Sunday, February 28, 2010

மானிடர் பக்கங்கள்

தண்டோரா என்கிற ‘மணிஜி‘ இயக்கிய குறும்படத்திற்கு விருது

பன்னாட்டு அரிமா சங்கங்களின் ஒரு அங்கமான திருச்சி அரிமா சங்கம் நடத்திய குறும்படப் போட்டி விழாவில் தண்டோரோ இயக்கிய ‘சியர்ஸ்‘ (CHEERS) என்ற குறும்படத்திற்கு விருதும், ரூ.5000/- ரொக்கப்பரிசும் கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இப்படியான சரித்திரப்புகழ் பெற்ற சம்பவத்தில் பங்கேற்று மகிழ வருமாறு மணிஜி அழைத்ததால், நேரில் காணும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.

திருச்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு குறும்படங்கள் திரையிடப்பட்டன. அங்கு திரையிட்ட படங்களிலேயே சுருக்கமாக, சொல்லவந்ததை தெளிவாக காட்சிப்படுத்திய ஒரே படம் மணிஜியுடையதுதான். இது வெற்றுப்புகழ்ச்சியல்ல. குறும்படம் என்ற இலக்கணத்திற்கு ஒப்ப இருந்ததே அப்படத்தின் சிறப்பு. மணிஜியின் குறும்படம் திரையிட்டு முடிந்ததும் ஏராளமானோர் மணிஜியுடன் கைகுலுக்கி தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதே இதற்கு சாட்சி. கலைஞனுக்கு மிகுந்த சந்தோஷம் கொடுப்பதே அவனது செயல்களுக்கான அங்கீகாரம் என்பதுதானே.

இந்நிகழ்ச்சிக்கு சென்று வந்ததில், ஆங்கரை பைரவி, நெய்வேலி பாரதிக்குமார், தேனி முகமது சஃபி, கவிஞர் ரத்திகா, ‘தொனி‘ சிற்றிதழாசிரியர் புவனராஜன், நாவல் குமாரகேசன் என சில எழுத்தாளர்களையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் மணிஜியின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு அங்கிருந்து பயணமானோம். ‘நெற்குஞ்சம்‘ எழுதிய எழுத்தாளர் தேன்மொழி மற்றும் ‘சௌந்தரசுகன்‘ சிற்றிதழ் ஆசிரியர் சுகன் அவர்களையும் சந்திப்பதாக திட்டம். ஆனால் தேன்மொழி அவர்கள் பணியின் காரணமாக வெளியூர் சென்றிருந்ததால் சந்திக்க இயலவில்லை. சுகன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடி விட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

வழியில் தஞ்சை கோயிலை ஒரு வெளிப்பார்வை பார்த்து விட்டு, மணிஜியின் பள்ளித்தோழர்கள் பகிர்ந்துகொண்ட குறுபாகற்காய், வாழைப்பூ, மிளகாய் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு பெரம்பலூர் வழியாக வந்து சேர்ந்தோம். திருவையாறில் ஆண்டவர் இனிப்பகம் என்ற கடையில் கோதுமை அல்வா மற்றும் தயிர் சாதம் மிகப் பிரபலம் என்றார் மணிஜி. அங்கு சென்றால், அவர் சொன்னது போலவே கடையில் அவ்வளவு கூட்டம். சூடான அல்வாவை வாங்கிக் கொண்டு கிளம்பினோம். வெகுநாட்களுக்குப் பிறகு  பாடல்களை கேட்டு, பாடல் வரிகளைக் குறித்து பேசிக்கொண்டே நீண்ட தூரம் காரோட்டியதும் ஒரு மகிழ்வான அனுபவம்தான்.

முக்கிய தகவல்கள் :

  1. தமிழில் அவருக்கான உரிய அங்கீகாரம் கிடைக்காததால், மணிஜி விரைவில் ஆங்கிலப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
  2. மணிஜி இயக்கும் ஆங்கிலப் படத்தில் நானும், பிரபல ஹாலிவுட் நடிகை Maria Josphine இருவரும் நடிக்க உள்ளோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

hollywood

0

விதூஷ், அறிவன், பரிதிமால் மற்றும் அனானி நண்பர்களுக்கு...

உயிரோசையில் வெளியான எனது ‘பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி‘ என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக சில சர்ச்சையான கருத்துகள் எழுந்திருக்கிறது.

எனது கட்டுரையின் கருத்துகளோடு மாற்றுக்கருத்து எதுவும் இல்லாவிட்டாலும், பதிவர் விதூஷ் அளித்த பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக பதிவர்கள் அறிவன், பரிதிமால் மற்றுமொரு அனானி நண்பர்கள் தங்கள் தரப்பு கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

பொதுவாக தமிழ் மொழியாய்வுகள் மூன்று அடிப்படையில் இருந்து வந்துள்ளன. சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழினை ஆய்வு செய்யும் மொழியாய்வுகள் ஒரு வகை. இம்மாதிரியான மொழியாய்வுகளில் தமிழின் வேர்ச்சொல்லை தேடும்போது சமஸ்கிருதத்திலிருந்து உதாரணம் காட்டி எழுதுவார்கள். இது ஒரு வகையான ஒப்பு நோக்கல். தனக்கு நன்கு புலமையுள்ள ஒன்றோடு வேறொன்றை இணை நோக்கிப் பார்ப்பது இயற்கைதானே. அடுத்தபடியாக மேலை மொழிகளோடு இணைத்து தமிழ் மொழியை ஒப்பு நோக்குதல். தமிழின் வேர்ச்சொல் பாரசீக மொழியிலிருந்தோ, உருது மொழி அல்லது வேறொரு மொழியிலிருந்தோ மருவிய வார்த்தைகள் என்ற ஒப்பாய்வு. உதாரணத்திற்கு, அரிசி என்ற வார்த்தையை ‘ரைஸ்‘, என்பதிலிருந்து வந்ததாக சொல்வது. அல்லது ரைஸ் என்ற வார்த்தை ‘அரிசி‘யிலிருந்துதான் வந்தது என்று கூறுவது. மொழியாய்வின் மூன்றாவது பார்வை, தமிழியம், திராவிடம் சார்ந்த பார்வை. தமிழ்தான் அனைத்திற்கும் வேர்ச்சொல் என்ற பார்வை. இதுவே என்னுடைய கட்டுரை எழுதப்பட்ட நோக்கும். மொழியாய்வின் வழியே நாம் கூறும் கற்பிதங்களுக்கு, நிரூபணச் சாத்தியங்களை உண்டாக்குவது மிகவும் முக்கியமானது. இவையெல்லாம் ஒரு தொடக்கப்புள்ளிகள். அல்லது ஒரு புள்ளியின் நீட்சிகள் மட்டுமே. இவ்வாறான மொழியாய்வுகள் தொடரப்படுவது மொழியின் செழுமைக்கும், பூரணத்துவத்துக்கும் வழி வகுக்கும்.

ஞானக்கூத்தனின் கவிதையொன்று நினைவுக்கு வருகிறது.

எனக்கும்

தமிழ்தான் மூச்சு

ஆனால் பிறர்மேல்

அதை விடமாட்டேன்.

 

எனவே, மொழிப்பற்று என்பது வேறு, மொழி வெறி என்பது வேறு என்பதை நாம் உணர வேண்டும். மொழி என்பது ஒரு உணர்வாக இருக்க வேண்டும். எனது தாய், எனது மனைவி, எனது மகள் என்பது போல எனது மொழி என்கிற உணர்வும், புரிதலும் அவசியம்.

கட்டுரையை வாசித்து ஆரோக்கியமான விவாதங்களையெழுப்பிய நண்பர்களுக்கு நன்றி.

0

முட்டையிலிருந்து கோழியா... கோழியிலிருந்து முட்டையா ?

vaal

வால்பையன் (பொருத்தமான ஆள்தான்) எழுதியிருந்த ‘பரிணாமம் – முன்னுரை‘ என்ற பதிவை வாசித்தேன். ஆக்கப்பூர்வமான இடுகை.

// பரிணாம வளர்ச்சி என்பது உயிரினத்தில் மட்டுமே உண்டு என்பது இன்னும் பலரின் நம்பிக்கை, ஆழ்ந்து நோக்கினால் எல்லாவற்றிலும் பரிணாம வளர்ச்சி உண்டு என்பதை அறியலாம், எவையெல்லாம் முன்னை விட சிறப்பான தோற்றமோ, மாற்றமோ பெருகிறதோ அவைகளின் பரிணாம வளர்ச்சி!//

உண்மைதான். வாழ்த்துகள் ‘வால்பையன்‘ என்கிற அருண்

0

- பொன்.வாசுதேவன்

Wednesday, February 24, 2010

பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி

- பொன்.வாசுதேவன்

உயிரோசை இணைய இதழில் வெளியான எனது கட்டுரை.

 

மொழியின் பயன்பாடு என்பது அம்மொழியின் பண்பாட்டின் அடிப்படையில் அதன் ஒத்திசைவோடு இயைந்து வழக்கத்தில் வருவது. வெவ்வேறு காலங்களில் நிலவி வந்திருக்கின்ற மக்களின் பண்பாட்டுப் புழக்கமே மொழியின் செழுமை மற்றும் சிறுமையை நிர்ணயம் செய்வதாக இருக்கிறது. இவ்விடத்தில் மொழியென பொருள் கொள்ளப்படுவது தமிழ் மொழியை முன்வைத்தே என்பதை கவனத்தில் கொள்ளவும்.

மொழி வழியிலான ஆய்வுகள் துல்லியமான மதிப்பீடுகளை வழங்குவதன் சாத்தியம் மிகக்குறைவு. இவ்வகையான மொழி சார்ந்த மதிப்பீடுகளை கால்டுவெல், வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ்முல்லர், H.R.ஹால் போன்றோரின் ஆய்வுகள் வெளிப்படுத்துகையில் அவை கணிப்புகள் என்ற அளவிலேயே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. கணிப்புகளின் நிச்சயத்தன்மை உறுதியிட்டுச் சொல்லக் கூடியவையாக ஆகிற வாய்ப்பு ஏற்படுகிற சூழல் மொழியின் உள்ளார்ந்த பன்முகங்களை ஆய்வுக்குட்படுத்தும் போது மட்டுமே நிகழ்கிறது.

art1

மொழி நாகரீகம் என்பது ஒரே சீராக வளர்ச்சியடைந்து விடக்கூடிய ஒன்று இல்லை. மொழியின் சொல்லாய்வு - மொழியாய்வுகளை அடிப்படையாகக் கொண்டு மொழியை அணுகியவர்களான பி.டி.சீனுவாசனார், ஞா.தேவநேயனார் போன்றோரின் ஆய்வுகளின் கணிப்பும், சமஸ்கிருதத்தை முதன்மைச் சான்றாகக் கொண்டு மொழியை அணுகியவர்களான மேலை ஆய்வறிஞர்களும் வெளிப்படுத்திய மொழியாய்வின் கணிப்பும் வெவ்வேறானவையாக இருந்தததற்கு அவர்களின் மொழி சார்ந்த அணுகுமுறையே காரணம்..

ஒலிக்குறிப்புகளாகவே அறியப்பட்ட தொடர்பு சாதனம் மொழி வடிவெடுத்த பிறகு உணர்ச்சி ஒலி, சுட்டு ஒலி,குறிப்பு ஒலி என ஒலித்தொகுதியாகத்தான் மொழி வகைமைப்படுத்தப்பட்டது. தமிழின் ஆதிவடிவம் ஒலிக்குறிப்புகளின்பாற்பட்டே தோன்றியிருக்கக்கூடும். தமிழ் மொழிக்கு மட்டுமேயன்றி, ஒலிக்குறிப்பே மொழியின் தொன்மம் என்பதை அனைத்து மொழிகளுக்கும் பொதுவான கோட்பாடாக கொள்ளலாம்.

மொழியில் உருவடிவம் கொண்ட பின் அதன் வளர்ச்சியானது சீராக, இன்னின்ன சொற்களுக்கு இன்னின்ன பொருள் என்ற சமுதாய பண்பாட்டின் அடிப்படையிலான கருத்தாக்கங்கள் ஏற்பட்டது. கருத்தமைவுகளின் அடிப்படையில் தன்னியல்பாக ஒரு வேர்ச்சொல்லிருந்து மற்றொன்று என விரிவடைந்து கொண்டே மொழி வளர்ச்சி நிகழ்ந்தது.

மந்தி என்ற பழந்தமிழ்ச் சொல்லிலிருந்து கிளர்ந்த மாந்தன் என்ற சொல் மனிதன் ஆகி திரிபுர எடுத்துக்கொண்ட காலத்தின் நீட்சி மொழி வளர்ச்சியின் ஒரு படியாகக் கருதப்படுகிறது. எண்ணற்ற மொழியாய்வுகள், சொல்லாய்வுகள் புதுப்புது கணிப்புகளை உதிர்த்தபடியே இருக்கின்றன. பார்த்தல்,தொடுதல், உணர்தல் ஆகிய வினைகளை ஒட்டியே மொழியும் வளர்ச்சி பெறத் தொடங்கியது.

மொழி ஆய்வுப் பணிகளில் வேற்று மொழிகளின் தாக்கம் என்பது முக்கிய இடத்தை வகிக்கிறது.பிறமொழிக் கூறுகள் ஒரு மொழியில் கலப்பில்லாமல் இருப்பின் அது அம்மொழி சார்ந்த பண்பாட்டு வளர்ச்சியின்மையையே வெளிப்படுத்துகிறது. உறவுப் பெயர்கள், சுட்டுப்பெயர்கள் ஆகியவை பயன்பாட்டில் புழங்குவதற்கான காரணியாக பழங்காலத்திற்குரிய வினைச்சொற்களே விளங்குகிறது.

மொழியாய்வுகளைப் பொறுத்தவரையில் ஏற்கனவே வழங்கப்பட்ட கருத்துகளை தற்போதைய வலுவான கருத்துகளின் வழியே பன்முக நோக்கில் நிறுவிக் காண்பித்தால் மட்டுமே ஏற்கப்படும். பெரும்பாலான மொழியாய்வுகள் சார்பு மனோபாவத்துடனும், மிகை கணிப்புகளாலும் நிறைந்து விடுவதாலேயே அவற்றின் நிரூபணம் ஏற்க இயலாததாகி விடுகிறது.

தொன்ம மொழியியல் ஆவணங்களிலும் இடைச்செருகல்கள் இருக்கக்கூடும் என்பதால் ஆவணப்படுத்தப்பட்ட முறையும், விதம் குறித்துமான கூர்நோக்குப் பார்வை முக்கியமானதாகிறது.

இலக்கிய அகழ்வாய்வுகள் நேரடி பொருளில் எடுத்துக் கொள்ளப் படாமல், அது படைக்கப்பட்ட காலம், அக்காலத்தைய சமுதாய பண்பாட்டுச் சூழல், ஒழுக்க நெறிமுறைகள், விழுமியங்கள் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். உதாரணத்திற்கு, தொல்காப்பியத்தை ஆய்வுக்குட் படுத்தும்போது, தொல்காப்பியக் காலமான கி.மு.1250-இல் இருந்த பண்பாட்டுச் சூழல் குறித்தான ஆய்வுப் பார்வையும் அவசியமான தாகிறது. இப்படியாக மொழியாய்வின் போது அதற்கான சான்றாவணமாக கொள்ளும் மொழியியல் படைப்பை அது எழுதப்பட்ட அல்லது அவ்வாறாக கருதப்பட்ட காலத்தையும் கணித்து அறுதியிடப்பட வேண்டும்.

தமிழின் சொற்கூறுகள் உருவான விதம் பற்பல மொழியாய்வுகள் வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன.இவற்றுள் பல கணிமைகள் கவனம் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதன் காரணமாக அவை உரிய அங்கீகாரம் பெறுவதில்லை. பிராமணம் என்ற சொல்லின் வேர்ச் சொல் பற்றிய வரலாறு சுவாரசியமானது. ‘பரமணம்‘ என்றால்‘வேற்றுக்கூட்டம்‘ என்பது பொருள். பரமணம் என்பது மருவியே தமிழில் பிராமணர் என்றாகியிருக்கக்கூடும் என மொழி ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் மூலமாக ‘பரமணர்‘ என்ற சொல்லாட்சியை நீட்சியான ஆய்வுக்குரிய நாம் ஒரு கூற்றாகவும் கொள்ளலாம்.

மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுகிற போது சில காலம் கழித்து அதுவே பண்பாடாகிப் உருவெடுக்கிறது. ஒரு காலத்தில் சமூக ஒழுங்காக ஏற்கப்பட்ட ஒன்று பிறிதொரு காலத்தில் ஏற்புடையதாக இருப்பதில்லை. இது பண்பாட்டு வளர்ச்சி நிகழ்வு எனலாம்.

தற்போது மொழி சார்ந்த ஆய்வுகளின் அவசியம் என்ன எனும் கேள்வி எழலாம். மொழியின் மீதான ஆய்வியல் அணுகுமுறை பண்டிதத்தனங்களுக்கப்பாற்பட்டு மொழி சார்ந்த பண்பாடு மற்றும் சமூக கட்டமைப்புகள் சார்ந்து மேற்கொள்ளப்படுமாயின் மொழியின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப் படுகிறது.இதுவரையிலான மொழியாய்வுகள் முழுமையான கருத்தை வெளிப்படுத்தாமல் கணிப்புகளாகவே பெரும்பாலும் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு இதுவே காரணம். எந்தவொரு மொழியையும் பண்பாடு,கலாச்சாரம், சமூக கட்டமைவு சார்ந்து ஆய்ந்தறிவதன் வழியே மொழியானது வேறோர் தளத்திற்கு நீட்சியடையக்கூடிய வாய்ப்புண்டு.

ஒரு சமூகத்தின் பண்பாடு சார்ந்தே அதன் மொழி வளர்ச்சியும், பிறமொழிப் புணர்ச்சியும், திரிபுகளும் நிகழ்கின்றன என்பது உண்மை. இக்கட்டுரை முழுமையான மொழியாய்வுக் கட்டுரை அல்ல.மொழியாய்வுகள் பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் நிகழுமாயின் பண்பாட்டின் வேரிலிருந்து கிளைத்ததுதான் மொழி வளர்ச்சி என்பதனை நாம் உணரலாம் என்பதற்கான ஒரு சிந்தனை மட்டுமே.

000

Further Readings :

1. P.T.Srinivasa Iyangar, The Stone Age in India

2. P.T.Srinivasa Iyangar, Pre-Aryan Tamil Culture

3. Rt.Rev.Robert Caldwell, A Comparatve Grammer of the Dravidian or South-Indian Family of Languages (1976)

4. ஞா.தேவநேயனார், தமிழ் வரலாறு (1967)

Tuesday, February 23, 2010

பாகம் - 2 : அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும் (படிக்கத் தவறாதீர்கள்)

“அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும்“ படிக்கத் தவறாதீர்கள் (பாகம் – 1) ஏற்கனவே படிக்காதவர்களுக்காக…

வாலிப, வயோதிக அன்பர்களே !

நாம் ஏற்கனவே படித்த ‘அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும்‘ கதையின் இரண்டாவது பாகத்தை தங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நேற்று வெளியான முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தையும் வாசித்து பிடித்திருந்தால் பெருவாரியான ஓட்டளித்து இக்கதையை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். (என்னதான் இருந்தாலும் வரலாறு முக்கியம் அல்லவா..) மேலும் இவ்வாறாக செய்வதன் மூலம் இராமசாமி என்கிற ‘தீப்பொறி‘யின் எழுத்துலக வாழ்க்கையில் விளக்கேற்றும்படி கோடானுகோடி இரசிகப் பெருமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

வெற்றி நடை போடுகிறது !
அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும் (சிறுகதை) பாகம் – 2

flame wrapper

ஒரு நல்ல நாள் பார்த்து இராமசாமியும் துரையும் பதிப்பாளரை சந்திக்கச் சென்றார்கள். சந்து பொந்தெல்லாம் புகுந்து தேடி ஒருவழியாக பதிப்பாளர் வீட்டை அடைந்தார்கள். கட்டுக்கட்டாக புத்தகங்கள் நிரம்பிய அந்தச் சிறிய அறையில் புத்தகக் கட்டுகளுக்கு நடுவே சிறிதளவே பதிப்பாளர் முகம் தெரிந்தது.

“இப்போல்லாம் சமையல் குறிப்பு, கோலப்புத்தகம், ரமணி சந்திரன் கதை இந்த மாதிரி புத்தகம்தான் போட்டதும் நிறைய விக்குது. போட்ட காச எடுக்கணும்னா இப்படிதான் புக்கு போட வேண்டியிருக்கு என்னத்த செய்ய. கதை, கட்டுரைன்னாலே மக்கள் ஓடிடறாங்க. கவிதைன்னா கேக்கவே வேணாம். அப்படியே சரி நல்லாயிருக்கேன்னு புக்கா போட்டாலும், எழுதுனவருக்கு தெரிஞ்ச நாப்பது பேர்தான் புக்கை வாங்கறாங்க. இதான் நிலைமை“ அவர் தெளிவாகச் சொன்னார்.

“இல்ல சார். என் கதைங்கல்லாம் படிக்க நல்லாயிருக்கும். சமுதாயத்தில ஒரு மாற்றம் வரும். படிச்சாலே பரபரப்பாயிடும்“ இராமசாமி ஆர்வமாக சொன்னான்.

“உங்க பேரு என்ன சொன்னீங்க...“ என்றார் பதிப்பாளர்.

“இராமசாமிங்க“ சட்டென வாயில் அவனுடைய சொந்தப்பேர் வந்து விட்டது.

“இல்லைங்க பேர் இராமசாமி. ‘தீப்பொறி‘ன்ற பேர்ல எழுதறாரு. நல்லா எழுதுவாரு. நீங்க ஒரு வாய்ப்பு கொடுங்க“ துரைதான் சட்டென சொல்லி காப்பாற்றினான்.

“இதோ பாருங்க இராமசாமி தீப்பொறி.... பேர்லாம் நல்லாதான் இருக்கு. ஆனாலும் நான் சொன்னதுதான் நடைமுறையில இருக்கற நிஜம். சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க புத்தகத்தை போட சொல்லுவீங்க, விழால்லாம் வெச்சி வெளியிடுவோம், நாப்பது, அம்பது புக் விக்கும், அதோட நீங்க திருப்தியாயி போயிடுவீங்க. அதுக்கப்பறம் நான்தான் மூட்டை கட்டி வெச்சுகிட்டு அலையணும். புதையலை பூதம் காத்த கதைதான். அதனால புத்தகத்தை போட முடியாதுங்க. எனக்கு இதான் தொழிலு. விக்கற புக்கை போட்டாதான் நான் நாலு காசு சம்பாதிக்க முடியும்... என்ன நான் சொல்றது சரிங்களா“ என்றார் பதிப்பாளர்.

காற்றுப் போன பலூன் மாதிரி சுருங்கிப்போனது இராமசாமியின் முகம். ஆனால் சுரீரென உள்ளுக்குள் கோபம் வந்தது. நாளைக்கே என் புத்தகம் வெளியானதும் என் கிட்டே வந்து உங்க புத்தகத்தை போடறேன்னு நிப்பேயில்ல அப்ப வெச்சுக்கறேன் உன்னை என்று மனசுக்குக்குள் கறுவியபடி, “சரிங்க சார்... ரொம்ப நன்றி“ என்றபடி துரையுடன் எழுந்து அங்கிருந்து வெளியே வந்து விட்டான். துரையும் அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

இராமசாமியும், துரையும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே வந்தார்கள். துரை வேறொரு யோசனை சொன்னான். பதிப்பாளரை போய் புத்தகம் போடச் சொல்லி கேட்பதைவிட ஒரு எழுத்தாளரை கேட்டால் அவர் நமக்கு உதவுவார். எழுத்தாளனின் மனதை எழுத்தாளர்தானே புரிந்து கொள்வார் என்றான்.

இப்போதும் துரை சொல்வதே சரியாகப்பட்டது இராமசாமிக்கு. எப்படியாவது ஒரு கடைநிலை எழுத்தாளனாகவாவது ஆகிவிட துரை தனக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவான் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாக தேடி கடைசியில் ஒரு எழுத்தாளரை கண்டு பிடித்து விட்டான் துரை. அவரும் புத்தகம் போட சரியென்று சொல்லி விட்டதால், மறுபடியும் துரையும் இராமசாமியும் அந்த எழுத்தாளரை தேடி படையெடுத்தார்கள்.

அந்த எழுத்தாளர் வீட்டிற்கு வந்தால் தன் மனைவிக்கு பிடிக்காது என்பதால், அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் சந்திக்கலாம் என்று கூறி அங்கே காத்திருந்தார். முன்பிருந்த பதிப்பாளர் இவர் இராமசாமியின் எழுத்துகள் விலைபோகாது என்று மறுக்கவில்லை. ஆனால் இராமசாமி பணம் கொடுத்தால் மட்டுமே போட முடியும் என்று சொல்லிவிட்டார். இந்த யோசனை இராமசாமிக்கும் பிடித்திருந்தது. இவனே எழுதி இவனே புத்தகம் போடுவதைவிட வேறு யாரோ ஒருவர் போட்டால் நன்றாயிருக்கும்தானே.

அடுத்த சில வாரங்களில் வேலைகள் மும்முரமாக நடைபெற்றது. இராமசாமி மனைவியிடம் எழுத்தாளனாக முதல்முறையாக மனம் திறந்து பேசுகிறான்.

“நானும் படிக்கும்போதே நிறைய எழுதியிருக்கேன். உன் கிட்டே சொல்லலை. அந்த ஆர்வம் எனக்குள்ள எப்பவும் கனலா இருந்துகிட்டே இருந்தது. இப்போ போட்டா உங்க புத்தகத்தைதான் போடுவேன்னு ஒரு பதிப்பாளர் ஒரே தொந்தரவு பண்றார். அவருக்காகதான் தொடர்ந்து எழுதிகிட்டே இருந்தேன். சீக்கிரமே என்னேட புத்தகம் வெளிவரப்போகுது. தமிழ்நாட்டுல பெரிய புரட்சியே நடக்கப் போகுது பார்“ இராமசாமி சொல்லிக் கொண்டே போனாள்.

இராமசாமி எழுதுவான் என்பது அதிர்ச்சியாக இருந்தாலும் அவன் மனைவிக்கும் பெருமையாகவே இருந்தது. இனிமேல் தான் எழுத்தாளரின் மனைவி என்று ஊரில் சொல்லிக் கொள்ளலாம். அதனால் மகிழ்ச்சியுற்றாள். இராமசாமி எழுத்தாளன் என்றறியப்பட்ட நாளிலிருந்து அவன் மனைவியின் உபசாரமும், பணிவிடையும் சிறப்பாக இருந்தது. இராமசாமியும் இதற்குதானே ஆசைப்பட்டான்.

  1. புதிய பூபாளம்
  2. புரட்சிப் பொறிகள்
  3. இராமசாமிகள்
  4. அக்கினிக்குஞ்சம் ஆங்கோர் பொந்தும்
  5. பொறி பறக்குது

புத்தகம் போடுவது என்று முடிவானதும் என்ன தலைப்பு வைக்கலாம் என்று பல தலைப்புகளை ஒரு காகிதத்தில் வரிசையாக எழுதிவிட்டு அதைப்பற்றியே இராமசாமி சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் வாழ்வின் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடியதான சாத்திமுள்ள முக்கிய நிகழ்வு அது. அதனால்தான் எப்போதுமில்லாத அதீத கவனத்துடன் அதில் ஈடுபட்டிருந்தான்.

கடைசியில் தொகுப்பிற்கு தலைப்பாக “அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும்“ என முடிவாகியது. இந்த தலைப்பை துரைதான் சொன்னான். காரணம் ‘தீப்பொறி‘ என்ற பெயருக்கு இதுவே பொருத்தமான தலைப்பு என்பதுதான்.

ஒரு சுபதினத்தில் பத்திரிகையெல்லாம் அச்சடித்து முக்கியப் பிரமுகர்கள், எழுத்தாளர்களை அழைத்து வந்து வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு விருந்தினர்களாக அவனது மனைவியின் ஊரிலிருந்து நாட்டாமைகளும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அது அவனது மனைவின் விருப்பமாக இருந்தது. தன் கணவனும் ஒரு எழுத்தாளன்தான் என்பதை உலகறிவதைவிட தன் கிராமத்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அவளுடைய எண்ணமாக இருந்தது. இராமசாமிக்கும் அதில் குஷிதான். உள்ளுக்குள் கொப்பளித்த மகிழ்ச்சியைக் காட்டிக் கொள்ளாமல் விழா மேடையில் அமர்வதற்கு அவனுக்கு கூச்சமாக இருந்தது. இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இறுக்கமான எழுத்தாளர் பாவனையோடு அமர்ந்திருந்தான்.

“தீப்பொறி அப்படிப்பட்டவர்.. தீப்பொறி இப்படிப்பட்டவர்... தீப்பொறி எப்படிப்பட்டவர்.... என்றெல்லாம் இராமசாமியைப் பற்றி இராமசாமிக்கே தெரியாத விஷயங்களையெல்லாம் எடுத்துக்கூறி புகழ்ந்து கொண்டிருந்தனர் வந்திருந்த விருந்தினர்கள். அனைவருக்கும் இரவு சிறப்பு விருந்தும் இராமசாமி ஏற்பாடு செய்திருந்தான். வெளியீட்டு விழா முடிந்து எல்லோரும் சென்று விட்டனர். இராமசாமியின் மனைவியும் அவள் ஊரிலிருந்து வந்திருந்தவர்களோடு வீட்டுக்கு சென்று விட்டாள்.

விழா நடைபெற்ற இடத்தில் எஞ்சியிருந்தவர்கள் இராமசாமி, துரை மற்றும் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பாளர் மட்டும்தான். மொத்தம் அறுபத்தியிரண்டு புத்தகங்கள் விற்பனையாகியிருந்தது. யாரோ ஒருவர் 30 புத்தகம் மொத்தமாக வாங்கியிருந்ததாக விற்பனை புத்தகத்தில் பதிவாகியிருந்ததை துரை காட்டினான். யார் அவர் என்று பார்த்தால் அது இராமசாமியின் மாமனார். ஊரில் கொடுக்க வாங்கியிருப்பார் என்றான் இராமசாமி.

சந்தோஷம், களைப்பு என சொல்லவியலாத கலவையான மனநிலையில் இருந்தான் இராமசாமி. புத்தகம் போட்ட எழுத்தாளர் தனக்கு பத்து புத்தகங்கள் தருமாறு கேட்டுக் கொண்டான்.

“அதுக்கென்ன நீங்கதான் எனக்கு பத்து புத்தகம் தரணும். உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்“ என்றான் இராமசாமி.

“இல்லை. நான் வீட்டுக்கு பத்து புத்தகம் மேலே எடுத்துச் செல்ல முடியாது. அதனால் பத்து போதும்“ என்றார் பதிப்பாளர்.

புத்தகத்தை அவர் எடுத்துச் சென்று விற்பனை செய்து தருவார் என்றல்லவா நினைத்திருந்தான். ஆனால் அவர் பத்து புத்தகம் போதும் என்கிறாரே. இராமசாமிக்கு அதிர்ச்சியாய் இருந்தது. கட்டுக்கு ஐம்பது புத்தகம் வீதம் இருபது கட்டு புத்தகங்கள் இருந்தது. அதை அவன் வீட்டில் வைப்பதற்குக்கூட இடமில்லை. மேலும் உறவினர்களால் வீடு வேறு நிறைந்திருக்கும்.

ஆனால் பதிப்பாளர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. பத்து புத்தகம் மட்டும் போதும் என்றும், அவர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு போவதை வீட்டில் சொல்லவில்லை என்பதால் அதைக்கூட நாளை வாங்கிக் கொள்வதாகவும் கூறினார்.

பிறகு பத்து புத்தகத்தை மட்டும் எடுத்து அவரிடம் கொடுத்து ஆட்டோவுக்கு பணம் கொடுத்து அவரை அனுப்பி வைத்தார்கள். இராமசாமியின் தோற்றத்தைப் பார்த்து துரைக்கு பாவமாக இருந்தது. இப்போதைக்கு தனக்கு துரையால் மட்டுமே உதவி செய்ய முடியும் என்று இராமசாமிக்கு தோன்றியது.

பிறகு துரையிடம் பேசி எல்லா புத்தகங்களையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு துரை தங்கியிருந்த அறையில் இறக்கி வைத்து விட்டு இரவு வீடு திரும்பும்போது மணி ஒன்று ஆகியிருந்தது. அவன் மனைவியும் நன்றாக உறங்கியிருந்தாள்.

மறுநாள் காலை அலுவலகம் சென்றவுடன் புத்தகங்களை எப்போது எடுத்துக் கொள்ளப் போகிறாய் என்று துரையிடமிருந்து போன் வந்தது. ஊரிலிருக்கும் அவன் தம்பி வர இருப்பதால், இட நெருக்கடியாக இருக்கும், எனவே புத்தகங்களை சீக்கிரமே எடுத்து விடும்படி துரை கூறினான்.

அடுத்த சில வாரங்களுக்குள் பதிப்பாளர் வீட்டில் இட்ம் இல்லாததால் புத்தகங்களை வைத்துக் கொள்ள சொல்லியிருக்கிறார் என்று மனைவியை மெல்ல சமாதானப்படுத்தி, புத்தகங்களை எடுத்து வந்து விட்டான். அவனது படுக்கையறை புத்தகங்களால் நிறைந்து கிடந்தது.

புத்தகம் வந்ததிலிருந்து இராமசாமியை அவன் மனைவி எப்போது இதெல்லாம் விற்கும் என்று தனது கேள்வியெழுப்பியபடியே இருந்தாள். மேலும், தன் ஊரில் இருக்கும் எழுத்தாளர் வீட்டில் அவரது புத்தகங்கள் சில பிரதிகள் மட்டுமே இருக்கும் என்றும், பிறர் எழுதிய புத்தகங்களை மட்டும் வரிசையாக அடுக்கி வைத்திருப்பார் என்றும் தெரிவித்தாள்.

இராமசாமி சமாதானங்களைச் சொல்லிச் சொல்லி களைத்துப் போனான். அலுவலகம் செல்லும்போது கையில் தினமும் பத்து புத்தகம் கொண்டு செல்வான். அவனுடன் பணி புரியும் சக பணியாளர்களிடம் எனது புத்தகம் என்று சொல்லி கையெழுத்திட்டு இலவசமாக கொடுப்பான்.

புத்தகத்தை கையில் வாங்கும் எல்லோரும் முன்னட்டையில் எழுதியவர் ‘தீப்பொறி‘ என்றிருப்பதைக் கண்டு இராமசாமியை சந்தேகமாக முதலில் பார்ப்பார்கள். பிறகு, இராமசாமி, “என் பேர்தான் அது. புனைபெயர்ல எழுதியிருக்கேன். பின் அட்டைல போட்டோ போட்டிருக்கு பாருங்க“ என்று அவர்களுக்கு அப்புத்தகத்தை எழுதியது தான்தான் என்பதை நிரூபணம் செய்வான்.

என்ன காரணமோ தெரியாது, அவனிடமிருந்து புத்தகத் வாங்கிய யாரும் அவனுடனான பேச்சு வார்த்தையை துண்டித்துக் கொண்டனர். அவனும் கடும் மன உளைச்சலில் தனக்குத்தானே பேசிக்கொள்ளவே நேரமில்லாத நிலையில் இருந்தததால், பிறரைப் பற்றி கவலைப்படவில்லை. இதற்கிடையில் அவனுக்கென்று பேச இருந்த ஒரே நண்பன் துரையும் வேலை காரணமாக வட மாநிலம் சென்று விட்டிருந்தான். புத்தகம் போட்ட பதிப்பாளரும் தன் மாமனார் நடத்தி வந்த ஓட்டலை மேற்பார்வையிட வேற்றூரில் குடியேறிவிட்டார்.

ஐந்து மாதமாகியும் இருநூறு புத்தகங்கள் மட்டுமே தீர்ந்திருந்தது. இராமசாமியின் மனைவி ஏன் இந்த புத்தகமெல்லாம் இங்கேயே இருக்கிறது என்று கேட்டு பலமுறை நச்சரித்து சலித்துப்போய் விட்டுவிட்டாள். இப்போதெல்லாம் அவள் இராமசாமியை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அலுவலகத்திலிருந்து வந்த உடன் உணவை எடுத்து வைத்துவிட்டு டி.வி. பார்ப்பதில் முழ்கி விடுவாள். இராமசாமிக்கு அவனைவிட அவள் டி.வி.க்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறாள் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

இராமசாமி ஜன்னலோரம் அமர்ந்து வெகுநாட்களாகிறது. பரணில் வைத்திருக்கும் புத்தகக் கட்டு அவன் மேல் விழுவது போல நடுநிசியில் கனவு வந்து அலறி எழுவதும் இப்போதெல்லாம் வாடிக்கையாகி விட்டது. இப்போதெல்லாம் இராமசாமி பேனாவை கையெழுத்து போடவும், அலுவலக பணிகளுக்காகவும் மட்டுமே உபயோகிக்கிறான்.

000

இப்படியாக ‘தீப்பொறி‘ என்கிற இராமசாமியின் தீராத எழுத்தார்வமும், எழுத்துலகப் பயணமும் நிறைவுற்றது.

படித்து ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி… நன்றி… நன்றி.

- பொன்.வாசுதேவன்.

Monday, February 22, 2010

அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும் (படிக்கத் தவறாதீர்கள்) (பாகம் – 1)

அக்கினிக்குஞ்சும் ஆங்கோர் பொந்தும் (சிறுகதை) பாகம் - 1

flame wrapper

  1. புதிய பூபாளம்
  2. புரட்சிப் பொறிகள்
  3. இராமசாமிகள்
  4. அக்கினிக்குஞ்சம் ஆங்கோர் பொந்தும்
  5. பொறி பறக்குது

ஒரு காகிதத்தில் வரிசையாக எழுதிவிட்டு அதைப்பற்றியே இராமசாமி சிந்தித்துக் கொண்டிருந்தான். அவன் வாழ்வின் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடியதான சாத்தியமுள்ள முக்கிய நிகழ்வு அது. அதனால்தான் எப்போதுமில்லாத அதீத கவனத்துடன் அதில் ஈடுபட்டிருந்தான்.

சரியாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக 122 எண்ணுள்ள பேருந்தில் தன் மனைவியோடு, அவள் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு அருகிலிருக்கும் கலிங்கலேரி கிராமத்திற்கு போய்க் கொண்டிருந்தபோதுதான் இப்போதைய அவனது மாற்றத்திற்கான விதை அவனுள் விழுந்தது.

திருவண்ணாமலை சென்று இறங்கியதும் கிராமத்திற்கு செல்லும் நகரப் பேருந்தில் ஏறி இருவரும் அமர்ந்தார்கள். அவனுடைய மனைவி அவனை விட அழகாகவும், பேரழகியாகவும் இருந்தது குறித்த கர்வம் அவனுக்கு அதிகம் இருந்தது. அதே சமயம் அவனுடைய பெரும்பாலான நேரத்து கவலையும் அதுதான்.

பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் வண்டியில் இல்லை. பேருந்தை எடுக்க உரிய நேரம் ஆகாததினாலே அல்லது டீ குடிக்கவோ, செய்தித்தாள் வாசிக்கவோ, பண்டிகை முன்பணம் குறித்து பேசிக்கொண்டிருக்கவோ இல்லை வேறெதற்கோ சென்றிருக்கக்கூடும். பேருந்தின் இருக்கைகள் நிரம்பி விட்டது. சலசலப்புக்கும் பஞ்சமில்லை. கிராமத்து மனிதர்களின் பேச்சுக்கு கேட்கவா வேண்டும்.

இராமசாமி இச்சத்தங்களினால் பெரும் எரிச்சலுற்றான். என்றாலும், முதல் முறையாக மனைவியின் சொந்த கிராமத்திற்குப் போகிற இவ்வேளையில் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவன் மனைவியின் குடும்பம் கிராமத்தைவிட்டு எப்போதோ நகரத்திற்கு குடிபெயர்ந்து விட்டார்கள். ஊரிலிருக்கும் அவளது தாத்தாவை பார்த்துவிட்டு வருவதற்காகவே இப்போது அங்கு செல்கிறார்கள். அவள் ஒரே பெண் என்பதால் தாத்தாவின் ஆஸ்திகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் நூறு சதவிகிதம் இருக்கிறது. இதன் பொருட்டே பல இம்சைகளை இராமசாமி தாங்கிக் கொண்டான்.

அவன் மனைவி பள்ளியிறுதி வரை மட்டுமே படித்தவள் என்றாலும், அவளது அழகின் கூர்மை அவனால் தாங்க இயலாததாய் இருந்தது. அழகுக்கே உரித்தான கர்வமும் அவளிடம் இருந்தது. அதனால் அவனை அடக்குவதற்கான ஆயுதமாக அதையே அவள் பிரயோகித்தாள். அவனுடைய தோற்றத்துக்கு அவள் மனைவியாக கிடைத்தது அதிகம்தான். எனவே அவளிடம் அவன் பல விஷயங்களின் அவன் அவளுக்கு அடிமையாகவே நடந்து கொள்வான்.

பேருந்தில் ஏறிய நடுத்தர வயதுடைய ஒருவரால் திடீரென வண்டியில் சலசலப்பு குறைந்து விட்டது. பலரும் எழுந்து வணக்கம் சொன்னார்கள். இராமசாமியின் மனைவியும் அவருக்கு எழுந்து வணக்கம் சொன்னாள். பிறகு, அவளுடைய ஊரைச் சேர்ந்தவர் அவர் என்றும், அவர் எழுத்தாளராக இருப்பதால் ஊரில் அவருக்கு மிகவும் மரியாதை என்றும் கூறினாள். தான் அவரை வாசித்ததில்லை என்றாலும் சிறந்த எழுத்தாளர் என்று எல்லோரும் சொல்வார்கள் என்பதால் அவர் மீது மிக மரியாதை உண்டு, எழுதுவது என்பதெல்லாம் மிகவும் புத்திக் கூர்மையுள்ளவர்களால் மட்டுமே உண்டு என்று சொல்லிக்கொண்டே போனாள்.

சென்னையிலிருந்து வந்திருக்கும், கௌரவமான பணியில் இருக்கும் உனக்கு அளிக்காத மரியாதையை இந்த கிராமத்து மக்கள் ஒரு எழுதுகிறவனுக்கு கொடுக்கிறார்களே. நீயெல்லாம் என்ன வேலை பார்த்து, என்ன கௌரவமாய் இருந்து... இராமசாமியின் மனசாட்சி அவனைப்பார்த்து கெக்கலித்தது.

ஒருவழியாக ஊருக்குப் போய்விட்டு சென்னை திரும்பினார்கள். ஊருக்கு போய் திரும்பி வந்ததிலிருந்து இராமசாமியின் வாழ்க்கை மந்திரித்து விட்ட கோழி போல வீடு – அலுவலகம் – வீடு என சுற்றிச் சுழன்றபடியிருந்தது. அவனுக்குள் சதா ஏதோவொன்று அரித்தபடியிருந்தது.

இராமசாமிக்கு நண்பர்கள் அதிகமில்லை. அதுவுமில்லாமல் அவனுடன் நண்பனாக இருப்பது மிகவும் கடினம். அவனுக்கு இரண்டு விஷயங்கள் பற்றி மட்டுமே பிடிக்கும். ஒன்று அவன் அவனைப்பற்றி புகழ்ந்து பேசுவான் அல்லது அவனைப் பற்றி அடுத்தவர்கள் புகழ்ந்து பேசவேண்டும். அவனுடன் நட்பு கொள்ள வேண்டுமானால் இந்த எழுதப்படாத ஒப்பந்ததத்திற்கு ஒப்புக் கொண்டாக வேண்டும். இதனாலேயே அவனுக்கு நண்பர்கள் விஷயத்தில் வறட்சி நிலவியது.

இராமசாமியின் வகுப்புத் தோழர்களில் சென்னையில் இருப்பவன் துரை மட்டுமே. மாடு புல் மேய்ந்து கொண்டிருப்பதைப் போல சதா துரையின் கண்கள் எப்போதும் புத்தகத்தின் எழுத்துக்களையே பார்த்துக் கொண்டிருக்கும். துரை எழுதியெல்லாம் இராமசாமி பார்த்ததில்லை. ஒரு வேலைக்கும் போகாமல் சதா படித்துக் கொண்டேயிருக்கும் அவனைக் கண்டாலே இராமசாமிக்கு பிடிக்காது. ஆனாலும் அவனுடைய வகுப்புத் தோழன் என்பதால் சகித்துக் கொள்வான்.

துரையை சந்திக்கத் தீர்மானம் செய்து, போன் செய்து அவனை அலுவலகத்திற்கு அருகிலிருக்கும் பூங்காவிற்கு வரச்சொன்னான். மாலை அலுவலகம் முடிவதற்கு முன்பாகவே கிளம்பி, துரையை பார்க்க பூங்காவிற்கு சென்றால், அவனுக்கும் முன்பாகவே அவன் அங்கே வந்திருந்தான். வழக்கம்போலவே கையில் ஏதோவொரு புத்தகம்.

துரையைப் பார்த்ததும் இராமசாமி சுற்றி வளைக்காமல் நேரடியாக தன் மன அரிப்பைக் கூறினான். தனக்கு எப்படியாவது எழுத்தாளனாகிவிட வேண்டும் என்றும், வாழ்வின் சகலவிதமான சௌகரியங்களையும் இந்த இளைய வயதிலேயே பெற்றுவிட்டதால், தனக்கு இதுவரை கிடைக்காத கௌரவம், மரியாதை, புகழ் இதை அடைவது மட்டுமே இனி என் லட்சியம் என்றும் பிதற்றினான்.

எல்லாவற்றையும் கேட்ட துரை, எழுத்தாளன் ஆவது எளிதான காரியமே இல்லை என்றும், அது ஒரு நுட்பமான விஷயம், எப்போதும் சிந்தித்தபடியிருக்க வேண்டும், பன்முகப் பார்வையோடு சமூக நிகழ்வுகளை பார்க்கவேண்டும்... என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போக, தலைசுற்றியது இராமசாமிக்கு.

இருந்தாலும் இராமசாமி விடுவதாக இல்லை. தன் மனைவி முன், அவளது கிராமத்து மக்களின் முன்பாக தான் ஒரு எழுத்தாளனாக கௌரவப்படுத்தப்பட வேண்டும் என்ற தீராத தாகம் அவனை வாட்டியெடுத்தது. அதன்பொருட்டு எல்லா கஷ்டங்களையும் அனுபவிக்கத் துணிந்தான்.

துரையால் மட்டுமே தனக்கு உதவ முடியும் என்ற மிகப்பெரும் நம்பிக்கையும் இராமசாமிக்கு இருந்தது. துரையும் இராமசாமியைப் பார்த்து அவனுக்கு தெரிந்த விஷயங்களை கூறி உதவுவதாக எழுத்தாளர்களுக்கு உரிய பண்புகளை அவனிடம் தெரிவித்தான்.

மறுநாளிலிருந்து இராமசாமியின் நடவடிக்கைகள் தலைகீழாக மாறியிருந்தது. அவனுடைய மனைவிக்கும் ஆச்சர்யம்தான். வருகிற எல்லா பத்திரிகைகளையும் வாங்கி படித்தபடியே இருந்தான். எப்போதும் கையில் பேனாவும், பேப்பருமாக எதையாவது யோசித்தபடியே இருந்தான். படிப்பதிலும் ஒரு வெறித்தனம் இருந்தது. எப்போதும் படுக்கையில் சாய்ந்து படுத்தபடி டி.வி. பார்க்கும் அவனது பழக்கத்தை இப்போதெல்லாம் செய்வதில்லை. ஜன்னலோரம் நாற்காலியில் அமர்ந்து காகிதமும் பேனாவுமாக சாலையையே வெறித்துக் கொண்டிருந்தான்.

இப்படியே நீடித்த வேளையில், ஒரு நாள் கோவிலுக்குப் போய் வந்த அவனது மனைவி அவனுக்கு பகோடா பிடிக்குமே என்று சூடாக வாங்கி வந்தாள். அவள் வாங்கி வந்து தந்த பகோடாவை பிரித்து அது கீழே கொட்டியது கூடத் தெரியாமல் பகோடா இருந்த பேப்பரில் இருந்ததை படித்துக் கொண்டிருந்தான்.

இராமசாமியின் வினோத நடவடிக்கையில் சந்தேகமுற்ற அவனது மனைவி என்னதான் செய்கிறீர்கள் என்று ஒரு நாள் கேட்டே விட்டாள். அவன் கூறியது இதுதான்.... “இது ஒரு தவம்போல... சிந்தனை வயப்பட்ட நிலை. விரைவில் நீ என்னைப் பற்றி புரிந்து கொள்வாய்.“ அவனது பதில் அவளை அதிர்ச்சியுறச் செய்தது. காரணம் வழக்கமாக அப்படி பேசுபவனில்லை.

இதையெல்லாம்விட கொடுமையான சம்பவம் அவளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரவு ஒருவரையொருவர் அணைத்தபடி மகிழ்ந்திருந்த வேளையில் திடீரென “ஒரு நிமிடம்..“ என்று கூறிவிட்டு எழுந்து காகிதத்தில் எதையோ எழுதியபடியும், அதை கசக்கியெறிந்தபடியும் இருந்தான்.

கண்ணில் தெரிகிற

மின்னல்

நீ

என்

விண்ணில் விளைந்த

நட்சத்திரம்

நீ

என்னில் அடங்கா

எண்ணம்

நீ

என்னுள் கலந்த

வண்ணம்

நீ

கவிதைகள் தோன்றியபடியே இருந்தது. கூடவே கதைகளும் இராமசாமி எழுதத் தொடங்கி விட்டான். சிலகாலம் கழித்து இராமசாமியின் எழுத்துக்கள் பக்கங்கள் பலவாகி கற்றையாகி விட்டது. அப்போதுதான் இராமசாமிக்கு ஒரு விஷயம் உரைத்தது. நாமே எழுதி நாமே வைத்துக் கொண்டால் எப்படி அவனை மக்கள் எழுத்தாளர்கள் என்று ஒப்புக் கொள்வார்கள் என்ற கேள்வியெழுந்தது.

உடனே துரையை நாடினான். பத்திரிகைகளுக்கு அனுப்பி பிரசுரமானால்தான் எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கும் என்றும், சொந்த பெயரில் எழுதுவதைவிட ஏதாவது வசீகரமான புனைபெயர் வைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும் என்றும் துரை தனது யோசனையைக் கூறினான்.

இராமசாமிக்கு சொந்த பெயரில் பிரபலமாக வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. ஆனாலும் துரை சொல்வதும் ஒருவிதத்தில் சரியாக இருந்தது. சொந்த பெயரில் எழுதி ஒருவேளை புகழ் பெறாமல் தோற்றுவிட்டால் எல்லோருக்கும் தெரிந்து இன்னும் அசிங்கமாகிவிடும். மேலும் பல எழுத்தாளர்கள் புனை பெயரில் எழுதுவதிலேயே புகழ் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் அவன் அறிந்திருந்தான். எனவே புனைபெயரில் எழுதுவதே சாலச்சிறந்தது என்ற கருத்து அவனுள் ஏற்பட்டது.

இராமசாமிக்கு இங்குதான் அடுத்த பிரச்சனை எழுந்தது. எழுதுவதைவிட புனை பெயர் தேர்ந்தெடுப்பது மிகவும் கடின காரியமாக இருந்தது. அவனுடைய மனைவியின் பெயரை வைத்துக் கொள்ளலாமே என்றான் துரை. ஆனால் அப்படிச் செய்தால் புகழ் அவள் பெயரில் அல்லவா கொண்டாடப்படும் எனவே இராமசாமி அதை ஏற்கவில்லை.

வித்தியாசமான பெயர் ஏதாவது வைத்துக் கொண்டால் பெயரைப் பார்த்ததும் வாசகர்கள் படிக்க விழைவார்கள். தானும் அதுபோலவே எழுதிய பெயர் மற்றும் தலைப்பு இவற்றை வைத்தே பெரும்பாலான புத்தகங்களை வாசிக்க தேர்ந்தெடுப்பதாகவும் துரை சொன்னான்.

வீட்டுக்கு வந்த ராமசாமி வழக்கம்போல ஜன்னலோரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தான். புரட்சிக்குரல், புரட்சிக்கனல் என பல பெயர்கள் அவனுள் எழுந்து மறைந்தது. எதிலும் திருப்தியில்லை.

அப்போதுதான் சாலையிலிருந்து எழுந்த அந்த வினோத ஒலி அவன் கவனத்தைக் கலைத்தது. “ஸ்ஸுடாபோறீய்ய்“ “ஸ்ஸுடாபோறீய்ய்“. முதலில் இராமசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. குரலொலி எத்திசையிலிருந்து வருகிறது என்று பார்த்தான். தெருவில் ஒருவர் பொறி விற்றபடி கூவிக் கொண்டிருந்தார்.

அந்த நிமிடம் அவன் மனதில் புதுவெளிச்சம் புகுந்தது போலாகியது. ஆம்.. பொறி. அதுதான் சரியான பெயர். சுருக்கமாகவும் இருக்கிறது. எல்லோருக்கும் தெரிந்த பெயரும்கூட.

உடனடியாக துரைக்கு போன் செய்து ‘பொறி‘ என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்தான். துரையோ ‘பொறி‘ என்ற பெயர் நன்றாக இருந்தாலும் ஏதாவது கூட மற்றுமொரு வார்த்தை இருப்பது உசிதம் என்றான். இராமசாமிக்கு அவன் கூறுவதும் சரியாகப்பட்டது. இருவரும் கலந்து பேசி இறுதியாக ‘தீப்பொறி‘ என்று வைத்துக் கொள்வதாக முடிவானது.

“தீப்பொறி.. தீப்பொறி.. தீப்பொறி...“ இராமசாமி பலமுறை தனக்குத்தானே சொல்லிப்பார்த்துக் கொண்டான்.

“அடுத்ததாக விழாவின் சிறப்புரையை வழங்குமாறு எழுத்தாளர் தீப்பொறி அவர்களை அழைக்கிறோம்“

வருங்காலத்தில் நடைபெற இருக்கும் விழாக்களில் அவன் பெயர் எப்படி ஒலிக்குமென்பதை கற்பனை செய்து புளகாங்கிதமடைந்தான்.

துரையின் சொன்னபடி தான் எழுதியதையெல்லாம் நகலெடுத்து பல பகுதிகளாகப் பிரித்து இருக்கிற பத்திரிகைகளுக்கெல்லாம் அனுப்பி வைத்தான்.

துரை கூறியபடி இன்னும் சில வாரங்களுக்குள் எல்லா பத்திரிகைகளிலும் அவனுடைய பெயர் வெளியாகப் போகிறது. தீப்பொறி என்ற பெயர் தமிழகம் முழுவதும் தீப்பொறியாக பரவப்போகிறது என்ற எண்ணமே அவனுக்கு மிகவும் சந்தோஷம் தந்தது. தான் எழுத்தாளன் ஆகிவிட்டோம் என்பது அவனுக்கே பெருமிதமாக இருந்தது.

நாட்கள்.. வாரங்கள்... மாதம் என கடந்தது. எந்தப் பத்திரிகையிலும் இராமசாமியின் எந்தப் படைப்பும் வரவில்லை. துரையிடம் சொன்னதற்கு, வருகிற நூற்றுக்கணக்கான படைப்புகளில் தேர்ந்தெடுக்க நேரம் எடுத்துக் கொள்வார்கள் என்பதால் பொறுமையோடு இருக்கும்படி கூறினான்.

இரு மாதத்திற்கு மேலாகியும் எந்த பத்திரிகையும் இராமசாமியின் எழுத்தை சீந்தக்கூட இல்லை. கவலையுற்ற அவன் துரையிடம் போன் செய்து இப்படியிருக்கிறதே என்று கேட்டான். அதற்கு துரை ஒன்றும் கவலைப்பட வேண்டாமென்றும் தனக்கு தெரிந்த புத்தக பதிப்பாளர் இருப்பதாகவும், அவரிடம் அறிமுகப்படுத்தி புத்தகமாக வெளியிட்டு விடலாம் என்றும் கூறினான்.

இராமசாமிக்கும் மனதில் நம்பிக்கை பிறந்தது. துரை கூறுவதே சரியெனப்பட்டது. பத்திரிகைகளில் வருவதைவிட புத்தகமாக வந்துவிட்டால் தான் ஒரு எழுத்தாளர் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்று ஆணித்தரமாக நம்பினான்.

(தொடரும்)

(கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. எவரையும் குறிப்பிடுவவை அல்ல)

Thursday, February 18, 2010

பிள்ளை விளையாட்டு


எண்களை இணைக்க முயல்வதில்
ஆரம்பிக்கிறது
காயத்ரியின் விளையாட்டு

ஒன்றை இரண்டோடு
இணைக்கும் போது
அவளுக்கு எதுவும் புலப்படவில்லை

மூன்றும் நான்கும்
சேர்கையில் பின்னங்கால்கள்
ஓரளவு தெரிந்தது

நத்தையின் நிதானத்தோடு
எண்களைத் தேடி
ஊர்ந்தது அவளது எழுதுகோல்

நிகழ்ந்துவிடக்கூடிய சாத்தியங்களின்
அருகாமையில் குழப்பமுற்று
சற்றே தணிகிறாள்

கடைசியில் முழுமையாகத்தெரிந்த
படுத்திருந்தபுலியைப் பார்த்து
தானே வரைந்த
திருப்தியோடு மூடுகிறாள்
படக்கதை புத்தகத்தை.

- பொன்.வாசுதேவன்

Sunday, February 14, 2010

சொல்ல இருக்கிறது காதல்



நூற்கண்டின் முனையெனப் பற்றி
சூரியக்கதிர்களை
இழுத்தோடும் ரயிலொன்றின்
ஜன்னலோர இருக்கையில்
என்னோடு பயணப்படுகிறது
உன் நினைவுகள்

போதையுண்ட எதிர்காற்று
அலைக்கழித்த
என் கண்ணிமைகளை
மூடித்திறக்கையில்
அனிச்சையாய்
பூரித்துப் பூக்கிறாய் நீ
விழியோர நீர்த்துளிகளாய்

பெருந்தாகத்துடன்
குடிப்பதற்காய்
உயர்த்திக் கவிழ்த்த
பிளாஸ்டிக் குவளை நீரின்
பதற்றத்தோடு
உள் நிரம்பி நெஞ்சடைக்கிறது
உன் பிரியத்தின் அழுத்தங்கள்

இருட்டத் தொடங்கியதன்
அவதானிப்பில்
வேகமாய்க் கூடடையும்
பறவையின் அவசரத்துடன்
எனக்கு நானே
சொல்லிக் கொள்கிறேன்
எனக்கும்
காதல்
இருந்தது
இருக்கிறது
இருக்கும்
இவ்வாறெல்லாம்.

- பொன்.வாசுதேவன்

Thursday, February 11, 2010

கேணி இலக்கிய சந்திப்பில் எழுத்தாளர் ஜெயமோகன்

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு. ஞாநி அவர்கள் இல்லத்தில் மாதந்தோறும் இரண்டாவது ஞாயிறு பிற்பகல் 3.30 மணிக்கு கேணி இலக்கிய சந்திப்பு நடைபெறுகிறது.

தமிழின் முக்கிய படைப்பாளுமைகளின் கருத்துப் பகிர்வும் தொடர்ச்சியாக அவர்களுடனான உரையாடலும் என நீளும் இந்நிகழ்வு சிறப்பான ஒன்று. கேணி இலக்கியச் சந்திப்பின் இம்மாத விருந்தினராக எழுத்தாளர் திரு. ஜெயமோகன் பங்கேற்கிறார். ஜெயமோகன் அவர்களின் உரையும் அதன் பிறகு வாசகர் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது. அனைவரும் வருக !

Wednesday, February 10, 2010

கேபிள் & பரிசல் புத்தக வெளியீடு இன்ன பிற

    கேபிள் சங்கர் & பரிசல்காரன் புத்தக வெளியீட்டு விழா

     

    அகநாழிகை திறந்து வைத்த வாசல் பலருக்கு, பதிவர்களையும் எழுத்தாளர்கள் என்று மதித்து, அவர்களின் புத்தகங்களையும் வெளியிட வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருப்பது வரவேற்கப்பட வேண்டியது.

     

    அவ்வகையில் ‘நாகரத்னம் பதிப்பகம்‘ சார்பில் திரு.குகன் அவர்கள் பிரபல பதிவர்களான ‘கேபிள் சங்கர்‘ மற்றும் ‘பரிசல்‘ இருவருடைய புத்தகங்களையும் வெளியிடுவது பாராட்டுக்குரியது. பதிவர்களின் புத்தகங்களாகிய இவற்றை பதிவர்கள் அனைவரும் வாங்கி ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். இது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்வது போன்றது.

     

    கேபிள் சங்கர் மற்றும் பரிசல்காரன் இருவரது எழுத்துக்களை பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. Minimum Guarantee எனப்படும் குறைந்தபட்ச உத்திரவாதம் மட்டுமின்றி அதிகபட்ச உற்சாகத்தையும், வாசிப்பு சுவாரசிய்த்தையும் அளிக்கக் கூடியவை.

     

    எனவே பிப்ரவரி 14 காதலர் தினம் (!?) அன்று வெளியிடப்பட உள்ள கேபிள் சங்கர் மற்றும் பரிசல் இருவரது புத்தகங்களையும் கூச்சப்படாமல் கேட்டு வாங்கி வாசித்து மகிழவும் மேலும் இதுபோன்ற பல வெளியீட்டு விழாக்கள் நடத்த எங்களைப் போன்ற பதிப்பாளர்களுக்கு உற்சாகம் தருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

     

    புத்தகம் வெளியிடும் கேபிள் சங்கர் மற்றும் பரிசல்காரன் மேலும் பல புத்தகங்கள் வெளியிடவும், தொடர் வெற்றிகள் பெறவும் எனது நல்வாழ்த்துகள்.

    cable parisal

    பின்குறிப்பு : அகநாழிகை வெளியிட்டுள்ள புத்தகங்களும் ‘டிஸ்கவரி புக் பேலஸ்‘ புத்தகக் கடையில் கிடைக்கிறது என்பதை அறியவும்.

     

    0

    அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்

     

    பதிவர்கள் அச்சு ஊடகத்திற்கு வருவது மகிழ்ச்சியான செய்தி. இதன் அவசியம் என்ன என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். எழுத்து என்பதை ஆவணப்படுத்துவது அச்சு வடிவத்தில் அது வருகின்ற போதுதான் என்பது மறுக்கவியலாத உண்மை.

     

    அந்த வகையில் முதலாவதாக பதிவர்களின் புத்தகங்களை வெளியிட்டு ஊக்கப்படுத்தியது ‘அகநாழிகை‘ மட்டுமே என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இணையத்தில் எழுதுவதோடு அச்சு ஊடகங்களிலும் அவர்கள் சிறக்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தி பதிவர்களின் புத்தகங்களையே அகநாழிகை இதுவரை வெளியிட்டு வந்துள்ளது. எல்லோரும் முதல் தலைமுறை எழுத்தாளர்கள் என்பதும், முதலாவதாக அவர்களது புத்தகங்கள் அச்சில் வருவதைக் காண்பது அகநாழிகை வாயிலாகத்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

     

    ‘அகநாழிகை‘ இலக்கிய இதழ் அக்டோபர் 2009 ல் வெளியானது. அதன் பிறகு இரண்டாவது இதழ் டிசம்பர் 2009 லும், மூன்றாவது இதழ் (பிப்ரவரி 2010) தற்போது தயாராகிறது. அகநாழிகை படைப்பிலக்கியத்தின் பன்முக வெளிப்பாடாக குறுகிய காலத்தில் பலரைச் சென்றடைந்து கவனம் பெற்றுள்ளது. தமிழின் முக்கியப் படைப்பாளிகள் பலரும் ‘அகநாழிகை‘ இதழ் குறித்த தங்கள் மகிழ்ச்சியையும், ஆலோசனைகளையும் தெரிவித்துள்ளார்கள். இது அகநாழிகையின் பங்கேற்ற படைப்பாளிகளுக்கு கிடைத்துள்ள வெற்றி என்றுதான் கூறவேண்டும்.

     

    அகநாழிகை இதழை அனைவரும் தங்களுக்கான களமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். புதிய படைப்பாளிகளை இனங்கண்டு அடையாளப்படுத்துவதிலும், படைப்புகளில் சோதனை முயற்சிகள், ஆகச்சிறந்த படைப்புகளை வெளியிடுவதிலும் அகநாழிகை கவனம் செலுத்துகிறது.

     

    இன்னுமொரு முக்கிய விஷயம், அகநாழிகை தொடர்ந்து இயங்குவதற்கான சூழல் ஏற்படுத்துவது. அகநாழிகை இதழுக்கு சந்தா செலுத்தி சேர்வதன் வாயிலாக பலரைச் சென்றடையும் வாய்ப்பு உள்ளது. அகநாழிகையின் ஆண்டு சந்தாவாக மிகவும் குறைவான தொகையே (ரூ.200/-) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

     

    மேலும் ரூ.1000/- செலுத்தி அகநாழிகையின் புரவலராக இணையலாம். ஒரு முறை செலுத்தினால் போதுமானது. சந்தா தனியே செலுத்தத் தேவையில்லை. புரவலர்களின் பெயர்கள் தொடர்ந்து அகநாழிகை இதழில் வெளியிடப்படும்.

     

    நண்பர்கள் விரும்பினால் அகநாழிகைக்கு நன்கொடை அல்லது விளம்பரங்கள் அளிக்கலாம். இது அகநாழிகை எதிர்கொண்டிருக்கும் பொருளாதார ரீதியான சிக்கல்களை சமாளிக்க உதவும். அகநாழிகை இலக்கிய இதழ் ஒரு லாப நோக்கமற்ற இயக்கம் என்பதை நண்பர்கள் அனைவரும் அறிவார்கள். எனவே சந்தா / புரவலர் / நன்கொடை / விளம்பரம் என உதவுவதன் வழியே அகநாழிகையின் பணிகளை சாத்தியப்படுத்துவதில் உங்கள் பங்களிப்பும் அமையும்.

     

    அகநாழிகை இலக்கிய இதழுக்கு சந்தா / புரவலர் / நன்கொடை / விளம்பரம் அளிக்க aganazhigai@gmai.com என்ற மின்னஞ்சலில் அல்லது 999 454 1010 என்ற அலைபேசி எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம்.

     

    அகநாழிகை சந்தா மற்றும் பதிப்பக வெளியீடுகளை ICICI வங்கிக் கணக்கு எண். 155501500097 P.VASUDEVAN – MADURANTAKAM BRANCH என்ற வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி பெறலாம்.

    அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்

                 கவிதைத் தொகுதிகள்

    1. கருவேல நிழல் – பா.ராஜாராம் / ரூ.40

    2. கோவில் மிருகம் – என்.விநாயகமுருகன் / ரூ.40

    3. நீர்க்கோல வாழ்வை நச்சி – லாவண்யா சுந்தரராஜன் ரூ.40

    4. கூர்தலறம் – TKB காந்தி ரூ.40

    5. உறங்கி விழித்த வார்த்தைகள் – மதன் ரூ.40

    6. தலை நிமிர்வு – பாரதிவசந்தன் ரூ.130

                  1. சிறுகதைத் தொகுதி

              1. அய்யனார் கம்மா – நர்சிம் / ரூ.40

                            1. கட்டுரைத் தொகுதி

                        1. பார்ப்பன CPM + அமார்க்சியம் = ஈழ விடுதலை எதிர்ப்பு அரசியல்(கட்டுரையாளர்கள் : யமுனா ராஜேந்திரன், டி.அருள்எழிலன், வளர்மதி, ச.பாலமுருகன், இரா.முருகவேள்)

                              1. - தொகுப்பாசிரியர் : வளர்மதி (அச்சில்)

                                நாவல்

                          1. ‘எட்றா வண்டியெ...‘ – வாமு கோமு (அச்சில்)

                              மேற்கண்ட புத்தகங்களில் உறங்கி விழித்த வார்த்தைகள் – மதன் மற்றும் தலை நிமிர்வு – பாரதிவசந்தன் ஆகிய இரு புத்தகங்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இவர்களில் மதன் ‘பிரக்ஞையில்லா சமிக்ஞைகள்‘  என்ற வலைத்தளம் வழியே பரவலாக அறியப்பட்டவர்.

                               

                              மற்றொருவரான பாரதிவசந்தன், புதுவையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது 12வது புத்தகம் ‘தலை நிமிர்வு‘. இவரது ‘தம்பலா‘ என்ற நாவல் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. கடந்த 30 ஆண்டு காலமாக தமிழ் படைப்புலகில் தீவிரமாக இயங்கி வரும் பாரதிவசந்தனின் படைப்புகள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது தமிழிய தலித்திய கவிதைகளின் முழுத் தொகுப்பு அச்சிடப்பட்டு, தொல்.திருமாவளவன் அவர்களால் வெளியிட தயார் நிலையில் உள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும்.

                               

                              0

                               

                              கவிஞர் விக்ரமாதித்யனுக்கு ‘விளக்கு‘ விருது

                              vikramathithan 

                              2009 ம் ஆண்டிற்கான விளக்கு விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு அவருடைய கவிதைப் பணிக்காக வழங்கப்பட்டுள்ளது. கவிஞர்கள் கௌரவப்படுத்தப்படுவது கொண்டாடப்பட வேண்டியது. நவீன கவிஞர்களில் பலருக்கு பெயர் கிடைக்கும் அளவிற்கு பணமோ, புகழோ பெரிய அளவில் கிடைத்து விடுவதில்லை. ஆத்ம திருப்தி மட்டுமே அவர்களை கவிதையெழுத வைக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. நான் கடவுள் படத்தில் தனக்கு நடிப்பும் வரும் என்று நீருபித்தவர் கவிஞர் விக்ரமாத்தியன் ‘நம்பி‘ என்று நண்பர்களால் அன்பாக அழைக்கப்படும் கவிஞர் விக்ரமாதித்யனை ‘அகநாழிகை‘ வாழ்த்துகிறது. பொட்டில் அறைந்தாற்போல் நம்மோடு பேசும் கவிஞர் விக்ரமாதித்யனின் ஒரு கவிதை.

                               

                              மௌனம்

                               

                              உதாரணங்கள் காட்டிப்

                              பேசாதே

                               

                              எல்லா

                              உதாரணங்களும்

                              சலிப்பூட்டுபவை

                               

                              மேற்கோள்கள்

                              காட்டிப் பேசாதே

                               

                              எல்லா

                              மேற்கோள்களும்

                              அரதப்பழசு

                               

                              பேசாதே

                              பேச்சுதான்

                              பெரும் முட்டாள்தனம்

                               

                              பெரும் பேச்சு

                              விருதா வாழ்வு

                               

                              மௌனத்தின் அருமை

                              சாதுக்களுக்குத் தெரியும்.

                               

                              0

                               

                              வெறுமையும் நானும் (கவிதை)

                               

                              சமீபத்தில் நான் வாசித்ததில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. பதிவர் D.R.அஷோக் எழுதியது. இந்தக் கவிதையின் வழியே விரியும் காட்சி மிகவும் பரவசமானது. பலமுறை வாசித்து ரசித்தேன்.

                            வெறுமையும் நானும் – பரவசம்

                             

                            வெறுமை தரும் சூழல்

                            தாண்டிச் செல்கையில் சூழ்வெறுமை

                            கூட்டம் தேடி.. கூட்டம் அடைந்தும்

                            ஓம்காரம் தாண்டியும் குழந்தைவழிசெல்ல

                            துள்ளி விளையாடிய மழலை அமைதியாய்

                            கடலின் நுரைக்கும் அலைகளின் முன் தொட்டு

                            அவனுக்கென கைகோர்த்து திரும்பி பார்க்கையில்

                            எனக்கு பிடித்தவர் வெள்ளை தொப்பியுடன்

                            எழுந்து கொள்ள இரு பிரிவாய் நின்று சிறு நேரம்

                            பேசிக்கொண்டிருந்து கண்பார்வையில் மேலேறி சென்றனர்

                            திரும்ப வந்து துப்பாக்கியில் 4 பலூனை சுட்டு தீர்க்கையில்

                            திரும்பி வந்த ஷங்கரிடம் பேசிவிட்டு மிஸ்ட்டு கால் கேபிளுக்கு

                            டீக்கடை பார்த்துவிட்டு குழந்தையோடு வீடு திருப்புகையில்

                            வெங்கடேஷவரா போளி ஸ்டாலில் பருப்புபோளி

                            வாங்கும் பொழுது நியாபகத்தில் வந்து போனது

                            தண்டோராவின் இன்றைய பதிவு

                            வீடு வந்து ஆபிஸ் வந்து ப்ளாகை திறக்கையில்

                            வால் பையனின் ‘பொது புத்தி’ இப்படியாக

                            தொடர்கிறது வாழ்வு என்னும் மர்மப்புள்ளி

                            எனக்கு மட்டும் வெறுமையாய்

                            வெறுமை தரும் கனமற்று.

                             

                             

                            D.R.அஷோக்

                             

                            0

                             

                            அகநாழிகை வெளியீடுகள்

                            என்.விநாயகமுருகன் டிகேபி காந்தி நர்சிம் பா.ராஜாராம் லாவண்யா சுந்தரராஜன்

                            மதன் bharathi vasanthan valarmathi

                            Comments system

                            Disqus Shortname