Thursday, November 8, 2012

சுதந்திரம் - ஆத்மாநாம் கவிதைகள்

சுதந்திரம் 

எனது சுதந்திரம்
அரசாலோ தனி நபராலோ
பறிக்கப்படு மெனில்
அது என் சுதந்திரம் இல்லை
அவர்களின் சுதந்திரம்தான்
உனக்கொரு அறை
உனக்கொரு கட்டிலுண்டு
உனக்கொரு மேஜையுண்டு
உனக்குள்ளே ஒரே உரிமை
சிந்திப்பது மட்டும்தான்
மலைகளைப் பார்
மரங்களைப் பார்
பூச்செடிகளைப் பார்
ஜீவநதிகளைப் பார்
பரந்த கடலைப் பார்
இதமூட்டும்
கடற்கரையைப் பார்
எவ்வளவு இல்லை நீ பார்க்க
ஏன் அக்கசடர்களைக் குறித்து
வருந்துகிறாய்
குமுறுகிறாய்
எழுத்துக் கூட்டங்களைச் சேர்க்கிறாய்
உன் வேலை
உன் உணவு
உன் வேலைக்கு போய்வரச் சுதந்திரம்
இவற்றுக்கு மேல்
வேறென்ன வேண்டும்
சாப்பிடு தூங்கு மலங்கழி
வேலைக்குப் போ
உன் மீது ஆசை இருந்தால்
குறுக்கிடாதே.


எதாவது செய்

எதாவது செய் எதாவது செய்
உன் சகோதரன் பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்.
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்றுச் செய்யத் தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும் வீரியமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்.........."




3 comments:

  1. வாசு,
    அருமையான கவிதைகளைப் பகிர்ந்ததற்கு நன்றி.

    ஒரு பதிப்பாளராக இருந்தும் நீங்கள் கூட ஆத்மநாமின் பெயரைத் தவறாக எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்க வில்லை. :))

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள பதிவு

    ReplyDelete
  3. முரண்பட்ட சிந்தனை வரிகள் அருமை.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname