Friday, June 18, 2010

டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதிய ‘கலைஞர் என்னும் கலைஞன்‘ புத்தக வெளியீட்டு விழா

திரைப்பட வசனகர்த்தா, வசனகர்த்தா, கதாசிரியர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், பத்திரிகையாளர், இலக்கியவாதி மற்றும் கவிஞர் என பன்முகத்திறன் கொண்ட கலைஞர் கருணாநிதியை கலைஞன் என்ற கோணத்தில் அணுகி, அவருடைய திரையுலக வரலாற்றை ஆரம்பம் முதல் இன்றைய காலம் வரை ‘கலைஞர் என்னும் கலைஞன்‘ என்ற இந்த சிறு நூலில் பதிவு செய்திருக்கிறார் டி.வி.ராதாகிருஷ்ணன்.

‘தமிழா... தமிழா‘ என்ற தனது வலைப்பதிவுகளின் வாயிலாக பரவலாக கவனிக்கப்பட்டவரும், சுவாரசியமான எழுத்தாளருமான டி.வி.ராதாகிருஷ்ணன் கடந்த 30 ஆண்டுகளாக ‘சௌம்யா தியேட்டர்ஸ்‘ என்ற நாடகக் குழுவையும் நடத்தி வருகிறார். இதுவரை 15 நாடகங்களை எழுதி, இயக்கியதுடன் நடித்தும் இருக்கின்றார். பல்வேறு பத்திரிகைகளில் இவரது சிறுகதைகளும் வெளியாகியுள்ளது.

டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதிய ‘பாரத ரத்னா‘ என்ற நாடகம் 2005க்கான ‘இலக்கியச் சிந்தனை‘ அமைப்பின் பரிசினைப் பெற்றுள்ளது. இந்நாடகம் புத்தக வடிவிலும் வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விரைவில் டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதிய ‘சிகப்பு ரோஜா‘ என்ற சிறுகதைத் தொகுப்பும், இரண்டு நாடகங்களின் புத்தகமும் வெளியாக உள்ளது.

‘கலைஞர் என்னும் கலைஞன்‘  - டி.வி.ராதாகிருஷ்ணன்
வெளியீடு : நயினார் பதிப்பகம்
விலை : ரூ.20/- மட்டும்





டி.வி.ராதாகிருஷ்ணன் எழுதிய 
‘கலைஞர் என்னும் கலைஞன்‘ 
புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்


அனைவரும் வருக !

- டி.வி.ராதாகிருஷ்ணன் & பொன்.வாசுதேவன்

Tuesday, June 15, 2010

சங்கர் நாராயண் (கேபிள் சங்கர்) எழுதிய ‘சினிமா வியாபாரம்‘ - ஒரு பார்வை



காட்சி ஊடகங்களில் முதலிடம் வகிப்பது திரைப்படம். திரைப்படம் என்பது தனிப்பட்ட முயற்சி அல்ல என்பது நமக்குத் தெரியும். தனிப்பட்ட முயற்சி அல்ல என்பதோடு திரைப்படங்களோடு நேரடியாக, மறைமுகமாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ள துறைகள் பல. 

பெரிய முதலீட்டிலோ அல்லது அதிகம் அறியப்பட்ட நடிகர்களுடனோ, சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்போ இல்லாமல் வெற்றி பெற்றிருக்கும் படங்களையும் நாம் காண்கிறோம். 

எப்படி இது நிகழ்கிறது?. பல கலையம்சங்களையும் ஒருங்கிணைத்து கோடிக்கணக்கான முதலீடுகள் செய்தும் ஏற்படுத்திவிடாத வெற்றியை எது சாத்தியப்படுத்துகிறது?

திரைப்படம் என்ற துறையை முழுமையாக புரிந்து கொள்வதற்கும், அதன் வெற்றிக்கான நதி மூலம், ரிஷி மூலம் குறித்த சரியானதொரு புரிதலுக்கும் எந்த படிப்புகளும் கிடையாது. இதை சரியாகப் புரிந்துணர அனுபவம் ஒன்றே சிறந்த பாடம்.

திரைப்படத்தின் வெற்றிக்கான அடிப்படைகளை அறிந்து கொள்ள அந்த துறை சார்ந்த அறிவை பெற்றிருப்பது கட்டாயம். மேலும் திரைப்படம் என்பது ஒரு பெரிய வியாபாரத்துறையாகவும் ஆகிவிட்ட காரணத்தால் மிகக்கவனத்தோடு இதில் ஈடுபடுவது அவசியம். 

கயிற்றின் மேல் கம்பு வைத்துக் கொண்டு நடப்பது போல வெற்றி தோல்வியின் இரு நுனிகளை சமன்படுத்தி வித்தை செய்கிற திறமை குறித்துதான் சங்கர் நாராயண் என்கிற கேபிள் சங்கர் எழுதியிருக்கிற சினிமா வியாபாரம் என்ற இந்த புத்தகம் விரிவாக விளக்குகிறது.

அனுபவத்தின் வாயிலாக மட்டுமே அறியக்கூடிய பல தகவல்களையும், பல புதிய விஷயங்களையும் உள்ளடக்கியதாக வெளி வந்திருக்கின்ற இந்தப் புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

திரைப்படம் என்கிற ராட்சசத்தனமான ஊடகத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவர்கள் யார்? என்கிற கேள்விக்கு திரைப்படத்துறை சார்ந்த பல தெளிவுகளை ஏற்படுத்தி விடையளிக்க முயன்றிருக்கிறது இந்தப் புத்தகம். 

திரைப்படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் எந்த அளவிற்கு வினியோகஸ்தர்கள் பங்கு இருக்கிறது? ஒரு திரைப்படத்தை வெற்றிகரமாக ஆக்குவதிலும், பெட்டிக்குள் முடங்கிப் போவதையும் தீர்மானிப்பவர்களாக வினியோகஸ்தர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என விளக்குகிறது. கோடி கோடியாக பணம் புழங்கும் திரைத்துறையின் முதுகெலும்பாக செயல்படுகிற வினியோகஸ்தர்கள், ஒரு திரைப்படத்தை வெற்றிப்படமாக்குவதில் வலுவாக செயல்படுகின்றனர். 

திரைப்படத்தை உருவாக்குவதில் உள்ள அத்தனை சவால்களையும்விட அதை வாங்குவது, வெளியிடுவது, ஒப்பந்தங்கள் உருவாக்குவது என வினியோகஸ்தர்கள் கைக்கொள்கிற தொழில் உத்திகள்தான் படத்தின் வெற்றி தோல்வியை உறுதி செய்கிறது. 

கலை வடிவமோ அல்லது வியாபார வடிவமோ எப்படியென்றாலும் வினியோகம் என்ற திரைத்தொழில் சூட்சுமங்களைப் பற்றிய தெளிவு இருந்தால் மட்டுமே அந்தப்படம் மக்களைச் சென்றடைகிறது. அதே போல ஒரு திரைப்படம் தயாரிப்பாளருக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் வருமானம் ஈட்டித்தருகிறது என்பது பற்றியும் திரைப்பட வியாபாரம் குறித்த இந்த புத்தகம் விரிவாகப் பேசுகிறது.

ஒருவருடைய அனுபவமே வாழ்க்கையின் பாடமாக இருக்கும் என்பதற்கு இந்த புத்தகம் உதாரணமாக இருக்கிறது. தனக்கென்று ஒரு தனித்துவத்துடன் முழுக்க முழுக்க திரைப்பட வியாபாரம் குறித்து மட்டுமே பேசுகின்ற இந்த புத்தகத்தை எழுதுவதற்கு சங்கர் நாராயண் அவர்களின் அனுபவம் முழுக்க முழுக்க உதவியிருக்கிறது. நேரடியாக நம்மோடு பேசுகின்ற எழுத்து நடையில் வாசிப்பதற்கு சிரமமின்றி, வறட்சியான கருத்துகள் இன்றி சொல்ல வந்ததை சுவாரசியமாகவும், தெளிவாகவும் அதேசமயம் எளிதாகவும் கூறியிருப்பதே இந்த புத்தகத்தின் பலம் எனலாம்.

நடிகராக, எழுத்தாளராக, குறும்பட இயக்குநராக, வினியோகஸ்தராக திரையுலகுடன் நெடுநாள் தொடர்பு உள்ள சங்கர் நாராயண் (கேபிள் சங்கர்) திரைப்பட வியாபாரம் குறித்த தனது அனுபவப் பதிவுகளை மிகையின்றி இயல்பாக கூறிச் செல்வதே சினிமா வியாபாரம் என்கிற இப்புத்தகத்தின் வெற்றியையும் உறுதி செய்து விடுகிறது. விரைவில் திரைப்பட இயக்குநராகவும் பரிணாமம் கொள்ள இருக்கிற கேபிள் சங்கரின் வெற்றிப்பாதையில் இந்தப்புத்தகம் ஒரு மைல் கல்.


- பொன்.வாசுதேவன்


..............................................................................................


புத்தகம் : சினிமா வியாபாரம்


ஆசிரியர் : சங்கர் நாராயண் (கேபிள் சங்கர்)


வெளியீடு : கிழக்கு பதிப்பகம்


விலை : ரூ.70/-


..............................................................................................


புத்தகத்தை ஆன் லைனில் வாங்க... http://nhm.in/shop/978-81-8493-417-5.html


Thursday, June 10, 2010

தந்தைமை

தந்தைமை (FATHERHOOD)





நமது தற்போதைய வாழ்க்கை முறை பெருமளவில் மாறி விட்டது. அதிக நேரத்தை தொழிலிலும், வேலையிலும் செலவிட வேண்டிய தேவை பல ஆண்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிள்ளைகளுடன் நாம் தொடர்பு கொள்வதற்கான நேரம் மிகவும் குறைந்துள்ளது. எனவே பிள்ளைகள் வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பின் அவசியம் பற்றி எழும் கேள்விகள் நமக்கும் உரிய கேள்வி களாகின்றன.

தாய்மை என்ற சொல்லை நாம் அடிக்கடி கேட்கின்றோம். அது மிகவும் பெருமைப்படுத்தப்படுவதும் நாம் அறிந்த ஒன்று. ஆனால் தந்தைமை என்ற சொல்லை நாம் கேள்விப்பட்டிகுக்கிறோமா என்றால் அதிகம் இல்லை என்றே பதில் கூற வேண்டும். குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ப்பில் தந்தைக்குரிய பங்கு பற்றி நாம் ஏன் அதிகம் சிறப்பித்துப் பேசுவதில்லை ? பிள்ளை வளர்ப்பில் தந்தைக்கு பெரிய பங்கு எதுவும் இல்லையா?

உலகின் பெரும்பான்மையான நாடுகளில் பிள்ளைகளைப் பொறுத்தவரையில் தந்தையின் பங்களிப்பு குறைந்ததாகவே உள்ளது. இதற்கு தந்தை குடும்பத்திற்காக உழைக்கும் முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொள்வதே காரணமாக இருக்கலாம். முந்தைய காலத்தில் பெண்கள் வீட்டிலிருந்து பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டதால் அவர்களே பிள்ளைகளுக்கு பாலூட்டி, தாலாட்டி, அரவணைத்து வளர்ப்பதுடன் வளர வளர அவர்களது சக தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றும் பொறுப்பையும் செய்து வந்தனர். இதனால் பிள்ளைகளுக்கு தந்தையைவிட தாயிடம் அதிக நெருக்கம் ஏற்பட்டது.

பிள்ளைகள் வளர்ப்பில் தந்தையின் பங்கைக் கூற தமிழில் இரண்டு பழமொழிகள் உள்ளன. "தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை" என்பது ஒன்று. பிள்ளைகள் தந்தை கூறுவதைக் கேட்டு நடந்தாலே நல்ல முறையில் வளர்வார்கள் என்ற கருத்து முன்னர் இருந்தது. பிள்ளைகள் எதிர் நோக்கும் பல பிரச்சனைகளை தீர்த்து வழிகாட்டுபவர் தந்தையே. எனவே அவரின் வார்த்தைகள் பிள்ளைகளுக்கு மந்திரம் போன்றவை என்ற கருத்தினாலேயே இந்த பழமொழி தோன்றியிருக்க வேண்டும்.

"தந்தையுடன் கல்வி போகும்" என்பது மற்றொரு பழமொழி. அதாவது தந்தையின் மறைவுடன் பிள்ளைகளின் கல்விக்கு வழிகாட்டுதல் போய்விடும் என்பதே இதன் அடிப்படைக் கருத்து. பண்டைய நாட்களில் பெண் கல்வி என்பது அதிகம் இல்லாத காரணத்தால் இந்தப் பழமொழி தோன்றியுள்ளது. இன்று நிலைமை பெருமளவில் மாறி பெண்கள் பல துறைகளில் கல்வி கற்றிருந்த போதும் குடும்பத்தை நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு இருப்பதால், தந்தையிடமே கல்விக்கு வழிகாட்டல் என்ற பொறுப்பு இன்றும் உள்ளது. பிள்ளைகளின் விருப்பத்திற்கும் திறமைக்கும் ஏற்ப உரிய முறையில் வழிகாட்ட வேண்டிய பொறுப்பு தந்தைக்கு உள்ளது.

கல்வியில் மட்டுமல்ல, தந்தை என்ற முறையில் பிள்ளைகளின் வாழ்வில் பல வழிகளில் பங்கு கொள்ள வேண்டிய தேவை தந்தைக்கு உள்ளது. வேலையில் அதிக நேரத்தைக் கழிப்பதால் பிள்ளைகளின் வாழ்வில் தந்தை அதிகம் பங்களிப்பதில்லை. அதனால் சரியான உதாரணப்புருஷன் (Role Model) இல்லாததால் பிள்ளைகள் பாதை மாறிப் போகிறார்கள். பிள்ளைகள் தந்தையிடமிருந்து புரிந்துணர்வை அன்பை எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் செய்ய வேண்டிய வேளைகளில் தந்தைமை (FATHERWOOD) நிலையே முக்கியமானது. தாய் பிள்ளை உறவு நீண்ட காலமாக கூறப்பட்டு வந்துள்ளது. தந்தையாக இருக்கும் நிலை கூறப்படுவது சமீபகாலத்திற்குரியது.

வளரிளமைப் பருவ (Adolescent) பிரச்சனைகளான பள்ளிப் படிப்பில் பின் தங்குதல், மன ஆரோக்கியம் குன்றுதல், தாழ்வுணர்ச்சி ஏற்படுதல், பிறருடன் பழகுவதில் தயக்கம், குற்றம் புரிதல் போன்றவற்றிற்கு தந்தை அருகில் இருந்தும் பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டுவதில்லை என்பதையே காட்டுகிறது. பிள்ளைகளுடனான உறவின் இயல்பைப் புரிந்து அவர்களின் பிரச்சனையை உணர்வு பூர்வமாக அணுகுவதே இதற்குத் தீர்வாகும் பொதுவாக தந்தை பிள்ளைகளோடு தினசரி மிகக்குறைந்த அளவு நேரத்தையே செலவழிக்கின்றனர். இது அதிகரிக்கப்பட வேண்டும். பிள்ளைகளுடன் நேரத்தை கழிப்பதற்கு நிறைய திட்டமிடல் அவசியமாகிறது. வாரத்தில் ஓரிரு நாட்கள் பிள்ளைகளுடன் கழிக்க சில மணி நேரம் ஒதுக்க நாம் பழக வேண்டும்.

ஒருவர் எவ்வாறு சிறந்த தந்தையாக இருக்க முயற்சிக்கலாம்? தொழில் சார்ந்த விஷயங்களுக்கு நெரம் ஒதுக்குவது போல பிள்ளைகளுடன் கழிக்கும் நேரத்தையும் ஒதுக்க வேண்டும். ஏதாவது தவறு செய்தால் தவற்றை ஒத்துக் கொள்வதுடன் அதற்காக மனம் வருந்துவதாக கூறத் தயங்கக் கூடாது. பிள்ளைகளின் பாடப்புத்தகங்களை வாசிக்க வேண்டும். இதன் மூலம் பிள்ளைகளுடன் பேசுவதற்கு விஷயம் இல்லாமல் தடுமாற வேண்டிய அவசியம் இருக்காது. பிள்ளைகளுக்கு கதை சொல்வது தந்தையின் முக்கிய கடமைகளில் ஒன்று.



பிள்ளைகளுக்கு கதை கூறும் நேரத்தில் நமது சிறிய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கூற வேண்டும். அவ்வாறு கூறுவதன் மூலம் தமது குடும்ப வரலாறு, பெருமைகள் வாழ்க்கைச் சூழல், பண்பாடு ஆகியன பற்றிய விஷயங்களை பிள்ளைகள் அறியும் படி செய்யலாம். இது பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை அளிப்பதுடன் தாங்கள் எதிர் காலத்தில் செய்ய வேண்டிய முடிவுகள் அவற்றின் விளைவுகள் பற்றி சிந்தித்து உணர்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

சிறு வயதில் அளிக்கப்படும் தந்தையின் அணைப்பும் ஆதரவான வார்த்தைகளும் ஏற்படுத்தும் தாக்கம் பிள்ளைகளின் வாழ்நாள் வரை நினைவு கூறத்தக்கது. சிறுவயதில் இவ்வாறான அன்பான வளர்ப்பையும் உணர்வு பூர்வமான ஆதரவையும் பெறாவிட்டால் பிற்காலத்தில் பிள்ளைகளிடமிருந்து தந்தையும் அதை எதிர்பார்க்க முடியாது. பிள்ளைகள் உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படும் போது வெளிப்படையாக அழவும், அதனை நம்மிடம் சொல்லவும் தைரியம் கொண்டவர்களாக வளர்வதில் தந்தையின் அன்பான வளர்ப்பு முறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

தந்தை பிள்ளைகளுடன் திறந்த மனத்துடனும், அன்புடனும், மென்மையுடனும் பழக வேண்டும். மகன், மகள் இருவரையும் ஒரேமாதிரியான பிரியத்துடன் நடத்துவதும் பிள்ளைகளின் சந்தேகங்களை, துயரங்களை எப்போதும் கேட்கத் தயாராகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்ச்சி மாற்றங்களைப் புரிந்து கொண்டு தந்தை தனது அனுபவங்களை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் மனப்பக்குவத்தையும், சுயமாக முடிவெடுக்கும் திறனையும் ஏற்படுத்த இயலும், நட்பும், ஆதரவும் சரியான வழிகாட்டுதலும் அளிக்கும் தந்தையாக இருக்க முயற்சிக்க வேண்டும்.

ஒரு தந்தை எவ்வாறு தன் பிள்ளைகளின் மீது அன்பாக நடந்து கொண்டார் என்பது, அப்பிள்ளைகள் பிற்காலத்தில் அவர்கள் எவ்வாறு தனது தந்தையிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே உணர இயலும்.

நீங்கள் எப்படி வளர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று விரும்புகிறீர்களோ, அது போலவே உங்கள் பிள்ளைகளையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள்.

20 ஜுன் தந்தையர் தினம்

- பொன்.வாசுதேவன்

Tuesday, June 8, 2010

தொன்மை மிக்க தெய்யம் நடனம்


(உயிரோசை இணைய இதழில் வெளியான கட்டுரை)

"கடவுளின் சொந்த பூமி"கேரளாவை இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்கேரளத்தின் இயற்கையும்,எழிலும் அதையே உறுதிப்படுத்துகிறதுதொன்மக் கலைகளிலும் நடனங்களிலும் கூட மிகச் சிறப்பான பெயர் கேரளாவிற்கு உண்டுதெய்யம்கோலம் துள்ளல்பேட்டை துள்ளல்சவிட்டு நாடகம் என கிராமம் சார்ந்த பலவகை நடனக் கலைகளின் வேர்கள் இங்குதான் தொடங்கியிருக்கிறது



நடனங்களை மதத் தொடர்பான கலாச்சாரப் பின்னணியில் இழைத்து வெளிப்படுத்துகின்ற கேரள பாணி நடனப்பாங்கு நம்மை மட்டுமல்லாமல்வெளிநாட்டினரையும் வியக்க வைத்திருக்கிறது.பாரம்பரிய கேரள நடன வகைகளில் ஒன்றுதான் தெய்யம்வடக்கு மலபார் பகுதி முழுவதிலும் பரவலாக நடத்தப்பட்டு வரும் பழங்கால நடனமுறை.குறிப்பாகஇந்துமதப் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் மதத்தோடு பின்னிப் பிணைந்து நிகழ்த்தப்படும் தெய்யம் நடனம்நடனமாக அல்லாமல் சடங்காகவே நினைத்து செய்யப்படுகிறது.போராளிகளும்ஆயுதங்களும்... இதுதான் தெய்யம் நடனத்தின் மையக்கரு.

குடிவழி சார்ந்த போர் வீரர்களையும்அவர்கள் உபயோகித்த ஆயுதங்களையும் வணங்கி வழிபடுவதே தெய்யம் நடனம்வரலாற்றிலும் இது பற்றிய குறிப்புகள் நமக்குக் காணக் கிடைக்கின்றனதமிழிலும் சங்க இலக்கியத்தில்வேலன் வெறியாட்டல்‘ என்ற பெயரில் வீரர்களை வழிபட்ட வரலாறு இருக்கிறதுஇறந்த வீரர்களின் நினைவாக கற்களை நட்டு வழிபடுதல்இசைக் கருவிகளை இசைத்தும்மது அருந்தியும்இலைகளால் ஆடை அணிந்தும் என்று தொடரப்பட்ட கி.மு500-க்கு முந்தைய பழக்கங்கள்தான் நடனக்கலையாக மெருகூட்டி செம்மைப்படுத்தின.
இந்தியாவில் வடக்கிலும்கூட திரா என்ற நடனக்கலை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்துள்ளது

தெய்யம் நடனம் போலவே நடன முறைபாடல்உடை அலங்கரிப்புவீரர்கள் என அனைத்தையும் ஒப்பாகக் கொண்டிருக்கும் திரா நடனம்வீரர்களை வழிபடுவது நம் நாட்டின் பாரம்பரியக் கலாச்சாரம் என்பதற்கு சான்றாகிறது.
கர்நாடகாவின் தெற்கு கனரா பகுதியிலும் வீரர் வழிபாட்டுக்கென பழங்கால நடனமுறை ஒன்று வழக்கில் இருந்துள்ளது


பூட்டா அல்லது கோலா என்ற பெயரில் இருந்த அவ்வகை நடனக்கலை தற்போது சிறிதுசிறிதாக அழிந்துவிட்டது.வரலாற்றுச் சான்றுகளின்படி தெய்யம் நடனம் 1500ஆண்டுகளுக்கு முன்பாக தென்னிந்தியாவில் தோன்றியிருக்கிறதுகேரளத் தோட்டங்களில் பாடப்பட்டு வந்த பாடலே தெய்யம் நடனத்திலும் பாடுகின்ற பழக்கம் இருந்தது

எந்த இலக்கியங்களிலும் இது பதியப்படாததால் வாய்வழி மூலமாகவே தலைமுறை தலைமுறையாக இப்பாடல்கள் பதிவாகியுள்ளனபிற்காலத்தில் இவற்றின் சில பாடல்கள் பனையோலையில் பதியப்பட்டதுதெய்யம் நடனக் கலையை தற்போதும் தொடர்ந்து வருகின்றவர்களிடம் இதற்கான சான்றுகள் உள்ளன.

ஆரியர்களின் வருகைக்குப் பிறகு பிராமணரல்லாத சமூகத்தினர் குறிப்பாக,தென்னிந்தியாவில் தங்களுடைய மத நம்பிக்கைகளைப் புதிய வழிகளில் வெளிப்படுத்திக் கொண்டனர்புராணக் கதைகளும் சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்றனசிறியகுடி வம்சாவழியினர் தங்களின் குடும்பச் சடங்குகளை மத வழிபாட்டோடு சேர்த்துக் கலவையாக்கி புதிய நம்பிக்கைகளைத் தங்கள் சமூகத்தினரிடையே ஏற்படுத்தினர்அவ்வழி வந்த தொண்டுக் கலைகளில் ஒன்றுதான் தெய்யம் நடனக்கலை.
குடிவழி வம்சங்களின் சிறுபான்மை இனத்தவர்களும் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்களான வண்ணான்மாவிலன்வேட்டுவன்,வேலன்மலையன் மற்றும் புலையன் போன்ற குடிமக்கள் தெய்யம் நடனத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்களாய் இருந்தனர்

பிறகு தொடர்ந்த காலங்களில் கடவுள் வழிபாடுமிருக வழிபாடுவியாதிகள்நீத்தார் நினைவு கூறல்போர்வீரர்கள் முன்னோர்கள் வழிபாடுசர்ப்ப வழிபாடு போன்றவற்றிற்காகவும் தெய்யம் நடனம் ஆடப்படுவது வழக்கமாகி விட்டது.
கதகளிகளரிபேயாட்டு போன்ற நடனக்கலைகள் போலவே அலங்காரத்துடன்(தமிழ்நாட்டின் கூத்துதோல்பாவைக்கூத்து போலநிகழ்த்தப்படும் தெய்யம் நடனம் குறிப்பாக பகவதி மற்றும் விஷ்ணுமூர்த்திரக்தா சாமுண்டி போன்ற கடவுள்களை வழிபட ஆடப்படுகிறதுபகவதி கடவுளின் பெயரை ஊர்ப் பெயரோடு இணைத்து வணங்கப்படுவதால் முச்சிலோட்டு பகவதி,கன்னங்காட்டு பகவதி என ஊர்களின் பெயர் சேர்த்து எல்லா ஊர்களிலும் பரவலாக வணங்கப்படுகிறது.தெய்யம் நடனத்தின் மற்றொரு முக்கிய அம்சம் அலங்கரிப்பு.உடல் முழுவதும் வண்ணங்களால் வரைந்து தலைக்கு தனியே வடிவமைக்கப்பட்ட கிரீடமும் செய்யப்படுகிறதுவண்ணம் பூசிக்கொள்வதிலும் பல விதங்கள் உள்ளன

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த தெய்யம் நடன வழக்கங்களின் அலங்காரம் இன்று சிதைந்து போகாமல் தொடரப்படுவது அதன் சிறப்பு.
தெய்யம் நடனம் வழங்குதலில் தேட்டம் மற்றும் வேலாட்டம் என இரண்டு பகுதிகள் உள்ளனஆரம்பம் வழிபாடாக தொடங்கி இறுதியில் வீர விளையாட்டு போல் ஆக்ரோஷத்தோடு உச்ச நிலை அடைவதில் நடனம் முடிகிறது.


வாத்தியக் கருவிகளின் இசையும் தெய்யம் நடனத்துக்கென உள்ள பிரத்யேகப் பாட்டும்நடனமும் இணைந்து உணர்வெழுச்சி மிகுந்த ஒரு நடனமாக அமைகிறது.தெய்யம் நடனத் திருவிழா வருடத்துக்கொரு முறை கேரளக் கிராமப்புறங்களில் சடங்காக நிகழ்த்தப்படுகிறது

ஒரு நாளில் தொடங்கும் நடனம் இரண்டு மூன்று என ஏழு நாட்கள் வரை கூட தொடர்வதுண்டு.தெய்யம் கேரளப் பாரம்பரிய நடனங்களில் ஒன்றாகப் பெருமையோடு கூறப்பட்டாலும் இன்று மாறி வரும் சமூகத்திற்கேற்ப சிறிது சிறிதாக சிதைந்து வருகிறது.

பராமரிக்கவும்தொடரவும் ஆட்களில்லாமல் வெறும் வேர்களோடு மட்டும் நிற்கிற கேரளாவின் தெய்யம் நடனக்கலை மட்டுமின்றி நாடு முழுவதும் வழக்கொழிந்து வரும் இதுபோன்ற பல நடனக்கலைகளுக்குப் புத்துயிர் அளித்துப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கும் உண்டு.


- பொன்.வாசுதேவன்

Friday, June 4, 2010

சிறு பத்திரிகை விமர்சன அரங்கு - சொற்கப்பல் (விமர்சன தளம்)


நண்பர்களே,

கவிதை, சிறுகதை, நாவல் விமர்சன அரங்குகளைத் தொடர்ந்து சொற்கப்பல் (விமர்சன தளம்) நடத்தும் நான்காவது அமர்வு நடைபெற உள்ளது. இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறேன்.

- பொன்.வாசுதேவன்

.......................................................................................................................................
சிறு பத்திரிகை விமர்சன அரங்கு 


தமிழ் சிறுபத்திரிகை சூழல் குறித்த கருத்தரங்கு

கடந்த பத்தாண்டுகளில் ‘புது எழுத்து‘ சிறுபத்திரிகை

நாள் : 12.06.2010 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 7.30 வரை
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர் மேற்கு, (பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் அருகில்), சென்னை.

வரவேற்புரை
பால்நிலவன்




சிறப்புரை
''தற்கால இந்திய ஆங்கில நாவல்கள்''
மீனா கந்தசாமி
(பத்திரிகையாளர்-மொழி பெயர்ப்பாளர்-விமர்சகர்-கவிஞர்)

கருத்துரை
பத்தாண்டுகளில் புது எழுத்தும், சிறுபத்திரிகை சூழலும்


ஸ்ரீநேசன்
செல்வ.புவியரசன்
வெளி ரங்கராஜன்
லதா ராமகிருஷ்ணன்
யாழன் ஆதி
தக்கை வெ.பாபு
சா.தேவதாஸ்
யூமா வாசுகி


மற்றும்
மனோன்மணி (புது எழுத்து ஆசிரியர்)

நன்றியுரை
மு.வேடியப்பன்


நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
அமுதரசன் பாலராஜ்
க.முகுந்த்
................................................................................................................


அனைவரும் வருக !!


அன்புடன் அழைக்கும்...


அகநாழிகை - தடாகம்.காம் - டிஸ்கவரி புக் பேலஸ்
சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பாளர்கள்


சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பாளர்கள்

Wednesday, June 2, 2010

வக்கத்தவன் வாத்தியான் ; போக்கத்தவன் போலிசு


தனக்குப் பிடித்தமான ஒன்றைப் பற்றிக்கொண்டு தொங்கி அதைச் சார்ந்து தன்னசைவுகளை ஏற்படுத்துவது மனித விலங்கின் இயல்பான மனோபாவம்தான். பல நிகழ்வுகளின் வாயிலாக தொடர்ந்து பல முறை இது நிரூபணமாகிக கொண்டுதான் இருக்கிறது. இப்போதும் அப்படித்தான்.

கான்கிரீட் காடுகளில் வாழ நேர்ந்து விட்ட சமூக விலங்காகிப் போன மனிதன் தன்விருப்பம் சார்ந்து எது சரி எது தவறு என்பதையெல்லாம் தீர்மானம் செய்து கொள்கிறான். மனித விருப்பு வெறுப்புகளை தீர்மானிக்க செய்வது சமூக நடத்தைதான் என்பதில் சந்தேகமில்லை. ஊடகங்களின் தாக்கம் அதீதமாகிப் போய்விட்ட இன்றைய நாட்களில் நம்மின் ஒரு சதவிகித செய்கையைக்கூட நாமே முடிவு செய்வதென்பது இயலாததாய் இருக்கிறது.

குழு மனப்பான்மையுடன், எதையும் வெளிப்படையாக முன் முடிவின்றி அணுக இயலாது இயல்பிழந்த மனித மனம் தனக்கு விருப்பமற்றதான எதையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

இதன் காரணமாக எந்த நிலையிலும் தான் சமூகத்திலிருந்து தனியனாக்கி விடப்படக்கூடாது என்ற உள்ளுணர்வு நம் மனதை இயக்க, குழும மனப்பான்மை சார்ந்தே தன் நெறிகளையும், நிகழ்த்து உளவியலையும் நம்மை கைக்கொள்ளச் செய்கிறது.

தனக்குப் பிடித்ததுதான் பிறருக்கும் பிடிக்க வேண்டும் என்ற கருத்து திணித்தலும், தான் ஏற்றதை பிறர் மறுக்க உரிமையுண்டு என்பதை ஒப்புக்கொள்ளத் திராணியற்ற எதிர்வினையாடல்களும் மனித மன ஆற்றலின் யோக்கியதையற்ற எல்லையின்மையைப் புலப்படுத்துகிறது.

உலகில் எத்தனை கருத்துண்டோ அத்தனைக்கும் சரியான எதிர் கருத்துக்களும், மாற்றுக் கருத்துகளும் உண்டு என்பதை அனுமதியாத அகச்சிக்கல் ஆபத்தானது.

அறம் – ஒழுக்கம் சார்ந்த விழுமியங்களை ஆதி குணத்தின்படியும், மரபணுக்களின் வழியாகவும், வாழ்ந்த சூழல் வாயிலாகவும், தன்னணுபவம் சார்ந்தும், கண்டு கேட்டவற்றின் அடிப்படையிலும் மனித மனம் அணுகுகிறது.

அறம் என்பது எப்போதும் ஒரே சீராக இருப்பது. மாறாக ஒழுக்கம் என்பது இடம், காலம், சந்தர்ப்பம் என்பதற்கேற்ப மாற்றமடையக் கூடியது.

எதிராளியின் பலவீனமான சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதென்பது மன இயல்பு. வாதத்திறமையின் மீதான நம்பிக்கையிலும் தன் கருத்தை நிலைநாட்டிக் கொள்வதில் சற்றும் சளைத்ததல்ல மனித மனம்.

பிரதி என்பது வாசிப்பவர்களின் முழு விமர்சனத்திற்கும், கேள்விக்கு உள்ளாக்கப்படவும், சொல்லாடல்களுக்கும், விவாதங்களுக்கும் உரியதுதான். படைப்பு பிறந்தவுடன் படைப்பாளி இறந்து விடுகிறான் என்பார்கள். படைப்பின் ஆக்கத்திற்கு பிறகு வாசிப்பவனின் புரிதலுக்கும், அணுகலுக்கும் உரிய பொருளாகி விடுகிறது.

ஒரு படைப்பை அணுகும் மனம் அதை முன்முடிவுகளுடனும், படைப்பாளியைப் பற்றிய தனிப்பட்ட அவதானிப்புகளுடனும், குழு மனப்பான்மையுடனும் அணுகினால் படைப்பு குறித்தான பார்வை சரியாக இருக்க முடியாது.

பிரதியை அல்லது படைப்பை பாவிக்கும் பலருக்கும் அதை அறிமுகம் செய்து கொள்கிற நோக்கில் அணுகுவதென்பது அரிதாக இருக்கிறது. பிரதி என்பதை இங்கு இலக்கியப் படைப்பாவோ, காண் ஊடக படைப்பாகவோ வேறு எவ்வாறாகவும் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு பிரதி அல்லது படைப்பு என்பதை நாவல், கட்டுரை, கவிதை அல்லது வலைத்தள பதிவு என்றே கொள்வோம்.

படைப்பை அணுகுகின்ற மனம் முதலில் தலைப்பைக் கண்டு அதை எழுதியவருடன் அடையாளப்படுத்திக் கொள்கிறது. அதன் வாயிலாக ஏற்கனவே மனதில் எழுதியவர் குறித்து பதிந்திருக்கும் கருத்துக்கள் சார்ந்து அகச்சாய்வுடன் படைப்பை அணுகுகிறது. அதன் காரணமாக அறிமுக மனோநிலையில் வாசிப்பதிலிருந்து விலகி நெறிமுகம் செய்ய முற்படுகிறது.

நெறிமுகம் என்பது பிரதியை நடுவுநிலைமையுடன் எந்த விருப்பு வெறுப்புமற்று, முன்முடிவுகளற்றும் படைப்பு வடிவத்தின் உணர் கூறுகளுக்கேற்ப விளங்கிக் கொண்டு செய்யப்பட வேண்டியது.

மாறாக முன்முடிவுகளுடனும், சமூகப் பண்பு சார்ந்தும், தன் விருப்பம் பற்றியும் படைப்பை நெறிமுகம் செய்ய முயலும் போது அதுவும் விவாதப் பொருளாகிறது.


(இது ஒரு மீள் பதிவு)

- பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname