Friday, September 9, 2011

நான் இறந்திருக்கிறேன்



வானமும் மேகமும் ஒன்றையொன்று 
அணைத்தபடியிருந்த
மழைக்கால காலை அன்றுதான் 
நான் இறந்திருந்தேன்

உறக்கத்திலாழ்ந்திருப்பது போலிருப்பதாக
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்

இரவுக்குளம் போல 
சலனமற்றிருக்கிறதாம் என் முகம்

யாரையெல்லாம் அழ வைத்தேனோ
அவர்களெல்லாம் அழுது கொண்டிருந்தார்கள்

அழுதழுது ஈரம் வறண்ட சில கண்கள்
வருவோர் போவோரைப் பார்த்தபடியிருக்கின்றன

பதட்டமேதுமின்றி 
பேசிய பேசாத கணங்கள் குறித்து
நினைவுகளைக் கீறியபடி
நின்றிருந்தனர் நண்பர்கள்

விழி தேயப் பார்த்தும்
மொழி சிணுங்கக் கொஞ்சியும்
உடல் மலர பிணைந்தும் 
மையல் கொண்ட காதலிகள்
வந்திருந்தும் வராமலிருந்தும்
வருந்திக் கொண்டிருக்கிறார்கள்

எதிர்பார்த்தது என்றும்
எதிர்பாராதது என்றும்
திணறித்திணறி கள்ளமாய்க் கசிகிறது பேச்சு

அறைக்குள்ளிருந்து என் நினைவுகள் குறித்து
பற்றிய கொடி பறிக்கப்படுகிற வலியோடு
புழுங்கிக் கொண்டிருக்கின்றன புத்தகங்கள்

நான் ரசிக்காமலே
அதிர்ந்து கொண்டிருக்கிறது பறை

ஓய்ந்து கிடக்கிறேன் நான்.


பொன்.வாசுதேவன்

2 comments:

  1. //பதட்டமேதுமின்றி
    பேசிய பேசாத கணங்கள் குறித்து
    நினைவுகளைக் கீறியபடி
    நின்றிருந்தனர் நண்பர்கள்//

    நண்பர்கள்ன்னா பதற மாட்டாங்களா என்ன ? பின்ன என்ன நண்பர்கள்!!!

    ReplyDelete
  2. உணர்வுகளை மட்டுமே இங்கு பகிர்கிறேன் வாசு சார்.. நான்காவது வரியிலேயே கண்கள் கலங்கியதோடு மட்டுமின்றி கன்னம் கழுத்தென நணைத்தது கண்ணீர்..முதல் காரணம் தோழியாய் படித்தது..இரண்டாவது மரணத்தில் என்னை இறுத்தி பார்த்தது..........மூன்றாவது உணர்வது.....சொல்ல இயலவில்லை கவிதை அந்த அளவு ஈர்த்தது...

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname