Monday, February 22, 2010

அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும் (படிக்கத் தவறாதீர்கள்) (பாகம் – 1)

அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும் (சிறுகதை) பாகம் - 1

flame wrapper

  1. புதிய பூபாளம்
  2. புரட்சிப் பொறிகள்
  3. இராமசாமிகள்
  4. அக்கினிக்குஞ்சம் ஆங்கோர் பொந்தும்
  5. பொறி பறக்குது

ஒரு காகிதத்தில் வரிசையாக எழுதிவிட்டு அதைப்பற்றியே இராமசாமி சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் வாழ்வின் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடியதான சாத்தியமுள்ள முக்கிய நிகழ்வு அது. அதனால்தான் எப்போதுமில்லாத அதீத கவனத்துடன் அதில் ஈடுபட்டிருந்தான்.

சரியாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக 122 எண்ணுள்ள பேருந்தில் தன் மனைவியோடு, அவள் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு அருகிலிருக்கும் கலிங்கலேரி கிராமத்திற்கு போய்க் கொண்டிருந்தபோதுதான் இப்போதைய அவனது மாற்றத்திற்கான விதை அவனுள் விழுந்தது.

திருவண்ணாமலை சென்று இறங்கியதும் கிராமத்திற்கு செல்லும் நகரப் பேருந்தில் ஏறி இருவரும் அமர்ந்தார்கள். அவனுடைய மனைவி அவனை விட அழகாகவும், பேரழகியாகவும் இருந்தது குறித்த கர்வம் அவனுக்கு அதிகம் இருந்தது. அதே சமயம் அவனுடைய பெரும்பாலான நேரத்து கவலையும் அதுதான்.

பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் வண்டியில் இல்லை. பேருந்தை எடுக்க உரிய நேரம் ஆகாததினாலே அல்லது டீ குடிக்கவோ, செய்தித்தாள் வாசிக்கவோ, பண்டிகை முன்பணம் குறித்து பேசிக்கொண்டிருக்கவோ இல்லை வேறெதற்கோ சென்றிருக்கக்கூடும். பேருந்தின் இருக்கைகள் நிரம்பி விட்டது. சலசலப்புக்கும் பஞ்சமில்லை. கிராமத்து மனிதர்களின் பேச்சுக்கு கேட்கவா வேண்டும்.

இராமசாமி இச்சத்தங்களினால் பெரும் எரிச்சலுற்றான். என்றாலும், முதல் முறையாக மனைவியின் சொந்த கிராமத்திற்குப் போகிற இவ்வேளையில் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவன் மனைவியின் குடும்பம் கிராமத்தைவிட்டு எப்போதோ நகரத்திற்கு குடிபெயர்ந்து விட்டார்கள். ஊரிலிருக்கும் அவளது தாத்தாவை பார்த்துவிட்டு வருவதற்காகவே இப்போது அங்கு செல்கிறார்கள். அவள் ஒரே பெண் என்பதால் தாத்தாவின் ஆஸ்திகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் நூறு சதவிகிதம் இருக்கிறது. இதன் பொருட்டே பல இம்சைகளை இராமசாமி தாங்கிக் கொண்டான்.

அவன் மனைவி பள்ளியிறுதி வரை மட்டுமே படித்தவள் என்றாலும், அவளது அழகின் கூர்மை அவனால் தாங்க இயலாததாய் இருந்தது. அழகுக்கே உரித்தான கர்வமும் அவளிடம் இருந்தது. அதனால் அவனை அடக்குவதற்கான ஆயுதமாக அதையே அவள் பிரயோகித்தாள். அவனுடைய தோற்றத்துக்கு அவள் மனைவியாக கிடைத்தது அதிகம்தான். எனவே அவளிடம் அவன் பல விஷயங்களின் அவன் அவளுக்கு அடிமையாகவே நடந்து கொள்வான்.

பேருந்தில் ஏறிய நடுத்தர வயதுடைய ஒருவரால் திடீரென வண்டியில் சலசலப்பு குறைந்து விட்டது. பலரும் எழுந்து வணக்கம் சொன்னார்கள். இராமசாமியின் மனைவியும் அவருக்கு எழுந்து வணக்கம் சொன்னாள். பிறகு, அவளுடைய ஊரைச் சேர்ந்தவர் அவர் என்றும், அவர் எழுத்தாளராக இருப்பதால் ஊரில் அவருக்கு மிகவும் மரியாதை என்றும் கூறினாள். தான் அவரை வாசித்ததில்லை என்றாலும் சிறந்த எழுத்தாளர் என்று எல்லோரும் சொல்வார்கள் என்பதால் அவர் மீது மிக மரியாதை உண்டு, எழுதுவது என்பதெல்லாம் மிகவும் புத்திக் கூர்மையுள்ளவர்களால் மட்டுமே உண்டு என்று சொல்லிக்கொண்டே போனாள்.

சென்னையிலிருந்து வந்திருக்கும், கௌரவமான பணியில் இருக்கும் உனக்கு அளிக்காத மரியாதையை இந்த கிராமத்து மக்கள் ஒரு எழுதுகிறவனுக்கு கொடுக்கிறார்களே. நீயெல்லாம் என்ன வேலை பார்த்து, என்ன கௌரவமாய் இருந்து... இராமசாமியின் மனசாட்சி அவனைப்பார்த்து கெக்கலித்தது.

ஒருவழியாக ஊருக்குப் போய்விட்டு சென்னை திரும்பினார்கள். ஊருக்கு போய் திரும்பி வந்ததிலிருந்து இராமசாமியின் வாழ்க்கை மந்திரித்து விட்ட கோழி போல வீடு – அலுவலகம் – வீடு என சுற்றிச் சுழன்றபடியிருந்தது. அவனுக்குள் சதா ஏதோவொன்று அரித்தபடியிருந்தது.

இராமசாமிக்கு நண்பர்கள் அதிகமில்லை. அதுவுமில்லாமல் அவனுடன் நண்பனாக இருப்பது மிகவும் கடினம். அவனுக்கு இரண்டு விஷயங்கள் பற்றி மட்டுமே பிடிக்கும். ஒன்று அவன் அவனைப்பற்றி புகழ்ந்து பேசுவான் அல்லது அவனைப் பற்றி அடுத்தவர்கள் புகழ்ந்து பேசவேண்டும். அவனுடன் நட்பு கொள்ள வேண்டுமானால் இந்த எழுதப்படாத ஒப்பந்ததத்திற்கு ஒப்புக் கொண்டாக வேண்டும். இதனாலேயே அவனுக்கு நண்பர்கள் விஷயத்தில் வறட்சி நிலவியது.

இராமசாமியின் வகுப்புத் தோழர்களில் சென்னையில் இருப்பவன் துரை மட்டுமே. மாடு புல் மேய்ந்து கொண்டிருப்பதைப் போல சதா துரையின் கண்கள் எப்போதும் புத்தகத்தின் எழுத்துக்களையே பார்த்துக் கொண்டிருக்கும். துரை எழுதியெல்லாம் இராமசாமி பார்த்ததில்லை. ஒரு வேலைக்கும் போகாமல் சதா படித்துக் கொண்டேயிருக்கும் அவனைக் கண்டாலே இராமசாமிக்கு பிடிக்காது. ஆனாலும் அவனுடைய வகுப்புத் தோழன் என்பதால் சகித்துக் கொள்வான்.

துரையை சந்திக்கத் தீர்மானம் செய்து, போன் செய்து அவனை அலுவலகத்திற்கு அருகிலிருக்கும் பூங்காவிற்கு வரச்சொன்னான். மாலை அலுவலகம் முடிவதற்கு முன்பாகவே கிளம்பி, துரையை பார்க்க பூங்காவிற்கு சென்றால், அவனுக்கும் முன்பாகவே அவன் அங்கே வந்திருந்தான். வழக்கம்போலவே கையில் ஏதோவொரு புத்தகம்.

துரையைப் பார்த்ததும் இராமசாமி சுற்றி வளைக்காமல் நேரடியாக தன் மன அரிப்பைக் கூறினான். தனக்கு எப்படியாவது எழுத்தாளனாகிவிட வேண்டும் என்றும், வாழ்வின் சகலவிதமான சௌகரியங்களையும் இந்த இளைய வயதிலேயே பெற்றுவிட்டதால், தனக்கு இதுவரை கிடைக்காத கௌரவம், மரியாதை, புகழ் இதை அடைவது மட்டுமே இனி என் லட்சியம் என்றும் பிதற்றினான்.

எல்லாவற்றையும் கேட்ட துரை, எழுத்தாளன் ஆவது எளிதான காரியமே இல்லை என்றும், அது ஒரு நுட்பமான விஷயம், எப்போதும் சிந்தித்தபடியிருக்க வேண்டும், பன்முகப் பார்வையோடு சமூக நிகழ்வுகளை பார்க்கவேண்டும்... என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போக, தலைசுற்றியது இராமசாமிக்கு.

இருந்தாலும் இராமசாமி விடுவதாக இல்லை. தன் மனைவி முன், அவளது கிராமத்து மக்களின் முன்பாக தான் ஒரு எழுத்தாளனாக கௌரவப்படுத்தப்பட வேண்டும் என்ற தீராத தாகம் அவனை வாட்டியெடுத்தது. அதன்பொருட்டு எல்லா கஷ்டங்களையும் அனுபவிக்கத் துணிந்தான்.

துரையால் மட்டுமே தனக்கு உதவ முடியும் என்ற மிகப்பெரும் நம்பிக்கையும் இராமசாமிக்கு இருந்தது. துரையும் இராமசாமியைப் பார்த்து அவனுக்கு தெரிந்த விஷயங்களை கூறி உதவுவதாக எழுத்தாளர்களுக்கு உரிய பண்புகளை அவனிடம் தெரிவித்தான்.

மறுநாளிலிருந்து இராமசாமியின் நடவடிக்கைகள் தலைகீழாக மாறியிருந்தது. அவனுடைய மனைவிக்கும் ஆச்சர்யம்தான். வருகிற எல்லா பத்திரிகைகளையும் வாங்கி படித்தபடியே இருந்தான். எப்போதும் கையில் பேனாவும், பேப்பருமாக எதையாவது யோசித்தபடியே இருந்தான். படிப்பதிலும் ஒரு வெறித்தனம் இருந்தது. எப்போதும் படுக்கையில் சாய்ந்து படுத்தபடி டி.வி. பார்க்கும் அவனது பழக்கத்தை இப்போதெல்லாம் செய்வதில்லை. ஜன்னலோரம் நாற்காலியில் அமர்ந்து காகிதமும் பேனாவுமாக சாலையையே வெறித்துக் கொண்டிருந்தான்.

இப்படியே நீடித்த வேளையில், ஒரு நாள் கோவிலுக்குப் போய் வந்த அவனது மனைவி அவனுக்கு பகோடா பிடிக்குமே என்று சூடாக வாங்கி வந்தாள். அவள் வாங்கி வந்து தந்த பகோடாவை பிரித்து அது கீழே கொட்டியது கூடத் தெரியாமல் பகோடா இருந்த பேப்பரில் இருந்ததை படித்துக் கொண்டிருந்தான்.

இராமசாமியின் வினோத நடவடிக்கையில் சந்தேகமுற்ற அவனது மனைவி என்னதான் செய்கிறீர்கள் என்று ஒரு நாள் கேட்டே விட்டாள். அவன் கூறியது இதுதான்.... “இது ஒரு தவம்போல... சிந்தனை வயப்பட்ட நிலை. விரைவில் நீ என்னைப் பற்றி புரிந்து கொள்வாய்.“ அவனது பதில் அவளை அதிர்ச்சியுறச் செய்தது. காரணம் வழக்கமாக அப்படி பேசுபவனில்லை.

இதையெல்லாம்விட கொடுமையான சம்பவம் அவளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரவு ஒருவரையொருவர் அணைத்தபடி மகிழ்ந்திருந்த வேளையில் திடீரென “ஒரு நிமிடம்..“ என்று கூறிவிட்டு எழுந்து காகிதத்தில் எதையோ எழுதியபடியும், அதை கசக்கியெறிந்தபடியும் இருந்தான்.

கண்ணில் தெரிகிற

மின்னல்

நீ

என்

விண்ணில் விளைந்த

நட்சத்திரம்

நீ

என்னில் அடங்கா

எண்ணம்

நீ

என்னுள் கலந்த

வண்ணம்

நீ

கவிதைகள் தோன்றியபடியே இருந்தது. கூடவே கதைகளும் இராமசாமி எழுதத் தொடங்கி விட்டான். சிலகாலம் கழித்து இராமசாமியின் எழுத்துக்கள் பக்கங்கள் பலவாகி கற்றையாகி விட்டது. அப்போதுதான் இராமசாமிக்கு ஒரு விஷயம் உரைத்தது. நாமே எழுதி நாமே வைத்துக் கொண்டால் எப்படி அவனை மக்கள் எழுத்தாளர்கள் என்று ஒப்புக் கொள்வார்கள் என்ற கேள்வியெழுந்தது.

உடனே துரையை நாடினான். பத்திரிகைகளுக்கு அனுப்பி பிரசுரமானால்தான் எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்றும், சொந்த பெயரில் எழுதுவதைவிட ஏதாவது வசீகரமான புனைபெயர் வைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்றும் துரை தனது யோசனையைக் கூறினான்.

இராமசாமிக்கு சொந்த பெயரில் பிரபலமாக வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. ஆனாலும் துரை சொல்வதும் ஒருவிதத்தில் சரியாக இருந்தது. சொந்த பெயரில் எழுதி ஒருவேளை புகழ் பெறாமல் தோற்றுவிட்டால் எல்லோருக்கும் தெரிந்து இன்னும் அசிங்கமாகிவிடும். மேலும் பல எழுத்தாளர்கள் புனை பெயரில் எழுதுவதிலேயே புகழ் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் அவன் அறிந்திருந்தான். எனவே புனைபெயரில் எழுதுவதே சாலச்சிறந்தது என்ற கருத்து அவனுள் ஏற்பட்டது.

இராமசாமிக்கு இங்குதான் அடுத்த பிரச்சனை எழுந்தது. எழுதுவதைவிட புனை பெயர் தேர்ந்தெடுப்பது மிகவும் கடின காரியமாக இருந்தது. அவனுடைய மனைவியின் பெயரை வைத்துக் கொள்ளலாமே என்றான் துரை. ஆனால் அப்படிச் செய்தால் புகழ் அவள் பெயரில் அல்லவா கொண்டாடப்படும் எனவே இராமசாமி அதை ஏற்கவில்லை.

வித்தியாசமான பெயர் ஏதாவது வைத்துக் கொண்டால் பெயரைப் பார்த்ததும் வாசகர்கள் படிக்க விழைவார்கள். தானும் அதுபோலவே எழுதிய பெயர் மற்றும் தலைப்பு இவற்றை வைத்தே பெரும்பாலான புத்தகங்களை வாசிக்க தேர்ந்தெடுப்பதாகவும் துரை சொன்னான்.

வீட்டுக்கு வந்த ராமசாமி வழக்கம்போல ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தான். புரட்சிக்குரல், புரட்சிக்கனல் என பல பெயர்கள் அவனுள் எழுந்து மறைந்தது. எதிலும் திருப்தியில்லை.

அப்போதுதான் சாலையிலிருந்து எழுந்த அந்த வினோத ஒலி அவன் கவனத்தைக் கலைத்தது. “ஸ்ஸுடாபோறீய்ய்“ “ஸ்ஸுடாபோறீய்ய்“. முதலில் இராமசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. குரலொலி எத்திசையிலிருந்து வருகிறது என்று பார்த்தான். தெருவில் ஒருவர் பொறி விற்றபடி கூவிக் கொண்டிருந்தார்.

அந்த நிமிடம் அவன் மனதில் புதுவெளிச்சம் புகுந்தது போலாகியது. ஆம்.. பொறி. அதுதான் சரியான பெயர். சுருக்கமாகவும் இருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த பெயரும்கூட.

உடனடியாக துரைக்கு போன் செய்து ‘பொறி‘ என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தான். துரையோ ‘பொறி‘ என்ற பெயர் நன்றாக இருந்தாலும் ஏதாவது கூட மற்றுமொரு வார்த்தை இருப்பது உசிதம் என்றான். இராமசாமிக்கு அவன் கூறுவதும் சரியாகப்பட்டது. இருவரும் கலந்து பேசி இறுதியாக ‘தீப்பொறி‘ என்று வைத்துக் கொள்வதாக முடிவானது.

“தீப்பொறி.. தீப்பொறி.. தீப்பொறி...“ இராமசாமி பலமுறை தனக்குத்தானே சொல்லிப்பார்த்துக் கொண்டான்.

“அடுத்ததாக விழாவின் சிறப்புரையை வழங்குமாறு எழுத்தாளர் தீப்பொறி அவர்களை அழைக்கிறோம்“

வருங்காலத்தில் நடைபெற இருக்கும் விழாக்களில் அவன் பெயர் எப்படி ஒலிக்குமென்பதை கற்பனை செய்து புளகாங்கிதமடைந்தான்.

துரையின் சொன்னபடி தான் எழுதியதையெல்லாம் நகலெடுத்து பல பகுதிகளாகப் பிரித்து இருக்கிற பத்திரிகைகளுக்கெல்லாம் அனுப்பி வைத்தான்.

துரை கூறியபடி இன்னும் சில வாரங்களுக்குள் எல்லா பத்திரிகைகளிலும் அவனுடைய பெயர் வெளியாகப் போகிறது. தீப்பொறி என்ற பெயர் தமிழகம் முழுவதும் தீப்பொறியாக பரவப்போகிறது என்ற எண்ணமே அவனுக்கு மிகவும் சந்தோஷம் தந்தது. தான் எழுத்தாளன் ஆகிவிட்டோம் என்பது அவனுக்கே பெருமிதமாக இருந்தது.

நாட்கள்.. வாரங்கள்... மாதம் என கடந்தது. எந்தப் பத்திரிகையிலும் இராமசாமியின் எந்தப் படைப்பும் வரவில்லை. துரையிடம் சொன்னதற்கு, வருகிற நூற்றுக்கணக்கான படைப்புகளில் தேர்ந்தெடுக்க நேரம் எடுத்துக் கொள்வார்கள் என்பதால் பொறுமையோடு இருக்கும்படி கூறினான்.

இரு மாதத்திற்கு மேலாகியும் எந்த பத்திரிகையும் இராமசாமியின் எழுத்தை சீந்தக்கூட இல்லை. கவலையுற்ற அவன் துரையிடம் போன் செய்து இப்படியிருக்கிறதே என்று கேட்டான். அதற்கு துரை ஒன்றும் கவலைப்பட வேண்டாமென்றும் தனக்கு தெரிந்த புத்தக பதிப்பாளர் இருப்பதாகவும், அவரிடம் அறிமுகப்படுத்தி புத்தகமாக வெளியிட்டு விடலாம் என்றும் கூறினான்.

இராமசாமிக்கும் மனதில் நம்பிக்கை பிறந்தது. துரை கூறுவதே சரியெனப்பட்டது. பத்திரிகைகளில் வருவதைவிட புத்தகமாக வந்துவிட்டால் தான் ஒரு எழுத்தாளர் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்று ஆணித்தரமாக நம்பினான்.

(தொடரும்)

(கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. எவரையும் குறிப்பிடுவவை அல்ல)

29 comments:

  1. தீப்பொறி ஆறுமுகத்தின் கதையா? எழுதுங்க ! உள்குத்து ஏதும் இருந்தா சுவாரசியமா இருக்கும்ல!

    ReplyDelete
  2. தீப்பொறி எழுத்தாளர், ஆனாரா, இல்லையா என்று தெரியும் முன்பே தொடரும் போட்டு விட்டீர்களே.

    ReplyDelete
  3. நல்லா விறுவிறுன்னு இருக்குங்க.
    வருணனை focused போகிறது.
    மெலிதான நகைச்சுவை ஒடுகிறது.

    முரளி கண்ணன் ஜாடை வருகிறது.

    தொடருங்கள்.

    ReplyDelete
  4. உங்கள் ப்ளாக் திறப்பதற்கு நீண்ட நேரம் ஆகிறது.. முடிந்தால் போஸ்ட் கவுன்டரை(amit jain)எடுத்து விடவும்.
    அது லோட் ஆக நேரம் ஆகிறது.

    கதைய படிச்சிட்டு வாரேன்..
    :)

    ReplyDelete
  5. நல்ல ஆரம்பம்...

    //தனக்கு தெரிந்த புத்தக பதிப்பாளர் இருப்பதாகவும், //

    அவரு பேரு என்னங்க?எனக்கும் ஒரு புக்கு போடணும்.
    :)

    ReplyDelete
  6. “ஸ்ஸுடாபோறீய்ய்“ “ஸ்ஸுடாபோறீய்ய் :))))))))))

    "பொறி” பறக்குது கதையில். அடுத்த பாகம் எதிர்நோக்கி...

    ReplyDelete
  7. எழுத்தாளரின் எதிர்நிச்சல் போராட்டத்தை பார்ப்போம். நானும் ஒரு எழுத்தாளர் தான்.

    ReplyDelete
  8. //சொந்த பெயரில் எழுதி ஒருவேளை புகழ் பெறாமல் தோற்றுவிட்டால்//

    அட.. இதுதான் காரணமா

    ReplyDelete
  9. //தண்டோரா .....
    உள்குத்து ஏதும் இருந்தா சுவாரசியமா இருக்கும்ல!//

    அதான் நீங்க இருக்கீங்கள்ல?

    ReplyDelete
  10. நையாண்டி நல்லா போகுது.கூடவே உள்குத்து பத்தின யோசனையும் இருக்குது. யார்யாரெல்லாம் இருக்காங்களோ தெரியலயே, இதுல.

    /(கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. எவரையும் குறிப்பிடுவவை அல்ல)/

    இங்கதான் எனக்கு பெருத்த சந்தேகமே.

    ReplyDelete
  11. உங்க கிட்டேருந்து இப்படி ஒரு எழுத்தை எதிர்பார்க்கவில்லை.:)
    nallaruku thodarungal

    ReplyDelete
  12. அடுத்த பாகத்திற்காக ஆவலோடு..

    ReplyDelete
  13. //ஈரோடு கதிர் | February 22, 2010
    //சொந்த பெயரில் எழுதி ஒருவேளை புகழ் பெறாமல் தோற்றுவிட்டால்//
    அட.. இதுதான் காரணமா//

    அட இதுதாங்க காரணமே...

    அடுத்ததையும்.....ம்ம்ம்ம்........

    ReplyDelete
  14. ஓகே புரிந்து விட்டது :)

    கதை நன்றாக இருக்கின்றது. அடுத்த பகுதி எப்போ?

    ReplyDelete
  15. தீப்பொறி பறக்குது.

    ReplyDelete
  16. தொடர்கிறேன்...தொடருங்கள்.

    ReplyDelete
  17. //சாத்திமுள்ள// - சாத்தியமுள்ள

    ReplyDelete
  18. இராமசாமிக்கும் மனதில் நம்பிக்கை பிறந்தது. துரை கூறுவதே சரியெனப்பட்டது. பத்திரிகைகளில் வருவதைவிட புத்தகமாக வந்துவிட்டால் தான் ஒரு எழுத்தாளர் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்று ஆணித்தரமாக நம்பினான்.
    ///

    ஒரு பதிப்பாளர் கண்ணுக்குத் தெரிகிறார்!!

    ReplyDelete
  19. நல்லாயிருக்கு.
    ---
    //கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. எவரையும் குறிப்பிடுவவை அல்ல//
    நெசமாத்தான் சொல்றீங்களா?

    ReplyDelete
  20. //சொந்த பெயரில் எழுதி ஒருவேளை புகழ் பெறாமல் தோற்றுவிட்டால்//
    நல்ல காரணமாயிருக்கே!

    ReplyDelete
  21. //பத்திரிகைகளில் வருவதைவிட புத்தகமாக வந்துவிட்டால் தான் ஒரு எழுத்தாளர் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்று ஆணித்தரமாக நம்பினான். //

    எப்படியெல்லாம் மார்கெட்டிங்......
    நாங்கெல்லாம் எங்க பொய்தவத்த யேர்மனி,இத்தாலி, ஃப்ரென்ச் மொழில போட்டுக்கிறோம் தலைவரே..
    கதை நன்றாக இருக்கு..:)

    ReplyDelete
  22. தொடருங்கள்,
    நாங்களும் தொடர்கிறோம்.

    ReplyDelete
  23. இராமசாமியின் தலைப்பு தீப்பொறி நல்லாத்தான் இருல்லு ஆனா தொடரும் போட்டுட்டீங்களே சரி வெயிட் பன்றேன்

    ReplyDelete
  24. தீப்பொறி....பற்றிக்கொள்ளுமோ..
    ம்ம்ம்ம்..படிக்கும் போதே என்னை இராமசாமியாய் நினைச்சிகிட்டே படிச்சேன்....சும்மா கற்பனைக்காக...அடுத்த பகுதிக்காக இப்போதே முன்பதிவு செய்திட்டேன்...

    ReplyDelete
  25. {{{{{{{{{{{{ நாட்கள்.. வாரங்கள்... மாதம் என கடந்தது. எந்தப் பத்திரிகையிலும் இராமசாமியின் எந்தப் படைப்பும் வரவில்லை. துரையிடம் சொன்னதற்கு, வருகிற நூற்றுக்கணக்கான படைப்புகளில் தேர்ந்தெடுக்க நேரம் எடுத்துக் கொள்வார்கள் என்பதால் பொறுமையோடு இருக்கும்படி கூறினான். }}}}}}}}}}}

    ஆஹா இவருக்குமா !
    இருக்கட்டும் என்னதான் நடக்கிறது என்று பொருத்திருந்து பார்ப்போமே. ஆனால் அந்த முடிவ சொல்லவே இல்லையே . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  26. அண்ணே..

    உள்குத்தோ, வெளிக்குத்தோ, மூலக்குத்தோ..

    எனக்குத் தெரியலை..

    ஆனா குத்துற குத்துல அவனவன் உங்களைப் பார்த்தாலே ஓடப் போறான்.. இவ்வளவு தொல்லையாயிருச்சா உங்களுக்கு..?

    ReplyDelete
  27. பொறுமையா படிக்கணும்னு இன்னைக்குத்தான் படிக்கிறேன் சார். விறு விறுனு அருமையா இருக்கு.

    இருங்க அடுத்த பாகத்தை படிச்சுட்டு வரேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname