Wednesday, February 24, 2010

பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி

- பொன்.வாசுதேவன்

உயிரோசை இணைய இதழில் வெளியான எனது கட்டுரை.

 

மொழியின் பயன்பாடு என்பது அம்மொழியின் பண்பாட்டின் அடிப்படையில் அதன் ஒத்திசைவோடு இயைந்து வழக்கத்தில் வருவது. வெவ்வேறு காலங்களில் நிலவி வந்திருக்கின்ற மக்களின் பண்பாட்டுப் புழக்கமே மொழியின் செழுமை மற்றும் சிறுமையை நிர்ணயம் செய்வதாக இருக்கிறது. இவ்விடத்தில் மொழியென பொருள் கொள்ளப்படுவது தமிழ் மொழியை முன்வைத்தே என்பதை கவனத்தில் கொள்ளவும்.

மொழி வழியிலான ஆய்வுகள் துல்லியமான மதிப்பீடுகளை வழங்குவதன் சாத்தியம் மிகக்குறைவு. இவ்வகையான மொழி சார்ந்த மதிப்பீடுகளை கால்டுவெல், வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ்முல்லர், H.R.ஹால் போன்றோரின் ஆய்வுகள் வெளிப்படுத்துகையில் அவை கணிப்புகள் என்ற அளவிலேயே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. கணிப்புகளின் நிச்சயத்தன்மை உறுதியிட்டுச் சொல்லக் கூடியவையாக ஆகிற வாய்ப்பு ஏற்படுகிற சூழல் மொழியின் உள்ளார்ந்த பன்முகங்களை ஆய்வுக்குட்படுத்தும் போது மட்டுமே நிகழ்கிறது.

art1

மொழி நாகரீகம் என்பது ஒரே சீராக வளர்ச்சியடைந்து விடக்கூடிய ஒன்று இல்லை. மொழியின் சொல்லாய்வு - மொழியாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு மொழியை அணுகியவர்களான பி.டி.சீனுவாசனார், ஞா.தேவநேயனார் போன்றோரின் ஆய்வுகளின் கணிப்பும், சமஸ்கிருதத்தை முதன்மைச் சான்றாகக் கொண்டு மொழியை அணுகியவர்களான மேலை ஆய்வறிஞர்களும் வெளிப்படுத்திய மொழியாய்வின் கணிப்பும் வெவ்வேறானவையாக இருந்தததற்கு அவர்களின் மொழி சார்ந்த அணுகுமுறையே காரணம்..

ஒலிக்குறிப்புகளாகவே அறியப்பட்ட தொடர்பு சாதனம் மொழி வடிவெடுத்த பிறகு உணர்ச்சி ஒலி, சுட்டு ஒலி,குறிப்பு ஒலி என ஒலித்தொகுதியாகத்தான் மொழி வகைமைப்படுத்தப்பட்டது. தமிழின் ஆதிவடிவம் ஒலிக்குறிப்புகளின்பாற்பட்டே தோன்றியிருக்கக்கூடும். தமிழ் மொழிக்கு மட்டுமேயன்றி, ஒலிக்குறிப்பே மொழியின் தொன்மம் என்பதை அனைத்து மொழிகளுக்கும் பொதுவான கோட்பாடாக கொள்ளலாம்.

மொழியில் உருவடிவம் கொண்ட பின் அதன் வளர்ச்சியானது சீராக, இன்னின்ன சொற்களுக்கு இன்னின்ன பொருள் என்ற சமுதாய பண்பாட்டின் அடிப்படையிலான கருத்தாக்கங்கள் ஏற்பட்டது. கருத்தமைவுகளின் அடிப்படையில் தன்னியல்பாக ஒரு வேர்ச்சொல்லிருந்து மற்றொன்று என விரிவடைந்து கொண்டே மொழி வளர்ச்சி நிகழ்ந்தது.

மந்தி என்ற பழந்தமிழ்ச் சொல்லிலிருந்து கிளர்ந்த மாந்தன் என்ற சொல் மனிதன் ஆகி திரிபுர எடுத்துக்கொண்ட காலத்தின் நீட்சி மொழி வளர்ச்சியின் ஒரு படியாகக் கருதப்படுகிறது. எண்ணற்ற மொழியாய்வுகள், சொல்லாய்வுகள் புதுப்புது கணிப்புகளை உதிர்த்தபடியே இருக்கின்றன. பார்த்தல்,தொடுதல், உணர்தல் ஆகிய வினைகளை ஒட்டியே மொழியும் வளர்ச்சி பெறத் தொடங்கியது.

மொழி ஆய்வுப் பணிகளில் வேற்று மொழிகளின் தாக்கம் என்பது முக்கிய இடத்தை வகிக்கிறது.பிறமொழிக் கூறுகள் ஒரு மொழியில் கலப்பில்லாமல் இருப்பின் அது அம்மொழி சார்ந்த பண்பாட்டு வளர்ச்சியின்மையையே வெளிப்படுத்துகிறது. உறவுப் பெயர்கள், சுட்டுப்பெயர்கள் ஆகியவை பயன்பாட்டில் புழங்குவதற்கான காரணியாக பழங்காலத்திற்குரிய வினைச்சொற்களே விளங்குகிறது.

மொழியாய்வுகளைப் பொறுத்தவரையில் ஏற்கனவே வழங்கப்பட்ட கருத்துகளை தற்போதைய வலுவான கருத்துகளின் வழியே பன்முக நோக்கில் நிறுவிக் காண்பித்தால் மட்டுமே ஏற்கப்படும். பெரும்பாலான மொழியாய்வுகள் சார்பு மனோபாவத்துடனும், மிகை கணிப்புகளாலும் நிறைந்து விடுவதாலேயே அவற்றின் நிரூபணம் ஏற்க இயலாததாகி விடுகிறது.

தொன்ம மொழியியல் ஆவணங்களிலும் இடைச்செருகல்கள் இருக்கக்கூடும் என்பதால் ஆவணப்படுத்தப்பட்ட முறையும், விதம் குறித்துமான கூர்நோக்குப் பார்வை முக்கியமானதாகிறது.

இலக்கிய அகழ்வாய்வுகள் நேரடி பொருளில் எடுத்துக் கொள்ளப் படாமல், அது படைக்கப்பட்ட காலம், அக்காலத்தைய சமுதாய பண்பாட்டுச் சூழல், ஒழுக்க நெறிமுறைகள், விழுமியங்கள் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உதாரணத்திற்கு, தொல்காப்பியத்தை ஆய்வுக்குட் படுத்தும்போது, தொல்காப்பியக் காலமான கி.மு.1250-இல் இருந்த பண்பாட்டுச் சூழல் குறித்தான ஆய்வுப் பார்வையும் அவசியமான தாகிறது. இப்படியாக மொழியாய்வின் போது அதற்கான சான்றாவணமாக கொள்ளும் மொழியியல் படைப்பை அது எழுதப்பட்ட அல்லது அவ்வாறாக கருதப்பட்ட காலத்தையும் கணித்து அறுதியிடப்பட வேண்டும்.

தமிழின் சொற்கூறுகள் உருவான விதம் பற்பல மொழியாய்வுகள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன.இவற்றுள் பல கணிமைகள் கவனம் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதன் காரணமாக அவை உரிய அங்கீகாரம் பெறுவதில்லை. பிராமணம் என்ற சொல்லின் வேர்ச் சொல் பற்றிய வரலாறு சுவாரசியமானது. ‘பரமணம்‘ என்றால்‘வேற்றுக்கூட்டம்‘ என்பது பொருள். பரமணம் என்பது மருவியே தமிழில் பிராமணர் என்றாகியிருக்கக்கூடும் என மொழி ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் மூலமாக ‘பரமணர்‘ என்ற சொல்லாட்சியை நீட்சியான ஆய்வுக்குரிய நாம் ஒரு கூற்றாகவும் கொள்ளலாம்.

மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுகிற போது சில காலம் கழித்து அதுவே பண்பாடாகிப் உருவெடுக்கிறது. ஒரு காலத்தில் சமூக ஒழுங்காக ஏற்கப்பட்ட ஒன்று பிறிதொரு காலத்தில் ஏற்புடையதாக இருப்பதில்லை. இது பண்பாட்டு வளர்ச்சி நிகழ்வு எனலாம்.

தற்போது மொழி சார்ந்த ஆய்வுகளின் அவசியம் என்ன எனும் கேள்வி எழலாம். மொழியின் மீதான ஆய்வியல் அணுகுமுறை பண்டிதத்தனங்களுக்கப்பாற்பட்டு மொழி சார்ந்த பண்பாடு மற்றும் சமூக கட்டமைப்புகள் சார்ந்து மேற்கொள்ளப்படுமாயின் மொழியின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப் படுகிறது.இதுவரையிலான மொழியாய்வுகள் முழுமையான கருத்தை வெளிப்படுத்தாமல் கணிப்புகளாகவே பெரும்பாலும் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு இதுவே காரணம். எந்தவொரு மொழியையும் பண்பாடு,கலாச்சாரம், சமூக கட்டமைவு சார்ந்து ஆய்ந்தறிவதன் வழியே மொழியானது வேறோர் தளத்திற்கு நீட்சியடையக்கூடிய வாய்ப்புண்டு.

ஒரு சமூகத்தின் பண்பாடு சார்ந்தே அதன் மொழி வளர்ச்சியும், பிறமொழிப் புணர்ச்சியும், திரிபுகளும் நிகழ்கின்றன என்பது உண்மை. இக்கட்டுரை முழுமையான மொழியாய்வுக் கட்டுரை அல்ல.மொழியாய்வுகள் பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் நிகழுமாயின் பண்பாட்டின் வேரிலிருந்து கிளைத்ததுதான் மொழி வளர்ச்சி என்பதனை நாம் உணரலாம் என்பதற்கான ஒரு சிந்தனை மட்டுமே.

000

Further Readings :

1. P.T.Srinivasa Iyangar, The Stone Age in India

2. P.T.Srinivasa Iyangar, Pre-Aryan Tamil Culture

3. Rt.Rev.Robert Caldwell, A Comparatve Grammer of the Dravidian or South-Indian Family of Languages (1976)

4. ஞா.தேவநேயனார், தமிழ் வரலாறு (1967)

27 comments:

  1. மொழி - ஒலியினால் சிதறுகிறது என்பதும் உண்மையா சார்?

    ReplyDelete
  2. hi-fi :)

    வாழ்த்துக‌ள் வாசு.

    ReplyDelete
  3. பாட பெஸ்தகம் படிக்கறா மாரி இருந்துது... ரண்டு பேராக்கு மேல நான் எஸ்கேப்பு

    இதெல்லாம் ’தீவிர வாசகர்கள்’ படிக்கறதுன்னு நெனைக்கறேன்

    ReplyDelete
  4. வடமொழியான சமஸ்கிருதத்தில் இருந்துதான் பெரும்பான்மையான இந்தியமொழிகள் உருமாறி வளர்ந்திருக்கின்றன. வடக்கில் பெர்ஷியர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் மொழியில் உருதுக் கலப்பும் ஏற்பட்டது. தெற்கில் தமிழும் மலையாளமும் பெருமளவில் சமஸ்கிருதத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

    புலம் பெயர்தலும் இங்கே முக்கிய பங்கு. சமூகத்தின் பெரும்பான்மையினர் பேசும் மொழியின் கலப்பினால் மழலைகள் பல மொழி கலந்து பேசுவது போலவும்.

    திபெத் மற்றும் பர்மீய மொழிகளை பற்றி அறியவும் ஆவல்.

    ReplyDelete
  5. //வடமொழியான சமஸ்கிருதத்தில் இருந்துதான் பெரும்பான்மையான இந்தியமொழிகள் உருமாறி வளர்ந்திருக்கின்றன. வடக்கில் பெர்ஷியர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் மொழியில் உருதுக் கலப்பும் ஏற்பட்டது. தெற்கில் தமிழும் மலையாளமும் பெருமளவில் சமஸ்கிருதத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
    //

    ஹிஹி.. அப்புறம்? இதத் தானே தொன்றுதொட்டு சொல்லி வாரீங்க.

    சமஸ்கிருதமே கலந்து செய்யப் பட்ட செம்மொழின்னு தானெ சொல்றாங்க. கலந்து செய்யப் பட்ட செம்மொழி எப்படிங்கண்ணா பல மொழிகளுக்கு மூலமொழி ஆவும்? அதுக்கு மாறாக அது அப்படிப்பட்ட பழங்குடி மொழிகள்ல இருந்து சொற்கள லவட்டிக்கிட்டு, சுட்டுக்கிட்டு உருவாக்கிய செயற்கை மொழியாகத் தானே இருக்க முடியும்? சமஸ்க்ருதமே வேதகாலத்து நாடோடி மொழியின் தொடர்ச்சியான சந்த மொழியின் நீட்சியாக, வட திராவிட மொழிகளான பிராகிருதத்த தொட்டுக் கிட்டு, கிரேக்க இலக்கண அமைப்போட வந்தது தானுங்களே? முதல் சமஸ்கிருதக் கல்வெட்டு எந்தக் காலத்துங்கண்ணா சமஸ்கிருதம் எந்த பிரதேசத்துல பேசப் பட்டதுங்கண்ணா, அதயும் சொல்லிடுங்க. ஒரு வேள தேவலோகத்துல போல! உங்க பேரே உங்க பின்புலத்தக் காட்டி நிக்குதுங்கண்ணா! வாழ்க சமஸ்கிருதம்! வாழ்க தேவபாஷை! ஒழிக நீசபாஷைகள்! வாழ்க ஆர்யவர்த்தம்! ஓங்குக பிரம்மனின் நாவிலிருந்து பிறந்த மொழியின் புகழ்!

    ReplyDelete
  6. please read thava thiru chattambi swamikal s book aadi mozhi, very gud analysis on languages, esp tamil and sanscrit. i think more reliable and scientific

    ReplyDelete
  7. பரிதிமால்February 24, 2010

    முதல் முறை உங்கள் ஆக்கத்தை படிக்கிறேன். அழகான நேர்த்தியான மொழியில் எழுதப் பட்டிருக்கிறது.
    அதன் பேசு பொருளைப் புரிந்து கொள்ளாது கீழொரு எல்லாமே சமற்கிருதத்திலிருந்து தொடங்கியதெனத் தொடங்கும் பின்னூட்டம் சிரிப்பை வரவழைத்தது!

    ReplyDelete
  8. அருமையான கட்டுரை..

    ReplyDelete
  9. தங்கள் மொழி ஆளுமை ஆச்சரிய படுத்துகிறது

    ReplyDelete
  10. அருமையான கட்டுரை

    சில செய்திகள் புதியதாக இருக்கின்றன‌

    வாழ்த்துகள்

    ReplyDelete
  11. வாசு,உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவு ஆச்சரியப்படுத்துகிறது..இன்னும் சிறிது எளிதான தமிழில் எழுதி இருக்கலாம்,அதிகப் பேரை சென்றடைந்திருக்கும்.
    மொழிநடை பலரை முதல் பத்தியிலேயே கழட்டி விடும் அபாயம் இருப்பதால் சொன்னேன்..
    :)

    மற்றபடி நன்றியும்,பாராட்டுகளும்!

    நேரம் இருக்கும் போது இந்த இரண்டு பதிவுகளைப் படித்துப்பாருங்கள்...

    விதூஷ்...பெயருக்கேற்றாற் போலத்தான் கருத்து சொல்லியிருக்கீங்க..சிரிச்சு வைக்கிறோம்..

    ReplyDelete
  12. பரிதிமால் மற்றும் அறிவன்: என் பின்னூட்டத்தையும் படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க :)

    ReplyDelete
  13. அப்படியே என் மனதில் எழுந்த ஒரு சின்ன கேள்விக்கும் முடிந்தால் சிரித்து வையுங்களேன்:)

    இன்று நடைமுறையில் ஆங்கிலம் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது என்பதற்காக ஆங்கிலம் தமிழை விடத் தொன்மையானது என்று சொல்லி விட முடியுமா?

    நீங்களும் நம் தாய்மொழியை நேசிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  14. {இன்று நடைமுறையில் ஆங்கிலம் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது என்பதற்காக ஆங்கிலம் தமிழை விடத் தொன்மையானது என்று சொல்லி விட முடியுமா?}

    என்ன சொல்ல வருகிறீர்கள் விதூஷ்?
    தமிழ் சமத்கிருத்தை விட அதிகப் பயன்பாட்டில் இருக்கிறது என்பதால் தமிழைப் பழமையானது என்று யாராவது சொன்னார்களா என்ன?
    அப்படிச் சொன்னார்கள் என்றால் அதுவும் தவறு..

    லாஜிக் தியரி படித்திருக்கிறீர்களா?மேற்கண்ட கூற்றின் ரிவர்ஸ் லாஜிக்தான் சரி..

    சமத்கிருதம் என்றாலே கூட்டி அமைக்கப்பட்டது என்பது பொருள்.அது இயல்பான ஒரு மொழியை அல்ல.

    வாசுவின் பதிவில் விவாதம் வேண்டாம்...இதைப் பற்றி ஒரு பதிவு போடும் போது உங்களுக்கு சொல்கிறேன் !
    :))

    ReplyDelete
  15. விதோஷ்,
    உங்களுக்கு ஆதியில் அடித்த சோமபானப் போதை இன்னும் இறங்கவில்லை போலிருக்கிறது.
    அது தான் சமஸ்கிருத பினாத்தலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
    இதை உங்கள் சமஸ்கிருத விரும்பிகளை சுற்றி வைத்துக் கொண்டு, வேண்டுமானால்
    ஜெயகாந்தனையும் கூட வைத்துக் கொண்டு சொல்லி ஆர்ப்பரித்து மகிழுங்கள்!மற்றத் தமிழர்கள் கூடும் சபையில் இப்படிப் பட்ட உளறல்களோடு வந்தீர்களெனில்
    இப்படித் தான் எதிர்வினை இருக்கும்.

    *சமஸ்கிருதம் எங்கு பேசப் பட்டது?

    *யாரால் பேசப் பட்டது? எந்த அடித்தட்டு மக்கள் அதைப் பேசினர்?
    ஒரு மொழி அடியிலிருந்து கிளம்பித் தான். மேலே சென்று, கற்றோர் கைகளில் வந்து,செந்தரம் பெறும்!

    *முதற் கல்வெட்டு எவ்வாண்டைச் சேர்ந்தது?

    *முதலில் இலக்கணம் வகுத்தது யார் (பாணினி என்று கரடி விடாதீர்கள்!)?

    இந்த உருட்டல் புரட்டலுக்கெல்லாம் முன்னிருந்த தமிழர்கள் வேண்டுமானால் ஆவென வாயைப் பிளந்து கொண்டு சரிங்க சாமி!, அப்படியா! என துண்டைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு ஏமாந்திருப்பர். இக்காலத் தமிழர் அப்படி என எண்ணி விடாதீர்கள். இந்த தேவமொழி
    மயக்கம் அறுபட்டு நாளாகிவிட்டது!

    //இன்று நடைமுறையில் ஆங்கிலம் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது
    என்பதற்காக ஆங்கிலம் தமிழை விடத் தொன்மையானது என்று சொல்லி விட முடியுமா?//

    நாங்கள் சொல்ல வந்ததைக் கூடச் சரியாகப் புரியாது உளறி வைத்திருக்கிறீர்கள் கம்பு கொடுத்து அடி வாங்கிக் கட்டிக் கொள்வதெ ன்பார்கள் இதை.
    சமஸ்கிருதத்தில் அதிகம் சொற்கள் சமைக்கப் பட்டதால், எல்லா மொழி இலக்கியங்களையும் அந்த அரைச் செயற்கை மொழியில் மொழி பெயர்த்ததால் அம்மொழி தொன்மை யானதாகிவிடுமா? என நாங்கள் கேட்கலாம்!
    ஒரு இடத்திலும் வழங்கப் படாத, வெறும் சபைகளில் மட்டுமே வழங்கப் பட்ட Esperanto வகை மொழி எப்படி முதல் மொழியாகும்?

    ஒரு இயன்மொழி எப்படி உருவாகும். அது ஆதியிலிருந்து மனித வாய், நாவிலிருந்து உண்டாகும் தற்செயல், செயல் ஒலிப்புகளிருந்து உருப் பெறும். கூ என்று கூவிக் கொண்டலையும் பறவையை
    நெடுநாள் அவதானித்திருந்த ஒருவன், ஒரு இனக்கூட்டம் அதற்கு குயில் எனப் பெயரிடுவது இயல்பு.
    கண்டது, கேட்டது, உயிரினங்களி லிருந்து, இயற்கையிலிருந்து பெற்ற ஒலிகளோடே ஒரு இயன்மொழி உருப் பெறும்.ஆ என்று கத்திய விலங்குக்கு ஆ,ஆன் எனபெயரிடும் இயன்மொழி. தன்னைச் சுற்றியுள்ளவற்றிலிருந்து பெறும் பட்டறிவு களிலிருந்து, பருப்பொருட்களிலிருந்து சொற்களை உண்டாக்கும்.
    செயற்கை மொழிகள் சொல்வது போல் ஆதியிலே abstract nouns , உயர் சிந்தனை சொற்களெல்லாம்
    உண்டாகாது. சம்ஸ்கிருதவாளர்களின் நகைச்சுவை அரங்கம், ஆண்டா ண்டாய் வருவது.

    புதிதாய் வருவது எனப் பொருள் படும் புது > புதல் =புதல்வன், புதல்வி பிராகிருந்தங்களிலிருந்து
    உருமாறி புத்ர என்றாகும். இச்சொல்லுக்கு வடமொழிக்காரர் காட்டும் வேர்ச்சொல் உதாரணம் இது.
    கேட்டுச் சிரிக்காதீர்கள்.அதிலும் தெளிவின்றி 2, 3 உதாரணங்கள் வரும்.
    புத்= தீய உலகு; த்ரா = காப்பவன், மீட்பவன்
    புத் என்னும் தீய நரகத்திலிருந்து அம்மா,அப்பாவை மீட்பவன் புத்திரன். அட அட டா...
    2வது விளக்கம் புஷ்= ஊட்டு, சத்து அளி; ஊட்டமளித்து உருவானவன்

    குமுதம் என்ற சொல் இன்னொரு எடுத்துக்காட்டு.குவிந்து கிடக்கும் மலர். கும்மி வருதல், கும்முதல் குவிதல் என்றாகும் தமிழில்.
    அது வட மொழி இட்டுக் கட்டாளர்களின் கையில் படும் பாட்டைப் பாருங்கள்.
    கு - குக, குவ்த், குத்ர என்ற வகையில் ஓர் வினாச்சொல்லெனக் கற்பனித்துக் கொண்டு
    முத் = இன்பம், மகிழ்ச்சி எனக் கொண்டு
    "என்ன மகிழ்ச்சி" எனப் பொருள்படும் படி வேர்ச்சொல் விளக்கம் இருக்கும்.
    குமுதம் என்றால் வடமொழி வழி என்ன மகிழ்ச்சி, இன்பம் என வேர்ப்பொருள் அமையுமாம்.
    இதுவா இயன்மொழி? இதுவா இந்திய மொழிகளையெல்லாம் ஈன்ற மொழி?

    அரையாடையுடன் சிக்கிக் முக்கிக் கல்தேய்த்து (தே>தேய்>தீ) கல்லாயுதத்துடன் இருந்த மனிதன்
    விளியொலி, ஒப்பொலி, சுட்டொலி கேட்டுப் பெயர் வைத்திருபானே தவிர இந்த மாதிரி எல்லாம் தருக்கித்து லாஜிக்குடன் வேலை வினைகெட்டு உட்கார்ந்து யோசித்துப் பெயர் வைப்பானா?

    அகநாழிகை ஐயா, மன்னிச்சுக்கணும்! உங்க அருமையான இடுகைய திசை திருப்ப விரும்பல.ஆனா இதுபோன்ற நெடுநாள் விஷமேற்றல்களுக்கு உடனுக்குடன் பதில் சொல்ல கை பரபரத்தது, எதிர்த்து பதிலுரைக்காது வாழாதிருக்கவும் முடியல. மீண்டும் மன்னிக்கவும்!

    ReplyDelete
  16. அனானி,
    அடித்து விளையாடி இருக்கிறீர்கள்..
    திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கேட்பது போல்,யாருய்யா நீ..என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது..

    இந்த வேர்ச்சொல் விவாதங்களுக்குள் எல்லாம் சென்று வாசுவின் பதிவில் கூறுகட்டி அடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன்..நீங்கள் விளையாடி விட்டீர்கள்..
    சோமபானத்தை'த் தவிர்த்திருக்கலாம்..

    தமிழைப் பிழையின்றியும் எழுதியிருக்கலாம்!(பதிலுரைக்காது வாழாதிருக்கவும்-பதிலுரைக்காது வாளாவிருக்கவும்)..

    நன்றி.

    ReplyDelete
  17. 247 எழுத்துக்களில் எத்தனை உயிரற்று இயங்காமல் இருக்கின்றன!
    ஜ, ஸ, ஷ எல்லாம் தமிழிலே உச்சரிக்க முடியுமா?

    பாவனை என்றதில் உள்ள ’பா’ தமிழில் இருக்கிறதா?

    இப்போதிருக்கும் வரி வடிவமே கால்டுவெல் மற்றும் ஈ.வெ.ராமசாமி போன்ற தமிழரல்லதோரின் நற்கொடைதானே? யின் கொடைதானே?
    இன்றளவும் பிற மொழிக் கலப்பில்லாமல் பேசிடும் அறிஞர் ஓரிருவர் தானே உளர்?
    .
    ஏ என்ற எழுத்தை எ வுக்கும் மேல் புள்ளி வைத்தன்றோ மயங்கித் திரிந்தனர் தமிழர். மற்ற மொழிகளுக்குத் தமிழே மூல மொழி என்பது ஒன்றும் பெருமை பீற்றும் செய்தியன்று.

    எல்லா மொழிகளினின்றும் சொற்களை இரவல் பெற்று ஆங்கிலம் பெருமளவு பேசப்படும் மொழியாய் விளங்கிட வில்லையா?

    தமிழனுக்கேயுண்டான குறுகிய மனம் மற்றும் காழ்ப்புணர்வுகளை விட்டொழித்துப் பிற மொழி - அது சமஸ்கிருதமேயெனினும் - அரவணைத்துத் தமிழ் மொழியினை அடுத்த கட்டத்துக்கு எடுத்த்ச் செல்ல விழைவீர். மறைவாக உமக்குள்ளே பழங்கதைகள் சொல்லி மகிழ்வதில் ஒரு பயனும் இல்லை.

    இதை எழுதிடும் எனது தாய்மொழி தமிழே! நான் பார்ப்பனனும் அன்று. சிந்திக்கத் தெரிந்த பரந்த மனப்பான்மையும் தமிழ் பரவ வேண்டும் என்ற பெருவிருப்பும் கொண்டதொரு தமிழன்.

    ReplyDelete
  18. //247 எழுத்துக்களில் எத்தனை உயிரற்று இயங்காமல் இருக்கின்றன!
    ஜ, ஸ, ஷ எல்லாம் தமிழிலே உச்சரிக்க முடியுமா?
    பாவனை என்றதில் உள்ள ’பா’ தமிழில் இருக்கிறதா?//

    மெத்தப் படிச்ச, "பற"ந்த மனப்பான்மை கொண்ட அண்ணாச்சிக்கு குறுகிய மனப்பான்மை கொண்ட தமிழார்வலன் எழுதிக்கொள்வது,
    முதல்ல உங்களுக்குப் புடிச்ச மாரி ஒரு நமஸ்காரம்!

    நண்பர் அகநாழிகை இங்கு தனித்தமிழில் எழுதுங்கள், வட எழுத்து தவிர்ப்பீர் என்றா இடுகை போட்டிருக்கிறார் (அங்கீகாரம், சாதனம், ஸ்திரத்தன்மை என சொற்களையும், ஸ் போன்ற கிரந்த எழுத்துக்களைழும் காணலாம் மேல் இடுகையில்)? தமிழ் என்று எங்காவது எழுதியிருப்பதை கண்டுவிட்டாலே போதும், ஆதியில் இருந்து அந்தம் வரைப் புரியாவிட்டாலும் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி வந்து விடுவது...

    ப.ம.அண்ணாத்தே (அதான் பரந்த மனப்பான்மை), தமிழ் முதல் எழுத்து, அடிப்படை எழுத்துக்கள், உயிர் , மெய்யென 30! மீதிலாம் தேவைக்கேற்ப, கூட்டுக்கேற்ப வருவது!

    குருவுக்கு Gu அல்லாத தமிழ் வகை கு என்ற உச்சரிப்பு போல பாவனைக்கு பா என்ற உச்சரிப்பு தான் சரியானது! உங்கள் அறிவு புல்லரிக்க வைக்கிறது. வடவர் வாயில் வந்து விட்டாலே அவர்கள் உச்சரிப்பு தான் சரியென்றாகி விடுமா?
    ஈழத்தமிழைக் கேட்டதில்லையோ? அங்கு பாவித்தல்,பாவனை தான், Baவனை இல்லை! நீங்கள் எங்களுக்கு புரிய வைக்க முயன்ற உச்சரிப்பு ஒருவேளை நாட்டியக் கலைச்சொல்லொன்றான Baaவம் என்ற வடசொல்லில் இருக்கக் கூடும்;-)

    ள,ல, ழ வேறுபாட்டை ந,ன,ண வேறுபாட்டை, ழ என்ற ஒற்றை எழுத்தின் உச்சரிப்பை ஆங்கிலத்தில் கொண்டு வந்துவிட முடியுமா..?
    ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தன்மை உண்டு. அந்த அந்த பிரதேசத்தின் தட்பவெப்ப நிலைக்கேற்ப, சூழலுக்கேற்ப, மக்களின் பழக்கவழக்கங்களுக்கேற்ப அவர்களுக்குரிய தனித்தன்மையுடன் உருவெடுக்கும் மொழி. காரம் உண்ட நாவுக்கு தனி உச்சரிப்பு, பனிபுயல் காலமெங்கும் வீசி தாக்கும்போது வாயைத்திறக்காது மூக்கொலியுடன் ஒரு உச்சரிப்பு என ஓவ்வோர் இடத்துக்கும் ஓர் தனித்தன்மை. ஒரு மொழியில் சொல்லப் படுவது அடுத்த மொழியில் சொல்லக் கூடியதாய் இருக்க வேண்டுமென்பதில்லை.
    ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஒரு எழுத்துக்கு ஒரு ஒலி தான் கொடுக்கப் பட்டிருக்கும்.
    ஓர் எழுத்து ஓர் ஒலிக் குணம் கொண்டதல்ல தமிழ். ஓரெழுத்து பல்லொலி, வார்த்தைக் கூட்டுக்கேற்ப மாறும். ஹ,ஜ ஒலிகள் தமிழிலும் உண்டு. முருகன், காகம், தாகம் போன்ற சொற்களில் இயல்பாகவே ஹ உச்சரிப்பு வந்துவிடும். காஞ்சனை, அஞ்சு, பஞ்சம் என்கையில் ஜ வந்து விடும். ஃ என்ற அஃகேனம் கூடிநின்று நிறைய ஒலிப்பைக் கொடுக்கும். உதாரணம்>
    அஃது(இதன் உச்சரிப்பு அஹ்து அல்ல) = adhu (dh).
    செர்மன் நாட்டுக்காரனுக்கு சுட்டுப் போட்டாலும் ஜ வராது, Jasmin அவனுக்கு யஸ்மின். முடிந்தால் ஒலிப்புக்கு ஏற்ப சொல்லையே
    எழுத்துக்களையே மாற்றி விடுவான். Jungle எனப் பொருள்படும் அல்லது அச்சொல்லிருந்து பெறப் பட்ட நிகர்ச்சொல்லை Dschungel என்று தான் எழுதுவான். சீனனுக்கு r வராதது போல். பிரெஞ்சுக்காரன் மென்பொருள, அதுதாங்க சாஃப்ட்வேரு, logicielம்பான். கணினிய நிச்சயமா computerங்க மாட்டான், அவனுக்கு அது ordinateur, செர்மன்காரனுக்கு அது Rechner! எது அவரவருக்கு வசதியோ,அம்மொழிக்கு
    பொருத்தமோ அவ்வகையில் சொற்கள் ஆக்கப்படும்! நாமளாச்சும் இடுகுறிப் பெயரகளத் தவிர்த்து சொல் சமைக்கறோம்!
    வேறநாட்டுக்காரன், அவன் வழில அவன் போயிட்டே இருக்கான், ஆலந்துகாரன் Jeansக்கு spijkerbroekன்னு கம்மியர் போடும் குழாய், மிதிவண்டிக்காரர் போட்டலையும் கொழான்னு தான் சொல்லுவான்!

    ReplyDelete
  19. தமிழின் வளம் தெரிஞ்சு தானுங்கண்ணா நம்ம முன்னோரு வெளிய இருந்து வந்த பொருளுக்கெல்லாம் எளிமையா
    மக்கள்மொழில ஒட்டகம் (நீண்ட நாள் உண்ணாதிருக்கும் திறனை வைத்து), கரும்பு, மிளகாய் (மிளகுக்கு மாற்றாய் வந்ததால்), உருளைக்கிழங்கு, குப்பாயம், குதிரை, பேரீச்சம்ன்னுலாம் பேரு வச்சாங்க! உயர்குடிக்காரவுக தான் மக்கள்மொழி பேசினா மதிப்பு குறையும்மின்னிட்டு வேற்றுமொழிகள வெறும் பிலுக்குக்கு அரசசபைகள், கற்றோரவைகள்ல பேசிட்டு அலைஞ்சாக. அடிமட்டம், கீழ் வருக்கத்துக்கு எளிய தமிழ்தானுங்கோ!

    இன்னிக்கு 5 % வாற பிறமொழி நாளைக்கு 20 % ஆகும், அதுவே இன்னும் சில ஆண்டுகள்ல 50 % ஆகும், 100 % கூட ஆகும்.
    அப்போது சேர இடங் கொடுத்த மொழி இருக்காது. அதுக்குப் பதிலா அத ஆக்கிரமிச்ச மொழி தான் இருக்கும். அப்பவும் அப்பாவியா ஒங்கள மாரி சில பேரு, தமிழ் மொழி அது தான்னு சொல்லிட்டு அலைவீங்க. ஏற்கனவே அப்படி
    ஒரு நிலைல இருந்து தான் மீண்டு வந்திருக்கோம்.. மலையாளம்ன்னு தமிழின் வட்டார வழக்கொண்ணு பிரிஞ்சுது தனியா! நல்ல வேள மணிப்பவள நடை தொடரல! காரியதரிசி, சிசுருஷை, ராகத்துவேஷம், பிராயச்சித்தமுலாம் போயி, செயலாளர், பணிவிடை, விருப்புவெறுப்பு, கழுவாய்ன்னு எளிய சொற்கள் வந்துது! எளிமையா தமிழ்ல சொல் இருக்கணும், கண்டடையணும் இப்போ பலரும் முயற்சிக்கும் இந்த மாற்றத்துக்கெல்லாம், தமிழியக்கம் தான் காரணம் அண்ணே. அட நீங்க கூட பாருங்க, உங்கள உணராமலே வரிவடிவம், நற்கொடை, அரவணைப்புன்னுலாம் போட்டு அடிச்சிருக்கீக. இதெல்லாம் எப்படி உள்ள வந்ததுன்னு தெரியுமா ?
    இந்த இலட்சணத்தில் தமிழ் மொழியின் அடிப்படையே புரியாது, எல்லாம் தெரிந்தது போல் ஒரு சபையில் மற்றோருக்கு
    உபதேசம் செய்ய வந்திருப்பது நகைச்சுவையானது. இதெல்லாம் நாங்களும் ஆண்டாண்டா சொல்லிட்டு வாரோம். எரும மாட்டு மேல மழ பெஞ்சாப்புல, திரும்பவும் அதே சல்லியத் தான் நீங்களும் வந்து அடிக்கறீங்க!

    //மற்ற மொழிகளுக்குத் தமிழே மூல மொழி என்பது ஒன்றும் பெருமை பீற்றும் செய்தியன்று.//

    முதல் மொழி, இரண்டாம் மொழி, மூன்றாம் மொழி, முப்பத்து மூன்றாம் மொழின்னு யாரு சொல்லிருக்கா, அப்படியே சொன்னா உங்களுக்கு என்ன பண்ணுது பெருமை கொள்றவங்க கொண்டுட்டு போகட்டும்ணா அதுக்கு எதிரா மொழியியல் ஆதாரங்களோட ஒரு கட்டுரை போடுங்க. படிச்சு நாங்களும் திருந்திக்கறோம்! முதல்மொழிக்கு ஆபிரிக்க மொழிகள், சொடுக்கு மொழின்னு போட்டி
    அதிகமுங்கண்ணா. நாங்க இங்க பேசுறது இயன்மொழியப் பத்தி.இயன்மொழின்னா என்ன கலவை மொழி, திரிமொழின்னா என்ன என்றாவது தெரியுமா?

    //எல்லா மொழிகளினின்றும் சொற்களை இரவல் பெற்று ஆங்கிலம் பெருமளவு பேசப்படும் மொழியாய் விளங்கிட வில்லையா?//

    ஆங்கிலங்கறதே ஒரு கலவை மொழி அண்ணாத்தே, அத நீங்க இயன்மொழிகளோட ஒப்பிடுறது தான் செம தமாசு.போவுது போங்க. இங்கிலாந்துத் தீவுக்குப் போன செர்மன் பழங்குலங்களான பிராங்கர், அங்கெலரின் பழம் தியூத்தானிய
    சொற்களும், ஏற்கனவே அங்க இருந்த செல்டுகளின் சொற்களும் ஒண்ணாகி, அப்புறம் விக்கிங்கர்களின் வட செர்மன் வகைமொழியும் சேர்த்து உருவான ஒண்ணு. இதுல ஒண்ணு இல்லன்னா அதுனால தனித்து இயங்க முடியாது! அப்புறமா,
    உரோமானியப் படையெடுப்பு, பிற்காலப் பிரெஞ்சுத் தாக்கம் காரணமா அம்மொழில பிரெஞ்சுச் சொற்கள் அதிகமாச்சு.
    அத எதிர்த்துப் போராடி இயக்கம் கண்டு, இப்போ நீங்க எழுதறீங்க அந்த ஆங்கிலத்துல இருந்த பிரெஞ்சுச் சொற்கள் குறைத்து தற்கால நடைக்கு வித்திட்டதே, நீங்க பீத்திக்கிற ஆங்கிலத்துல இருந்த தனித்தமிழ் இயக்கம் போன்ற ஒரு
    இயக்கம் தான் அண்ணாத்தே. அது கெடக்கட்டும், பிரெஞ்சா, செர்மனா, ஸ்பானியமா, ஆங்கிலமாங்கற என்ற அனைத்துலக வாக்கெடுப்புல ஆங்கிலம் ஓரிரு வாக்குகள் அதிகமா பெற்றுத் தான் Lingua Franca ஆன கதயாது தெரியுமா?
    ஆங்கிலம் பெருமளவு பேசப் படும் மொழி ஆனதுக்கு அவர்களின் காலனிகளும், சூரியன் மறையா இராச்சியமும் ஒரு காரணங்கறது உங்க பரந்த அறிவுக்கு புரியாம போனது விந்தை தான்! அதிகாரமும், அரசு இருக்கற மொழி
    அனைத்தையும் அமுக்கி வென்று செல்லுங்கறது எளிய சூத்திரம்!

    ReplyDelete
  20. //இப்போதிருக்கும் வரி வடிவமே கால்டுவெல் மற்றும் ஈ.வெ.ராமசாமி போன்ற தமிழரல்லதோரின் நற்கொடைதானே? யின் கொடைதானே? இன்றளவும் பிற மொழிக் கலப்பில்லாமல் பேசிடும் அறிஞர் ஓரிருவர் தானே உளர்?//
    இப்பவே கண்ணக் கட்டுதே! நெறயப் பேரு இருந்த உடனே நீங்க மனமாற்றம் அடஞ்சிருவீகளாக்கும்?
    கால்டுவெல்லார் வரிவடிவம் கொடுக்கல்ல, அவரு திரவிட மொழி ஒப்பிலக்கணம் வகுத்து, திரவிட மொழிக்குடும்பத்த உலகுக்கு அறிமுகஞ் செய்தாரு! அதப் பண்ண புண்ணியவான் வீரமாமுனிவருங்க, அதுல பாருங்க அவரு கூட ஒரு தமிழ்வெறியருங்க, இல்லன்னா சமஸ்கிருதத்துல இருந்த பேர தமிழுக்கு மாத்தி வைப்பாரா :-p

    //இதை எழுதிடும் எனது தாய்மொழி தமிழே! நான் பார்ப்பனனும் அன்று. சிந்திக்கத் தெரிந்த பரந்த மனப்பான்மையும் தமிழ் பரவ வேண்டும் என்ற பெருவிருப்பும் கொண்டதொரு தமிழன்.//
    இந்த மாதிரி எழுதறப்போ, இது மாரி ஒரு டிஸ்கி போடுவது வலையுலகின் அண்மைக்கால முக்கிய பாணிகளில் ஒன்று ;-D நாங்க நம்பிட்டோம்! நாங்க நம்பிட்டோம்! இந்த குறுகிய மனப்பான்மை கொண்ட எளியோர மீட்டெடுத்து மறுவாழ்வளித்து, எங்களையும் மனுசராக்கி வாழ வைக்க முயலும் உங்க பெருந்தன்மைக்கு நன்னி!

    ReplyDelete
  21. சமஸ்கிருதம் என்றாலே செம்மையாக உருவாக்கப்பட்ட மொழி என்று வடமொழியான சமஸ்கிருதமே விளக்கம் கொடுக்கிறது இதை விடப் பெரிய விளக்கம் விதூஷ்க்கு (இவருக்கே இது தெரியும்) தேவையில்லை

    ReplyDelete
  22. பரந்த மனப்பான்மை அனானி சொன்னதை இன்னொரு அனானி சரியாக புரிந்து கொள்ளாதது இதை எழுதுகிற அனானிக்கு வருத்தமே.
    ப.ம. அனானி அகநாழிகையின் இடுகைக்கு அவ்வாறு பின்னூட்டமிட்டிருக்கமாட்டாரென தோன்றுகிறது. தமிழ் வெறியால் பகுத்துணராத இன்னொரு அனானிக்கு அளித்த பதிலாக கொள்ளலாம்.
    மலையாளம் தமிழில் இருந்து உருவாகவில்லை. மலையாள மொழி வல்லுநர்களிடம் கேளுங்கள். மேலும் ப.ம. அனானி ஜா இருக்கிறதா என்றால் உதாரணமாக ஜா என்ற உச்சரிப்பை 247 எழுத்தில் எப்படிச் சொல்வது எனக் கேட்கிறார். அதற்கு பஞ்சதில் ஜா இருக்கிறது அஞ்சனத்தில் ஜா இருக்கிறது என்று உளற வேண்டாம். தமிழ்ப் பற்று தழைக்கட்டும். தமிழ் வெறி மறையட்டும்.

    ReplyDelete
  23. //ப.ம. அனானி அகநாழிகையின் இடுகைக்கு அவ்வாறு பின்னூட்டமிட்டிருக்கமாட்டாரென தோன்றுகிறது. தமிழ் வெறியால் பகுத்துணராத இன்னொரு அனானிக்கு அளித்த பதிலாக கொள்ளலாம்.//
    இங்கு எங்கு தமிழ் வெறி வந்ததென்று தெரியவில்லை. எழுதியிருக்கும் அனைவரும் வடசொல், கிரந்த எழுத்து பயனாக்கி உள்ளர். :-D சமஸ்கிருதத்திற்கு எதிராக எழுதினால் உடனே தமிழ் வெறி! என்ன அறிவு! பகுத்துணர்தல்ன்னா என்ன :-p, மேல கருத்து சொன்னோருக்கு ஆமாம் சாமி போடறது போல!

    //மலையாளம் தமிழில் இருந்து உருவாகவில்லை. //
    மொழியறிஞர்களை சிபார்சு செய்யவும்! கேட்டுத் தெரிஞ்சுக்கறேன். முடிஞ்சா, சமஸ்கிருதமும் அல்லாத, தமிழும் அல்லாத மலையாளத்துக்கே உரித்தானதெனக் கொள்ளப் படும் சொற்களை பட்டியலிடவும்! வாதிடத் தயாராய் உள்ளேன்!

    //மேலும் ப.ம. அனானி ஜா இருக்கிறதா என்றால் உதாரணமாக ஜா என்ற உச்சரிப்பை 247 எழுத்தில் எப்படிச் சொல்வது எனக் கேட்கிறார். அதற்கு பஞ்சதில் ஜா இருக்கிறது அஞ்சனத்தில் ஜா இருக்கிறது //

    ஓர் எழுத்து ஓர் ஒலி மொழிகள், ஓர் எழுத்து பல்லொலி மொழிகள் விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கு. மொழியியல் தெரிந்து கொண்டு பேச வரவும்! படிப்போருக்கு புரியும் வண்ணம் விளக்கி இருக்கு பின்னூட்டம். முடிந்தால் மொழியியல் ரீதியில் எதிராடவும், ஒற்றைத்தனமான வாந்தியெடுப்புக்களைத் தவிர்த்து!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname