Wednesday, February 23, 2011

புகை யுகம்




கையில் வைத்திருந்த
எரிந்து கொண்டிருக்கும் வெண் சுருட்டை
வடிகட்டிப் பொருத்தி தரையில் படும்படியாக
நெடுக்கு வாக்கில் சுவரில் வைத்தான்

வெண்சுருட்டின் வாய்
நெருப்பினோடு புகைந்தபடியிருந்தது
புகை எழுதலில் மங்கிப்போன அறை
அவனுக்கு ஒரு மாயச் சித்திரத்தைத் தந்தது

அச்சித்திரத்தின் உருவங்களுக்கு
வணக்கம் கூறியபடியே அவற்றோடு நட்பு பாராட்டினான்
இது மிகவும் முக்கியமானது என்று தோன்றுகிறது
வணங்குதலில் இருந்துதான் வாழ்க்கை கழிகிறது

தெளிவற்ற சித்திரங்களின் மனவறைக்குள்
பிரவேசிக்க அவனுக்கு சிறு தயக்கம் இருந்தது

காற்றின் வீச்சு இல்லாத அமைதியான அறை
அவனுக்கு சாதகமாயிருந்தது
குழைந்தபடியிருந்த புகைச் சித்திரங்களுடன்
மெல்ல உரையாடத் துவங்கினான்

பரிச்சயமில்லாத ஒரு இருட்பிரகாசத்திற்கு
அவனை அவை அழைத்துச் சென்றன
அவ்வுலகம் அவனைச் சுண்டியிழுக்கும்
கவர்ச்சி கொண்டதாய் இருந்தது
அதில் அவன் தன்னையிழந்தான்
அவனது பாவங்களுக்கான மன்னிப்பை
அங்கே கண்டடைந்ததான்

ஒற்றைப்புள்ளியாய் நெருப்பு
உற்றுப்பார்த்தபடியிருந்தது அவனை

முட்டாள்தனமானதும்
கட்டுப்பாடற்றதுமான வெறித்தனத்தோடு
மங்கலான தெளிவற்ற முகங்கொண்ட
அச்சித்திர உருவங்களோடு
வாழ்க்கை முழுதும் கழிக்க விரும்பினான்

உருவமற்ற கனத்த தன்னுடலைக் கொண்டு
சன்னல் வழியாக உள் நுழைகிறது காற்று
சன்னலோரத்தில் வெளியேறத் தொடங்கின
புகைச் சித்திர உருவங்கள்

அறை தெளிகிறது
எரிந்து முடிந்து சாம்பலாகியிருந்தது வெண் சுருட்டு.
அவன் உறங்கிப்போயிருந்தான்.
*


பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname