Friday, September 9, 2011

நான் இறந்திருக்கிறேன்



வானமும் மேகமும் ஒன்றையொன்று 
அணைத்தபடியிருந்த
மழைக்கால காலை அன்றுதான் 
நான் இறந்திருந்தேன்

உறக்கத்திலாழ்ந்திருப்பது போலிருப்பதாக
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்

இரவுக்குளம் போல 
சலனமற்றிருக்கிறதாம் என் முகம்

யாரையெல்லாம் அழ வைத்தேனோ
அவர்களெல்லாம் அழுது கொண்டிருந்தார்கள்

அழுதழுது ஈரம் வறண்ட சில கண்கள்
வருவோர் போவோரைப் பார்த்தபடியிருக்கின்றன

பதட்டமேதுமின்றி 
பேசிய பேசாத கணங்கள் குறித்து
நினைவுகளைக் கீறியபடி
நின்றிருந்தனர் நண்பர்கள்

விழி தேயப் பார்த்தும்
மொழி சிணுங்கக் கொஞ்சியும்
உடல் மலர பிணைந்தும் 
மையல் கொண்ட காதலிகள்
வந்திருந்தும் வராமலிருந்தும்
வருந்திக் கொண்டிருக்கிறார்கள்

எதிர்பார்த்தது என்றும்
எதிர்பாராதது என்றும்
திணறித்திணறி கள்ளமாய்க் கசிகிறது பேச்சு

அறைக்குள்ளிருந்து என் நினைவுகள் குறித்து
பற்றிய கொடி பறிக்கப்படுகிற வலியோடு
புழுங்கிக் கொண்டிருக்கின்றன புத்தகங்கள்

நான் ரசிக்காமலே
அதிர்ந்து கொண்டிருக்கிறது பறை

ஓய்ந்து கிடக்கிறேன் நான்.


பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname