Friday, May 8, 2009

கூத்தாண்டவர் திருவிழா : அரவாணிகள் வாழ்வும்.. தாழ்வும்..


“கூத்தாண்டவர் திருவிழாவில் ‘இப்படிக்கு ரோஸ்‘க்கு தாலி கட்டினேன்“ என்றுதான் இந்த பதிவிற்கு முதலில் இந்த தலைப்பிட நினைத்தேன். (அப்போதுதானே அதிகம்பேர் வாசிப்பார்கள்). பிறகு ‘இதெல்லாம் உனக்குத் தேவையா ?‘ என்ற எண்ணம் மனதில் தோன்ற அசல் (அந்த ‘அசல்‘ இல்ல) தலைப்பையே வைத்துவிட்டேன்.

2007-ல் கூவாகம் சென்று வந்தது குறித்த நினைவுகளை
‘போடா ஒம்போது‘ என்ற தலைப்பில் உயிரோசை மின்னிதழில் வெளியான கட்டுரையில் பகிர்ந்து கொண்டேன். எனது வலைப்பக்கத்திலும் பதிவிட்டிருந்தேன்.
கடந்தமுறை சென்றபோது கூவாகத்தில் நடந்த திருவிழாவை பார்க்க இயலாமல் திரும்பி வந்தேன். இந்த ஆண்டு கூவாகம் சென்று வரலாம் என்று 5.5.09 அன்று சென்றேன். விழுப்புரம் நகரினுள் நுழைந்ததுமே தேர்தல், அரசியல் பரபரப்பைவிட அரவாணிகளின் பளபளப்பு அதிகமாக இருந்ததை உணர முடிந்தது.

விழுப்புரத்தையடுத்த மடப்பட்டு சந்திப்புச் சாலையிலிருந்து வலதுபுறமாக திரும்பினால் 8 கி.மீ. தொலைவில் கூவாகம் கிராமத்தை அடையலாம். அந்த சாலை போக்குவரத்து நெரிசலாக இருக்கும் என விழுப்புரத்திலேயே கேட்டறிந்து கொண்டதால், மடப்பட்டு சாலைக்கு முன்பாகவே உள்ள அரசூர் சந்திப்பு சாலையில் காரை வலதுபுறமாக திருப்பி திருவெண்ணைநல்லூர், பெரிய செவல் வழியாக சென்றால் கூவாகம் ஊராட்சி நம்மை வரவேற்கிறது. கூவாகம் ஊராட்சி தலைவர் பெயரும் கூத்தையன் என்பதுதான்.

வழியெங்கும் அரசு சிறப்புப்பேருந்துகள், தனியார் பேருந்துகள், கார், வேன், இருசக்கர வாகனங்கள், மாட்டு வண்டிகள் என மக்கள் கூட்டம் தங்களால் முடிந்த அளவிற்கு வாகன நெரிசலை ஏற்ப்படுத்தியிருந்தார்கள். கடும் நெரிசல் காரணமாக கோவிலுக்கு செல்ல ஒரு கிலோ மீட்டர் முன்பாகவே அறுவடை முடிந்திருந்த ஒரு கழனிவெளியில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்து சென்றோம்.
அதற்குள்ளாகவே ‘கை‘ சும்மா இல்லாம புகைப்படமெடுக்க ஆரம்பித்தது.

கோவிலுக்கு செல்லும் வழியில் முதலில் இங்கு ‘முட்டை பிரியாணி ரெடி‘ என்ற தகவலுடன் குடை மிளகாய் மாலையெல்லாம் தயார் செய்து வரவேற்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தது. அப்போதே தெரிந்துகொண்டேன். இந்த முறை நமது பதிவும் குடை மிளகாய் போலத்தான் இருக்கும் என்று. அடுத்ததாக ஹெச்ஐவி/எய்ட்ஸ், மனித உரிமைகள் & கடத்தல் தடுப்பு (என்ன கொடும சார் இது) கண்காட்சி மற்றும் தகவல் மையம் வரவேற்றது. காட்சி ஊடகங்களின் சார்பில் ஆங்காங்கே புகைப்படங்களும், காணொளிப் பதிவுகளும் எடுத்துக் கொண்டிருந்தனர்.

திரும்பிய பக்கமெல்லாம் அரவாணிகள் கூட்டம் கூட்டமாக சிரித்துப் பேசியபடியும், தாலி வாங்கிக் கொண்டும் இருந்தனர்.
தாலியை வாங்கியதும் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்கின்றனர். அரவாணிகள் மட்டுமின்றி தனி வேண்டுதல் இருக்கும் பக்தர்களும் தங்கள் பிள்ளைகளை மாலை அணிவித்து, தாலி கட்டி நேர்த்திக் கடன் செய்கின்றனர். அரவாணிகள் கோவிலுக்கு சேவலை காணிக்கையிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. கோவிலுக்குள் இருந்து வெளியே வரும் அரவாணிகள் அருகில் இருக்கும் தேரின் முகப்பில் கற்பூரமேற்றி வட்டமாகக் கூடி பாட்டுப்பாடி கும்மியடித்துக் கொண்டிருந்தனர்.

பிறகு முழுக்க முழுக்க கொண்டாட்டம்தான். பெரும்பாலான அரவாணிகள பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கெனவே வட்டமிடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களோடு ஆங்காங்கே வயல் வெளிகளிலும், புதர் அருகிலும் தொலைவான இடங்களைத் தேடி ஒதுங்குகின்றனர். அரசு சார்பிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் ஆணுறை, ஜெல் என வழங்கி அரவாணிகள் மற்றும் மக்கள் மீதான அக்கறையைக் காட்டிக் கொள்கின்றனர். பாதுகாப்பான உடலுறவு குறித்து ஆங்காங்கே விழிப்புணர்வு விளம்பரங்கள் வேறு.


இப்படி பாலியல் சங்கதிகளில் ஈடுபடுவது தவிர ஒரு சிலர் அங்கு வந்திருப்பவர்களுடன் மது அருந்துவது, அவர்களை இழுத்து விளையாடுவது என கழனி வெளிகளில் வெளிப்படையாக தக்க காவல் பாதுகாப்புடன் நடைபெறுகிறது. அரவாணிகளுடன் இணைந்து போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுப்பதும் நடக்கிறது. அதற்கு அரவாணிகள் தனிக்கட்டணம் வசூலிக்கின்றனர்.


இது போன்ற செயல்கள் எல்லாமே உரிய அங்கீகாரமின்றி, வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் எளிய அரவாணிகளிடம் மட்டுமே காணப்படுகிறது. மற்றபடி வாய்ப்பும், வசதியும் கொண்ட அரவாணிகள் கூடவே நாய்க்குட்டியாய் ஒரு ஆளையும், தங்களின் மெய்க்காப்பாளர் போல அழைத்து வருகின்றனர்.அணிந்திருக்கும் விலையுயர்ந்த நகைகளும், ஆடம்பர உடையும் அவர்களின் தரத்தை தெரியப்படுத்துகின்றது. பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகிகளும் பலர் காணக் கிடைத்தனர். அவர்களெல்லாமே ஆடம்பர வாகனங்களில் வருகை தந்து அரவானை கும்பிட்டு தாலியணிந்து (கும்மியிடுவதில்லை) புகைப்படங்களுக்கு பாவனை செய்து விட்டு விழுப்புரம் சென்று தங்கி விடுகின்றனர்.

விழாவைப் பார்வையிட்டும், வேடிக்கைப் பார்த்தும், படமெடுத்துக் கொண்டும் இருந்த சூழல் திடீரென பரபரப்பாகியது. காரணம் கேமரா குழுவினர் புடை சூழ ‘இப்படிக்கு ரோஸ்‘ பளபளப்பாக வந்து கொண்டிருந்தார்.
கூடவே வெளிநாட்டு புகைப்பட, காணொளி பதிவாளர்கள் குழு. நான் சென்று ‘ரோஸ்‘ உடன் பேசினேன். தமிழில் வாயைத் திறக்கவே இல்லை. தமிழில் பேசினாலும், ஆங்கிலத்தில் பேசினாலும், முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார் ரோஸ். பிறகு அவருடன் வந்திருந்த படக்குழுவினரைப் பற்றி கேட்டேன். அவர்கள் National Geographic Channel-ல் இருந்து அவரது வருகையைப் பற்றி பதிவு செய்ய வந்திருக்கிறார்கள் என்றார்.
பிறகு ரோஸ் தாலியணிந்து வெளியே வந்தவுடன் புகைப்படமெடுத்துக் கொண்டு, அவருடன் சில நிமிடங்கள் பேசி விட்டு கிளம்பினேன்.
கூவாகம் கிராமத்திற்குள் (சிலர் குவாகம் என்கிறார்கள்) சென்றேன். ஆங்காங்கே வெட்ட வெளிகளில் சமையல் ஏற்பாடுகள் செய்து கொண்டு குழுவினராக அரவாணிகள் அமர்ந்திருந்தனர். அரவாணிகள் அமைப்புகள் சார்பாக பல வாகனங்கள் வந்திருந்தன.
<

அரவாணிகளை முதல் முதலாக இறை பணியில் ஈடுபடுத்தி அவர்களை கன்னியாஸ்திரிகளாக ஆக்கியிருக்கும் அமைப்பில் இருந்தும் அரவாணிகள் வந்திருந்தனர். சீருடை அணிந்திருந்த அவர்கள் கோவிலுக்குளோ, கும்மியடிக்கவோ இல்லை. அங்குமிங்கும் நடமாடி அவர்களின் இருப்பை எல்லோருக்கும் தெரியப்படுத்தினார்கள். கிறித்தவ மத நிறுவனம் சார்பாக துண்டுப் பிரசுரங்களை அளித்தார்கள். அவர்களை அழைத்து வந்தவர்களின் கவனம் முழுவதும் வெளிநாட்டு வருகையாளர்களின் மீதே இருந்தது. நானும் அவர்களுடன் பேசினேன். அரவாணிகள் என்னுடன் பேசுவதைவிட பின்லாந்திலிருந்து வந்திருந்த பெண் ஒருவரிடம் ‘சாட்சி‘ சொல்வதில் குறியாக இருந்தார்கள். அவர்கள் தமிழில் பேச, பெண் ஒருவர் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார்.



இருட்டத் தொடங்கியதால் அங்கிருந்து கிளம்பினேன். வயல்வெளி இருளில் நிழல்கள் ஆங்காங்கே சிரிப்பும், கும்மாளமுமாக அஸ்தமித்துக் கொண்டிருந்தனர். வழியெங்கும் ஆங்காங்கே மது அருந்தியவர்களின் சண்டை. அவர்களின் மையப்பொருள் அரவாணிகள்தான். சிறு கிராமங்களை கடக்கும்போது 15 முதல் 25 உள்ளான வயதினர் பலரும் கூவாகம் நோக்கி சென்று கொண்டிருந்ததை காண முடிந்தது. கூவாகத்திலிருந்து கிளம்பி விழுப்புரத்தை வந்தடைந்தேன்.

எனது முந்தைய பதிவில் ‘ஆண்டவர் லாட்ஜ்‘ என ஒரு விடுதியைக் குறிப்பிட்டிருந்தேன். அதன் பெயர் ‘ஆற்காடு லாட்ஜ்‘ என்று இப்போதுதான் தெரிந்தது. கீழே மதுக்கூடம் மேலே லாட்ஜ். பத்துக்கும் மேற்பட்ட மதுக்கூடங்கள் (குளிர்சாதன வசதியுடன்) அந்தத் தெருவில் இருந்தது. தெருவும், மதுக்கூடங்களும் அரவாணிகளால் நிறைந்திருந்தது. எல்லா அரவாணிகளுமே மது குடிப்பவர்களாக போதையேறி, சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தனர்.




ஏற்கனவே சென்னையில் அறிமுகமாயிருந்த பிரபாவதி என்ற அரவாணி தங்கியிருக்கும் அறை பற்றி விடுதியில் விசாரித்ததில் அவரும் மதுக்கூடத்திற்கு சென்றிருப்பதாக தகவல் வந்தது. விடுதியை விட்டு வெளியே வரும்போது பிரபாவதி என்ற அந்த அரவாணி மது அருந்திவிட்டு வந்து கொண்டிருந்தார். நேரில் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டு விடுதியில் அவரது தோழியருடன் தங்கியிருந்த ஏ.சி. அறைக்கு அழைத்துச் சென்றார். அன்றைய தினம் நடைபெற்ற அழகிப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றிருந்த தனம் என்ற அரவாணியும் அங்கிருந்தார். (சேலத்தைச் சேர்ந்த இவர் பெண் காவலர் ஒருவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாகி பரபரப்பூட்டியவர்). அழகிப் போட்டியில் இவருக்கு பரிசளிக்கப்பட்டது குறித்து அரவாணிகள் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளதை அறிய முடிந்தது. அரவாணி பிரபாவதியிடம் (இவர் சென்னையில் உள்ள ஒரு முக்கியப் பிரமுகர் வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கிறார்) பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

விடுதியை விட்டு வெளியே வருகையில் அரவாணிகளை அழைத்தபடியும், அணைத்தபடியும் பொது இடங்களில் நின்றிருந்த ஆண்கள் பலரை காண முடிந்தது. சாதாரண மக்கள் நடமாட இயலாத அச்சச்சூழல் அங்கிருந்ததை காண முடிந்தது. பொதுவாகவே அரவாணிகள் என்றால் மக்கள் விலக்குவதன் காரணம், அவர்களது நிலை என்பது மட்டுமே அல்ல, அவர்களின் செய்கையும், சேட்டையும்தான் என்பதை இந்த பயணத்தின் போது உணர்ந்தேன்.

அரவாணிகள் குறித்த எனது கடந்த பதிவின்போது வந்த எதிர்வினைகளில் பதிவர்கள் டக்ளஸ், கார்த்திகைப்பாண்டியன் எனப்பலரும் அரவாணிகள் செய்கின்ற அராஜகம் (குறிப்பாக வட மாநிலங்களில் இரயில் பிரயாணத்தின்போது) குறித்து வருத்தமாக தெரிவித்திருந்தனர்.

நான் கவனித்த மற்றொரு முக்கியமான விஷயம்.. விழுப்புரத்திலும், கூவாகத்திலும் நான் கண்ட அரவாணிகளில் பலர் ‘கோத்திகள்‘ மற்ற நாட்களில் ஆண் தோற்றத்தில் சமுகத்தில் புழங்கும் இவர்கள் இங்கு மட்டுமே பெண் உடையணிந்து வலம் வருகின்றனர். இவர்களில் மிகக்குறைந்த சதவீதத்தினர் தவிர அனைவருமே ஒரினச் சேர்க்கையில் ஆர்வமுள்ளவர்களாக உள்ளனர். இவர்கள் இங்கு கூடுவதே இதற்குத்தானா.. என்ற எண்ணமும் தோன்றுகிறது. ரமேஷ் ரசிகாவாகவும், நரசிம்மன் நசீனாவாகவும் பல பெண் பெயர்களால் தங்களை அடையாளப்படுத்தி அறிமுகம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் போது ரமேஷ், நரசிம்மன் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு இனத்திலிருந்து பல போராட்டங்களுக்குப்பின் மேன்மையான இடத்தைப் பிடிக்கும் பெரும்பான்மையினர் ஏன் தன்னைப் போன்றவர்களைப் பற்றிய அக்கறையோ, அவர்கள் வளர்ச்சி குறித்தோ சிந்திப்பதில்லை என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே இருக்கிறது. அரவாணிகள் விஷயத்திலும் இதுதான் நடந்து வருகிறது. பிரபலமான, வசதி வாய்ப்புடைய அரவாணிகள் பலரும் அவர்களுக்குள் பேதத்துடன், இவர் இப்படி என்று பிரித்துதான் நடந்து கொள்கின்றனர்.

மூன்றாம் பாலினம் எனவும், திருநங்கைகள் எனவும் சரியான அங்கீகாரமும் அடையாளமும் பெறத்தொடங்கியிருக்கும் அரவாணிகள் அவர்களுக்குள்ளிருக்கும் பல மனத்தடைகளையும், குழப்பங்களையும், உடல் ரீதியான உறவுகள் குறித்தும் விழிப்புணர்வு கொண்ட தெளிவான சிந்தனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பத்திரிகைகளிலும், காண் ஊடகங்களிலும் பிரபலமாக உள்ள அரவாணிகள் அவர்களைப் போன்றவர்களுக்காக பேசுவதை மட்டும் விடுத்து, களப்பணியாற்றி தங்களைப் போன்றவர்களை வழி நடத்தினால் மட்டுமே அரவாணிகளின் நிலை உயரும். மக்கள் மட்டுமே அரவாணிகளை அங்கீகாரம் செய்வது அவர்களுக்கான தீர்வில்லை. அவர்களும் அந்த மாற்றத்தை விரும்ப வேண்டும்.

அரவாணிகள் குறித்த மாற்றுப் பார்வை பற்றிய இந்தப் பதிவு குறித்த உங்கள் அனைவரின் கருத்துக்களையும் எதிர்நோக்குகிறேன். அரவாணிகள் பற்றிய சரியான புரிதலுக்கும், தெளிவிற்கும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன்...

••• பொன்.வாசுதேவன் •••


குறிப்பு : என்னுடன் பெரும்பாலான பயணங்களில் பங்கேற்றும், புகைப்படங்கள் எடுத்தும், தீவிர புத்தக வாசிப்பு பழக்கமிருந்தும் எழுதும் பழக்கமில்லாத என் முதல் வாசகனும், கருத்துக்களை விருப்பு வெறுப்பற்று பகிரும் விமர்சகனும், நண்பனுமான ‘மனோ‘விற்கு என்றும் என் அன்பு.

54 comments:

  1. அடுத்த முறை என்னை விட்டுட்டு போயிராதிங்க!

    ReplyDelete
  2. அருமையான விவரிப்பு!
    அரவாணிகளுக்கும் பாலியல் உணர்வுகள் உண்டு!
    சரியான புரிதல்களில் இருந்தால் அதை பூர்த்தி செய்து கொள்ள முடியும்!

    அரவாணிகள் காதல் செய்து திருமணம் செய்வதும் நடந்து வருகிறது யாவரும் அறிந்ததே!

    ReplyDelete
  3. அருமையான பதிவு,

    இதை எல்லாம் பார்க்க முடியாத எங்களுக்கும் பார்த்த பரவசத்தை கொடுதிங்க நல்ல பதிவு, உழைப்பு இருக்கு...

    நல்ல விஷியம்.

    ReplyDelete
  4. நல்ல விவரிப்பு வாசு.. படங்களும் தெளிவா இருக்கு.. ஒரு சில விஷயங்கள் புரில.. பணக்கார அரவாணிகள் எல்லாம் இருக்காங்கன்னா ஏன் அவங்க மத்தவங்களுக்கு உதவ கூடாது? ரோஸ் கூட எதோ கடமைக்கு வந்து தன்னுடைய இந்த நிலயை அவங்க சுய லாபத்துக்கு பயன்படுத்திக் கிட்டங்களோன்னு தோணுது.. எல்லாமே வெளிப்படையா தப்பு செய்றாங்கன்னா அதைத் தடுக்க அரசாங்கம் ஏன் ஒன்னும் பண்ண மாட்டேங்குது? பாவன் பார்க்குற அதே நேரம், அவங்களோட ராசகத்தயும் குறைக்கணும் இல்லையா?!!

    ReplyDelete
  5. படங்களுடன் கூடிய நல்ல தொகுத்தளிப்பு

    அவர்களும் அந்த மாற்றத்தை விரும்ப வேண்டும் //

    கண்டிப்பாக,

    rose போன்று ப்ரபலமாகி விட்ட அரவாணிகள், மற்றும் அரவாணிகளின் நிலைய உயர்த்த போராடுபவர்கள் இவர்களெல்லாம் இது போன்ற தகாத செயல்களை கண்டிக்க மாட்டார்களா.
    இதைப் போன்று ஒன்று கூடுமிடங்களில் பிற அரவாணிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாதிரி ஒன்று ஏற்பாடு செய்தால் அது பயனளிக்குமே, அதை விடுத்து மதுவருந்துவதும் கேளிக்கைகளுக்குமே மெனக்கெடுவது ஏன்?

    ReplyDelete
  6. அருமையான காட்சி விவரிப்பு வாசு ஸார்..!
    படங்களும் அருமையாக வந்திருக்கின்றன..! வாழ்த்துக்கள்..!
    நான் முற்றிலுமாக கார்த்திகை பாண்டியனோடு உடன்படுகின்றேன்..அந்த சமூகத்தில் இருப்பவர்களே அவர்களை
    புறந்தள்ளினால் மற்றவர்கள் எப்படி அவர்களை முழுமையாக அங்கீகரிப்பார்கள். ஒருவனுக்கு தரும் அங்கீகாரமானது.
    அதை அவன் மனமுவந்து ஏற்றுக் கொண்டால்தான் முழுமையடையும். நாம் இன்றும் அரவாணிகளில் பலர் நல்ல நிலைமையில் இருப்பதை மீடியாக்களிம் மூலமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அவ்வாறு நல்ல நிலையில் இருப்பவர்கள் மற்ற அரவாணிகளை தங்களால் முடிந்த வரை நல்ல நிலமைக்கு கொண்டு வர முயற்சி செய்தால் அதுவே பெரிய வரவேற்கத்தக்க செயல். இதை தங்களின் சுயலாபத்திற்காக பயன்படுத்துவோருக்கும் தற்கால அரசியல்வாதிகளுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை எனலாம்...!

    ReplyDelete
  7. வித்தியாசமான முயற்சியும்,பதிவும் அருமை.

    புதுமையான விசயங்களை காண வேண்டும் என்ற ஆவலுக்கு விருந்தாக தங்களது பதிவு அமைந்திருந்தது.(சில நேரங்களில் தங்களது ப்ளாக் வைரஸ் உள்ளது என்று வருகிறதே..ஏன்??)

    ReplyDelete
  8. அருமையான பதிவு உங்களின் புதுமையான பயண பதிவுக்கு வாழ்த்துகள்

    //பொதுவாகவே அரவாணிகள் என்றால் மக்கள் விலக்குவதன் காரணம், அவர்களது நிலை என்பது மட்டுமே அல்ல, அவர்களின் செய்கையும், சேட்டையும்தான் என்பதை இந்த பயணத்தின் போது உணர்ந்தேன்.//

    அவர்களின் செய்கையும் சேட்டையும் மக்களின் புறந்தள்ளும் நிலையால்
    வந்தவைதான.

    ReplyDelete
  9. ரொம்ப அருமையான விவரிப்பு சார்..
    நான் சிலமுறை கூவாகம் சென்று இருக்கிறேன் அனால் திருவிழா சமயங்களில் அல்ல..
    அதேபோல் விழுப்புரத்தில் திருவிழா சமயங்களில் ஒரே கூட்டமாக அலைந்து கொண்டு இருப்பார்கள்..
    அவர்களும் பொது இடங்களில் சில வரம்பு மீறல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
    அனால் நான் கேள்விப்பட்ட வரை தங்களை தற்காத்து கொள்ள தான் அதே மாதிரி பண்ணிகிரர்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்..
    மற்றப்படி அவர்கள் ஒடுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல..

    ReplyDelete
  10. வித்தியாசமான பதிவு சார்.

    ReplyDelete
  11. அருமையான பயனுள்ள பதிவு.

    என் பார்வையில் கல்வி ஒன்றே திருநங்கைகளின் பிரசனைகளை தீர்க்க உதவும் மருந்து.

    அரசாங்கமும், தனியார் கல்வி நிறுவனங்களும் இவர்களை அங்கீகரித்து இலவச கல்வி, தங்கும் இடம் வழங்கினால், இவர்களும் வேலை/ வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பார். பின்பு பாலியல் தொழில் சார்ந்து இருக்க வேண்டியது இல்லை.

    செய்யுமா அரசும் பணகார கல்வி நிறுவனங்களான , ஜேப்பியார், SRM, சத்யபாமா, வேலூர் விஷ்வநாதன் கலூரி, லயோலா கலூரி, டன்பச்கோ பள்ளிக்கூடம், DAV , ராமகிருஷ்ண maடம் போன்ற பள்ளிகள்.

    ReplyDelete
  12. நீங்கள் சொன்னது போல், அவர்களாகவே அவர்களூக்கு மாற்றங்கள் கொண்டுவர முயலவேண்டும். பெரும்பாலும் எங்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால்தான் நாங்கள் இப்படி வயிற்றுக்காக எதேதோ செய்யவேண்டியுள்ளது என்று அவர்களும், அவர்கள் பல தவறான வழிகளில் நடந்துகொள்வதால்தான் அவர்களை சமூகம் இப்படி நடத்துகிறது என்று இவர்களும் மாறிமாறி சொல்வதுண்டு.
    இவர்களை இவர்களின் குடும்பத்தாரே ஒதுக்கிவைக்கப்படும் நிலைமையும் உள்ளது.

    நல்ல விரிவான தொகுப்பு. அவர்களது வாழ்விலும் மாற்றம் வரட்டுமாக!

    ReplyDelete
  13. 'கூவாகம்' சொல்லக் கேட்டிருக்கிறேன். இப்போது சென்றுவந்ததைப் போலுள்ளது.

    //பொதுவாகவே அரவாணிகள் என்றால் மக்கள் விலக்குவதன் காரணம், அவர்களது நிலை என்பது மட்டுமே அல்ல, அவர்களின் செய்கையும், சேட்டையும்தான் என்பதை இந்த பயணத்தின் போது உணர்ந்தேன்.//

    இதை அவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

    ReplyDelete
  14. இனிமேல் நீங்கள் அவர்களை திருநங்கைகள் என்றே கூரலாமே..

    உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது வாழ்த்துகள்

    ReplyDelete
  15. புகழ்ச்சியற்ற போலியில்லாத பதிவு.ஒன்றைப்பற்றி பதியவருபவர்கள் அதிதீவிரமாக ஆதரித்தோ,எதிர்த்தோ தான் எழுதி வருகிறார்கள். உங்களது பதிவு சரியான பார்வையுடனும்,அக்கரையுடனும் இருக்கிறது.மேலும் கூவாகம் சென்று நேரில் பார்க்காத எனக்கு நேரில் சென்று வந்த உண்ர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. பிறகு முழுக்க முழுக்க கொண்டாட்டம்தான். பெரும்பாலான அரவாணிகள பாலியல் இச்சைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கெனவே வட்டமிடும் நபர்களை அடையாளம் கண்டு அவர்களோடு ஆங்காங்கே வயல் வெளிகளிலும், புதர் அருகிலும் தொலைவான இடங்களைத் தேடி ஒதுங்குகின்றனர்.///

    இன்னிலை மாற வேண்டும்!! இதற்கு ரோஸ் போன்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? நேசனல் ஜியாக்ரபிக்கு பேட்டி கொடுப்பதுதான் அவர்கள் முன்னேற்றத்துக்கு உதவுமா? வெறும் பப்ளிசிடி ஸ்டண்ட்களை விடுத்து அநாகரிக பாலியல் செய்கைகளிலிருந்து அவர்கள் வெளிவரும்போதுதான் அவர்கள் கேட்கும் முன்னேற்றமோ மரியாதையோ கிடைக்கும்!!

    ReplyDelete
  17. ஆண்(பாதி)+பெண்(பாதி)=அரவாணி=கடவுள்(kada+vul)

    ReplyDelete
  18. நல்ல பதிவு.


    பார்வைகளில், பழக்கங்களில் ஒதுக்கப்பட்டு, கிண்டல் செய்யப்பட்டு, விலக்கப்பட்டு காயங்களைச் சுமந்தவர்கள் அவர்கள்.
    அதுவே, சகலத்தையும் துச்சமென மதிக்கும் நிலைக்குச் செல்ல வைக்கிறது.

    திருநங்கைகள் சிலரோடு கொஞ்சம் பரிச்சயமும் உண்டு. அவர்களைப் புரிந்து கொண்டால், மிகுந்த நேசத்துடன் பழகுவார்கள்.

    அவர்கள் குறித்த நியாயமான உரையாடல்கள் இப்போதுதான் பொதுவெளியில் துவங்க ஆரம்பித்திருக்கிறது. இது சில புரிதல்களை சமூகத்திற்கு நிச்சயம் கொடுக்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  19. நேரில் போய் பார்த்துவந்ததுபோன்ற அளவுக்கு அனுபவத்தை ஏற்படுத்திவிட்டது.

    சே.வேங்கடசுப்பிர
    மணீயனின் கருத்துக்களை நானும் சொல்லிக்கொள்கிறேன்.

    மேலும்,மூக்குத்தி,கம்மல் சகிதம் நீல நிறப் புடவையில் இருக்கும் திரு நங்கையின் புகைப்படத்திற்காக எனது பாராட்டுகளும், நன்றிகளும். அந்தப் புகைப்படத்தைப் பாருங்கள். ஒரு திரு நங்கையின் மன விழைவு, ஏக்கம் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்திவிடுகிறது அக் காட்சி.

    எதிவினைகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்.

    ReplyDelete
  20. வாசு சார் போன கட்டுரையில் (போடா ஒம்போது) அரவாணிகளைப் பற்றி அவர்களின் மீது அனுதாபம் கொள்ளும் ஈர்ப்போடு இருந்தது, இம்முறை அதற்கு நேர் எதிர்மறையாக அவர்களின் செயல்களும் அவர்களுக்குள் இருக்கும் பேதமையை பற்றி விவரிக்கின்றீர்கள் இரண்டு விசயமும் வெவ்வேறு கோணம் என்றாலும் உங்களின் பார்வை மிகச்சரியானதே என்று படுகின்றது.

    ReplyDelete
  21. மிக அருமை வாசு..

    நேரில் பார்த்தது போல் இருந்தது..

    நன்றி..!

    ReplyDelete
  22. AnonymousMay 08, 2009

    அற்புதமான உண்மைப் பதிவு. உங்கள் சிரத்தைக்கும் முயற்சிக்கும் பாராட்டுகள்.

    நம் தமிழகத்திலுள்ள அரவாணிகளில் சாதாரண வேலை கிடைக்கும் தகுதிக்குரிய கல்வியறிவைப் பெறுபவர்கள் 10 சதவீதத்துக்குள் தான் இருக்கும் என எண்ணுகிறேன்.

    இந்நிலை மாறி இயன்றவரை மூன்றாவது பாலினச் சிறார்கள் அனைவருக்கும் பள்ளி, பிறகு கல்லூரி செல்லும் வாய்ப்பு கிட்டினால், அவர்களும் இயல்பு நிலையில் இருப்பார்கள்; அவர்கள் மீதான சமூகத்தின் பார்வையும் இயல்பான நிலையை அடையும் என்றே நம்புகிறேன்.

    வாழ்வாதாரத்துக்கு உரிய வழி இல்லாத ஒரே காரணத்தினால்தான் அவர்களில் பலரும் முறை தவறிப் போக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.

    ReplyDelete
  23. அட..... அருமையான பதிவு தோழரே....!!!! இது போன்ற பதிவுகளை ...விகடன் போன்ற பத்திரிக்கைகள் ஆதரித்து பிரசுரிக்க வேண்டும்..... !! ஏனெனில் .. இந்த விழிப்புணர்ச்சி கட்டுரைகள் அரவாணிகளுக்கு கண்டிப்பாக தேவை...!! நாம் மட்டும் படித்து என்ன செய்வது....!!!!

    அருமை...!!! வாழ்த்துக்கள்...!!!!

    ReplyDelete
  24. மிக அருமையான பதிவு... உடன் வரவில்லையே எனும் குறையே போக்கியதைப் போன்று..

    போடா ஒம்போது பதிவு போடும் பொழுதே நாமும் கூத்தாண்டவர் கோவிலுக்குச் சென்று பார்க்கலாமே என்ற ஆவல் வந்தது. தீராத பணிப்பளுவால் அது முடியவில்லை...

    உங்களது இந்த மாற்றுக் கோணமும் நிதர்சனமானது..
    எனக்கென்னவோ, இந்த பதிவை சற்று சுருக்கி எழுதிவிட்டீர்களோ என்று தோணுகிறது!!!

    ReplyDelete
  25. AnonymousMay 09, 2009

    //அரவாணிகள் என்றால் மக்கள் விலக்குவதன் காரணம், அவர்களது நிலை என்பது மட்டுமே அல்ல, அவர்களின் செய்கையும், சேட்டையும்தான் என்பதை இந்த பயணத்தின் போது உணர்ந்தேன்//.
    //இது போன்ற செயல்கள் எல்லாமே உரிய அங்கீகாரமின்றி, வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் எளிய அரவாணிகளிடம் மட்டுமே காணப்படுகிறது.//
    //புகைப்படங்களுக்கு பாவனை செய்து விட்டு விழுப்புரம் சென்று தங்கி விடுகின்றனர்//
    //அங்குமிங்கும் நடமாடி அவர்களின் இருப்பை எல்லோருக்கும் தெரியப்படுத்தினார்கள். //
    //எல்லா அரவாணிகளுமே மது குடிப்பவர்களாக போதையேறி, சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தனர்.//
    //அரவாணிகள் செய்கின்ற அராஜகம் (குறிப்பாக வட மாநிலங்களில் இரயில் பிரயாணத்தின்போது) குறித்து வருத்தமாக தெரிவித்திருந்தனர்.//
    //பத்திரிகைகளிலும், காண் ஊடகங்களிலும் பிரபலமாக உள்ள அரவாணிகள் அவர்களைப் போன்றவர்களுக்காக பேசுவதை மட்டும் விடுத்து, களப்பணியாற்றி தங்களைப் போன்றவர்களை வழி நடத்தினால் மட்டுமே அரவாணிகளின் நிலை உயரும். மக்கள் மட்டுமே அரவாணிகளை அங்கீகாரம் செய்வது அவர்களுக்கான தீர்வில்லை. அவர்களும் அந்த மாற்றத்தை விரும்ப வேண்டும்.//


    தங்களது கருத்து முற்றிலும் உண்மையே.சிலருடைய தவறான நடவடிக்கையால் தங்களை தானே இழி நிலைக்கு இட்டுசெல்கின்றனர். அது மட்டும் இல்லாமல் அவர்கள் சார்ந்த இனத்தின் முன்னேற்றதுற்கும் தடை கற்களாக இருகின்றனர். அவர்கள் மீதான சமூக பார்வை மாற அவர்களிடம் புரிதல் வரவேண்டும்.

    ReplyDelete
  26. திருநங்கைகள் பற்றிய செய்திகள் சிறப்பாக உள்ளது.

    இது என் சந்தேகம் மட்டுமே... தவறாக எண்ண வேண்டா. நான் அவர்களின் நம்பிக்கையை மதிக்கிறேன்.

    ஆரிய பண்பாடு அவர்களிடையினும் மேலோங்கி இருப்பதன் காரணம் என்ன?

    ReplyDelete
  27. நிறைவா இருக்குங்க!
    வாழ்த்துகளும் நன்றியும்!!

    ReplyDelete
  28. AnonymousMay 10, 2009

    ரொம்ப அழகான தேவையான பதிவும் கூட.. படமும் கட்டுரையும் நன்றாக உள்ளது நண்பா...


    (இங்கே போகப்போறேன்னு சொல்லவே இல்லையேபா :) ....

    சொன்னா மட்டும் வந்திடப்போறாருனு முனகறது கேட்குது) :)

    ReplyDelete
  29. அரவாணிகளின் நிலை இந்தியா மற்றும் அதைச்சுற்றியுள்ள நாடுகளில் பரிதாபகரமான ஒரு விஷயம் தான்.

    படித்திருந்தால் கூட அவர்களுக்கு வேலை தருவதற்கு யோசிக்கிறார்கள். மேலும் அவர்களுக்காக செயல்படும் அமைப்புகளும் சரிவர செயல் படுவதில்லை.

    அவர்களுக்காக ஒதுக்கப் படும் நிதி கூட சரியான முறையில் அரவாணிகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப் படுவதில்லை. (பில் கேட்ஸ் எயிட்ஸ் ஒழிப்பு நிதி போன்ற நிதிகள்). நீங்கள் கொஞ்சம் ஆராய்ந்தால் அதை பதிவாக இடலாம்.

    ReplyDelete
  30. கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தான் அகநாழிகை. நான் கூட ஒருமுறை சென்று வர வேண்டும் என்றுதான் இருக்கிறேன்.

    அதே போல் செஞ்சி செல்லும் வழியிலும் (செஞ்சி செல்லும் சாலையிலுள்ள ஒரு ஊர்) இது போல் ஒரு விழா நடப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். பௌர்ணமியன்றா அல்லது அமாவாசையன்றா என்று தெரியவில்லை.

    ReplyDelete
  31. நல்ல பதிவு. அருமையான புகைப்படங்கள்.

    ReplyDelete
  32. அருமையான படங்களுடன் கூடிய அற்புத வர்ணனை.


    வாழ்த்துகள் வாசு.

    ReplyDelete
  33. அய்யா அருமையான பதிவு படங்களை picasa வில் இணையேற்றம் செய்து பின்னர் அதன் urlகளை இங்கே இடவும் மற்றும் 1படங்களை சிறிய அளவிலும் gif format-ல் இட்டால் சிக்கிரம் load ஆகும்

    ReplyDelete
  34. மிக அருமையான பதிவு, அவசியம் பதிய வேண்டிய விஷயங்கள், அருமை.

    ReplyDelete
  35. vanakkamm
    thirunangaiyar kondadum kooovagam vizha pattriya unga pathiu nalla muarichi. aana avanga melana unga parva,anuthabamallam melootama irrukku.
    mu.harikrishnan

    ReplyDelete
  36. வால்பையன் said...
    //அடுத்த முறை என்னை விட்டுட்டு போயிராதிங்க!//

    வால்பையன்,
    நீங்க வாலை சுருட்டிக்கிட்டு வருவதானால் அழைத்துச் செல்ல நான் ரெடி.

    ReplyDelete
  37. Suresh said...
    //அருமையான பதிவு,
    இதை எல்லாம் பார்க்க முடியாத எங்களுக்கும் பார்த்த பரவசத்தை கொடுதிங்க நல்ல பதிவு, உழைப்பு இருக்கு... நல்ல விஷியம்.//

    நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  38. கார்த்தி,
    உங்களுடைய ஊக்கத்திற்கு நன்றி,

    ReplyDelete
  39. அமிர்தவர்ஷினி அம்மா said...
    //rose போன்று ப்ரபலமாகி விட்ட அரவாணிகள், மற்றும் அரவாணிகளின் நிலைய உயர்த்த போராடுபவர்கள் இவர்களெல்லாம் இது போன்ற தகாத செயல்களை கண்டிக்க மாட்டார்களா.
    இதைப் போன்று ஒன்று கூடுமிடங்களில் பிற அரவாணிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாதிரி ஒன்று ஏற்பாடு செய்தால் அது பயனளிக்குமே, அதை விடுத்து மதுவருந்துவதும் கேளிக்கைகளுக்குமே மெனக்கெடுவது ஏன்?//

    இதுதான் எனக்குத் தோன்றியதும்.
    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அமித்து அம்மா.

    ReplyDelete
  40. டக்ளஸ்,
    உங்களின் தொலைபேசிக் கருத்தும் என்னை யோசிக்க வைத்தது. அரவாணிகள் குறித்து மாற்றுக்கருத்துகளையும் பதிவு செய்ததற்கு நன்றி.

    தோழி ராஜேஸ்வரி,
    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. (வைரஸ் விஷயம் சரி செய்து விட்டேன்.)

    ReplyDelete
  41. //அவர்களின் செய்கையும் சேட்டையும் மக்களின் புறந்தள்ளும் நிலையால்
    வந்தவைதான்//

    சொல்லரசன்,
    உங்கள் கருத்தை முழுதுமாக ஆதரிக்கிறேன். அதுதான் சரி.

    ReplyDelete
  42. வாழ்த்துக்கு நன்றி வினோத்கௌதம்.



    வருகைக்கும், ஊக்கத்திற்கும்
    மிக்க நன்றி தோழி வித்யா.

    ReplyDelete
  43. குப்பன்_யாஹூ said...
    //அருமையான பயனுள்ள பதிவு.
    என் பார்வையில் கல்வி ஒன்றே திருநங்கைகளின் பிரசனைகளை தீர்க்க உதவும் மருந்து.//

    அரசுதான் இதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தங்கள் பாராட்டிற்கு நன்றி.

    ReplyDelete
  44. உழவன்,
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
    நேரில் சந்தித்ததில் மகிழ்ந்தேன்.

    ReplyDelete
  45. சில்-பீர்,
    (சொல்லும்போதே சுகமாக இருக்கிறது)

    வருகைக்கு நன்றி.

    சென்னை வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  46. KRICONS said...
    //இனிமேல் நீங்கள் அவர்களை திருநங்கைகள் என்றே கூரலாமே..//
    //உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது வாழ்த்துகள்//

    அரவாணிகள் திருவிழா என்பதால் முழுவதும் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன்.

    யூத்புல் விகடனில் வந்தது குறித்து நீங்கள் கூறித்தான் அறிந்தேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  47. சே.வெங்கடசுப்ரமணியன்,
    தங்கள் வருகைக்கும்
    கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  48. thevanmayam said...
    //இன்னிலை மாற வேண்டும்!! இதற்கு ரோஸ் போன்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? நேசனல் ஜியாக்ரபிக்கு பேட்டி கொடுப்பதுதான் அவர்கள் முன்னேற்றத்துக்கு உதவுமா? வெறும் பப்ளிசிடி ஸ்டண்ட்களை விடுத்து அநாகரிக பாலியல் செய்கைகளிலிருந்து அவர்கள் வெளிவரும்போதுதான் அவர்கள் கேட்கும் முன்னேற்றமோ மரியாதையோ கிடைக்கும்!!//

    உங்களது கருத்துதான் எனது கருத்தும்,

    ReplyDelete
  49. அரவாணிகளை பரவசத்திற்கு பயன்படுத்தும் வாலுகள் தான் அதிகம். மற்றும் படி அவர்களை வித்தியாசபடுத்தாமல் ஒரே கண்ணோட்டத்தோடு பாருங்கள். அவர்களும் மனிதரகளே . உங்கள் பதிவுகளில் பிண்ணுட்டம் அதிகம் வந்தது இதற்கே. அரவாணிகளை இரசிப்பதற்கே படங்கள்.. படங்கள் இல்லாமல் பதிவிட்டால் என்ன? அவர்களை நீங்கள் விலைப்பொருட்க்ள ஆக்குகிறீர்கள். அவ்வவளுதான். பிழை இரு*ந்தால் மன்னிக்கவுமட்.ஃ பத்திரிகையில் விபச்சாரம் செய்த நடிகையின் படத்தை போடுவதும் வியாபாரம் தர்ன. வாசகரின் பரவசம் தான் காரணம். மற்றும் படி பத்திரிகை செய்வதும் விபச்சாரம் தான். அரவாணிகளை கவனிக்காமல் விடுவதே நல்லது. மற்றும் படி இங்கு பதிவிட்டவர்களில் அதிகமானோர் இந்த உணர்வை அடைந்திருப்பர். அதுதர்ன இயல்பு. நானும் கூட..

    ReplyDelete
  50. மிகச்சரியன விழிப்புணர்வு கட்டுரை

    ReplyDelete
  51. PLEASE INFORM ME BEFORE GO THERE AGAIN

    ReplyDelete
  52. நல்ல விழிப்புணர்வு ஆக்கம் இன்றைய தலைமுறை அறிய வேண்டிய விடயம் வாழ்த்துக்கள் வாசு

    ReplyDelete
  53. Hello Sir,

    This article is very nice Thanks for the information
    Saraswathipanneerselvam

    ReplyDelete
  54. nalla iruku ana enaku inum aravanigal pathina sila santhegangal undu atha nenga epdi virivu paduthuvenganu than enaku theriyala

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname