Tuesday, June 3, 2014

காந்தியின் பாலுணர்வுப் பரிசோதனைகள்

பாலுணர்வைக் குறித்து காந்தி தனது வாழ்நாளில் பல பரிசோதனைகளை மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட பரிசோதனைகள் குறித்து விரிவான ஓர் ஆய்வுக் கட்டுரையை பேராசிரியர் பிக்கு பாரிக் எழுதினார். 1989 ல் வெளியான இந்த கட்டுரை மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. இந்தக் கட்டுரை பிக்கு பாரிக் எழுதிய காலனித்துவம், மரபு, சீர்திருத்தம் (Colonialism, Tradition and Reform : An analysis of Gandhi's Political discourse - Sage Publications India 1989) என்ற புத்தகத்தின் ஒரு பகுதி. 

பாலுணர்வுக்கும், அரசியலுக்கும் அதிகாரம் தொடர்பாக அமைந்துள்ள நெருங்கிய உறவுகள் இன்று அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றன. பேசுபவர்களில் அமைப்பியல்வாதிகள், மார்க்சியர்கள், பெண்ணிலைவாதிகள் ஆகியோர்அடங்குவர். அதே நேரத்தில் பாலுணர்வு - சூழல் - அதிகாரம் பற்றிய விவாதம் நமது அண்மைக்கால வரலாற்றிலும் நடந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டவும், இன்றைய சூழலுக்கேற்ப பாலுணர்வு பற்றிய விவாதத்தை ஆரம்பிக்கவும், காந்தியின் பாலுணர்வுப் பரிசோதனைகள் குறித்த விவாத நீட்சிகளும் கருத்துப்பரிமாற்றங்களாக நிகழ்த்தப்பட வேண்டிய தேவையிருக்கிறது என்பதை இந்த ஆய்வுக் கட்டுரை வலியுறுத்துகிறது.

அந்த ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதி...
-------------------------------------------------------------------

.. 1946-ஆம் ஆண்டு டிசம்பர் இருபதாம் நாளிலிருந்து காந்தியும் அவருடைய பேத்திமுறையான மனு காந்தியும் ஒரே படுக்கையில் நிர்வாணமாக உறங்கத் தொடங்கினார்கள்.  தம்முடைய பரிசோதனை பற்றி காந்தி மனுவின் தந்தையிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் மனுவையே இதைப்பற்றி அவரது தந்தைக்கு எழுதுமாறு பணித்தார் காந்தி. மேலும் மனு, ஒரு நாளேட்டில் தம்முடைய எண்ணங்களை எழுதி வரவேண்டும் என்றும் கூறிவிட்டார் காந்தி. அதை மனு தினமும் காந்தியிடம் காட்டி அவரது கையொப்பத்தையும் பெற்றாக வேண்டும். 



இந்தப் பரிசோதனை தொடங்கிய மூன்று வாரங்களில் - அதாவது 1947-ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி - கிருஷ்ண தாஜ் ஜாஜீ என்ற நண்பருக்கு எழுதிய கடிதத்தில் - இதைப்பற்றிக் குறிப்பிடுகிறார் காந்தி. இதே சமயத்தில் காந்தியுடன் வசித்து வந்த சகாக்களுக்கு இந்தப் பரிசோதனை நடந்துவருவது தெரிந்திராமல் இருக்கமுடியாது. காந்தியேகூட அவர்களிடம் இதைப்பற்றிப் பேசியிருக்கக்கூடும். மேலும் காந்தியின் குடிலுக்குள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையே இருந்தது. எனவே ஆசிரம வாசிகளுக்கு - குறிப்பாக காந்தியின் பெண்சகாக்களுக்கு - பரிசோதனைபற்றித் தெரிந்திருக்க வேண்டும். 

ஆனால் காந்தியின் பல்வேறு எதிரிகளும் - அவரைக் கண்காணித்து வந்த பிரிட்டிஷ் அதிகாரிகளும் - இந்தப் பரிசோதனையை மிகவும் அப்பாவித்தனமாக நடத்தப்படும் ஒன்று என்றே நினைத்தார்கள். காந்தி தமது பரிசோதனை பற்றி பகிரங்க அறிவிப்பு ஏதும் செய்தாரில்லை. அதே சமயத்தில் பரிசோதனை நடத்துவதற்குத் தமக்கிருந்த காரணங்கள் பற்றித தம் ஆதரவாளர்களிடம் கலந்தாலோசிக்கவுமில்லை. ஒருக்கால் அவ்வாறு பகிரங்கமாக அறிவித்திருந்தால் அவரது பரிசோதனையின் நோக்கமே பாழ்பட்டுப்போயிருக்கலாம், பரிசோதனையையே நடத்த முடியாமல் போயிருக்கும் என்று அவர் பயந்திருக்கலாம். 

எப்படியிருப்பினும் விஷயம் வெகுவேகமாகப் பரவிவிட்டது. காந்தியால் கிசுகிசு, வதந்தி, அவதூறு என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்த விவகாரம் ஒரு பொதுப்பிரச்னையாகவே உருவாகிவிட்டது. 

பாலுணர்வுவேட்கையானது விஸ்வாமித்திரர், வியாசர் போன்ற மாமுனிவர்களையே ஆட்டிப்படைத்துவிட்ட ஒன்று என்பதை உணர்ந்திருந்த காந்தியின் சகாக்கள், அவருடைய பரிசோதனையின் விளைவுகளைப் பற்றிப் பயப்பட ஆரம்பித்தார்கள். காந்தியின் குஜராத்தி சகாக்கள் சிலர் அவருடன் தொடர்பைத் துண்டித்துக்கொண்டார்கள். காந்தி நடத்திய ஹரிஜன் ஏட்டின் இரண்டு ஆசிரியர்கள் பதவி விலகினார்கள். சிலரோ காந்திக்கு எதிரான "ஒத்துழையாமை இயக்கத்தைத்" தொடங்கினார்கள். சர்தார் வல்லபாய் பட்டேல், காந்தியுடன் பேசுவதையே முறித்துக்கொள்ளும் அளவுக்குக் கோபமடைந்திருந்தார். காந்தியின் பரிசோதனைகளைக் கண்டித்து அவருக்கு ஆச்சாய வினோபா பாவே ஒரு கடிதமெழுதினார். காந்தியின் மகன் தேவதாஸும் உணர்ச்சிமயமான ஒரு கண்டனக்கடிதத்தை எழுதினார். காந்தியின் அன்புக்குப் பாத்திரமான சுருக்கெழுத்தாளர் பரசுராம் பணிவிலகினார். ஏற்கனவே காந்தி நடத்தியிருந்த பரிசோதனைகளைக் கண்டித்திருந்த கிஷோர்லால் மஷ்ருவாலா போன்றவர்கள் பெருங்கோபம் கொண்டார்கள். ஜவஹர்லால் நேரு மனக்கலக்கமடைந்திருந்தார். 



காந்தி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:

1. காந்தியின் பரிசோதனைகள் பிறருக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டன.
2. இவை சமுதாய நெறிகளின் அடிப்படையையே பலவீனப்படுத்துவதாக, அதர்மத்தை ஊக்குவிப்பதாக இருக்கின்றன.
3. பரிசோதனைகளைக் காந்தி ரகசியமாக நடத்தியது தவறு. 
4. பரிசோதனைகளுக்கு முன்பாக இவை பற்றிய விவரங்களை காந்தி பொதுவிவாதத்துக்கு வைத்திருக்க வேண்டும். பின்னரே இவற்றை நடத்தியிருக்க வேண்டும்.
5. காந்தியின் பரிசோதனைகள் ஹிந்து தர்மத்துக்கு எதிராக உள்ளன.
6. காந்தியின் பரிசோதனைகளால் சமுதாயத்துக்கோ நாட்டுக்கோ எந்தவிதப் பயனுமில்லாததால் இவற்றை நடத்தும் அவசியமில்லை. 

7. காந்தியின் பரிசோதனைகளால் அப்பாவிப்பெண்கள் உடல் மற்றும் உணர்ச்சிரீதியாக சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மேலும் காந்தியின் பரிசோதனைகள் பெண்களை ஆண்களுக்குக் கீழானவர்களாகவே வைத்திருக்கின்றன. 

இந்தக் கடைசிக் குற்றச்சாட்டை காந்தியின் செயலாளர்களில் ஒருவரான பேராசிரியர் நிர்மல் குமார் போஸ் முன்வைத்துப் பதவி விலகினார். மேலும் காந்தி, தம்முடைய பரிசோதனைகள் ஏற்படுத்திய பாதிப்புக்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை என்று பேராசிரியர் போஸ் குறிப்பிடுகிறார். மேலும் காந்தியிடம் நெருங்கிப்பழகிய பிற பெண்களுக்கு இதனால் மனுவிடம் ஏற்பட்ட பொறாமையையும் அவர்கள் எந்த அளவுக்கு காந்தியைத் தமது சொத்தாகப் பாவித்தார்கள் என்பதையும் காந்தி கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை என்று பேராசிரியர் போஸ் கூறுகிறார். 

மேலும் மனோவியல்-அலசலை ஆய்வுமுறையாகச் செய்துகாட்டிய ஸிக்மண்ட் ஃபிராய்டின் கண்டுபிடிப்புக்களையும் தமது கடிதத்தில் குறிப்பிடுகிறார் பேராசியர் போஸ்: 

"நனவிலிமனத்திலிருந்து தோன்றும் வேட்கைகள் மனிதர்களை ஆட்டுவிக்கின்றன. இவை அவர்களுடைய பிரக்ஞாபூர்வ விருப்பங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கின்றன. தீவிரமான சுய சோதனைகள்கூட இந்த வேட்கைகளைக் கண்டறிய முடிவதில்லை." 

ஆக, இந்தப்பரிசோதனைகளைச் செய்த்ததால் தம்முடைய நெருங்கிய சகாக்களை இழந்துவிட்டோம் என்பதை காந்தி புரிந்துகொண்டார். ஆனால் அவர் வருந்தியதாகவே தெரியவில்லை. 

"இந்த உலகமே என்னை உதறித்தள்ளினாலும் சரி, எனக்கு உண்மை என்று தெரிவதை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை நான் தவறு செய்து கொண்டிருக்கலாம். ஆனால் என்னுடைய தவறுகளை நானே உணர்ந்துகொள்வதுதான் சரியாக இருக்கும். என் ஆதரவாளர்கள் என்னைப்பற்றி மோசமாக நினைத்து நான் மஹாத்மாதானா என்று சந்தேகிக்கலாம்.. அப்படி எனது முகத்திரை கிழிக்கப்பட்டால் அதனால் என்னைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் வேறுயாரும் இருக்கமுடியாது. இதை ஒப்புக்கொள்ளத் தயங்க மாட்டேன்" என்று பதிலளித்தார் காந்தி. 

தம்முடைய பரிசோதனைகள் பற்றி காந்தி அளித்த விளக்கங்கள் எளிதில் புரியக்கூடியவையாக இல்லை. மேலும் அவை பல்வேறுசூழல்களில், வெவ்வேறு அர்த்த தளங்களில், அமைந்திருந்தன. சில சமயம் பரிசோதனைகளை அவர் திட்டமிட்டுத்தான் செய்தாரா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.

பாலுணர்வுவேட்கை மீதான தம்முடைய கட்டுப்பாட்டைப் பரிசோதித்துப் பார்த்துக்கொள்வதாக காந்தி ஒருமுறை குறிப்பிட்டார். வேறொரு இடத்தில் "இது ஒரு பரிசோதனையே இல்லை; புனிதக் கடமை" என்கிறார். இன்னொருமுறை இவைபற்றிப் பேசும்போது "எனது யோகத்தில் இது ஒரு பகுதி, புலன்களை இறுதியாக வென்றுவிடும் முயற்சி" என்கிறார். இதையெல்லாம் விட்டுவிட்டுப் பார்க்கும்போது, காந்தியின் விளக்கங்கள் பின்வருமாறு அமைகின்றன. 

முதலாவதாக - 

இந்தப் பரிசோதனைகள் காந்திக்கு மோட்சம் அல்லது வீடுபேற்றை அடைவதற்கான வழிமுறையில் ஒருபகுதியாகும். தம் வாழ்க்கை நெடுகிலும் அவர் புலன்களையும் வேட்கைகளையும் கட்டுப்படுத்த முயன்றிருக்கிறார் என்பது தெரிந்ததே. பொருட்களை உடைமையாக்கிக் கொள்ளும் வேட்கையை அவர் எப்போதோ கடந்துவிட்டிருந்தார். கோபத்தைக் கிட்டத்தட்ட அவர் வென்றிருந்தார். மிக எளிதில் கோபங்கொள்ளக்கூடிய அவருக்கு இது மிகக்கடினமாக இருந்திருக்க வேண்டும். தம்முடைய எதிரிகளான ஹிந்துமதப் பழைமைவாதிகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அளவுக்கு அவர் கோபத்தை வென்றிருந்தார். சாவு பற்றிய பயத்தையும் அவர் கடந்துவந்துவிட்டார் என்றே கூற வேண்டும். வன்முறையையும் கலவரங்களும் நடக்கும் இடங்களுக்கெல்லாம் பாதுகாப்பின்றி சர்வசாதாரணமாக சென்றுவர அவரால் முடிந்திருநதது. சில இடங்களில் சூழல் தமக்கு அவ்வளவு ஆதரவாக இல்லை என்றாலும் கூட அங்கெல்லாம் சென்றுவந்தவர் காந்தி என்பது கவனிக்கத்தக்கது. 

தம் நாக்கையும் காந்தி கட்டுப்படுத்தி வைத்திருந்தார். சுவையான உணவை விரும்பிச் சாப்பிடக்கூடியவரான மோகன்தாஸுக்கு இது மிகவும் கடினமாக இருந்திருக்கும்! காந்தியின் உணவு - ஆட்டுப்பால் மற்றும் பச்சைக் காய்கறிகள், அவ்வளவே. நாக்கைக் கட்டுப்படுத்தியதன் இன்னொரு விளைவு, உண்மை மட்டுமே பேசுவது. தவிர, வாரத்தில் ஒருநாள் மௌன விரதம் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் காந்தி. அதிமுக்கியப் பேச்சுவார்த்தைகளுக்கிடையிலும் மௌன விரதம் தொடர்ந்தது. தவிர, பல்வேறு சிக்கலான, சிரமமான பணிகளையும் பழகியிருந்தார் காந்தி. கழிப்பறைகளைச் சுத்தம் செய்கிற பணியில் அவர் மகிழ்ச்சியுடன் பங்குபெற்றது யாவரும் அறிந்த ஒன்றே. 

பாலுணர்வு வேட்கைதான் அவரால் வெற்றிகொள்ளப்பட முடியாததாக இருந்தது. ஆனால் அவர் கடும் முயற்சிகளைக் கைக்கொண்டு அவற்றில் தாம் வெற்றிபெற்றுவிட்டதாகக் கருதினார். அப்போதுதான் 1936, 1938-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் நடந்தன. அவற்றையடுத்து உண்மையான வெற்றிக்கு வெகுதூரம் போக வேண்டும் என்று அவர் கண்டுகொண்டார். தமது முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, பாலுணர்வின் அனைத்து எச்சங்களையும் தமக்குள்ளிருந்து அகற்றிவிட முயன்றார் அவர். 

காந்தி தம் ஆசிரமத்தில் நிர்வாணமாக உலாவினார். தமக்கோ உடனிருக்கும் பெண்களுக்கோ இது பற்றிய பிரக்ஞை ஏதுமில்லாமல் இருக்கிறதா என்பதை அவர் உறுதிசெய்துகொண்டார். அதே சமயத்தில் "இறைவனை நோக்கிய தனியொரு பாதையின் சென்று கொண்டிருக்கிறேன். இதைத் தீவிரப்படுத்த என்னுடைய ஆழ்மன நினைவுகளையும் கனவுகளையும் ஆராய்ந்தாக வேண்டும். இதற்குச் சுய ஆய்வோ, சுயவிமரிசனமோ போதாது. கடும் செயல்பாட்டுப் பயிற்சியே உகந்தது. சிறுகுழந்தைகளால் ஆசைகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. எனவே ஆழ்மன-ஆசைகளை வெளிக்கொணர வேண்டுமென்றால் அவை நிறைவேற்றப்படுவதற்கான சூழலை உருவாக்குவதே சரி" என்று கூறுகிறார் காந்தி. 

எனவேதான் தாமும் தம்முடைய பெண்சகாக்களும் நிர்வாணமாகச் சேர்ந்து படுத்துறங்குவதை ஒரு கடுமையான பசோதனையாக காந்தி மேற்கொள்ள முன்வந்தார். இதன்மூலம் முழுமுற்றான தூய சூழலைத் தாம் அடைந்துவிட்டோமா என்று தெரிந்துகொள்ள விரும்பினார். இந்தச்சூழலில் பிறர்க்கெதிரே தாமும் தமக்கெதிரில் பிறரும் பாலுணர்வுவேட்கை கொள்ளாமல் இருக்கிறோமா என்பதையும் தெரிந்துகொள்ள விரும்பினார். இந்த அளவில் காந்தியின் பரிசோதனை அவரது நனவிலிமனத்தைக் "கழுவி" உள்ளுமையைத் "தூய்மையாக்கி"க் கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. 

பரிசோதனைகளின் முடிவுகள் காந்திக்கு திருப்திகரமாக அமைந்ததாகத் தெரிகிறது. மனுவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறுகிறார்: 

"இதுவரை பதினோரு விரதங்களை நான் வெற்றிகரமாகக் கடைப்பிடித்து வந்துள்ளேன். ஆனால் இப்போது நான் மேற்கொண்டிருக்கும் பரிசோதனைதான் அறுபது ஆண்டுகளாக நான் செய்துவந்தனவற்றின் உச்சக்கட்டம் ஆகும். இந்த யோக முயற்சியில்தான் உண்மையின் கதிர்களை என்னால் காணமுடிகிறது." 

தொடர்ந்து எழுதுகிறார்: "இறைவனுக்கும் உண்மைக்கும் வெகுஅருகில் வந்துவிட்டதை உணர்கிறேன். உண்மையிலேயே வீடுபேற்றை அடைந்துவிட்டோமா என்பது எனக்குத் தெரிய நியாயமில்லை. அப்படி நனவிலிமனத்தை முற்றாகப் புரிந்துகொள்ள என்னால் இயலாது. எனினும் உடல் என்ற பொருள் இருக்கும் வரை வீடுபேற்றைத் தக்கவைத்துக் கொள்வது என்பது முடியாது. எனவே நான் எப்படி இறக்கிறேன், என் சாவு எப்படிப்பட்டதாக இருக்கப்போகிறது என்பதை வைத்துதான் என் பரிசோதனை வெற்றியடைந்துவிட்டதா என்பது தெரியும். அல்லது ராம நாமத்தை உச்சத்துக்கொண்டு நான் இறக்கிறேன் என்றால் என் பரிசோதனை வெற்றியடைந்து விட்டது என்று எடுத்துக்கொள்ளலாம்." 

1948-ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று காந்தி சுட்டுவீழ்த்தப்பட்டதைப் பார்த்த பலர் இதை ஊர்ஜிதப்படுத்தினார்கள். ஆனால் இறக்கும் தறுவாயில் அவருடன் இருந்த அனைவருமே இதை ஊர்ஜிதப்படுத்தவில்லை. இன்னும் பிரச்னைக்குரியனவாகவே உள்ளன இந்த விஷயங்கள்.

தாம் இந்தப் பரிசோதனையைத் தொடங்கியது ஏன் என்று 1946-ஆம் ஆண்டிலேயே காந்தி விளக்க முற்பட்டார். நாட்டின் அரசியல் விடுதலையானது கைக்கெட்டிய தூரத்திலேயே இருந்தது. ஆயினும் ஹிந்து-முஸ்லீம்கள் பரஸ்பரக் கலவரங்களில் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள். மக்களிடையே பயங்கரமான வெறுப்புணர்வு பெருகிக்கொண்டிருந்தது. எப்படியாவது இந்தக் கலவரங்களைக் கட்டுப்படுத்திவிட வேண்டும், இந்திய நாட்டின் பிரிவினையைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று காந்தி துடித்துக்கொண்டிருந்தார். 

இருபத்தைந்து ஆண்டுகளாக காந்தி மக்களுக்கு அகிம்சாவழியைப் போதித்துவந்திருந்தார். ஆனால் மக்களோ இந்த வழியை நிராகரித்தது மட்டுமல்லாமல் இதன் மீதான நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கியிருந்தார்கள். இப்படி காந்தியின் பணி அனைத்துமே வீணாய்ப்போய்க்கொண்டிருந்தது. இதனால் மனச்சோர்வும் ஆற்றாமையும் அடைந்திருந்தார் காந்தி. அவரால் தூங்க முடியவில்லை. உயிர்வாழ்வதையே வெறுத்தாற் போலக் காணப்பட்டார்.  

"நான் என்ன செய்யட்டும், நான் என்ன செய்ய வேண்டும், எங்கும் இருள் சூழ்ந்து காணப்படுகிறதே!" என்று அடிக்கடி எழுதினார். அனைத்துலகுக்கும் பொருந்தவல்ல தம்முடைய செய்தியாக அகிம்சையை அவர் கருதினார். ஆனால் தம் சொந்த மண்ணிலேயே, தம்முடைய தலைமையின்கீழாகவே, அகிம்சை என்பது அர்த்தமற்ற ஒன்றாகிவிட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். 

அதே சமயத்தில் தோல்வியைக் கண்டு அஞ்சும் மனப்போக்கு அவரிடம் எப்போதுமே இருந்ததில்லை. தேர்ந்த போராளியான அவர், தமது செய்தியான அகிம்சை என்பதில் பிரச்னை எதுவுமில்லை என்றும் பிரச்னை தம்மிடம்தான் என்றும் முடிவுசெய்தார்! தூய அன்பின் முன்னால் வன்முறை நிற்க முடியாமல் அழிந்துவிடும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். நல்லது தீயதை இறுதியில் வென்றே தீரும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். எனவே தாம் உண்மையாகவே தூய்மையுடன் இருந்தால், இம்மியளவு வன்முறையும் தம்மிடம் குடிகொண்டிரா விட்டால், சமுதாயத்தில் நிலவிய வன்முறையைத் தணிப்பதற்கான சக்தியைத் தம்மால் திரட்ட முடியும் என்று அவர் நம்பினார்....

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
• 1991ல் நாகார்ஜுனன் மொழிபெயர்ப்பில் ‘புறப்பாடு’ இதழில் வெளிவந்தது இந்தக் கட்டுரை

(நன்றி : திணை இசை சமிக்ஞை)

Comments system

Disqus Shortname