Friday, April 23, 2010

உயிர்ப்பூ



ஏழாவது முறையாக நீங்கள் காதலிக்கத்
தொடங்குகிறீர்கள்

கடந்த முறைகளில் உங்கள் காதலின்
இறுதி ஊர்வலம் சிறப்பாகவே நடந்திருக்கிறது
இது ஒன்றும் புதிதல்ல
சக மனிதர்களுக்கும் நடப்பதுதான்

அங்க அசைவுகளில் லயிப்பதில்லை
மனசின் ஆழம்தான் எப்போதும் உங்களை
உள்ளிழுத்துக் கொண்டேயிருக்கிறது

சிறு நீரைத் தேக்கியிருக்கிற கிணறுகளில்
அதற்காகவே விழுந்து தடுமாறி எழுகிறீர்கள்

நொடிக்கொருமுறை காட்சியொடிக்கும்
இமை மூடி திறந்து விழிக்குஞ்சுகளில்
பிரியம் தளும்ப பேசுகிறீர்கள்

பிரபஞ்ச கண்டமாய் குரலில் ஆவல் மிதக்க
ஆகாச கங்கையாய்ப் பொழிகிறீர்கள்

மௌனத்தைப்பூசியபடி
பேச வார்த்தைளற்றுப் போகிறது
உங்களுக்கு ஒரு நேரத்தில்

பாசாங்கின் நுனியைக்
கையிலெடுத்துக் கொள்கிறீர்கள்
வெற்று வார்த்தைகள்
வறண்ட பிரியங்கள்
வேலைகளால் நிறைகிறது
உங்கள் வாழ்க்கை

தேங்கிய நீரில்
தன்னைப் பருக முயற்சித்து
இயலாமல் சலித்துக் கொண்டிருக்கும்
சிறு குருவியாய் திரிகிற உங்களை
அதீத யோசனையுடன்
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது காதல்.

- பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname