Tuesday, February 23, 2010

பாகம் - 2 : அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும் (படிக்கத் தவறாதீர்கள்)

“அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும்“ படிக்கத் தவறாதீர்கள் (பாகம் – 1) ஏற்கனவே படிக்காதவர்களுக்காக…

வாலிப, வயோதிக அன்பர்களே !

நாம் ஏற்கனவே படித்த ‘அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும்‘ கதையின் இரண்டாவது பாகத்தை தங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நேற்று வெளியான முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தையும் வாசித்து பிடித்திருந்தால் பெருவாரியான ஓட்டளித்து இக்கதையை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். (என்னதான் இருந்தாலும் வரலாறு முக்கியம் அல்லவா..) மேலும் இவ்வாறாக செய்வதன் மூலம் இராமசாமி என்கிற ‘தீப்பொறி‘யின் எழுத்துலக வாழ்க்கையில் விளக்கேற்றும்படி கோடானுகோடி இரசிகப் பெருமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

வெற்றி நடை போடுகிறது !
அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும் (சிறுகதை) பாகம் – 2

flame wrapper

ஒரு நல்ல நாள் பார்த்து இராமசாமியும் துரையும் பதிப்பாளரை சந்திக்கச் சென்றார்கள். சந்து பொந்தெல்லாம் புகுந்து தேடி ஒருவழியாக பதிப்பாளர் வீட்டை அடைந்தார்கள். கட்டுக்கட்டாக புத்தகங்கள் நிரம்பிய அந்தச் சிறிய அறையில் புத்தகக் கட்டுகளுக்கு நடுவே சிறிதளவே பதிப்பாளர் முகம் தெரிந்தது.

“இப்போல்லாம் சமையல் குறிப்பு, கோலப்புத்தகம், ரமணி சந்திரன் கதை இந்த மாதிரி புத்தகம்தான் போட்டதும் நிறைய விக்குது. போட்ட காச எடுக்கணும்னா இப்படிதான் புக்கு போட வேண்டியிருக்கு என்னத்த செய்ய. கதை, கட்டுரைன்னாலே மக்கள் ஓடிடறாங்க. கவிதைன்னா கேக்கவே வேணாம். அப்படியே சரி நல்லாயிருக்கேன்னு புக்கா போட்டாலும், எழுதுனவருக்கு தெரிஞ்ச நாப்பது பேர்தான் புக்கை வாங்கறாங்க. இதான் நிலைமை“ அவர் தெளிவாகச் சொன்னார்.

“இல்ல சார். என் கதைங்கல்லாம் படிக்க நல்லாயிருக்கும். சமுதாயத்தில ஒரு மாற்றம் வரும். படிச்சாலே பரபரப்பாயிடும்“ இராமசாமி ஆர்வமாக சொன்னான்.

“உங்க பேரு என்ன சொன்னீங்க...“ என்றார் பதிப்பாளர்.

“இராமசாமிங்க“ சட்டென வாயில் அவனுடைய சொந்தப்பேர் வந்து விட்டது.

“இல்லைங்க பேர் இராமசாமி. ‘தீப்பொறி‘ன்ற பேர்ல எழுதறாரு. நல்லா எழுதுவாரு. நீங்க ஒரு வாய்ப்பு கொடுங்க“ துரைதான் சட்டென சொல்லி காப்பாற்றினான்.

“இதோ பாருங்க இராமசாமி தீப்பொறி.... பேர்லாம் நல்லாதான் இருக்கு. ஆனாலும் நான் சொன்னதுதான் நடைமுறையில இருக்கற நிஜம். சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க புத்தகத்தை போட சொல்லுவீங்க, விழால்லாம் வெச்சி வெளியிடுவோம், நாப்பது, அம்பது புக் விக்கும், அதோட நீங்க திருப்தியாயி போயிடுவீங்க. அதுக்கப்பறம் நான்தான் மூட்டை கட்டி வெச்சுகிட்டு அலையணும். புதையலை பூதம் காத்த கதைதான். அதனால புத்தகத்தை போட முடியாதுங்க. எனக்கு இதான் தொழிலு. விக்கற புக்கை போட்டாதான் நான் நாலு காசு சம்பாதிக்க முடியும்... என்ன நான் சொல்றது சரிங்களா“ என்றார் பதிப்பாளர்.

காற்றுப் போன பலூன் மாதிரி சுருங்கிப்போனது இராமசாமியின் முகம். ஆனால் சுரீரென உள்ளுக்குள் கோபம் வந்தது. நாளைக்கே என் புத்தகம் வெளியானதும் என் கிட்டே வந்து உங்க புத்தகத்தை போடறேன்னு நிப்பேயில்ல அப்ப வெச்சுக்கறேன் உன்னை என்று மனசுக்குக்குள் கறுவியபடி, “சரிங்க சார்... ரொம்ப நன்றி“ என்றபடி துரையுடன் எழுந்து அங்கிருந்து வெளியே வந்து விட்டான். துரையும் அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

இராமசாமியும், துரையும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே வந்தார்கள். துரை வேறொரு யோசனை சொன்னான். பதிப்பாளரை போய் புத்தகம் போடச் சொல்லி கேட்பதைவிட ஒரு எழுத்தாளரை கேட்டால் அவர் நமக்கு உதவுவார். எழுத்தாளனின் மனதை எழுத்தாளர்தானே புரிந்து கொள்வார் என்றான்.

இப்போதும் துரை சொல்வதே சரியாகப்பட்டது இராமசாமிக்கு. எப்படியாவது ஒரு கடைநிலை எழுத்தாளனாகவாவது ஆகிவிட துரை தனக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவான் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாக தேடி கடைசியில் ஒரு எழுத்தாளரை கண்டு பிடித்து விட்டான் துரை. அவரும் புத்தகம் போட சரியென்று சொல்லி விட்டதால், மறுபடியும் துரையும் இராமசாமியும் அந்த எழுத்தாளரை தேடி படையெடுத்தார்கள்.

அந்த எழுத்தாளர் வீட்டிற்கு வந்தால் தன் மனைவிக்கு பிடிக்காது என்பதால், அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் சந்திக்கலாம் என்று கூறி அங்கே காத்திருந்தார். முன்பிருந்த பதிப்பாளர் இவர் இராமசாமியின் எழுத்துகள் விலைபோகாது என்று மறுக்கவில்லை. ஆனால் இராமசாமி பணம் கொடுத்தால் மட்டுமே போட முடியும் என்று சொல்லிவிட்டார். இந்த யோசனை இராமசாமிக்கும் பிடித்திருந்தது. இவனே எழுதி இவனே புத்தகம் போடுவதைவிட வேறு யாரோ ஒருவர் போட்டால் நன்றாயிருக்கும்தானே.

அடுத்த சில வாரங்களில் வேலைகள் மும்முரமாக நடைபெற்றது. இராமசாமி மனைவியிடம் எழுத்தாளனாக முதல்முறையாக மனம் திறந்து பேசுகிறான்.

“நானும் படிக்கும்போதே நிறைய எழுதியிருக்கேன். உன் கிட்டே சொல்லலை. அந்த ஆர்வம் எனக்குள்ள எப்பவும் கனலா இருந்துகிட்டே இருந்தது. இப்போ போட்டா உங்க புத்தகத்தைதான் போடுவேன்னு ஒரு பதிப்பாளர் ஒரே தொந்தரவு பண்றார். அவருக்காகதான் தொடர்ந்து எழுதிகிட்டே இருந்தேன். சீக்கிரமே என்னேட புத்தகம் வெளிவரப்போகுது. தமிழ்நாட்டுல பெரிய புரட்சியே நடக்கப் போகுது பார்“ இராமசாமி சொல்லிக் கொண்டே போனாள்.

இராமசாமி எழுதுவான் என்பது அதிர்ச்சியாக இருந்தாலும் அவன் மனைவிக்கும் பெருமையாகவே இருந்தது. இனிமேல் தான் எழுத்தாளரின் மனைவி என்று ஊரில் சொல்லிக் கொள்ளலாம். அதனால் மகிழ்ச்சியுற்றாள். இராமசாமி எழுத்தாளன் என்றறியப்பட்ட நாளிலிருந்து அவன் மனைவியின் உபசாரமும், பணிவிடையும் சிறப்பாக இருந்தது. இராமசாமியும் இதற்குதானே ஆசைப்பட்டான்.

  1. புதிய பூபாளம்
  2. புரட்சிப் பொறிகள்
  3. இராமசாமிகள்
  4. அக்கினிக்குஞ்சம் ஆங்கோர் பொந்தும்
  5. பொறி பறக்குது

புத்தகம் போடுவது என்று முடிவானதும் என்ன தலைப்பு வைக்கலாம் என்று பல தலைப்புகளை ஒரு காகிதத்தில் வரிசையாக எழுதிவிட்டு அதைப்பற்றியே இராமசாமி சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் வாழ்வின் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடியதான சாத்திமுள்ள முக்கிய நிகழ்வு அது. அதனால்தான் எப்போதுமில்லாத அதீத கவனத்துடன் அதில் ஈடுபட்டிருந்தான்.

கடைசியில் தொகுப்பிற்கு தலைப்பாக “அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும்“ என முடிவாகியது. இந்த தலைப்பை துரைதான் சொன்னான். காரணம் ‘தீப்பொறி‘ என்ற பெயருக்கு இதுவே பொருத்தமான தலைப்பு என்பதுதான்.

ஒரு சுபதினத்தில் பத்திரிகையெல்லாம் அச்சடித்து முக்கியப் பிரமுகர்கள், எழுத்தாளர்களை அழைத்து வந்து வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு விருந்தினர்களாக அவனது மனைவியின் ஊரிலிருந்து நாட்டாமைகளும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அது அவனது மனைவின் விருப்பமாக இருந்தது. தன் கணவனும் ஒரு எழுத்தாளன்தான் என்பதை உலகறிவதைவிட தன் கிராமத்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அவளுடைய எண்ணமாக இருந்தது. இராமசாமிக்கும் அதில் குஷிதான். உள்ளுக்குள் கொப்பளித்த மகிழ்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் விழா மேடையில் அமர்வதற்கு அவனுக்கு கூச்சமாக இருந்தது. இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இறுக்கமான எழுத்தாளர் பாவனையோடு அமர்ந்திருந்தான்.

“தீப்பொறி அப்படிப்பட்டவர்.. தீப்பொறி இப்படிப்பட்டவர்... தீப்பொறி எப்படிப்பட்டவர்.... என்றெல்லாம் இராமசாமியைப் பற்றி இராமசாமிக்கே தெரியாத விஷயங்களையெல்லாம் எடுத்துக்கூறி புகழ்ந்து கொண்டிருந்தனர் வந்திருந்த விருந்தினர்கள். அனைவருக்கும் இரவு சிறப்பு விருந்தும் இராமசாமி ஏற்பாடு செய்திருந்தான். வெளியீட்டு விழா முடிந்து எல்லோரும் சென்று விட்டனர். இராமசாமியின் மனைவியும் அவள் ஊரிலிருந்து வந்திருந்தவர்களோடு வீட்டுக்கு சென்று விட்டாள்.

விழா நடைபெற்ற இடத்தில் எஞ்சியிருந்தவர்கள் இராமசாமி, துரை மற்றும் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளர் மட்டும்தான். மொத்தம் அறுபத்தியிரண்டு புத்தகங்கள் விற்பனையாகியிருந்தது. யாரோ ஒருவர் 30 புத்தகம் மொத்தமாக வாங்கியிருந்ததாக விற்பனை புத்தகத்தில் பதிவாகியிருந்ததை துரை காட்டினான். யார் அவர் என்று பார்த்தால் அது இராமசாமியின் மாமனார். ஊரில் கொடுக்க வாங்கியிருப்பார் என்றான் இராமசாமி.

சந்தோஷம், களைப்பு என சொல்லவியலாத கலவையான மனநிலையில் இருந்தான் இராமசாமி. புத்தகம் போட்ட எழுத்தாளர் தனக்கு பத்து புத்தகங்கள் தருமாறு கேட்டுக் கொண்டான்.

“அதுக்கென்ன நீங்கதான் எனக்கு பத்து புத்தகம் தரணும். உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்“ என்றான் இராமசாமி.

“இல்லை. நான் வீட்டுக்கு பத்து புத்தகம் மேலே எடுத்துச் செல்ல முடியாது. அதனால் பத்து போதும்“ என்றார் பதிப்பாளர்.

புத்தகத்தை அவர் எடுத்துச் சென்று விற்பனை செய்து தருவார் என்றல்லவா நினைத்திருந்தான். ஆனால் அவர் பத்து புத்தகம் போதும் என்கிறாரே. இராமசாமிக்கு அதிர்ச்சியாய் இருந்தது. கட்டுக்கு ஐம்பது புத்தகம் வீதம் இருபது கட்டு புத்தகங்கள் இருந்தது. அதை அவன் வீட்டில் வைப்பதற்குக்கூட இடமில்லை. மேலும் உறவினர்களால் வீடு வேறு நிறைந்திருக்கும்.

ஆனால் பதிப்பாளர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. பத்து புத்தகம் மட்டும் போதும் என்றும், அவர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு போவதை வீட்டில் சொல்லவில்லை என்பதால் அதைக்கூட நாளை வாங்கிக் கொள்வதாகவும் கூறினார்.

பிறகு பத்து புத்தகத்தை மட்டும் எடுத்து அவரிடம் கொடுத்து ஆட்டோவுக்கு பணம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்கள். இராமசாமியின் தோற்றத்தைப் பார்த்து துரைக்கு பாவமாக இருந்தது. இப்போதைக்கு தனக்கு துரையால் மட்டுமே உதவி செய்ய முடியும் என்று இராமசாமிக்கு தோன்றியது.

பிறகு துரையிடம் பேசி எல்லா புத்தகங்களையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு துரை தங்கியிருந்த அறையில் இறக்கி வைத்து விட்டு இரவு வீடு திரும்பும்போது மணி ஒன்று ஆகியிருந்தது. அவன் மனைவியும் நன்றாக உறங்கியிருந்தாள்.

மறுநாள் காலை அலுவலகம் சென்றவுடன் புத்தகங்களை எப்போது எடுத்துக் கொள்ளப் போகிறாய் என்று துரையிடமிருந்து போன் வந்தது. ஊரிலிருக்கும் அவன் தம்பி வர இருப்பதால், இட நெருக்கடியாக இருக்கும், எனவே புத்தகங்களை சீக்கிரமே எடுத்து விடும்படி துரை கூறினான்.

அடுத்த சில வாரங்களுக்குள் பதிப்பாளர் வீட்டில் இட்ம் இல்லாததால் புத்தகங்களை வைத்துக் கொள்ள சொல்லியிருக்கிறார் என்று மனைவியை மெல்ல சமாதானப்படுத்தி, புத்தகங்களை எடுத்து வந்து விட்டான். அவனது படுக்கையறை புத்தகங்களால் நிறைந்து கிடந்தது.

புத்தகம் வந்ததிலிருந்து இராமசாமியை அவன் மனைவி எப்போது இதெல்லாம் விற்கும் என்று தனது கேள்வியெழுப்பியபடியே இருந்தாள். மேலும், தன் ஊரில் இருக்கும் எழுத்தாளர் வீட்டில் அவரது புத்தகங்கள் சில பிரதிகள் மட்டுமே இருக்கும் என்றும், பிறர் எழுதிய புத்தகங்களை மட்டும் வரிசையாக அடுக்கி வைத்திருப்பார் என்றும் தெரிவித்தாள்.

இராமசாமி சமாதானங்களைச் சொல்லிச் சொல்லி களைத்துப் போனான். அலுவலகம் செல்லும்போது கையில் தினமும் பத்து புத்தகம் கொண்டு செல்வான். அவனுடன் பணி புரியும் சக பணியாளர்களிடம் எனது புத்தகம் என்று சொல்லி கையெழுத்திட்டு இலவசமாக கொடுப்பான்.

புத்தகத்தை கையில் வாங்கும் எல்லோரும் முன்னட்டையில் எழுதியவர் ‘தீப்பொறி‘ என்றிருப்பதைக் கண்டு இராமசாமியை சந்தேகமாக முதலில் பார்ப்பார்கள். பிறகு, இராமசாமி, “என் பேர்தான் அது. புனைபெயர்ல எழுதியிருக்கேன். பின் அட்டைல போட்டோ போட்டிருக்கு பாருங்க“ என்று அவர்களுக்கு அப்புத்தகத்தை எழுதியது தான்தான் என்பதை நிரூபணம் செய்வான்.

என்ன காரணமோ தெரியாது, அவனிடமிருந்து புத்தகத் வாங்கிய யாரும் அவனுடனான பேச்சு வார்த்தையை துண்டித்துக் கொண்டனர். அவனும் கடும் மன உளைச்சலில் தனக்குத்தானே பேசிக்கொள்ளவே நேரமில்லாத நிலையில் இருந்தததால், பிறரைப் பற்றி கவலைப்படவில்லை. இதற்கிடையில் அவனுக்கென்று பேச இருந்த ஒரே நண்பன் துரையும் வேலை காரணமாக வட மாநிலம் சென்று விட்டிருந்தான். புத்தகம் போட்ட பதிப்பாளரும் தன் மாமனார் நடத்தி வந்த ஓட்டலை மேற்பார்வையிட வேற்றூரில் குடியேறிவிட்டார்.

ஐந்து மாதமாகியும் இருநூறு புத்தகங்கள் மட்டுமே தீர்ந்திருந்தது. இராமசாமியின் மனைவி ஏன் இந்த புத்தகமெல்லாம் இங்கேயே இருக்கிறது என்று கேட்டு பலமுறை நச்சரித்து சலித்துப்போய் விட்டுவிட்டாள். இப்போதெல்லாம் அவள் இராமசாமியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அலுவலகத்திலிருந்து வந்த உடன் உணவை எடுத்து வைத்துவிட்டு டி.வி. பார்ப்பதில் முழ்கி விடுவாள். இராமசாமிக்கு அவனைவிட அவள் டி.வி.க்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

இராமசாமி ஜன்னலோரம் அமர்ந்து வெகுநாட்களாகிறது. பரணில் வைத்திருக்கும் புத்தகக் கட்டு அவன் மேல் விழுவது போல நடுநிசியில் கனவு வந்து அலறி எழுவதும் இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது. இப்போதெல்லாம் இராமசாமி பேனாவை கையெழுத்து போடவும், அலுவலக பணிகளுக்காகவும் மட்டுமே உபயோகிக்கிறான்.

000

இப்படியாக ‘தீப்பொறி‘ என்கிற இராமசாமியின் தீராத எழுத்தார்வமும், எழுத்துலகப் பயணமும் நிறைவுற்றது.

படித்து ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி… நன்றி… நன்றி.

- பொன்.வாசுதேவன்.

25 comments:

  1. நான் குடியிருக்கிறது ரெம்ப சின்ன வீடு.. எனவே எழுத்தாளர் ஆசையை மூட்டை கட்டி வைத்து விடுகிறேன்..
    :)

    ReplyDelete
  2. இது பெரும்பாலும் உண்மையே தான்...கதை படிக்கும் போது சிரிப்பு வந்தாலும் உணர்வோடு வாசிக்கும் போது இராமசாமியாய் பயணிக்கும் போதும் வலி தான் எஞ்சுகிறது....

    நல்லவேளை எனக்கு இன்னும் புத்தகம் போடும் ஆசை வரவில்லை(என்னவோ போட்டா போட்டி போட்டு படிக்க ஆட்கள் இருப்பது மாதிரி) இதை படித்த பின் வருமான்னு தெரியலை சார்......ஹஹ்ஹஹா

    ReplyDelete
  3. மொத பாகத்தையும் இப்போதான் வாசிச்சிட்டு வர்றேன். அருமை அருமை[பாகம்-2-க்கும் சேர்த்து]!!

    எறும்பு சொன்ன மாதிரி எல்லோரும் ஆசையை மூட்டை கட்டுவது ஒரு பக்கம்:))!

    அதே நேரம் பதிப்பாளரா இருந்துகிட்டு இப்படியொரு கதைய போட்டா உங்க கல்லா என்னாவாகுமுங்க:))))?

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு.

    கடைசியில நாலு டிஸ்கி இருக்கும்னு எதிர்பார்த்தேன்...

    ReplyDelete
  5. தீப்பொறியோட சின்னப்பையன் விழாவில் பேசினானா? அப்புறம் புத்தகங்களை பதிப்பாளரின் கார் டிக்கியில் வைத்திருக்கலாமோ?

    ReplyDelete
  6. யதார்த்தம் நகைச்சுவையுடன்... அருமை :)

    ReplyDelete
  7. :)

    //எறும்பு said...

    நான் குடியிருக்கிறது ரெம்ப சின்ன வீடு.. எனவே எழுத்தாளர் ஆசையை மூட்டை கட்டி வைத்து விடுகிறேன்..
    :)//

    ஆஹா... எறும்பெல்லாம் ஒதுங்குதே! :)

    தீப்பொறி எழுதிய கதையைப் பற்றியும் ஒரு விமர்சனம் தந்திருக்கலாம்..

    வேதியியல்துறையைச் சேர்ந்த ஒரு ஆசிரியர், புத்தகம் வெளியிட முடிவு செய்து அதைத் தெரிந்த பதிப்பக நண்பர் ஒருவரின் மூலம் புத்தகமாக்கிவிட்டு புத்தகக்கண்காட்சியில் கட் அவுட் வைத்து, புத்தகங்களை விற்கக் காத்து அமர்ந்து இருக்கும் கதையொன்று ஆவியில் படித்த ஞாபகம் வருகிறது. எழுதியவர் பெயரை மறந்துவிட்டேன். :((
    தெரிந்தால் குறிப்பிடவும்.

    வடகரை வேலனுடன் உரையாடுகையில் புத்தகப் பதிப்பு சிரமங்களைப் பற்றி கூறிக்கொண்டு இருந்தார். எழுத்தாளர், பதிப்பாளர் ஆனது குறித்தான நடைமுறை தத்துவத்தை எளிமையாக ஏற்றியுள்ளீர்கள்.

    (டிஸ்கி: நீங்க எத்தனை புத்தகம் எழுதி, வெளியிட்டு இருக்கீங்க வாசுதேவன்ஜி?)

    ReplyDelete
  8. //இராமசாமி எழுத்தாளன் என்றறியப்பட்ட நாளிலிருந்து அவன் மனைவியின் உபசாரமும், பணிவிடையும் சிறப்பாக இருந்தது. இராமசாமியும் இதற்குதானே ஆசைப்பட்டான்.//

    க‌ல்யாண‌ ப‌ரிசு க‌தை நினைவுக்கு வ‌ருது.

    நிறைய‌ விச‌ய‌ம் புரியுது வாசு.

    ReplyDelete
  9. அச்சச்சோ... பாவம் தீப்பொறி.......

    ReplyDelete
  10. //நான்தான் மூட்டை கட்டி வெச்சுகிட்டு அலையணும்//

    நீங்களும் அனுபவிச்சிருப்பீங்க போல....

    நடுவுல கொஞ்சம் படிக்கும்போது கல்யாணப்பரிசு தங்கவேலுதான் ஞாபகத்துக்கு வந்தாரு...

    சட்டுன்னு முடிச்சிட்டீங்களே....

    ReplyDelete
  11. பாகம் - 2, ஒவ்வொரு எழுத்தாளனையும் மனதளவில் பாதித்த விடயங்களைத் தொட்டுச் செல்கிறது. ஆக்கங்களைத் தூக்கிக் கொண்டு அலைவது இன்று வரை மாறாமல் அப்படியே உள்ளது.

    புரட்சியை ஏற்படுத்துவதற்காக காலம் நம்மை புடம் போடும் முயற்சி தான் அலைச்சல் போலும்.

    ReplyDelete
  12. ஆஹா !
    நான் எதிர் பார்த்த முடிவு . இருக்கட்டும் யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வராமலா போய்விடும் தீப்பொறி ஆறுமுகத்திற்கு !

    ReplyDelete
  13. அப்பாடா இப்பவாவது தீப்பொறிக்கு புத்தி வந்துதே.

    ReplyDelete
  14. என் கவிதைத் தொகுதியை வெளியிடுவதற்கு முன் இந்தக் கதையை வாசித்து விட வேண்டும்

    ReplyDelete
  15. படிக்கத் தவறாதீர்கள் எனும் போதே நினைத்தேன் இது பகடி வகை என்று ... ஸ்வாரஸ்யமான நகைச்சுவை நடை ... களம் புதிதாக இல்லாவிட்டாலும் வசீகரிக்கிறது ... :)

    ReplyDelete
  16. கதையின் பெயர் 'அ' வில் ஆரம்பிக்கிறது. இராமசாமி அநேகமாக பத்திரிக்கை ஆரம்பித்தால் 'அ' வில் தொடங்கும் இலக்கிய பத்திரிக்கையாக இருக்கும். மாட்டிக்கிட்டீங்களா?

    ReplyDelete
  17. "இவன் வேறு எப்ப பார்த்தாலும் தொகுப்பு போடு,தொகுப்பு போடுன்னு கேட்டுக் கிட்டே இருக்கான்னு" எனக்கு பதில் சொல்லியது போல் இருந்தது.வலியாகவும் இருந்தது.

    எம்பெருமான்,ஞானபண்டிதன்,சீலைக்காரி,பதினெட்டாம்படி கருப்பு,ஏழை காத்த அம்மன்,இப்படி ஏதாவது ஒரு சக்தியின் திருவிளையாடலாக அல்லது இந்த எல்லா சக்திகளின் திருவிளையாடலான்னு தெரியலையே..கருவேலநிழல் வந்தது?

    :-)

    லாவண்யா,நர்சிம்,விநாயகம்,காந்தி உங்க குலசாமி என்னப்பு?

    ReplyDelete
  18. இது போலத்தான் இருக்கு பல எழுத்தாளர்களின் வாழ்வு...

    ReplyDelete
  19. ;-) இது ஏற்கனவே பார்த்த கதைதான்!

    ReplyDelete
  20. புக் போடறதுக்கு ஒரு பதிப்பாளரான உங்ககிட்ட யோசன கேக்கலாம்னு இருந்தா அதுக்குள்ள இப்புடி ஒரு கதையப்போட்டு நீங்க உஷாராயிட்டீங்களா சார்!.

    ReplyDelete
  21. கடைசியில இப்படி முடிச்சுட்டீங்களே சார்.

    எனக்கு மறைமுகமா ஒரு அறிவுரை சொன்னா மாதிரி இருக்கு.

    நன்றி.

    ReplyDelete
  22. ஓ, புக் போட்டா அதை வைக்க இடம் வேணுமோ, இப்படி ஒரு ஆங்கிள் இருக்குதா? :)))

    எழுத்தாளரோட ஆதங்கம் புரிகிறதோ இல்லையோ, ஒரு பதிப்பாளரின் வேதனை புரிகிறது.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname