Tuesday, June 15, 2010

சங்கர் நாராயண் (கேபிள் சங்கர்) எழுதிய ‘சினிமா வியாபாரம்‘ - ஒரு பார்வை



காட்சி ஊடகங்களில் முதலிடம் வகிப்பது திரைப்படம். திரைப்படம் என்பது தனிப்பட்ட முயற்சி அல்ல என்பது நமக்குத் தெரியும். தனிப்பட்ட முயற்சி அல்ல என்பதோடு திரைப்படங்களோடு நேரடியாக, மறைமுகமாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ள துறைகள் பல. 

பெரிய முதலீட்டிலோ அல்லது அதிகம் அறியப்பட்ட நடிகர்களுடனோ, சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்போ இல்லாமல் வெற்றி பெற்றிருக்கும் படங்களையும் நாம் காண்கிறோம். 

எப்படி இது நிகழ்கிறது?. பல கலையம்சங்களையும் ஒருங்கிணைத்து கோடிக்கணக்கான முதலீடுகள் செய்தும் ஏற்படுத்திவிடாத வெற்றியை எது சாத்தியப்படுத்துகிறது?

திரைப்படம் என்ற துறையை முழுமையாக புரிந்து கொள்வதற்கும், அதன் வெற்றிக்கான நதி மூலம், ரிஷி மூலம் குறித்த சரியானதொரு புரிதலுக்கும் எந்த படிப்புகளும் கிடையாது. இதை சரியாகப் புரிந்துணர அனுபவம் ஒன்றே சிறந்த பாடம்.

திரைப்படத்தின் வெற்றிக்கான அடிப்படைகளை அறிந்து கொள்ள அந்த துறை சார்ந்த அறிவை பெற்றிருப்பது கட்டாயம். மேலும் திரைப்படம் என்பது ஒரு பெரிய வியாபாரத்துறையாகவும் ஆகிவிட்ட காரணத்தால் மிகக்கவனத்தோடு இதில் ஈடுபடுவது அவசியம். 

கயிற்றின் மேல் கம்பு வைத்துக் கொண்டு நடப்பது போல வெற்றி தோல்வியின் இரு நுனிகளை சமன்படுத்தி வித்தை செய்கிற திறமை குறித்துதான் சங்கர் நாராயண் என்கிற கேபிள் சங்கர் எழுதியிருக்கிற சினிமா வியாபாரம் என்ற இந்த புத்தகம் விரிவாக விளக்குகிறது.

அனுபவத்தின் வாயிலாக மட்டுமே அறியக்கூடிய பல தகவல்களையும், பல புதிய விஷயங்களையும் உள்ளடக்கியதாக வெளி வந்திருக்கின்ற இந்தப் புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

திரைப்படம் என்கிற ராட்சசத்தனமான ஊடகத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவர்கள் யார்? என்கிற கேள்விக்கு திரைப்படத்துறை சார்ந்த பல தெளிவுகளை ஏற்படுத்தி விடையளிக்க முயன்றிருக்கிறது இந்தப் புத்தகம். 

திரைப்படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் எந்த அளவிற்கு வினியோகஸ்தர்கள் பங்கு இருக்கிறது? ஒரு திரைப்படத்தை வெற்றிகரமாக ஆக்குவதிலும், பெட்டிக்குள் முடங்கிப் போவதையும் தீர்மானிப்பவர்களாக வினியோகஸ்தர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என விளக்குகிறது. கோடி கோடியாக பணம் புழங்கும் திரைத்துறையின் முதுகெலும்பாக செயல்படுகிற வினியோகஸ்தர்கள், ஒரு திரைப்படத்தை வெற்றிப்படமாக்குவதில் வலுவாக செயல்படுகின்றனர். 

திரைப்படத்தை உருவாக்குவதில் உள்ள அத்தனை சவால்களையும்விட அதை வாங்குவது, வெளியிடுவது, ஒப்பந்தங்கள் உருவாக்குவது என வினியோகஸ்தர்கள் கைக்கொள்கிற தொழில் உத்திகள்தான் படத்தின் வெற்றி தோல்வியை உறுதி செய்கிறது. 

கலை வடிவமோ அல்லது வியாபார வடிவமோ எப்படியென்றாலும் வினியோகம் என்ற திரைத்தொழில் சூட்சுமங்களைப் பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே அந்தப்படம் மக்களைச் சென்றடைகிறது. அதே போல ஒரு திரைப்படம் தயாரிப்பாளருக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் வருமானம் ஈட்டித்தருகிறது என்பது பற்றியும் திரைப்பட வியாபாரம் குறித்த இந்த புத்தகம் விரிவாகப் பேசுகிறது.

ஒருவருடைய அனுபவமே வாழ்க்கையின் பாடமாக இருக்கும் என்பதற்கு இந்த புத்தகம் உதாரணமாக இருக்கிறது. தனக்கென்று ஒரு தனித்துவத்துடன் முழுக்க முழுக்க திரைப்பட வியாபாரம் குறித்து மட்டுமே பேசுகின்ற இந்த புத்தகத்தை எழுதுவதற்கு சங்கர் நாராயண் அவர்களின் அனுபவம் முழுக்க முழுக்க உதவியிருக்கிறது. நேரடியாக நம்மோடு பேசுகின்ற எழுத்து நடையில் வாசிப்பதற்கு சிரமமின்றி, வறட்சியான கருத்துகள் இன்றி சொல்ல வந்ததை சுவாரசியமாகவும், தெளிவாகவும் அதேசமயம் எளிதாகவும் கூறியிருப்பதே இந்த புத்தகத்தின் பலம் எனலாம்.

நடிகராக, எழுத்தாளராக, குறும்பட இயக்குநராக, வினியோகஸ்தராக திரையுலகுடன் நெடுநாள் தொடர்பு உள்ள சங்கர் நாராயண் (கேபிள் சங்கர்) திரைப்பட வியாபாரம் குறித்த தனது அனுபவப் பதிவுகளை மிகையின்றி இயல்பாக கூறிச் செல்வதே சினிமா வியாபாரம் என்கிற இப்புத்தகத்தின் வெற்றியையும் உறுதி செய்து விடுகிறது. விரைவில் திரைப்பட இயக்குநராகவும் பரிணாமம் கொள்ள இருக்கிற கேபிள் சங்கரின் வெற்றிப்பாதையில் இந்தப்புத்தகம் ஒரு மைல் கல்.


- பொன்.வாசுதேவன்


..............................................................................................


புத்தகம் : சினிமா வியாபாரம்


ஆசிரியர் : சங்கர் நாராயண் (கேபிள் சங்கர்)


வெளியீடு : கிழக்கு பதிப்பகம்


விலை : ரூ.70/-


..............................................................................................


புத்தகத்தை ஆன் லைனில் வாங்க... http://nhm.in/shop/978-81-8493-417-5.html


10 comments:

  1. நன்றி வாசு.. கேபிள் சங்கர்

    ReplyDelete
  2. சிரமப்பட்டு படம் எடுத்துவிட்டு வியாபாரம் ஆகாமல் ரோட்டுக்கு வந்தவர்கள் அதிகம் ..
    இந்தப் புத்தகம் கையில் வைத்துக் கொண்டு சினிமா எடுத்தால் ஜெயிப்பது நிச்சயம் ..

    ReplyDelete
  3. புத்தகம் வெளி வந்துடுச்சா? வெளியீட்டு விழா ஏதும் நடக்கலையா? பகிர்வுக்கு நன்றி வாசு

    ReplyDelete
  4. வாழ்த்த வயதில்லை இருப்பினும் congrats கேபிள் அங்கிள் :)

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி வாசு சார்.

    கேபிள் அண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. புத்தகத்தை படிக்கவிலை இருப்பீனும் நல்ல கதை ,சமூக விழிப்புணர்வு படங்கள் நிச்சயம் வெற்றி பெறும்

    ReplyDelete
  7. கேபிளுக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. கேபிளுக்கு வாழ்த்துகள்!

    நன்றி வாசு

    ReplyDelete
  9. Right வாங்கிடுவோம்

    ReplyDelete
  10. பப்ளிஷர் யூ ஆர் கிரேட்.. நல்ல பகிர்வு.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname