Tuesday, January 10, 2012

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை - ஒரு பார்வை - ராமலஷ்மி


பொன். வாசுதேவனின் “ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை” - ஒரு பார்வை - ராமலஷ்மி

கவிதைகளைப் பிரசுரித்த இதழ்களின் பட்டியலே அவற்றின் சிறப்புக்கு அணிந்துரையாக மிளிர, கவிஞரின் நெடிய இலக்கிய பயணத்தை எண்பத்து ஏழு கவிதைகளுக்குள் அடக்கிக் கொண்டதாக “ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை”. பாசாங்குகளற்ற நேர்மையான மென்மையான உணர்வுகளால் நிரம்பியிருக்கிறது. வாழ்வின் மீதான அவதானிப்புகளை அழகுற வெளிப்படுத்தும் கவிதைகளுக்கு மத்தியில் அன்பைத் தேடுவனவாகவும் பிரியங்களைப் போற்றுவனவாகவும் இருக்கின்றன பல.

எத்தனையோ விதமான தேடல்கள் நிரம்பிய உலகில் தேடிக் கிடைத்த எவற்றாலும் மகிழ்ச்சியுறாத மனிதமனம் அன்பு ஒன்றினால் மட்டுமே மனநிறைவு காண்கிறது. ஊற்றெடுக்கும் சுனைநீர் எதன் பொருட்டும் தன் வேகத்தைக் குறைத்துக் கொள்வதில்லை. மனதிலிருந்து பீறிடும் பிரியங்கள் அதற்கான காரண காரியங்களை ஆராய்வதில்லை. எதற்கும் கட்டுப்படாது சுரக்கின்ற அதன்வேகம் பதிலுக்குப் பெறபடும் அன்புக்கு மட்டுமே அடங்குகிறது.

தொடங்கியிருக்கிறோம்’ கவிதையில்..,
“...எனக்குள் பூத்த ஆண்டாளைப்
பறித்தெடுத்து சூடிக்கொள்கிறேன்
எதற்கெனத் தெரியாமல்.”

‘கொடுக்கல் வாங்கல்’ எனும் ஒரு கோட்டில் பயணிக்கும் உலகில் இந்தக் கோட்பாட்டை உடைத்து, விதிவிலக்காக நிபந்தனைகளற்று இருந்தால் மட்டுமே அன்பு அன்பாக இருக்கமுடியும்:
“நொடிகளைத் துரத்தும் நிமிடங்களாய்
துரத்திக் கொண்டேயிருக்கிறது
அன்பு காலம் காலமாய்
...

அன்பின் பிரதேசத்தால் வாய்த்திருக்கிறது
வாழ்வின் ஆசிர்வாதம்

உனக்கும் எனக்கும்
அவருக்கும் இவருக்கும்
யாவருக்கும்”

காற்றைப் போல் கலைந்து விடக்கூடிய, ஒளியைப் போல் மறைந்து விடக்கூடிய சாத்தியங்களைத் தன்னோடு கொண்ட அன்பினைச் சார்ந்து வாழ்வதன் சிரமங்களைப் புரிந்திருந்தாலும் அதனை யாசிப்பதை நிறுத்த முடிவதில்லை எவருக்கும். இங்கே கவிஞருக்கும். வாழ்க்கையின் அடிநாதம் அன்பு என்கிற புரிதலுடன் அதனை யாசித்துப் பெறுவதில் எந்தத் தயக்கமும் காட்டாமல் துணையிடமும் ‘பிரிந்து போன தோழி’யிடமும் தாய்மையைக் கண்டு போற்றி நிறைவு கொள்கிறார். ‘சொல்ல இருக்கிறது காதல்’, ‘பால்ய விளையாட்டு’ எனப் பிரியம் பேசும் பல கவிதைகளுக்குள் ஒவ்வொரு எழுத்திலும் அன்பை இழைத்துக் கொண்டு வார்த்தைகளான வரிகள் சில:

பிரியத்தில் விளைந்த கனி’:
“.. பிரியத்தின் பொருட்டே
உனக்குள் என் வாழ்வு
பூரணமடைந்திருக்கிறது”

பிரியங்கள் உதிர்த்த கனி’:
“வலுக்கட்டாயமாய்
உதிர்ந்த பிரியங்களைத் 
திசைக்கொன்றாய் வீசிச் சுழற்றி
கடத்திக் கொண்டிருக்கிறது காற்று’

புசிக்கத்தூண்டும் பிரியங்கள்’:
”நிகழ்வின் சாத்தியங்களாக
அன்பும் பிரியமும் மட்டுமே
என்று விதிக்கப்பட்டிருக்கிறது
பிரியங்களுக்கு”

உண்மையான அன்பின் மொழி மெளனமே. அன்பின் பரிமாற்றம் நிகழ்ந்த பின், அதன் திண்மை இளகி இனிமை கூடுவது இயல்பாக நிகழ்வது. பரிமாற்றம் தவறும் போது இனிமையின் இடத்தில் வலியும் வேதனையும் வந்தமர்கிறது என்றால் பரிமாற்றங்களுக்கும் பிறகும் கூட பலவீனப்படுகிற அன்புகளால் இணையை அலட்சியப்படுத்துவதும், அன்பை சாதகமாக எடுத்துக் கொள்வதும் நிகழவே செய்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மெளனமாக அனுபவிக்கும் வலியைப் பற்றிய கவலையிருப்பதில்லை. பாலினப் பாகுபாடின்றி, அன்பிற்காகவே அனைத்து உதாசீனங்களையும் பொறுத்துக் கொண்டு செல்லும் இணைகள் கொண்ட உலகம் இது. இப்படியான அன்பின் எல்லாப் பரிமாணங்களையும் காட்டுவதான தொகுப்பின் முதல் கவிதை ‘மொழி’வது: 
“உன்னுடன் சேர்ந்து வரும் 
மெளனம் போதுமெனக்கு
...
உனது மெளனம் என்னை
மறுத்துப் பேசாது
...
தொடர் பின்றி நான் பேசினாலும்
உனது மெளனம் என்னிடம் 
கைகட்டி தலை குனிந்து நிற்கும்
...
உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் மெளனத்தைக் கடைபிடிக்கும்வரை.”

பிரியங்களின் வன்முறை’யில்..
“வன் எழுத்துக்களில் புலனாகும்
குரூரம் யெப்போதும் யாரையும்
அண்டச் செய்வதில்லை என்கிறாள்

பிரியங்களின் கொடுமனம் நிகழ்த்தும்
வன்முறை பற்றி
ஒருபோதும் நான் அவளிடம் 
கேட்டதேயில்லை”.

கடைசி நிறுத்தம் வரை சென்று கொண்டிருக்கும் இவரது ‘பிராயணம்’ போலவே கடக்கின்றது தொகுப்பு பாடுபொருளாய்ப் பல வாழ்வியல் காட்சிகளை உள்ளடக்கி. ‘தன்னையே கீறக்கூடுமென அறிந்திருந்தும்’ வளர்க்கும் நகங்களைப் பற்றிப் பேசுகிறது ‘இருப்பு’.  உய்தலுக்கானப் போராட்டத்தை எப்படி விலங்குகளுடன் நடத்த வேண்டி வருகிறது மனிதனுக்கு என்பதைக் காட்டுகிறது ‘இருத்தல்’. தந்திரங்களையும் வஞ்சகங்களையும் சூழ்ச்சித் திறம் என்று கொண்டாடும் உலகெங்கும் இவர் காட்டும் ‘மிதந்து கொண்டேயிருக்கும் வலை’கள் ஏராளம்.

ஒரு கவிதையை வாசிக்கும் பொழுதில்’, ‘ஓவிய நீட்சி’ ஆகியன பிடித்த கவிதைகள் எனில், பிடித்த வரிகளைக் கொண்டதாக ‘என்னிடம் வந்த இந்த நாள்’:
“தாழப்பறந்தும் கையில் சிக்காத
விருப்பப் பறவையாய்
கொஞ்சமும் இரக்கமில்லாது
கடந்த செல்கிறது இந்த நாள்”.

கவிஞர் ஒரு வழக்கறிஞர். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்பதில் அவருக்குச் சம்மதமில்லை. குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்படும் பலபேரின் பின்னணியை, சிறுவயதுப் போராட்டத்தை, எது அவர்களை அச்செயலுக்கு உந்தியது எனும் காரண காரியங்களை நீதிமன்றங்கள் அலசுகின்றனவா? அவற்றைக் கருத்தில் கொண்டு பரிவு காட்டப்படுகின்றதா? விடை தேடுவதே அவசியமற்றதாக ஒதுக்கப்படும் கேள்விகள் இவை.
“அவனைவிட பாவங்களை
நீங்களும் செய்திருக்கிறீர்கள்
நானும்தான்...”

‘அகநாழிகை’ என்ற பெயரில் சிற்றிதழும் பதிப்பகமும் நடத்தி வரும் பொன். வாசுதேவனின் இந்த முதல் கவிதைத் தொகுப்பில் ‘கடவுளைச் சுமந்தவன்’ சொல்லுகிறான்:
“பத்திரமாக கோவிலில்
இறக்கி விட்டேன் கடவுளை

நிம்மதியாகவும்
மனநிறைவாகவும் இருந்தது
கடவுளுக்கும்”

இருபது ஆண்டுகளாகச் சுமந்து வந்த கவிதைகளைத் தொகுப்பாக இறக்கி வைத்த கவிஞருக்கும் இது பொருந்தும். மன நிறைவு வாசிப்பவருக்கும்!
***


ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை
விலை ரூ:70. பக்கங்கள்: 112. வெளியீடு: உயிர்மை பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: 
ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே நகர்.

ஜனவரி 5 முதல் 17 வரைக்குமாக நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், கடை எண்: F 27. 
*** *** ***

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname