Tuesday, March 12, 2013

கண்ணாடி




சொற்கள் அழிந்து அம்மணமாய்க் கிடந்த
இளமிரவுப் பொழுதில்
சலனமேதுமற்று வந்து நின்றிருக்கிறது மொழி

உச்சமுற்றுப் புரண்டிருந்த சொற்களை
கருச்சுழலும் சிசுவாய்க் குழைந்து
யாசித்துத் துடிக்கிறது மொழி

எதிர்பாரா தருணத்தில்
மலர்ந்து கசிந்த யோனியின் வலியென
மறுதலித்து உதறிச் செல்கின்றன சொற்கள்

சமனில்லா மனதின் முன்
விழித்திருக்கின்றன
சொற்களும் மொழியும்

ரசிக்க ஆளற்றுப் பூத்திருக்கும்
வயலட் நிற எருக்கம் மலர்களின் மேல்
ஆறுதலாய்ப் பொழிகிறது முதிராத பனி.


பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname