Friday, April 23, 2010

உயிர்ப்பூ



ஏழாவது முறையாக நீங்கள் காதலிக்கத்
தொடங்குகிறீர்கள்

கடந்த முறைகளில் உங்கள் காதலின்
இறுதி ஊர்வலம் சிறப்பாகவே நடந்திருக்கிறது
இது ஒன்றும் புதிதல்ல
சக மனிதர்களுக்கும் நடப்பதுதான்

அங்க அசைவுகளில் லயிப்பதில்லை
மனசின் ஆழம்தான் எப்போதும் உங்களை
உள்ளிழுத்துக் கொண்டேயிருக்கிறது

சிறு நீரைத் தேக்கியிருக்கிற கிணறுகளில்
அதற்காகவே விழுந்து தடுமாறி எழுகிறீர்கள்

நொடிக்கொருமுறை காட்சியொடிக்கும்
இமை மூடி திறந்து விழிக்குஞ்சுகளில்
பிரியம் தளும்ப பேசுகிறீர்கள்

பிரபஞ்ச கண்டமாய் குரலில் ஆவல் மிதக்க
ஆகாச கங்கையாய்ப் பொழிகிறீர்கள்

மௌனத்தைப்பூசியபடி
பேச வார்த்தைளற்றுப் போகிறது
உங்களுக்கு ஒரு நேரத்தில்

பாசாங்கின் நுனியைக்
கையிலெடுத்துக் கொள்கிறீர்கள்
வெற்று வார்த்தைகள்
வறண்ட பிரியங்கள்
வேலைகளால் நிறைகிறது
உங்கள் வாழ்க்கை

தேங்கிய நீரில்
தன்னைப் பருக முயற்சித்து
இயலாமல் சலித்துக் கொண்டிருக்கும்
சிறு குருவியாய் திரிகிற உங்களை
அதீத யோசனையுடன்
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது காதல்.

- பொன்.வாசுதேவன்

Tuesday, April 20, 2010

சாத்தானின் தாசியன்




ஆம்
இன்றைக்கு எப்படியாவது
கடவுளைக் கொன்றுவிட 
திட்டமிட்டிருக்கிறேன்

இனியும் பொறுமையில்லை
முழுமையாக உதிர்ந்து விட்டன
சகிப்புத்தன்மையின் செதில்கள்

வந்துவிட்டார் கடவுள்
எதிர்பார்த்த தருணம் நெருங்கிவிட்டது
பின்புறமிருந்து முகத்தில் 
துணியைப் போர்த்தி
வசமான பிடியுடன் இறுக்குகிறேன்

திமிறிக் களைத்து தோற்று
உடல் தளர்ந்து பிரிகிறது
கடவுளின் உயிர்

குரூரத் திருப்தியோடு கோரப்பற்களில்
வழியும் இரத்தத்தை சுவைத்தபடி
தொலைவில் வந்து பார்க்கிறேன்

தகன மேடையில் யாரோ
கிடத்திக் கொண்டிருக்கிறார்கள்
எனது உடலை.

- பொன்.வாசுதேவன்

Saturday, April 10, 2010

கடவுள் இறந்துவிட்டார்



வெகுநேரமாக வெயில் புணர்ந்து
உச்சப் பரவசம் அடைந்திருந்த
அறைச்சுவர்கள் வெம்மையைப்
பிரசவித்துக் கொண்டிருந்தன

சுழன்று கொண்டிருந்த
மின் காற்றாடி நின்றுபோன
எதிர்பாராத தருணத்தில்
வந்தது அந்தக்கடிதம்

பிரமை குறித்தான
யோசனையில் ஆழ்ந்திருந்த
எனக்கு நடுக்கத்தைக் கொடுத்தது
அந்தக் கடிதம்

நிச்சயம் அதில்
நல்ல சேதியாகத்தான்
இருக்க வேண்டும்

கைகள் நடுங்க உதடுகள் உலர
கடித உறையின் முனைகளை
பதமாக கிழிக்கிறேன்

பதட்டத்தில் சற்றே கோணலாகி
உள்ளிருந்து என்னைப்பார்த்து
சிரிக்கிறது கடிதம்

பிரித்துப் படிக்கத் தொடங்குகிறேன்
ஆம்
எதிர்பார்த்தது போலவே
நல்ல சேதிதான்
கடவுள் இறந்து விட்டாராம்

எல்லை மீறிய மகிழ்ச்சியின்
கொண்டாட்டத்தில்
துள்ளியெழுகிறேன் படுக்கையிலிருந்து

மின் காற்றாடி சட்டென்று
சுழலத் தொடங்குகிறது
அறைச்சுவர்கள்
குளிர்ந்து விட்டன

கடித உறையை கிழித்தபோது
துண்டாகிப் போன
அஞ்சல் வில்லைப் பறவை மட்டும்
துடித்துக் கொண்டிருக்கிறது
குற்றுயிராய்.

- பொன்.வாசுதேவன்

Friday, April 9, 2010

எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. 


விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. 


இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். 


பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. 


இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:

இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8
(எழும்பூர் மியூசியம் எதிரில்)
நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி

பங்கேற்பாளர்கள் :

அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின்மலர், நிர்மலா கொற்றவை.

எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.

தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20
பேசி : 94441 20582
----------------------------------------------------------------------------------------------
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

Thursday, April 8, 2010

ஒரே கடல் : ஒரு முழுமையான திரைப்படம்

எந்த ஒரு படைப்பையும் அதை அனுபவித்து முடிகிற அந்த தருணத்தில் கிடைக்கிற நிறைவான உணர்வுக்கு ஈடான ஒன்று வேறெதிலும் இல்லை எனலாம்.

ஒரு வாழ்க்கையில் வாழ்ந்து தீர்த்து விட முடியாத பலவற்றை நாம் புத்தகங்களிலும், திரைப்படங்களிலும் கண்டடைகிறோம். இவ்வகையான அனுபவங்கள் நமக்குள்ளாக கிளர்த்தும் உணர்வெழுச்சியை முழுமையாக வரிகளில் கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு. சிலவற்றை பார்த்து, அனுபவித்து மட்டுமே உணர இயலும். அப்படியான படங்களில் ஒன்றுதான் ‘ஒரே கடல்‘

மாற்றத்தை அறிய முடியாமல், அதே நேரம் நம்முள் மாற்றம் நிகழ்ந்து விடுவதை வாழ்வின் பல தருணங்களில் உணர்கிறோம். ஒரு பூ மலர்வதற்கு ஒப்பானது நம் வாழ்வின் மாற்றங்கள். புதிதாக சிலரை சந்திக்கும் பொழுதுகளிலும், அவர்களோடு ஈர்ப்பும் பிரியமுமாக நம் போக்கு மாறுவதும் இது போலத்தான்.

நினைவுகளில் உலாவும் சம்பவங்களின் ஊடாக சந்தோஷம், துக்கம் என நமக்குள் நிகழ்த்தும் உணர்வுச் சிதறல்கள் நம் மனப்போக்கையே மாற்றி விடுகிறது. சொற்ப சந்தோஷங்கள் மட்டுமே அனுபவிக்கக் கிடைக்கிற நம் வாழ்வில், அதையும் கூட கொண்டாடத் தெரியாமல், விட்டுக் கொடுப்பதும், சகிப்புத்தன்மையுமற்று, அவசரத்தில் நம் செய்கைகள் நம்மையும், நம் பிரியங்களையும் வறட்சியான வாழுலகிற்குள் தள்ளி விடுகிறது.

பிரியம், அன்பு, பாசம், காதல், சந்தோஷம், பிரிவு இப்படியான உணர்வுகளுக்குள் ஆட்படாத மனித வாழ்க்கையே கிடையாது. மனிதனுக்கு மட்டுமின்றி விலங்குகளிடமும் இவ்வுணர்வுகள் இருப்பதை பல நேரங்களில் கண்டிருக்கிறோம். மனித வாழ்க்கையே நெகிழ்ச்சியான சம்பவங்களால் புனையப் பட்டது. உணர்வுவயப்படுதலே உண்மையான வாழ்க்கை.

‘ஒரே கடல்‘ படம் ஏற்படுத்துகிற உணர்வலைகள் நம்மை பலவாகவும் யோசிக்க வைக்கிறது. செயற்கைத்தனம் துளியுமற்ற இயல்பான இதுபோன்ற படங்களின் மீதான காதலை அதிகரிக்கிறது.

ஒரே கடல் (2007)

okadal2_p

உறவுகள் மீதான பிடிப்பற்று தனக்கென நியதிகள் ஏற்படுத்திக் கொண்டு அறிவுஜீவியாக தனது வாழ்வை வரித்துக் கொண்டிருக்கும் பொருளியல் ஆய்வாளர் டாக்டர் நாதன் (மம்முட்டி).

தீப்தி (மீரா ஜாஸ்மின்) நடுத்தர வர்க்க குடும்பப்பெண். அவள் கணவன் ஜெயன் (நரென்) இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உண்டு.

நாதனின் தோழி பெலா (ரம்யா கிருஷ்ணன்) வாழ்க்கையின் நடைமுறைச் சிக்கல்களை நேரடியாக சந்தித்திருப்பவள்.

கருத்து ரீதியாக எதிரெதிர் துருவங்களான நாதன், தீப்தி என்ற இருவருக்குமிடையே ஏற்படும் உறவும், அதையொட்டி இருவருக்குள்ளும் எழும் உளப்  போராட்டங்களுமே ‘ஒரே கடல்‘ என்கிற இப்படம். மம்முட்டி, மீரா ஜாஸ்மின், நரென், ரம்யா கிருஷ்ணன் என ஒவ்வொருவரின் இயல்பான நடிப்பும் சிறப்பாக வந்துள்ளது.

2 (1)

2007 வெளியான இந்த மலையாள மொழி திரைப்படம் வங்காளத்தை சேர்ந்த எழுத்தாளர் சுனில் உபாத்யாய எழுதிய ‘ஹிராக் தீப்தி‘ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. கேரள எழுத்தாளர் எம்.பி.குமரன் அவர்களால் மலையாளத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட இந்நாவல் சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு நாவலுக்கான பரிசு பெற்றுள்ளது.

oreKadal2 ஷ்யாம் பிரசாத் இயக்கிய இப்படத்திற்கு இசை ஓசெப்பச்சன். பாடல்களை பாம்பே ஜெயஸ்ரீ, ஸ்வேதா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இப்படத்தின் பின்னணி இசை குறிப்பிடப்பட வேண்டியது.

images (4)

images (5) images (6)

இப்படம் யு டியூபில் முழுவதும் காணக்கிடைக்கிறது.

http://www.youtube.com/watch?v=2nXn4HCWuI4&feature=player_embedded

தரவிறக்கம் செய்து பார்க்க :

http://rapidshare.com/files/178376695/Ore-Kadal.part1.rar

http://rapidshare.com/files/178391848/Ore-Kadal.part2.rar

http://rapidshare.com/files/178410256/Ore-Kadal.part3.rar
http://rapidshare.com/files/178370373/Ore-Kadal.part4.rar

பாடல்களை கேட்க

http://www.raaga.com/channels/malayalam/album/M0001166.html

இப்படம் பெற்றுள்ள விருதுகள்

Selected in Indian Panorama as the opening movie
Selected to Rome (Italy) International Film festival showcased as one of the outstanding film from Asia in this festival
Film Festivals
O IFFI Indian Panorama -2007
Asiatic –Rome- 2008
Fribourg International Film Frestival- Switzerland 2008
Indian Film Festival Los Angeles -2008
International Film Festival of Minneapolis -2008
Cine Del Sur – Granada, Spain -2008
Stuttgart Festival of Bollywood and Beyond (July-2008)
Festival of Malayalam Films – Vollodoid, Spain (June -2008)
International Film Festival of Kerala- 2007
Hyderabad International Film Fest
Pune International Film Festival
MAMI Festival – Mumbai
Habitat Film Festival – New Delhi
Asian Film Festival - Abudhabi
Kerala State Award 2007
Second Best Film - Ore Kadal - Best Actress - Meera Jasmine
Best Background Score – Ouseppachan - Best Editor- Vinod Sukumaran
Dubai Amma Awards 2007
Best Movie - Ore Kadal - Best Actor – Mammootty - Best Actress - Meera Jasmine
Best Supporting Actress - Ramya Krishnan - Best Camera Man - Azhakappan
Best Music Director - Ouseppachan
IFFK 2007 Awards
NETPAC Award for the Best Malayalam Film
Fipresci Award for the Best Malayalam Film
Asianet Film Award 2007
Best Actor award – Mammootty - Best Actress award - Meera Jasmine
Film Critics Award 2007
Best Movie - Best Directior - Best Female Singer - Best Camera man
Best Sound Recorder.
Vanitha Film Award 2007
Best Actor- Mammootty - Best Actress - Meera Jasmine
FOKANA Film Award 2007
Best Actor – Mammootty - Best Actress - Meera Jasmine
Sify Award 2007
Best Movie - Ore Kadal - Best Actor – Mammootty - Best Actress - Meera Jasmine
Amrita Film Awards 2007
Best Directo r- Shyamaprasad - Best Actor – Mammootty - Best Actress - Meera Jasmine
Best Supporting Actress - Ramya Krishnan - Best Music Director :Ouseppachan
Best Female Singer : Shweta Mohan
Other Awards
John Abraham Award for Ore Kadal
V.Santharam National Award for the Best Actress - Meera Jasmine
First Sreevidya Award for Best Actress -Meera Jasmine
Bollywood & Beyond 2008 (Stuttgart, Germany): Audience Best Film Award for Ore Kadal

Friday, April 2, 2010

சொற்கப்பல் - விமர்சன தளம் அன்புடன் அழைக்கிறது.

சொற்கப்பல்
(விமர்சன தளம்)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
அமர்வு : 2 ஏப்ரல் 2010
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நாள் : 3.4.2010 சனிக்கிழமை மாலை 5 மணி

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், 
6, முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, 
(பாண்டிச்சேரி இல்லம் அருகில்), சென்னை-78.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நினைவரங்கம் : 
----------------------------------------------------------------------------------
இலக்கிய வட்டம் காஞ்சிபுரம் வெ.நாராயணன்


வரவேற்புரை 
---------------------------------------
முகுந்த், தடாகம்.காம்


சிறப்புரை 
-----------------------------------------------------------------
''என் கதைகள் - நாடகம் - வாழ்க்கை'' 
கூத்துப்பட்டறை ந.முத்துசாமி


விமர்சன அரங்கு
-------------------------------------------------------------
சமீபத்தைய கவிதைத் தொகுதிகள்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
1. முயல் போல் வாழும் காமம் - நீலகண்டன் / விமர்சனம் : கண்டராதித்தன்

2. புவன இசை - வெயில் / விமர்சனம் : அய்யப்ப மாதவன்

3. தனிமையின் இசை - அய்யனார் விஸ்வநாத் / விமர்சனம் : நிலாரசிகன்

4. வேட்கையின் நிறம் - உமாஷக்தி / விமர்சனம் : நரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------


நன்றியுரை
----------------------------------------------------------------
வேடியப்பன், டிஸ்கவரி புக் பேலஸ்



நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
---------------------------------------------------------
பொன்.வாசுதேவன், அகநாழிகை



வாசிப்பதற்கும், சுவாசிப்பதற்கும் அனைவரும் வருக !


சொற்கப்பல் அமைப்பாளர்கள்
----------------------------------------------------------------------------------------------------------------
அகநாழிகை - தடாகம்.காம் - தமிழ்மகன் - டிஸ்கவரி புக்பேலஸ்


தொடர்புகளுக்கு : 
---------------------------------------------------------------------------------------------------------
பொன்.வாசுதேவன் - 9994541010 / அஜயன்பாலா - 98840 60274

முகுந்த் - 98407 67179 / வேடியப்பன் - 99404 46650


Thursday, April 1, 2010

பாவத்தின் சம்பளம் மரணம்


ஆகச்சிறந்த துயரங்களால்
புனையப்பட்டிருக்கிறான் அவன்

பூனைச்சீற்ற வேகமும்
மண்புழுவினையொத்த
சுயமற்ற நெளிதலும்
புரளச்செய்கிறது அவன் உலகை

அவன் அனாதை
அயோக்கியனும்கூட
கள்ளத்தனத்தை விரும்பிப் பயின்றவன்
காதல் துரோகி
இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம்

அவனுக்கான சிலுவைகள்
ஏராளமாக இருக்கிறது
எதைத் தேர்வது
எதில் அறைந்து கொள்வது
என்ற குழப்பத்தில் இருக்கிறான்

அவன் கைகளை
மரப்பலகையின் மேல் பரத்தி
உள்ளங்கைகளுக்குள் ஆணியை
இறக்கும்போது வழிவது
அவன் பாவங்கள்தான்

அவனைவிட பாவங்களை
நீங்களும் செய்திருக்கிறீர்கள்
நானும்தான்
எனவே
அவனை யாரும்
துன்புறுத்த வேண்டாம்
தண்டிக்கவும் வேண்டாம்

அவனாகவே
அவன் உயிரை
பறித்துக் கொள்ளட்டும்
தயைகூர்ந்து பொறுத்துக் கொள்ளுங்கள்

அவன் மீண்டும் உயிர்த்தெழவும் கூடும்
அப்போது வந்து கொண்டாடாதீர்கள்
தேவகுமாரன் அவன் என்று.

- பொன்.வாசுதேவன்

Comments system

Disqus Shortname