Monday, October 22, 2012

கண் போன போக்கு - நிச்சித்தம்


எனக்கு தூக்கம் என்பது 5 மணி நேரம் போதுமானதாக இருக்கிறது. போதுமானதாக என்பதைவிட தூங்க முடியாமல் எதையாவது யோசித்துக் கொண்டிருக்கிற வழக்கம் உண்டு. இது நோய்மையான மனநிலையாகக்கூட இருக்கலாம். எப்போதும் இரவு படுத்தால் தூங்க ஒரு மணியாவது ஆகும். மேலும் உறக்கத்திலிருந்து விழித்து விட்டால் என்னால் மறுபடி சீக்கிரத்தில் தூங்க முடியாது. ஆனால் காலையில் ஐந்து மணிக்கு விழிப்பு வந்து விடும். தூங்க முடியாத இந்த நேரங்களில் நான் புத்தகம் படிப்பது பல வருட வழக்கம்.

கடந்த சில வருடங்களாகவே Buzz, Google Plus & Facebook என வந்த பிறகு படிப்பதைவிட இது மாதிரியான சமூக இணைய தளங்களில் ஈடுபாடு அதிகமாகி, நான் படிப்பதை விட, அந்தந்த நேரத்து மனநிலைக்கேற்ப அபத்தமாக எழுதுவது, என்ன பகிர்ந்து இருக்கிறார்கள் என்பதை பார்க்கிற பழக்கம் தொற்றிக் கொண்டது. இது ஒரு மாதிரியான Voyeurism மனநிலை போலதான் உள்ளக் கிளர்ச்சி தருகிற விஷயமாக உள்ளது.

ஏழாம் வகுப்பு படிக்கின்ற போதுதான் புத்தகங்களை படிக்கிற பழக்கம் தொற்றிக் கொண்டது. அதன் பிறகு அதுவே போதையாகிப் போனது கல்லூரி நாட்களில்.. எப்போதும் புத்தகமும் கையுமாக என வெறித்தனமான வாசிப்பு... 25 வருடங்கள்.. எத்தனையோ மாற்றங்கள்.. எவ்வளோ பழக்கங்கள் நிறுத்தியிருக்கிறேன். ஆரம்பித்திருக்கிறேன். படிக்கிறதை மட்டும் நிறுத்தவே முடியவில்லை. இன்றும் என்னை ஆசுவாசப்படுத்துவது படிக்கிறதும், பாடல் கேட்பதும்தான். சமீப காலமாக திருவண்ணமலை.

எதையோ சொல்ல வந்து எதையோ விரல் போன போக்கில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். உண்மையில், இந்த நிலைத் தகவலை எழுத ஆரம்பித்த போது நான் சொல்ல வந்தது சமூக இணைய தள புழங்குதலை குறைத்துக் கொண்டு படிக்க அதிக நேரம் ஒதுக்கப் போகிறேன் என்று கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சொல்லியிருந்தேன். அதுபோலவே இருந்ததில் நிறைய படிக்க முடிந்தது. வாசிப்பில் வழக்கம்போலவே இன்னும் எனக்கு  பற்றுதல் இருக்கிறதை உணர முடிந்தது.

கடந்த மாதத்தில் படித்த சில புத்தகங்களைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.  புத்தகத்தைப் பற்றிய கருத்துகள் ஒவ்வொன்றாக தனித்தனியே பிறகு பகிர்கிறேன். சில புத்தகங்கள் எனது மீள் வாசிப்புக்கு உள்ளானவை. இதைப் பகிர்வது பரிந்துரை செய்வதற்காகவோ, என் மேதாவித்தனத்தை  பகிர்வதற்காகவோ இல்லை. மிக அமைதியான மனநிலையில், என்னை வைத்திருந்த இந்த புத்தகங்களைப் பற்றி உலகிற்கு அறிவிக்கிறேன். இந்த படைப்புகளை எழுதியவர்களுக்கு நான் செய்கிற சிறிய நன்றியளித்தல் இது என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

1. சாம்பல் நிற தேவதை (சிறுகதைகள்) - ஜி.முருகன்
2. தூக்கிலிடுபவரின் குறிப்புகள் (நாவல்) - சசி வாரியர் (தமிழில் - பெ.முருகவேள்)
3. வாஸவேச்வரம் (நாவல்) - கிருத்திகா
4. ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் (சிறுகதைகள்) - தோப்பில் முஹமது மீரான்
5. ஒரு பிற்பகல் மரணம் (சிறுகதைகள்) - வாமு கோமு
6. கால சர்ப்பம் (நாவல்) - ஸ்டெல்லா புருஸ்
7. உப்பு (கவிதைகள்) - ரமேஷ் - பிரேம்
8. கடவு (சிறுகதைகள்) - திலிப்குமார்
9. பிறகொரு இரவு (குறுநாவல்கள்) - தேவிபாரதி
10. அழைப்பு (சிறுகதைகள்) - சுந்தர ராமசாமி
11. அவரவர் வழி (சிறுகதைகள்) - சுரேஷ் குமார இந்திரஜித்
12. யாரும் யாருடனும் இல்லை (நாவல்) - உமா மகேஸ்வரி
13. அன்டன் செகாவ் சிறுகதைகள் (தமிழில் - எம்எஸ்)
14. மதுக்குவளை மலர் (கவிதைகள்) - வே.பாபு
15. குருதியில் படிந்த மானுடம் (கட்டுரைகள்) - விஸ்வாமித்திரன்
16. ஈட்டி (சிறுகதைகள்) - குமார் அம்பாயிரம்
17. அப்பனின் கைகளால் அடிப்பவன் (கவிதைகள்) - அதியன்
18. கடல் நினைவு (கவிதைகள்) - தூரன் குணா
19. கைவல்ய நவநீதம் (பாடல்கள்) - தாண்டவராய சுவாமிகள்
20. அருணாசல புராணம் (பாடல்கள்) - சைவ எல்லப்ப நாவலர்
21. திகம்பரம் (கட்டுரைகள்) - நாஞ்சில் நாடன்

இன்னும்..



பொன்.வாசுதேவன்

1 comment:

  1. உப்பு (கவிதைகள்) - ரமேஷ் - பிரேம் மட்டுமே நான் படித்திருக்கிறேன் ... பல கவிதைகள் பிடித்திருந்தன ... வாசிக்க என்று முடிவெடுத்து நேரம் ஒதுக்கி இப்படிப் படித்து தள்ள வேண்டும் என ஆசையாக இருக்கிறது ...

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname