம்லா ஜான்‘ தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2002-ல் ‘கருவுறும் தகுதியற்றவர்‘ என்பதால், பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதியில் ‘ஷப்னம் மௌஸி‘யை உயர்நீதி மன்றம் தகுதியிழப்பு செய்துவிட்டது. 2005-ம் ஆண்டில், திருநங்கைகளை என ‘E’ (Enuch) பதிந்து கடவுச்சீட்டு வழங்க மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.

எல்லாம் சரி... நாம் என்ன செய்யப்போகிறோம்.
1.திருநங்கைகள் என்பவர்களும் நம்மில் ஒருவர்தான் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தல்.
2.இயன்றவரை திருநங்கைகளுக்கு பணி வாய்ப்பு வழங்கவும், பணியிலமர்த்தவும் முன்வருதல்.
3.திருநங்கைகளின் கலை, இலக்கிய முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்.
4.குழந்தைகளிடம் திருநங்கைகளை சராசரி மனிதர்களாக பாவிக்க பழக்குதல்.
இதுபோன்ற செயல்கள் மட்டுமே திருநங்கைகளைப் புரிந்துணர்ந்த நமது செய்கைகளை அர்த்தப்படுத்துவதாக அமையும்.

- பொன். வாசுதேவன்

‘உயிரோசை‘ இணைய இதழ் (13.04.2009) வெளியானது.


(Photo Courtesy : Google)

30 comments:

  1. நல்ல கட்டுரை வாசுதேவன் அய்யா. முன்பிருந்ததை விட இப்போது சில மாற்றங்கள் வந்திருக்கிறது. சமூகம் கொஞ்சமாய் அவர்களை அங்கீகரிக்க தொடங்கியிருக்கிறது. சீக்கிரமே முழுவதுமாய் அங்கீகரிக்க தொடங்கிவிடுவார்கள் என்று நம்புவோமாக

    ReplyDelete
  2. ஆக்கப்பூர்வமான,அவசியமான கட்டுரை.
    தகவல்களும், பிரச்னைகளும், தீர்வுகளும் என கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே எழுதிவிட்டீர்கள்.எதாவது அச்சு இதழ்களுக்கோ, அல்லது மின்னிதழ்களுக்கோ(keetru.com) அவசியம் அனுப்புங்கள்.

    திரு நங்கைகளினிடத்தில் சிறுபருவம் முதலே நமக்கு அச்சம்,கேலி என்பதெல்லாம் சமூகம்தான் கற்றுத்தருகிறது. அவ்வாறு கற்றுத்தரும் சமூகம், அவர்களைப் பற்றிய சரியான புரிதலை, அறிவை ஏற்படுத்தியிருக்கிறதா என்றால், அதுதான் இல்லை.ஆனால், கேலியாய்
    மட்டும் சொல்லிக்கொடுத்திருக்கிறது.
    இன்னமும் கூட சமூகம் இவ்விடயத்தில் சரியானப் புரிதலை ஏற்படுத்தாத காரணத்தால், பெரியவர்கள், படித்தவர்கள்கூட, முழுமையான அறிவும் தெளிவும் பெற்றவர்களாக இல்லை என்பது வருத்தமளிப்பது.ஒரே ஆறுதல் இப்போது சமூகத்தின் பார்வை இவர்கள் மேல் கொஞ்சம் அக்கறையோடும், கரிசனத்தோடும் விழத்தொடங்கியிருக்கிறது. அது ஒருவகையில் ஆதாயத்திற்காகக்கூட இருக்கலாம்.அதேபோல், திரு நங்கைகளின் விழிப்புணர்வும், எழுச்சியுமே முக்கியக் காரணம்.இவர்களின்மேலான சமூகத்தில் நிலவும் பார்வையை மாற்றுவதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியம்.பாதகம் செய்துகொண்டிருந்த, கேலியாய் சித்தரித்துக்கொண்டிருந்த ஊடகங்கள் இப்போது கௌரவப்படுத்தத் துவங்கியுள்ளன.
    உங்களின் ஆர்வமான, சமூக அக்கறையுள்ள தேடலின் மூலம் நிறைய தகவல்களை அளித்துள்ளீர்கள்./அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளுக்கு வடிகாலாகவே வருடத்திற்கொருமுறை கூவாகம் வந்து செல்வதாக கூறிய அவர், இந்த சந்தோஷத்திற்கு இணையான சுகம் வேறெதிலும் இல்லை என்றார்./
    இவ்வரிகளின் மூலம் அத்திருவிழாவின் அவசியத்தை நன்கு உணரமுடிகிறது.

    நல்ல பதிவு.பயனுள்ள, சமூக அக்கறையுள்ள,மாற்றம் ஏற்படுத்தவிரும்புகிற பதிவுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. திருநங்கைகளை பற்றி விரிவான கட்டுரை,
    தெருவில் செல்லும் போது அவர்களை பார்க்கையில் ஒரு மாதிரியான மனநிலையே இருக்கும்,
    இக்கட்டுரையில் அவர்களை பற்றி புரிந்து கொள்ளவும், அவர்களின் நிலமையை அறியவும் முடிகின்றது.
    திருநங்கைகளை பற்றி விரிவானதாக எளிமையாக புரிய வைக்கின்றது இக்கட்டுரை.
    நன்றி வாசுதேவன் சார்.

    ReplyDelete
  4. நல்ல விழிப்புணர்வான கட்டுரை...
    பகிர்ந்தமைக்கு நன்றிகள்...

    ReplyDelete
  5. திருநங்கைகள் குறித்த விவாதங்கள் பலவற்றுள் பங்கேற்றிருக்கிறேன். ஆனால் எல்லாமே விவாதங்களாகவும் வெறும் சொற்களின் போராட்டங்களாகவுமே முடிந்துவிட்டது. அவை செயலுக்குள் இறங்கிட முனையவில்லை. சொற்களைச் சொல்லி எந்த பயனுமில்லை.

    ஒருசில திருநங்கையரிடம் மட்டும் பேசியிருக்கிறேன். அவர்களிடம் அவர்களது இருத்தல் குறித்து பேசுவதற்கு கூச்சம் மிஞ்சியிருந்தது. உங்களைப் போன்று நேராக போய் பேசுவதற்கான சூழ்நிலைகளை எனக்கு அமைத்துக் கொடுக்கவுமில்லை, நான் அமைத்துக் கொள்ளவுமில்லை.

    எங்கள் ஊரில் திருநங்கைகளுக்கு கூட்டம் நடத்த எந்த ஒரு கட்டிட உரிமையாளரும் மண்டப உரிமையாளரும் அனுமதிப்பதில்லை. என் நண்பர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்களது சங்கத்து மண்டபத்தில் நடத்த உதவி செய்தார். இதை அவர் என்னிடம் கூறும்பொழுது கோவையில் இரு திருநங்கைகளை சந்தித்தோம். அவர்களில் ஒருவர் குளிர்பானம் குடிக்க வந்த பொழுது எங்களுக்கு அருகே இருந்த ஒரு குழந்தையை அவரது பெற்றோர் தங்களுக்குள் இழுத்து பாதுகாத்தனர். எத்தனை வயதிலேயே திருநங்கைகள் குறித்த அவமரியாதையை விதைக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள நேர்ந்தது.

    இதில் கொடுமை என்னவென்றால், திருநங்கைகள் குறித்து அரசாங்கம் அவ்வளவாக நடவடிக்கை எடுப்பதில்லை என்பதுதான். அவர்களுக்கென்று தனி கழிவறை கூட எங்கும் நான் கண்டதில்லை.

    கூவாகம் போகவேண்டுமென்ற ஆவல் ஒரு சில மாதங்களுக்கு முன் ஏற்பட்டது. தகுந்தவர்கள் கிடைக்கவில்லை. உங்களுக்கே தெரியும். என்னைச் சுற்றியிருக்கும் நண்பர் வட்டம் எண்ணங்களை வகுக்கத் தெரியாமல் திரியும் கூட்டம்... எழுத்துக்கு வந்த பிறகு பெற்ற நண்பர்கள் வெகு தொலைவில் இருக்கிறார்கள்

    -------------------
    விளிம்பு நிலை மனிதர்களைக் குறித்து எழுத்தாகவேனும் பதிக்க முயன்றமைக்கு நான் பெருமைப்பட்டுக்கொண்ட விஷயங்களும் நிகழ்ந்துள்ளன... உங்கள் எழுத்துக்களை வாசிக்கும், திருநங்கை அவநேசர்களுக்கு இப்பதிவு சம்மட்டியாக இருக்கலாம்!!!

    அன்புடன்
    ஆதவா!

    ReplyDelete
  6. நல்ல கட்டுரை வாசுதேவன்!

    நம்மால முடிந்தவரை நம்மைச் சுற்றியுள்ளவங்களுக்கு(பிளாகர் அல்லாத அக்கம்பத்து வீடுகளில், நண்பர்களிடம்) எடுத்துச் சொல்லி ஒரு விழுப்புணர்வை உருவாக்கலாம்!

    நான் என் நண்பர்களிடம் எடுத்து சொல்லி அங்கீகாரமின்மையால் அவர்கள் படும் அல்லல்களை எடுத்துச் சொல்லி பார்வைகளை மாற்றி இருக்கிறேன்!

    ReplyDelete
  7. தேவையான சமூக பார்வை,

    அருமையான கோர்வை.,

    சிறந்த பதிவுக்கு ஒரு ராயல் சல்யூட்..

    வாழ்த்துகள அகநாழிகை.

    ReplyDelete
  8. அருமையான ஆழமான பதிவு..

    ReplyDelete
  9. பதிவை வாசித்தது முடிக்கும்போது எனக்குள் ஒரு வெறுமையை உணர்கிறேன் வாசு.. காரணம்.. திருநங்கைகள் என்றாலே ஒதுங்கி ஓடுபவன் நான்.. எனக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படி.. மும்பை சென்று வந்து கொண்டிருந்தபோது ரயிலில் எனக்கு நேர்ந்தது அது.. ஒரு திருநங்கை எல்லாரையும் கிண்டல் செய்தவாறே யாசகம் வாங்கிக் கொண்டிருந்தார்.. எனக்கு அடுத்த கூபெவில் இருந்த மனிதர் ஒருவர் பணம் தர முடியாது என்று விட்டார்.. உடனே அந்தத் திருநங்கை சட்டென்று தான் அணிந்திருந்த உடையைத் தூக்கி தனது பிறப்புறுப்பைக் காட்டி அந்த மனிதரைத் திட்டத் தொடங்கினார். கோபம் கொண்ட அந்த மனிதர் சட்டென்று எழுந்து திருநங்கையை அடி பின்னி விட்டார். அதிர்ச்சியுடன் அந்த திருநங்கை அங்கிருந்து அகன்று விட்டார். அடுத்த ஸ்டேஷனில் எங்கிருந்தோ வந்த திருநங்கைகள் கூட்டம் ஒன்று அந்த மனிதரைப் போட்டு பாடாய்ப் படுத்தி விட்டார்கள்.. கடைசியில் அவர் மன்னிப்பு கேட்டபின்தான் விட்டனர்.. அத்தோடு பணமும் பிடுங்கிக் கொண்டார்கள்.. அந்த நாள் முதல் எனக்கு திருநங்கைகள் என்றாலே பயம்.. சின்ன வயது முதல் கேலிக்கு உரியவர்களாக இருந்தவர்கள் இப்போது பயத்தை தரக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.. அவர்களின் இந்த நிலைக்கு கண்டிப்பாக சமூகம்தான் காரணம்.. அவர்களுக்கு இருக்கும் மறுபக்கத்தை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.. எந்த சூழ்நிலையில் அவர்கள் இப்படிப்பட்ட வாழ்வைத் தேர்ந்து எடுக்கிறார்கள்?அங்கீகாரத்தை தராமல் அவர்களைத் துரத்துவது யார்? பல கேள்விகளை உங்கள் பதிவு முன்வைக்கிறது...அதற்கான பதிலும் உங்கள் பதிவிலேயே இருக்கிறது.. நல்ல அனுபவப் பகிர்வு.. சிறப்பான ஆய்வும் கூட.. நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. நல்ல விழிப்புணர்வான கட்டுரை...
    பகிர்ந்தமைக்கு நன்றிகள்...

    ReplyDelete
  11. நன்றாக இருக்கிறது அண்ணா..

    அருமையான பதிவு

    ReplyDelete
  12. திருநங்கைகள் பற்றிய தங்களது விரிவான கட்டுரை நல்ல பதிவு. அவர்களுக்காக பல நல்ல திட்டக்களை அரசு செய்துவருவதை அறிந்து கொண்டாலும், இன்னும் சிலர் கடைவீதிகளில் அநாகரீகமான முறையில் காசு பறிப்பதை நான் கண்கூடாக சைதாப்பேட்டையில் பார்த்தேன். கடைகளில் காசு கேட்டபது, தரமறுத்தால் அணிந்திருக்கும் உடையை.... காட்டி கடைக்காரரையும், வாடிக்கையாளர்களையும் அறுவருப்படையச் செய்வது... இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் அவர்களுக்கான முன்னேற்ற பாதையில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால் அவர்களையும் உலகம் மதிக்கத்தொடங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. முத்தவேல் சொன்னமாதிரி இதழ்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

    ReplyDelete
  13. ஆக்கப்பூர்வமான,அவசியமான கட்டுரை...


    Xlent Post..

    Need of the Hour...

    Thanx Vasu.

    ReplyDelete
  14. திருநங்கைகள் பற்றிய ஆழமான ,விரிவான கட்டுரை..அவர்களும் நம்மில் சகபாலரே என்பதில் எந்த வித ஐயமுமில்லை...எந்த ஒரு விவாதப்பொருளுக்கும் வினாவை மட்டும் எழுப்பாமல்,கடைசி நான்கு வரிகளில் அதற்கு விடையையும் பகிர்ந்தமை வரவேற்க்க தக்க ஒன்று..
    இப்பதிவு,பலரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
    நிறைவான பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. நல்ல சிந்திக்க வைக்க கூடிய பதிவு

    ReplyDelete
  16. மீள் பதிவா இருக்கு.. படித்துவிட்டு வருகின்றேன்

    ReplyDelete
  17. நண்பரே திருநங்கை பற்றிய நல்லதொரு பதிவு.. எனக்கும் இவர்களை பற்றிய பயம் உண்டு. அவர்களை பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று ஒத்துக்கொள்கின்றேன்.. பெரும்பாலும் திருநங்கைகள் பாலியல் தொழிளாலியாக இருப்பதும் ஒரு காரணம். சிங்கபூரில் இவர்களை boygirl என்று சொல்லுவார்கள்

    விஜய் தொலைக்காட்சில் வரும் நிகழ்ச்சி "இப்படிக்கு ரோஸ்" மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு கொடுக்கின்றது என்று நினைக்கின்றேன்... இருந்தாலும் ஒன்பது என்று சொல்வதற்கு பதிலாக தற்பொழுது இப்படிக்கு ரோஸ் என்று சொல்லுவதையும் பார்த்டிருக்கின்றேன்..

    மேலும் எனக்கு புரியாத கேள்வி????
    திருநங்கைகள் உருவகுதது இயற்கையாகவா? இல்லை சுழ்நிலைக் காரணமாகவா? இல்லை விரும்பி ஏற்றுக்கொள்ளப்படிகின்றதா?... இவர்களை குணப்படுத்த முடியுமா?

    ஆழ்ந்த பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  18. விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரை.. எனக்கு தெரிந்து டெய்லி நான் பஸ்ஸில் பயனம் செய்யும் போது 2 திரு நங்கைகள் வேலைக்கு செல்கிறார்கள்... சமூகத்தில் அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக மதிக்கப்படுகிறார்கள்.. முழுமையாக மதிக்கப்படுவார்கள் என நம்புவோம்.. பயணுள்ள கட்டுரை வாழ்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  19. /////திருநங்கைகள் உருவகுதது இயற்கையாகவா? இல்லை சுழ்நிலைக் காரணமாகவா? இல்லை விரும்பி ஏற்றுக்கொள்ளப்படிகின்றதா?.../////

    மூன்றும்தான்...... !!!!???

    இயற்கை அவர்களை (கோத்தி) திருநங்கைகளாக மாற்றுகிறது.. சூழ்நிலை அவர்களை முழும் திருநங்கைகளாக (நிர்வாணம்) மாற்றிவிடுகிறது..

    விரும்பியோ விரும்பாமலோ இந்நிலை ஏற்றுக் கொள்ளப்படுகிறது

    ReplyDelete
  20. மிக நல்ல பதிவு வாசு சார்...

    விழுப்புரத்தில் பணி நிமித்தம் தங்கியிருந்த நாட்களில் கூவாகம் நிகழ்ச்சியை காண மிக ஆவலாய் இருந்தேன்.என் துரதிர்ஷ்டம் திருவிழாவிற்கு முன்பே என்னை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டார்கள்...

    ஆச்சர்யமளிக்கிறது உங்கள் Curiousity...

    ReplyDelete
  21. மிக பொறுப்புணர்வோடு எழுதி இருக்கிறீர்கள் வாசு.உங்கள் கருத்துக்குத் தலை வணங்குகிறேன்.

    ReplyDelete
  22. அவர்களுக்கு இருந்த புனைபெயர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து திரு நங்கைகள் என்ற பெயர் மாற்றமே ஒரு பெரிய மாற்றம் தான்...கொஞ்ச கொஞ்சமாய் மனிதர்களை மனிதர்களாக
    சுவாசிக்க தொடங்கியுள்ளோம்...பயனுள்ள இந்த பதிவு பலர் பார்வை பட கொண்டு போனால் மேலும் பயனாய் இருக்கும்.... நன்னுறைக்கு நன்றிகள்

    ReplyDelete
  23. வெளிநாடுகளில் பரவலாக திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு இருக்கிறது!

    நமது நாட்டில் கல்விக்கே வழியில்லையாம்! எங்கிருந்து வேலை
    பின் ஏன் பாலியல் தொழிலுக்கு போக மாட்டார்கள்!

    ReplyDelete
  24. அருமையான பதிவுங்கோ தம்பி...!!! நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்துற பதிவா இருக்குமுன்னு நம்புறேனுங்கோ தம்பி.....!!!


    வாழ்த்துக்கள்........

    ReplyDelete
  25. நன்றி...
    பிரேம்குமார்
    ச.முத்துவேல்
    ஆ.முத்துராமலிங்கம்
    வேத்தியன்
    ஆதவா
    நாமக்கல் சிபி
    சரண்
    அப்பாவி முரு
    கேபிள் சங்கர்
    சுரேஷ்
    கார்த்திகைப்பாண்டியன்
    அன்பு
    குடந்தை அன்புமணி
    வண்ணத்துப்பூச்சியார்
    ராஜேஸ்வரி
    காவேரிகணேஷ்
    ஆ.ஞானசேகரன்
    தர்ஷினி
    ரௌத்ரன்
    மணிமேகலா
    தமிழரசி
    வால்பையன்
    லவ்டேல் மேடி

    கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து தொய்வின்றி எழுதும் ஊக்கத்தினை உங்களின் பின்மொழிகள் வாயிலாக உணர்கிறேன். நேரமின்மை காரணமாக தனித்தனியே பதில் சொல்ல இயலவில்லை.

    - பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  26. இந்த கட்டுரையை படிட்த பொழுது என் பள்ளிக்கூட நாட்கள் நியபகத்திற்கு வந்தது. என் சக மாணவன் மிகுந்த பெண்மை தன்மை யோடு இருப்பான். அவனை மற்றவற்கள் கிண்டலும் கேலியும் செய்வார்கள். ஆனால் அவனுக்கு நல்ல குரல் வழமும் நட்டியத்தில் நல்ல அனுபவமும் இருந்தது. பள்ளி ஆண்டு விழாக்களில் அவனுடய பரதம் இல்லாமல் இருந்தது கிடையாது. மூன்று வருடங்கலுக்கு முன் திருக்சி சிங்க்காரதோப்பில் பர்தென் பீ.ஈ முடித்து விட்டதாக சொன்னான். இந்த கட்டுரையை படித்த உடன் அவன் நினைவு வந்துவிட்டடு. நல்ல கட்டுரை.

    ReplyDelete
  27. கட்டுரை மிக அற்புதமாக தொகுக்கபட்டிருக்கிறது நண்பா!

    சொல்ல வந்த விஷயங்கள் மிகத்தெளிவாக சொல்லபட்டிருக்கிறது.

    நிஜம்தான்! இவ்வகை மனிதர்களின் துயரங்கள் எழுத்துக்களில் வெளிவந்தவைகள் மிக சொற்பமாகத்தான் இருக்கமுடியும். அவர்கள் மனதில் ஆறாத்துயரம் நிறையவே இருக்கும்! அவர்களுக்கு இக்கட்டுரை ஒரு சமர்ப்பணமே!

    தொடரட்டும் பார்வைகள்!

    ReplyDelete
  28. நெடும் காலம் என் நினைவில் இருக்கும் இக்கட்டுரை!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname