Thursday, January 7, 2010

“மேன்ஷன்களும் விபச்சார விடுதிகளும்“ – மனுஷ்யபுத்திரன் நேர்காணல்

கடந்த சில ஆண்டுகளாக பேட்டி எதுவும் அளிக்காமலிருந்த மனுஷ்ய புத்திரனின் நீண்ட பேட்டி இது. அகநாழிகை முதல் இதழுக்காக கேட்டு, இரண்டாம் இதழில்தான் வெளியிட முடிந்தது. தனது உள்ளத்து உணர்ச்சிகளை ஒளிவு மறைவின்றி பதிவு செய்திருக்கும் மனுஷ்ய புத்திரனின் மனம் திறந்த பேட்டி. வெகுநாட்களாக பதில் ஏதும் அளிக்காமல் மௌனமாய் இருந்த மனுஷ்யபுத்திரனின் குறிப்பிடத் தக்க நேர்காணல் இது. இந்த நேர்காணல் அகநாழிகை டிசம்பர் 2009 இதழில் வெளியானது.

…………………………………………………………………………………………………………………….

“மேன்ஷன்களும் விபச்சார விடுதிகளும்“ – மனுஷ்யபுத்திரன்

manush1

நேர்காணல் : பொன்.வாசுதேவன்

உங்கள் புதிய கவிதைத் தொகுதி ‘அதீதத்தின் ருசி’ டிசம்பரில் வெளிவர இருப்பதாய் அறிகிறோம். இது சற்று நீண்ட இடைவெளிக்கு பின்வரும் உங்கள் தொகுப்பு. ஏன் இந்த இடைவெளி?

ஒரு எழுத்தாளன் எழுதாமல் இருப்பது என்பது ஒன்று அவனது ஆயத்தமாகும் காலமாக இருக்கவேண்டும் அல்லது சபிக்கப் பட்ட காலமாக இருக்கவேண்டும். இரண்டில் எது எனக்குப் பொருத்தமான காலம் என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பமடைகிறேன். ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’ தொகுப்பில் இடம் பெற்ற ‘அன்பிற்காக’ என்ற கவிதையை நான் எழுதி முடித்த தினத்தில் எனக்குத் தெரியாது அதற்குப்பிறகு ஒரு நீண்ட காலத்திற்கு நான் ஒரு வரிகூட எழுதப் போவதில்லையென்று.

யார் படைப்பின் ஊற்றுக்கண்களில் ஒரு அரக்கை வைத்து அடைத்து விட்டு போகிறார்கள் என்று தெரியவில்லை. தூக்கமற்றுத் தவித்த பல இரவுகளில் மனம் கலைந்து எழுத முயன்று தோல்வியடைந் திருக்கிறேன். அது ஒரு ஆதார மான உடல் உறுப்பு திடீரென செயலற்று போவது போல. பிறகு பனி விலகும் காலம் வந்தது. கடந்த ஆறு மாதத்தில் நான் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையும் அவற்றின் தளமும் எனக்கே நம்ப முடியாதது. எத்தனை முறை நான் அழிந்தாலும் நான் மீண்டு வருவேன் என்ற உறுதியை தந்த நாட்கள் இவை. இப்போதும் ஒவ்வொரு கவிதையையும் எழுதிமுடிக்கும் போது இது ஒரு வேளை கடைசிக் கவிதையாக இருந்து விடக்கூடாது என்கிற சின்ன பதட்டத் தோடுதான் அதிலிருந்து விலகிச் செல்கிறேன்.

கவிதையின் படிமலர்ச்சித் தருணங்களை உடற்சிந்தனை, அனுபவத்தின் ஏக்கம் சார்ந்ததாக வடிவமைத்துக் கொண்ட தனித்துவம் உங்களுக்கே உரித்தானது. இம்மாதிரி வடிவம் வலிந்து ஏற்படுத்திக் கொண்டதா அல்லது உங்கள் சிந்தனை மொழி இயல்பாகவே அதை நிகழ்த்தி விடுகிறதா?

தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற யாரும் தனித்துவத்தை உருவாக்க இயலாது. நான் எனது மொழிப் பழக்கத்தின் வழியே ஒரு சொல்முறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த சொல்முறைதான் கவித்துவத்தின் அபூர்வ கணங்களை அடை வதற்கான முதல் திறப்பாக இருக்கிறது.

பொதுவாக என் மீது மட்டுமல்ல, வேறு கவிஞர்களின் மீதும்கூட அவர்கள் ஒரே பாணியிலான கவிதையை எழுதுகிகிறார்கள் என்று ஒரு எளிய அணுகுமுறை இருக்கிறது. படத்துக்கு படம் தந்து ஒப்பனைகளை மாற்றிக் கொள்ள ஒரு கவிஞன் ஒரு நடிகன் அல்ல. அவன் தனக்கென சில பிரத்யேக அழகியல் விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ளும்போது மட்டுமே தொடர்ந்து எழுதுவது சாத்தியமா கிறது. இந்த அழகியல் விதி கவித்துவ தரிசனங்களுக்கு ஏற்ப மாறியும், நெகிழ்ந்தும் புதிய அனுபவங்களை ஏற்படுத்தலாம்.

ஆனால் கவிதைகளை வடிவ ரீதியாக மட்டும் எதிர்கொள்வது அந்தக் கவிதையை எதிர் கொள்வதிலிருந்து ஒருவர் தப்பிச் செல்வதே ஆகும்.

பொதுவாகவே உங்கள் கவிதையின் மொழி நெகிழ்ச்சியாகவே இருந்து வந்துள் ளது. நேரடிப் பேச்சு, கட்டளை, சுயம்புவான தீர்மானம் என்ற வகையிலேயே கவிதைகளை வகைமையாக்குவது ஏன்?

முதலாவதாக, உரையாடல்தான் எனது மொழி. அதுவே என் தியானம். அவற்றின் வழியாகவே என் கவித்துவ தரிசனங்களை அடைகிறேன். இரண்டாவதாக என்னுடைய இருப்பு என்று என் கவிதைகளில் பிரத்யேகமாக இல்லை. நான் அறிகிற எல்லா மனிதர்களின் தீவிரமான நிலைகளையும் என் வயமாக்கிக் கொள்வதன் வழியாகவே எனக்கு கவிதை சாத்தியமாகிறது. மூன்றாவதாக யதார்த்த வாழ்க்கையில் நிகழ்த்தமுடியாத உரையாடல் களை கவிதைக்குள் நிகழ்த்துவதன் வாயிலாக மௌனங்களின் கொடூரமான உறை பனியைக் கடந்து செல்ல முற்படுகிறேன். அதற்கு இந்த வெளிப்பாடு முறையே இணக்கமானதாக இருக்கிறது.

ஒரு படைப்பாளியைப் பற்றிய தனிபட்ட தகவல்கள் வழியே அவரது படைப்புலகம் குறித்த தீர்மானங்களுக்கு வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இன்னும் நேரடியாகவே கேட்கிறேன். உங்கள் உடல் சார்ந்த பிரச்சினை யோடு உங்கள் கவிதைகள் எதிர்கொள்ளப் படுவது சம்பந்தமான ஒரு விவாதம் சமீபத்தில் இணைய தளங்களில் பார்க்க முடிகிறது.

ஒருவன் ஆணாகவோ, பெண்ணாகவோ, அரவாணியாகவோ இருக்க வேண்டியிருப்பது போல, இந்தியனாகவோ ஒரு ஐரோப் பியனாகவோ இருப்பதுபோல, இன்னும் தலித்தாகவோ, கறுப்பனாகவோ இருப்பது போல, புத்தி கூர்மையற்றவராகவோ, புத்தி சுவாதீனம் அற்றவராகவோ இருப்பதுபோல அல்லது ஒரு அரசு ஊழியராகவோ, ஒரு சிறு பத்திரிகை நடத்துபவராகவோ இருப்பது போல, ஒருவர் முழு உடல் நலமுள்ள வராகவோ, உடல் நலமற்றவராகவோ இருக்க வேண்டியிருக்கிறது. இந்த உடலும் இதன் ஆரோக்கியமும் பலவீனங்களும் நமக்கு வழங்கபட்டவை. இவ்வாறு வழங்கப்பட்ட எதையும் என்ன செய்வது என்று எனக்கு இன்று வரை புரிந்ததே இல்லை. அது போகட்டும், இந்த உடல் தரும் சௌகர் யங்களும் அசௌகர்யங்களும் நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு செல்வாக்கை செலுத்துவது போலவே ஒருவர் எழுதக் கூடிய கவிதையிலும் செலுத்தலாம்.

ஆனால் அதன் வழியே ஒருவரது ஒட்டு மொத்த உலகத்தையும் வரையறுக்க முயற்சிப்பதில் ஒரு தந்திரம் இருக்கிறது. அது ஒருவரை ஒரு பிம்பத்தோடு தளைப்படுத்தும் தந்திரம். அந்த தந்திரம் ஏன் மேற்கொள்ளப் படுகிறது என்பதற்கு திட்டவட்டமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று நான் என் கவித்துவத்தின் வழியாக அடைந்தவற்றை ஒரு இயலாமைக்கு எதிரான செயல்பாடு என்று சுருக்க விரும்புவது. இந்த உடல் வேறொரு உடலாக இருந்திருந்தால் அப்போது அது வேறு காரணமாக இருக்கும். வறுமை, அல்லது மோசமான பால்ய காலம் இப்படி ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிப்பார்கள். ஒரு கவிதை யோடு உரையாடுவதைவிட ஒரு கவிஞன் எப்படி உருவாகிறான் என காரணங்களை கற்பித்துக் கொள்வது சுலபமானது. அப்படிக் கற்பித்துக் கொள்கிறவன் கவிஞனைவிட மேலான இடத்தில் தன்னை நிறுவ முற் படுகிறான். ஆனால் ஒரு கவிஞன் இத்தகைய கண்டுபிடிப்புகளை எல்லாம் தலைக்குப்புற கவிழ்த்து விடுகிறான். நீங்கள் அவனை ஒரு கான்ஸ்டபிள் ஒரு ஜேப்படி திருடனை பிடிப்பதுபோல பிடித்து உங்கள் காவல் நிலையத்தில் ஒரு புகைப்படமாக ஒட்டிவைக்க முடியாது. அவன் ஒரு சூனியக்காரி. உங்களது எல்லா வழிமுறைகளையும் அவள் குழப்பி விடுவாள்.

இரண்டாவதாக நமது கலாச்சாரம் என்பது மனிதர்களின் பொது அடையாளங்கள வழியே அவர்களின் ஸ்தானங்களை உருவாக்க முயல்வது. சாதிய ரீதியாகவோ மத ரீதீயாவோ இன-மொழி ரீதியாகவோ அல்லது தொழில் ரீதியாகவோதான் ஒருவரது இடம் இங்கே தீர்மானிக்கபடுகிறது. அதன் ஒரு நீட்சிதான் ஒருவரது உடலை மைய்யமாகக் கொண்ட பார்வைகளும்.

இந்த உடலால் நான் சௌகர்யங்களையே பெரிதும் அடைந்திருக்கிறேன். அது அனா வசியமான பல சமூகக் கஷ்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியிருகிறது. அந்தரங்கமாக எவ்வளவோ ஆழமான உறவுகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஆனால் நான் போராடி வெற்றி பெற்ற மனிதன் என்பதாக ஒருவர் புரிந்து கொள்ளும்போது நமது மத்திய தர வர்க்க மனோபாவம் குறித்த பெரும் ஆபாச உணர்வை அடைகிறேன். நான் ஒரு துளியும் போராடிய தில்லை. ஒரு துளி தியாகம் செய்யவும் இல்லை. ஒரு நீச்சல் வீரன் அல்லது மலையேறுபவனின் பித்து நிலைகொண்ட அர்ப்பணிப்பு. நான் அதையெல்லாம் செய்ய முடியாததால் இதைச் செய்து கொண்டிருகிறேன் அவ்வளவே.

நான் உடலின் துயரங்கள் பற்றிய கவிஞனாக இருந்தால்தான் என்ன? ஆனால் அது காலம்காலமாக தொடர்ந்து அழிக்கப்படும் உடல், தண்டிக்கப்படும் உடல், மறுக்கப் படும் அங்கஹீனப் படுத்தப்படும் உடல். நான் வரலாறு முழுக்க இத்தகைய உடல்களையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருகிறேன். என் வழியே நான் எழுத விரும்புவது அதையே. ஆனால் ஒருவர் அதை என்னுடைய அந்தரங்க குறிப்பேடாக மாற்றும்போது, தன்னிரக்கமாக புரிந்துகொள்ளும்போது அந்தக் குரூரம் என்னை பதட்டமடைய வைப்பதில்லை. அவ்வளவுதான் அவர் ஒரு கவிதைக்குள் பயணிக்கக் கூடிய தூரம். கடவுள் அவ்வளவே அவருக்கு பார்க்கும் சக்தியை அளித்திருக்கிறார்

ஒரு விமர்சகனின் அல்லது வாசகனின் அறியாமைக்கு எதிராக ஒரு கவிஞன் தனது மகத்தான கருணையை வெளிப்படுத்தவே விரும்புகிறான். ஏனென்றால் அறியாமையிலிருந்து பிறக்கும் தந்திரம் என்பது மன்னிக்கப் படக்கூடியதே.

manush2

உங்கள் கவிதைகளுக்காக நீங்கள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் எத்தகையவை?

பொதுவாக அவை குழந்தைகளோடு விளையாடுவது போன்றதுதான். எந்த தர்க்கமும் அதில் கிடையாது. நான் ஈழத்தில் 20 ஆயிரம் பேர் காணாமல் போனதைப் பற்றி மிக உக்கிரமான கவிதை எழுதியிருப்பேன். ஒருவர் அதைப் படித்து அந்தக் கவிதையில் மிகச் சிறப்பான இரண்டு வரிகளை அடையாளம் காட்டுவார். அல்லது இதே போன்ற ஒரு கவிதையை நான் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன் என்று எனக்கு சொல்லித் தருவார். அந்தக் கவிதை விவாதிக்க விரும்பும் விஷயம் பற்றி ஏதாவது அவருக்கு அபிப்ராயம் இருக்கிறதா என்று முகத்தை, முகத்தை பார்ப்பேன். அவர் தானும் இதுபோல ஒரு கவிதை எழுதியிருப்பதாகச் சொல்லி அதை படிக்க ஆரம்பிப்பார். இதெல்லாம் பழகிப் போய்விட்டது. ஆனால் சில மூர்க்கமான வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் என் மனதை அணையாமல் தொடர்ந்து பற்றி எரியச் செய்பவர்கள்.

விமர்சனம் என்ற பெயரில் செய்யப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் தமிழ் அறிவுச் சூழலில் தொடர்ந்து நடைபெறுகிறதே?

அதெல்லாம நடைபெறவேண்டியதுதான். அது நம் பண்பாடு. கலாச்சார வாழ்கை. ஒருவரை சாதியின் பெயரால் இழிவு படுத்துவது, மதத்தின் பெயரால், பாலினத்தின் பெயரால், தொழிலின் பெயரால், உடலின் பெயரால் இழிவு படுத்துவதெலாம் நாம் காலம் காலமாக செய்துவரும் காரியங்கள். இலக்கியம் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படி? இலக்கியமும், இலக்கியவாதிகளும் வாழ்க்கை யையும் பண்பாட்டையும் பிரதிபலிப்பவர்கள் ஆயிற்றே. மண்டியிட வேண்டும் அல்லது எட்டி உதைக்கவேண்டும். யாரையாவது சொறிந்து கொடுக்காமல் அல்லது இழிவுபடுத்தாமல் நம்மால் ஒரு புத்தக விமர்சனம்கூட எழுத முடியாது. எனவே நம் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் இலக்கிய பத்திரிகை ஆசிரியர்களும் இன்னும் ஆவேசமாக இன்னும் மனம் திறந்து தங்கள் மனித வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். நம்முடைய அற்பமான மனங்களை மூடிவைப்பது அல்லது அவற்றைத் தடை செய்வது அந்த அற்பத்தனத்தை இன்னும் தீவிரமாக மாற்றுகிறது. உண்மையில் இந்த வகையில் நமது ஊடகங்கள், சிறுபத்திரிகைகள், இணைய தளங்கள் மகத்தான பங்காற்றி வருகின்றன. நாம் கலாச்சார ரீதியாக விடுதலை அடைந்து வருகிறோம். எனவே பிறரை துன்புறுத்தும் அவமதிக்கும் வழிமுறைகளை நாம் தங்கு தடையின்றி மேற்கொள்வதற்கான எண்ணற்ற வாசல்கள் இன்று திறந்து விடப் பட்டிருக்கின்றன. நாம் இந்த சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்துவோம்

முரண்பட்ட படைப்பாளிகளுக்கு இடையே ‘உயிர்மை’ எப்படி ஒரு இணக்கமான சூழலையும் செயல்பாட்டையும் உருவாக்குகிறது?

யாருக்கு இடையேயும் எந்த இணக்கத்தையும் ஏற்படுத்துவது உயிர்மையின் நோக்கம் அல்ல. அது சாத்தியமும் அல்ல. ஒரு வாசகனாக, எழுத்தாளனாக எனது நண்பர் களுக்காக நான் இந்த பத்திரிகையையும் பதிப்பகத்தையும் நடத்துகிறேன். எனக்கு பிடித்த விஷயங்களை நான் பதிப்பிக்கிறேன். நான் ஒரு மேதை இல்லை என்பதாலும் நான் ஒரு நட்சத்திரம் இல்லை என்பதாலும் என்னுடைய இடம் குறித்து எனக்கு எந்த பதட்டமும் இல்லை என்பதாலும் எனக்கு யாரோடும் எந்த மனச்சிக்கலும் இல்லை. உயிர்மை ஒரு எழுத்தாளனுக்கு உரிய கௌரவத்தை முழுமையாக அளிக்க விரும்புகிறது. அது மட்டுமே அதனுடைய பலம்.

சில மாதங்களுக்கு முன்பு உயிர் எழுத்து இதழில் ‘காலச்சுவடு’ கண்ணன் உங்களுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் ஏன் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக நீங்கள் காலச்சுவடில் வேலை செய்து கொண்டே பதிப்பகம் ஆரம்பித்தீர்கள், சென்னை அலுவலகத்தின் ஊழியர்களால் உங்களை சகித்துக் கொள்ள முடியவில்லை, ராஜினாமா செய்துவிட்டு வாபஸ் வாங்க முயற்சித்தீர்கள் என்றெலாம் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்ததே...

நான் காலச்சுவடு பற்றியோ கண்ணன் பற்றியோ எப்போதுமே அவதூறாகப் பேச விரும்பியதில்லை. அதற்கு முக்கியமான காரணம் அவர் செய்கிற எதையும் நான் செய்யக்கூடாது என்கிற பிடிவாதம்தான். இந்த வித்தியாசம் இருக்கிற வரைதான் எனது செயல்பாடுகளுக்கு அர்த்தம் இருக்க முடியும். எல்லாவற்றையும்விட கண்ணனை ஏதாவது சொன்னால் சுந்தரராமசாமியின் ஆவி துன்புறுமே ! அதை நான் விரும்பவில்லை. நீங்கள் குறிப்பிடும் பேட்டியில் கண்ணன் ‘சிலர் பத்திரிகையின் பக்கங்களை மேன்ஷனாக பிரித்து வாடகைக்கு விடுவதாக’ ஒரு சிறந்த கருத்தை கூறியிருந்தார். இதைப் படித்து கோபமான ஒரு சிற்றிதழ் அன்பர் ‘விபச்சார விடுதி நடத்துவதைவிட மேன்ஷன் நடத்துவது தப்பிலையே’ என்றார். அவரை நான் வன்மையாக கண்டித்தேன்.

ஆனால் காலச்சுவடுக்கும் எனக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி கண்ணன் மிகுந்த தடுமாற்றத்துடன்தான் பதிவு செய்ய வேண்டியிருகிறது. அந்த மகத்தான வரலாற்றில் எனக்கு எந்த இடம் கொடுப்பது என்ற குழப்பம். இதே குழப்பம் கவிஞர் சல்மா விற்கும் அவரது மகத்தான வரலாற்றை எழுதும் போதெல்லாம் ஏற்படுவதை காண்கிறேன். நான் இதுபோன்ற மகத்தான வரலாறு களிலிருந்து என்னை துண்டித்துக் கொள்ளவே விரும்புகிறேன். நான் சுந்தரராமசாமியின் வாசகனாக அவரைப் போய் பார்த்தவன் என்ற அளவிலும் அவர்கள் வீட்டில் தந்த அவியலை விரும்பிச் சாப்பிட்டவன் என்ற அளவிலும் இந்த வரலாற்றை நான் சுருக்கிக் கொள்ள விரும்புகிறேன்

‘நீதான் காலச்சுவடில் இருந்தவனா?’ என்று யாராவது என்னை கேட்கும்போது எனக்கு மிகவும் பதட்டமாகி விடுகிறது. இல்லை அவர் காலச்சுவடில் பேக்கிங் Section ல் வேலை பார்த்தவர் என்று சொல்லி, கேட்டவரை கண்ணனின் அடியாட்கள் யாரவது அடிக்கப்போகிறார்கள் என்ற பதட்டம். ஒரு முறை தீராநதியில் என்னை பேட்டி எடுத்த போது பேட்டி எடுத்தவர் என்னை காலச்சுவடு ஆசிரியர் என்று குறிப்பிட்டு விட்டார். உடனே அதை மறுத்து தீராநதிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதேபோல Poetry International Web-ல் அம்பை என் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அளித்திருந்தார். அப்போது இந்த ஆள் காலச்சுவடு ஆசிரியராக வேலை பார்த்தான் என்று என்னைப் பற்றிய குறிப்பில் எழுதிவிட்டார். உடனே அங்கும் மின்னஞ்சல் பறந்தது. அந்தக் குறிப்பு திருத்தப்பட்டது. ரொம்ப நாள் காலச்சுவடில் ஆசிரியர்கள் : கண்ணன், மனுஷ்யபுத்திரன் என்றுதானே imprintல் இருந்தது என்று நான் ஜெராக்ஸ் காப்பி அனுப்பி நிரூபிக்கலாம். அது என்னுடைய இழிவிற்கு நானே வழங்கிக் கொள்ளும் சர்டிபிகேட் போல ஆகிவிடும்.
உண்மையில் காலச்சுவடு சம்பந்தமான எல்லா பெருமைகளையும் சிறுமைகளையும் கண்ணனுக்கே கொடுத்துவிடுகிறேன். அந்த சவத்தை அவர் எவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டு நடக்க முடியுமோ நடக்கட்டும். அது அவரது தலையெழுத்து. ‘காலச்சுவடு’ ஒவ்வொரு இதழிலும் ‘நான், நான்’ என தன்னை முன்னிறுத்தி அவர் எழுதும் பரிதாபகரமான எல்லா குறிப்புகளிலும் இந்த சவத்தின் சுமையை தாங்க முடியாத முனகல்தான் வெளிப்படுகிறது. ஒரு கதையையோ கவிதையையோ வாசித்தறிய முடியாத ஒரு படிப்பறிவற்ற ஆள் இரு இலக்கிய பத்திரிகையை நடத்த முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் அவர். இது அவரைப் போன்ற பலருக்கும் தன்னம்பிக்கையை அளித்திருக்கிறது. பௌத்த அய்யனார் என்பவர் ஒரு ஆங்கிலப் பதிப்பகமும் பாரிஸ் ரிவ்யூ மாடலில் ஒரு பத்திரிகையும் ஆரம்பிக்கப் போவதாக கேள்விப்பட்டேன். கண்ணனின் சாதனைகள் இதற்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.

manush4

அவருடனான கசப்புகளுக்கு பல காரணங்கள் உள்ளன. அவை ஒரு பொது அரங்கில் விவாதிக்க முடியாதவை. ஒருவருடைய நிழல்களை அறிவது என்பது நல்லதல்ல. நான் அவரே அச்சப்படும் அவரது நிழல்களை அறிந்து கொண்டிருந்தேன் என்பதுதான் பிரச்சினை. அதற்கு நான் சாட்சியமாகி விடுவேனோ என்று அவர் அஞ்சினார். அதற்காகவே அவர் என்னை அப்புறப்படுத்த விரும்பினார்.
ஆனால் இரண்டு விஷயங்களை குறிப்பிட வேண்டும். ‘தமிழ் இனி 2000’ மாநாட்டை கண்ணன் கையாண்ட விதம் அவர் எவ்வளவு அற்பமான நபர் என்பதை எல்லோருக்கும் புரிய வைத்தது. அந்த அவச்சொல்லிலிருந்து இன்று வரை காலச்சுவடினால் வெளியே வர முடிய வில்லை. சென்னையில் ஆரம்பத்தில் எனது வீடுதான் காலச்சுவடு அலுவலகமாக செயல்பட்டு வந்தது. ‘தமிழ் இனி 2000’ க்கு பணம் வர ஆரம்பிக்கப் போகிறது என்று தெரிந்ததும் பழைய கம்ப்யூட்டர்கள் விற்கும் ஒரு நிறுவனத்தை ‘தமிழ் இனி’ அலுவலகமாக பயன்படுத்த ஆரம்பித்தார். அது எனக்கு ஏன் என்று புரியவில்லை.

பண பரிவர்த்தனைகளுக்காக அரவிந்தன் என்பவர் திடீரென நியமிக்கப்பட்டார். இதெல்லாம் எனக்கு ஏன் என்று புரியவில்லை. ‘தமிழ் இனி 2000’ முழுக்க முழுக்க என்னுடைய யோசனை. ஆனால் அதன் ஒருங்கிணைப் பாளர்களாக கண்ணன் பெயரும் திடீரென வந்து சேர்ந்த சேரனின் பெயரும் மட்டும் இருந்தது. ஆனால் நாம் அந்த மாநாட்டிற்காக எவ்வளவு வேலை செய்தேன் என்பதை அதில் பங்கெடுத்த எழுத்தாளர்கள் அறிவார்கள். மாநாடு நடந்த ஹோட்டலில் கண்ணனின் அறையில் சிறிது நேரம் இருந்தேன். அப்போது வழக்கம்போல என்னை சந்திக்க யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட நண்பர்கள் வந்தார்கள். இங்கே கூட்டம் போடாதீர்கள் என்று என்னை கண்ணன் எச்சரித்தார். இதே போலத்தான் மாநாட்டுக்கு வந்த எண்ணற்ற எழுத்தாளர்கள் பல்வேறு விதங்களில் அவமதிக்கபட்டார்கள். எம்.ஏ.நுஃமான் ‘கண்ணனின் மனைவி என்னை உள்ளே விடமாட்டேன் என்கிறார்’ என வாசற்படியில் நின்று என்னிடம் வந்து குமுறியபோது அவரை கெஞ்சி சமாதானப் படுத்தி உள்ளே அழைத்துக் கொண்டு போனேன். அந்த் மாநாடு முடியும் முன்னரே மனம் கசந்து வெளியேறினேன்.

காலச்சுவடு சென்னை அலுவலகம் உலகத் தமிழ் இணைய இதழுக்காக ஸ்ரீராம் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தழிழுக்காக அரிய பல காரியங்களை செய்துவரும் ஸ்ரீராம் நிறுவனம் மனமுவந்து பெரும் தொகையை அதற்காக செலவிட்டது. அதற்கு முன்பு காலச்சுவடில் ஏழு வருடம் எந்த ஊதியமும் இல்லாமல் பங்களித்து வந்த நான் உலகத் தமிழ் இணைய தளத்தில் ஆசியர் பொறுப்பு அளிக்க வேண்டும் என்று கோரினேன். அது மூர்க்கமாக நிராகரிக்கபட்டது. ‘எனக்கு எதற்கு பணம்?’ என்று கேட்டார் கண்ணன். நான் எந்த மனநல மருத்துவரை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆலோசனை வழங்கினார். அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் ‘ஹமீதுக்கு சரளமாக ஆங்கிலம் பேச வராது. பல இடங்களுக்குப் போக முடியாது’ என்று காரணம் கூறினார். பிறகு ‘உலகத் தமிழ் இணைய தள ஆலோசகர்’ என்ற பெயரில் எனக்கு ஒரு சிறிய தொகை மாதாமாதம் அளிக்கபட்டது. அந்த சமயத்தில் அரவிந்தன் உலகத் தமிழுக்காக சம்பளம் பெற்றுக் கொண்டே பிற இணைய தளங்களுக்கும் ‘தன்னார்வ நிருபர்’ வேலை பார்த்து வந்தார். அரவிந்தன் போன்ற ஒரு முட்டாளுடன் வேலை செய்வது எனக்கு மிகுந்த மனச் சோர்வு தரும் அனுபவமாக இருந்தது. சுதர்சன் கடையில் கணக்கு எழுதவேண்டிய ஒருவர் இங்கே ஏன் வந்து உட்கார்ந்திருக்கிறார் என எனக்கு தோன்றாத நாள் இல்லை.

அப்புறம் கண்ணன் இன்னும் இரண்டு விசுவாசிகளை கொண்டுவந்து அலுவலகத்தில் விட்டார். ஒருவர் இன்று பௌத்த அய்யனார் என்று வழங்கப்படும் அய்யனார். இன்னொருவர் சிபிச்செல்வன். இரண்டு பேரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அது கவுண்டமணிக்கு செந்திலை பிடிப்பது போல. அவர்கள் இரண்டு பேரும் மிகவும் சீரியசாக நினைத்துக்கொண்டு செய்யும் காமெடிகள் அந்த நாளில் அரவிந்தன் என்ற நபர் உருவக்கிய மனச்சோர்விலிருந்து விடுபட பெரிதும் உதவியது. முக்கியமாக இரண்டு பேரையும் Civilize பண்ணுவதுதான் எனது முழுநேரப் பணியாக இருந்தது. சில சமயம் கவுண்டமணியின் அடி செந்தில் மேல் பலமாக விழுந்திருக்கலாம். அதற்காக இப்போது வருத்தப்படுகிறேன்.

manush

நான் காலச்சுவடிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப் பட்டதன் உண்மையான காரணம் சுந்தரராமசாமி ‘சொல் புதிது’ இதழ் தொடர்பாக ஒரு நாற்பது பக்க அபத்தமான டாக்குமெண்டை காலச்சுவடில் பிரசுரிக்க விரும்பினார். அப்போது எனக்கும் ஜெய மோகனுக்கும் கடும் முரண்பாடுகள் நிலவிய சூழலில்கூட நான் அதை பிரசுரிக்க மறுத்தேன். இதுபோன்ற குப்பைகள் ஒரு வாசகனுக்கு தேவையற்றவை என்று கூறினேன். எப்படித் தாங்க முடியும்? அப்புறம் காலச்சுவடு பற்றி எதிர்மறையாக ஒரு குறிப்பு ‘இந்தியா டுடே’யில் வெளிவந்ததற்காக அதை எழுதிய செய்தி யாளரை முஸ்லீம் தீவிரவாதி என்று வர்ணித்து ஒரு கட்டுரை எழுதி கண்ணன் பிரசுரிக்கச் சொன்னார். முடியாது என்று மறுத்தேன். இவை காரணமாகவே காலச்சுவடிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டேன். நான் காலச்சுவடின் முழு நேர ஊழியன் அல்ல. எனவே உயிர்மை பதிப்பகத்தை தொடங்கும் பூர்வாங்க வேலைகளை செய்துவிட்டு காலச்சுவடிலிருந்து வெளியேறினேன். அப்புறம் இந்த ராஜினாமா விவகாரம். நான் வெளியேறிய போது அப்போது காலச்சுவடிற்கு நெருக்கமாக இருந்த நண்பர் ரவிக்குமார் நான் வெளியே போகக்கூடாது என்று தனிப்பட்ட முறையில் கேட்டு க்கொண்டார். அதன் அடிப்படை யிலேயே அந்தக் கடித்தை அனுப்பினேன். பதிலுக்கு ‘அவரை பத்திரிகையில் சேர்க்க முடியாது. பதிப்பகத்தில் பிழை திருத்துனர் பணி ஏதாவது தரலாம்’ என்று சொல்லப்பட்டதாக அறிந்தேன். அதற்கான பதில்தான் உயிர்மையின் இந்த ஏழாண்டு செயல்பாடுகள். ‘உயிர் எழுத்து’ பேட்டியில் நான் வெளியே போனது மிகப்பெரிய விடுதலையாக இருந்தது என்று கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். அது மிகவும் சரியானது. நான் காலச்சுவடின் தொந்தரவான மனசாட்சியாக இருந்தேன். மனசாட்சியிலிருந்து விடுபடுவதுதான் எல்லா கிரிமினல்களுக்கும் மிகப் பெரிய விடுதலை.

சமீபத்தில் உயிர் எழுத்து இதழில் கரிகாலன் காலச்சுவடும், உயிர்மையும் தமிழ் சிறு பத்திரிகை இயக்கத்தை அழிப்பதாக குற்றம் சாட்டியிருப்பது பற்றி...

manush5 அந்தக் குற்றச்சாட்டை ஆமோதிக்கிறேன். கரிகாலன், சுதீர் செந்தில் போன்றவர்கள் உருவாக்கிய மாபெரும் இயக்கம் அது. அதற்காக அவர்கள் எவ்வளவு ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். தமிழ் சிறு பத்திரிகையின் தியாக வரலாற்றின் கடைசி பெஞ்சில் கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு இடம் உண்டு. அழிவு வேலை செய்வதில் எப்போதுமே எனக்கு மிகுந்த உற்சாகம் உண்டு. அதனால் இந்த அழிவுப் பணிகள் மென்மேலும் தொடரும் ‘உயிர் எழுத்து’ இந்தக் கட்டுரையை வெளியிடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அதன் ஆசிரியர் ஒரு பின்நவீனத்துவ பத்திரிகையாளர். இதுவரை சிற்றிதழ் இயக்கம் சார்ந்த அடிப்படைகளை அவர் வெற்றிகரமாக அடித்து தகர்த்து வருகிறார். மிகவும் சீரியஸான முகம் கொண்ட சிற்றிதழ் இயக்கத்தை கேளிக்கையின், கோமாளித்தனத்தின் பெரு வெளியாக மாற்றுவதில் அவரது பங்கு பிரதானமானது. பிரசுர வாய்ப்பைத் தவிர வேறு எந்த நிபந்தனைகளும் இல்லாத நமது எழுத்தாளர்களும் இந்த கோலாகலத்தில் உற்சாகமாக பங்கெடுத்து வருகிறார்கள். ஆனால் தனது பத்திரிகை ஏன் தொடர்ந்து வாசகர்களால் நிராகரிக்கபடுகிறது என்பதை அவரால் கண்டுபிடிக்க முடிவில்லை. காலச்சுவடும், உயிர்மையும் இருப்பதுதான் அதற்குக் காரணம் என்று அவரது குழந்தை உள்ளம் யோசிக்கிறது. இரண்டையும் காலி பண்ணிவிட்டால் அப்புறம் உயிர் எழுத்துதானே. தி.மு.கவும், அ.தி.மு.கவும் இல்லாவிட்டால் ம.தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும் என்று வைகோ யோசிக்கலாம். ஆனால் எல்லோருக்கும் தெரியும் விஜயகாந்த்தான் வருவார் என்று. தமிழ் சிறு பத்திரிகை சூழலில் உயிர் எழுத்து, ம.தி.மு.க என்றால் விஜயகாந்த் யார் என்று உங்களுக்கே தெரியும்.

000

(நேர்காணலின் தொடர்ச்சி அடுத்த அகநாழிகை இதழில் வெளியாகும்)

============================================================================

சமகால இலக்கியப் படைப்புகள், சிறுகதை, கட்டுரை, கவிதைகள் பற்றி அறிய வாசியுங்கள் : அகநாழிகை (தொடர்புக்கு : பொன்.வாசுதேவன் 999 4541 010.

Wednesday, January 6, 2010

கண்டதும் கேட்டதும் & பாத்துக்லாம்ணே…

கடந்த சில வாரங்களில் புத்தக வெளியீட்டு விழா, பதிவர் சங்கமம், மக்கள் கலை இலக்கிய விழா என பல நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். (எழுதுவதற்குதான் நேரமில்லை)

000

அகநாழிகை புத்தக வெளியீட்டு விழா, சென்னை

DSC_0157 அகநாழிகையின் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. உங்கள் அனைவரின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. ஒவ்வொருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றியையும், அன்பையும் பகிர்ந்து கொள்கிறேன். நிகழ்ச்சி நடத்த இடமளித்த வேடியப்பன், எனது அழைப்பினை ஏற்று வந்த சிறப்பு விருந்தினர்கள் ஞாநி, பாஸ்கர்சக்தி, அஜயன்பாலா மற்றும் கௌரவ தோற்றமாக பங்கேற்று சிறப்பித்த சாருநிவேதிதா அனைவருக்கும் என் நன்றி.

000

பதிவர் சங்கமம், ஈரோடு

DSC00505_thumb[1] ஒரு கூட்டம் கட்டுக்கோப்பான ஒழுங்குடன் (அதிகாரத்தின் அன்பான உரையாடலுடன்) எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்திய கூட்டம். சற்றே காலதாமதமாக ஆரம்பித்தாலும் நிகழ்ச்சியை ஆரம்பம் முதல் இறுதிவரை சலிப்பில்லாமல், நடத்தி குறித்த நேரத்தில் முடித்தது சிறப்பு. அதுவும், இடையீடுகளை சமாளித்த விதமும், குறைகளுக்கு பொறுப்பேற்றதாக சொல்லி எல்லோரையும் திருப்திபடுத்திய விதமும் அருமை. இதைச் சாத்தியப்படுத்திய ஆருரன், ஈரோடு கதிர் http://maaruthal.blogspot.com உள்ளிட்ட ஒவ்வொரு நண்பர்களுக்கும் வாழ்த்துகள். ஈரோட்டு கூட்டத்தின் மற்றுமொரு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் விருந்தோம்பல். அன்பான உபசரிப்பு. பொதுவாக, அரிமா, ரோட்டரி சங்கங்கள் நடத்தும் நிகழ்வுகளில் இவ்விருந்தோம்பல் அழகாக நடத்தப்படும். அதையே நினைவு படுத்தியது ஈரோடு சங்கமமும்.

கூட்டத்தில் என்னையும் பேசச் சொன்னார்கள். ‘வலைப்பதிவுகளும், அச்சு ஊடகங்களும்‘ என்ற தலைப்பில் எனது கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். நான் பேசும்போது கேபிள் சங்கரால் எடுக்கப்பட்ட புகைப்படம் சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானதான படமாக இருந்ததால் அதையே வலைத்தளத்தின் முகப்பிலும் வைத்துக் கொண்டேன். திடீரென இவ்வளவு சிகப்பாக ஆகிவிட்டதன் ரகசியம் என்ன என்று என் அன்புத்தோழி கேட்டு கிண்டலடித்தது வேறு விஷயம். எப்படியிருந்தாலும், என்னை அழகாக புகைப்படம் எடுத்த கேபிள் சங்கருக்கு நன்றி. அவர் இப்போதெல்லாம் ‘என்டர் கவிதைகள்‘ எழுதி ‘கேப்‘பில் சங்கர் ஆகி வருகிறார். எனக்கு மிகப்பெரிய போட்டியாக உருவாக வாய்ப்புகள் இருப்பதால் இது மட்டும் எனக்கு பிடிக்கவில்லை.

000

உயிர்மை புத்தக வெளியீட்டு விழா, சென்னை

இந்த ஆண்டு உயிர்மை பதிப்பக புத்தக வெளியீட்டு விழாக்களின் போது ஏதாவது ஒரு பணி காரணமாக கலந்து கொள்ள முடியாமல் இருந்தது. உயிர்மையின் 12 புத்தக வெளியீட்டு விழாவையும் தவற விடக்கூடாது என்று அன்று சென்றிருந்தேன். விழா சந்தோஷமும், சர்ச்சையுமாக சிறப்பாக நடைபெற்றது அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

000

மணல் வீடு மக்கள் கலை இலக்கிய விழா, சேலம்

Copy of DSC00198 ஈரோடு சென்று வந்ததும் அடுத்தவாரமே, ‘மணல் வீடு‘ சிற்றிதழ் நடத்திய ‘மக்கள் கலை இலக்கிய விழா‘ வின் தெருக்கூத்து கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் நான், யாத்ரா, ச.முத்துவேல், மயில்ராவணன் அனைவரும் சென்றிருந்தோம். தெருக்கூத்து, கட்டைக்கூத்து, தோல்பாவைக்கூத்து என கூத்துக் கலைஞர்களை கௌரவப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடந்தது. 50 ஆண்டுகாலமாக தொடர்ந்து தெருக்கூத்தில் நடிப்பதையும், விவசாயக்கூலியாகவுமே வாழ்வைக் கழித்துவிட்ட பலரையும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட எலிமேடு மகாலிங்கம் என்பவரின் மனைவி எடிட்டர் லெனினிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொள்ளும்போது கண்கலங்கியது நம்மையும் வருத்தியது.

கூத்துக் கலைஞர்களில் பெண் கலைஞர்களின் பங்களிப்பும் பதிவு செய்யப்பட வேண்டியது. இவர்களில் பெரும்பாலும் கழனி வேலைக்கு செல்பவர்களாகவும், திருவிழா சமயங்களில் கூத்துகளில் நடிக்க செல்பவர்களாகவும் இருக்கிறார்கள். எடை அதிகமான கூத்து பொம்மைகளை கையிலேந்தி அவர்கள் ஆடுவது அவர்களின் உடற்திறனையும் வெளிப்படுத்தியது. விடியவிடிய முழுவதும் பலவகையான தெருக்கூத்து, பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கூத்துகளில் ராஜா வேடம் போடும் 80 வயதான ஒரு கலைஞர் தனது இரு கைகளையும் கம்பீரமாக குவித்து அவையோருக்கு வணக்கம் சொன்னது எவ்வளவு தாக்கத்தை அப்பாத்திரம் உள்வாங்கியிருக்கிறது என்பதை உணர்த்தியது. எட்டாத கட்டையில் மெட்டுக்கட்டி பாடி, ஆடாத அடவுகள் போட்டு ஆடி, பேசாத சொற்சித்திரங்கள் வனைந்து இறுதி சுவாசம் வரை வாழ்ந்து அறியப்படாமலும், உரிய அங்கீகாரம் இன்றியும் இவர்கள் போனது வருத்தத்திற்குரியது. நிகழ்ச்சியை நடத்திய மணல் வீடு ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் முயற்சி பாராட்டுக்குரியது.

000

‘குரலற்றவனின் குரல்‘ புத்தக வெளியீட்டு விழா

DSC00010 இருவாட்சி பதிப்பகம் வெளியீடாக யாழினி முனுசாமி தொகுத்து வெளிவந்துள்ள ‘குரலற்றவனின் குரல்‘ என்ற தலித் பண்பாட்டு அரசியல் சிறுகதை தொகுப்பினை பேராசிரியர் அ.மார்க்ஸ் வெளியிட நான் பெற்றுக் கொண்டேன். தேவநேயப் பாவாணர் நூலக சிற்றரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது. (படத்தில், இடமிருந்து வலமாக : பதிப்பாளர் பா.உதயக்கண்ணன், பேராசிரியர் அ.மார்க்ஸ், எழுத்தாளர் நந்தா, நான், கவின்கவி, நூல் தொகுப்பாளர் யாழினி முனுசாமி)

000

book fair3 புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது.

சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் நடைபெற்ற 13வது புத்தக கண்காட்சிக்கு முதல் முறையாக நானும் என் அப்பாவும் சென்றது இப்போதும் நினைவிருக்கிறது.

அதற்கு முன்பு அவ்வளவு அதிகமான புத்தகங்களை ஒரே இடத்தில் நூலகத்தில் மட்டுமே பார்த்ததுண்டு. அதிலும் கந்தலான, பழைய நுனி மடிக்கப்பட்டு, முக்கிய வரிகள் அடிக்கோடிடப்பட்டு, நைந்து போயிருந்த பழைய புத்தகங்களை மட்டுமே பார்த்திருந்த எனக்கு சட்டென மனம் விரிந்து படர்ந்தது அந்தக் கணத்திலிருந்துதான் என்பதாக உணர்கிறேன். 1990ல் முதல் முறையாக 13வது புத்தக கண்காட்சிக்கு சென்ற போதை இன்றும் கைவிட முடியாமல், ஆண்டு தவறாமல் தொடர்கிறது.

இந்த ஆண்டு எனக்கு சிறப்பு புத்தக கண்காட்சியும் கூட. 20 ஆண்டுக்குப் பிறகு 33வது புத்தக கண்காட்சியில், இலவச அனுமதிச்சீட்டு மற்றும் வாகன அனுமதிச் சீட்டு பெற்று பதிப்பாளராக நுழைந்திருக்கிறேன். எல்லாம் கடந்து போய்க் கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் கனவாக நினைத்திருந்த வேளையில் சாத்தியப்படுத்த பெரும் ஊக்கமளித்த தோழிக்கு நன்றி என்ற ஒற்றைச் சொல்லையிட்டு என் பிரியத்தை தெரிவித்துவிட முடியாது.

அதேபோல, புத்தகங்கள் வெளியிட முடிவு செய்து கேட்டதும், ஆர்வத்தோடு அளித்த பா.ராஜாராம், என்.விநாயகமுருகன், நர்சிம், லாவண்யா சுந்தரராஜன், டிகேபி காந்தி இவர்களுடைய அன்பும் ஒத்துழைப்பும் முக்கியமானது. ஒரு இசை ஒலிப்பானின் ஒலியைக் கூட்டுவது அல்லது குறைப்பது போல எல்லாவற்றையும் சட்டென தள்ளிவிட்டு முன்னால் வந்து நின்று கொண்டிருக்கிற வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது.

க்ரியா பதிப்பகத்தை தேடி நான், நரசிம்மன் மற்றும் கல்யாணராமன் ஆகிய மூவரும் அண்ணா சாலையிலிருந்து பைலட் திரையரங்கம் கடந்து ஒரு மாடியிருந்த க்ரியா பதிப்பகம் வரை நடுப்பகலில் நடந்தது நன்றாக நினைவிலிருக்கிறது. வாசிப்பின் ஆரம்பச்சுவையைத் தந்த அன்னம், க்ரியா, கணையாழி இவற்றை மறக்க முடியாது. தொடர்ச்சியாக சிற்றிதழ்கள் அதனை வலுவாக்கியது. இப்போது வாசிப்பும், எழுத்தும், பிரசுரமும் மிக எளிமையானதாக ஆகிக் கொண்டு வருகிற சூழ்நிலையில், வரும் ஆண்டுகளில் புத்தகக் கண்காட்சியிலும் எனது பங்களிப்பு இருக்குமென நம்புகிறேன்.

புத்தக கண்காட்சியில் இதுவரை வாங்கியுள்ள புத்தகங்கள் :

  1. அம்பை சிறுகதைகள் - அம்பை
  2. இந்திய ஞானம் : தேடல்கள் புரிதல்கள் – ஜெயமோகன்
  3. இன்றைய காந்தி – ஜெயமோகன்
  4. எழுதும் கலை – ஜெயமோகன்
  5. முறிமருந்து – எஸ்.செந்தில்குமார்
  6. அன்பின் வலியது உயிர் நிழல் – பாதசாரி
  7. பேய்க்கரும்பு – பாதசாரி
  8. உப்பிட்டவரை – ஆ.சிவசுப்ரமணியன்
  9. கோபுரத் தற்கொலைகள் – ஆ.சிவசுப்ரமணியன்
  10. ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும் – ஆ.சிவசுப்ரமணியன்
  11. கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் – ஆ.சிவசுப்ரமணியன்
  12. போரும் வாழ்வும் : ஈழம் காலச்சுவடு பதிவுகள் - கண்ணன்
  13. சிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும் – கண்ணன்
  14. கிளிஞ்சல்கள் பறக்கின்றன – ஜே.மாதவராஜ்
  15. கொல்லிப்பாவை இதழ் தொகுப்பு
  16. குடிபோதை விளைவுகள் தெளிவுகள் – அ.கா.பெருமாள்
  17. அங்கே இப்ப என்ன நேரம் – அ.முத்துலிங்கம்
  18. காவலன் காவான் எனின் – நாஞ்சில் நாடன்
  19. நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று – நாஞ்சில் நாடன்
  20. நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – நாஞ்சில் நாடன்
  21. சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன்
  22. வியப்பளிக்கும் ஆளுமைகள் – வெங்கட்சாமிநாதன்
  23. வெண்ணிலை – சு.வேணுகோபால்
  24. பூமிக்குள் ஓடுகிறது நதி – சு.வேணுகோபால்
  25. களவு போகும் புரவிகள் – சு.வேணுகோபால்
  26. திசையெல்லாம் நெருஞ்சி – சு.வேணுகோபால்
  27. தேவதேவன் கவிதைகள் – தேவதேவன்

இன்னும் வாங்க வேண்டியிருக்கிறது....

000

பாத்துக்லாம்ணே

பதிவர் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஈரோடு செல்வது குறித்து குழப்பமான நிலையிருந்தது. ரயிலா, பேருந்தா என்ற குழப்பம். கடைசியாக சுகமான பயணமாக சீருந்தில் சென்று வந்தோம். அப்போதுதான் அவரை முதலில் சந்தித்தேன். கோபமோ, மகிழ்ச்சியோ, ஏமாற்றமோ முகத்தின் ஒவ்வொரு தசையிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய படியிருந்தார். பேச்சில் ஒரு துள்ளல் எப்போதும் இருக்கும். சிலருக்குதான் அது வாய்க்கும். பெரும்பாலும் எப்போதும் சிரித்த முகத்துடன் பார்ப்பது அரிதான விஷயம். எனக்கெல்லாம் துயரம், வருத்தம் இதை முகம் உடனே காட்டிக் கொடுத்துவிடும். ஆனால், நான் சந்தித்தவரோ கொலைதான... பண்ணிடலாம்னே..., கவிதைதான எழுதிடலாம்ணே.., அப்படியொரு உற்சாகம் எதைப் பேசினாலும். பொதுவாகவே இப்படித்தான் பேசுகிறார் போல. இரண்டு நாலும் பண்ணிடலாம்ணே, சரியாயிடும்ணே, வழிக்கு வந்துடும்ணே இப்படி அநியாயத்துக்கு OPTIMIST ஆக இருக்கிறார் மனுஷன். பழகுவதில் அவ்வளவு இனியவர். இதற்குமேல் சொன்னால் வெற்றுப் புகழ்ச்சி ஆகிவிடும். அதுவும் சிரிக்காமல் காமெடி பண்ணுவதில் கில்லாடி. கொஞ்சல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீரியசாக போட்டுத் தள்ளுவார். மனுஷன் இப்படி கடிக்கிறாரே தவிர, சைவப்பிரியர்.

நேற்று (5.1.10) இரவு தண்டோராவிற்கு ஏதோ ஒரு வேலை ஆகணும். பெரும் பிரச்சனை. கடும் கோபத்தில் இருக்கிறார். அவர் கோபம் எந்த அளவிற்கு தெளிவாக இருக்கும் என்பது நண்பர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். P.M. என்று ஆரம்பிப்பார். கடைசியில் ‘வெண்கலத்துலயிருந்து வெடிச்சு..‘ அப்படிப் போகும். கடுமையாக போனில் கத்தி முடித்து டென்ஷனின் உச்ச கட்டத்தில் இருக்கிறார். என்ன செய்யலாம், எப்படி சமாளிக்கலாம் என்று நான், கேபிள், மயில்ராவணன், சூர்யா எல்லாம் ஆளாளுக்கு குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக யோசித்துக் கொண்டிருக்கிறோம். அப்போது சிரித்துக் கொண்டே இவர் சொல்கிறார் ‘பாத்துக்லாம்ணே‘.

எனக்கு நிலைமையை மீறி சிரிப்பு வந்து விட்டது. அந்த நண்பர் யாரென்று சொல்லி விடுகிறேன். என்னைவிட கொஞ்சம் சிகப்பாக இருக்கும் ‘அப்துல்லா‘ தான் அவர்.

abdulla 000

எல்லா வருடங்களையும் போலவே இந்த வருடமும் அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம், கொஞ்சம் துக்கம், பிரச்சனைகள், பிரிவு, துயரம் என எப்போதும் போல கிடைத்திட எல்லாம் வல்ல மன பகவான் அருள் பாலிப்பானாக.

- பொன்.வாசுதேவன்

மணல் வீடு நிகழ்ச்சிக்கு சேலம் சென்றிருந்த போது எடுக்கப்பட்ட படங்கள்

இரவு நடைபெற்ற கூத்து பொம்மலாட்டம்

DSC00300

DSC00292

எடிட்டர் லெனின் விருது வழங்குகிறார்

DSC00302

DSC00272

 

 

 

 

 

பார்வையாளரான குழந்தைகள்

DSC00263

DSC00251

DSC00261

Copy of DSC00078

Copy of DSC00079

Copy of DSC00085

Copy of DSC00084

Copy of DSC00082

Copy of DSC00083

Copy of DSC00174

Copy of DSC00155

 

 

 

 

 

Copy of DSC00175

Copy of DSC00188

 

 

 

 

 

Copy of DSC00182

Copy of DSC00183

Copy of DSC00154 Copy of DSC00156

Copy of DSC00157

Friday, January 1, 2010

சித்திர பாவனை - சிறுகதை

les5 சுசீலா பேசிக்கொண்டிருந்தாள். உடலை உள்ளுக்குள் சுருட்டியிருக்கும் நத்தை வடிவாயிருந்த அவளது தெறித்த விழிகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் யமுனா. சுசியின் உதடுகள் காற்றடிக்கும் திசை யெல்லாம் சாயும் மழைத்தாரையாய் ஓயாமல் வார்த்தைகளை வீசிக் கொண்டேயிருந்தது. பேச்சின்பால் துளியும் கவனமின்றி, கோப்பை விளிம்புகளைக் கவ்வி நிதானமாக, பிரிய பழச்சாறை உறிஞ்சி அருந்துவதான பாவனையில் யமுனா அவளையே பார்த்தபடி கேட்டுக் கொண்டிருந்தாள்.

சமீபத்தில் தன்னுடைய தாயின் பிறந்த ஊருக்குச் சென்று வந்த கதையைப் பற்றியும், ஒப்பனையற்ற கிராம வாழ்வை இழந்து நகரத்தில் வசிக்க நேர்ந்திருப்பது குறித்த அலட்டலற்ற புலம்பல்களாய் சுசியின் பேச்சோட்டம் போனது. சமீபகாலமாய் சுசியின் பேச்சில் தன்னையிழந்து லயிக்கத் தொடங்கியிருந்தாள் யமுனா. சுசிக்கும் தன்னைப் போலவே யாருமற்ற ஒரு குடும்பப் பின்னணி  யிருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம்.

பேசுவதிலும், பேசுவதைக் கேட்பதிலும்தான் எத்தனையின்பம்.. பேசுவது என்ற ஒன்று இல்லையென்றால் மொழி தோன்றியிருக்காது என்று நினைத்தாள் யமுனா. எல்லோரையும் போலவே யமுனாவிற்கு எப்போதும் இரண்டு முகம் உண்டு. பிடித்ததைச் செய்யும் போது முகக்கரையில் சேரும் சந்தோஷ நுரைகள் கொண்ட முகம். மற்றொன்று, கட்டாயத்திற்காக பிடிக்காத ஒன்றை செய்ய நேர்கையில் நனைந்து இறுகிய துணியைப் போலாகிவிடும் அவள் முகம். இதனாலேயே பல சங்கடங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது அவளுக்கு.

-0-

les8

பணியின் நிமித்தம் அந்த நகருக்குள் நுழைந்த முதல் தினத்தில் அவளுக்கு ஒருவரையும் தெரியாது. சிறு வயதிலிருந்தே தாய்மையை, அணுக்கத்தை அனுபவித்திருக்காத காரணத்தினால், பெண்மை, தாய்மை போன்ற விஷயங்கள் அவளுக்கு ஒவ்வாத விஷயங்களாகி விட்டது. பராமரிப்பின்றி தானாய் செழித்து வளர்ந்த மரங்களின் வளர்ச்சியையொத்தது அவளுடைய இளமைப்பருவம், கல்விக்காலங்களும். ஆழ்கடலில் தனித்து காற்றின் ஓட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் படகைப் போல திசை குறித்த தீர்மானங்களேதுமின்றி வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.

புதிய நகரின் பரபரப்பும் அவளுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆண்கள் மட்டுமே பணி புரிந்த அந்த அலுவலகத்தின் முதல் பெண் பணியாளராக அவள் சேர்ந்திருந்தாள். விசித்திர மிருகமொன்றின் கூண்டுக்குள் அடைத்து விட்டதைப்போல் அவளின் சக பணியாளர்கள் சுதந்திரமிழந்து தவித்தனர். உடைகள் குறித்த கவனமேதுமின்றியும், தோற்றம் குறித்த கவலையின்றியும் இதுவரை அசட்டையாக இருந்த அவர்களுக்கு யமுனாவின் வருகையின் பொருட்டு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. அடிக்கடி அவளைப் பார்த்து, அவள் தங்களைப் பார்க்கிறார்களா என உறுதி செய்து கொள்ளத் துவங்கினார்கள். பொதுவாகவே தாங்கள் மென்மையானவர்கள் கனிவானவர்கள் என்று தோற்றமளிக்கும் விதமாக நடந்து கொண்டதும் ஒரு மன ஆறுதலாக இருந்தது யமுனாவிற்கு.

-0-

les3 அன்றன்றைய தேவைக்காக நீரை குடத்திலிட்டு நிரப்பிக் கொண்டு வருவதான அவள் அப்பாவின் அன்பு, அள்ளிப் பருக துளியும் லாயக்கற்றது என்பதை அவள் சிறு வயதிலேயே அறிந்திருந்தாள். அம்மா என்கிற வஸ்து என்னவென்று அவளும் அவரிடம் கேட்டதில்லை. அது குறித்த கவலையேதும் அவருக்கும் இருந்ததில்லை. சிறு வயதில் இரண்டு பிறவியாக தன்னைக் கொண்டு, தன் சோகத்தை மறக்க களிப்பான யமுனாவின் கனவுகளிலே ஆழ்ந்து தன்னை உற்சாகப்படுத்திக் கொள்வாள்.

பள்ளித்தோழி கொடுத்த ஒரு சிறு புத்தகத்தை வாசித்த பின் இப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாள். அவளுடைய பொழுதுகளை உற்சாகமானதாகவும், உல்லாசிக்க வைப்பதாகவும் ஆக்கிக்கொள்ள அதுவே போதுமானதாக இருந்தது. பெரும்பாலும் எழுத்துக்களுடன் வாசிக்க வேண்டியிருந்த பள்ளிப் புத்தகங்களைப் போலல்லாமல், பக்கங்கள் முழுக்க வண்ணச் சித்திரங்களடங்கிய அப்புத்தகத்தில் எழுத்துக்களின் இடையீடு மிகக்குறைவு என்பதே அவளை ஆசுவாசப் படுத்துவதாயிருந்தது. அச்சித்திரப்புத்தகத்தின் கதையின் நாயகியான சிறுமியின் வழியே யமுனாவின் பிராய வாழ்வின் கிளைகளும் விரியத் தொடங்கியது. வறுமையின் பொருட்டு சோகத்தைப் பொழிந்து கொண்டிருந்த அச்சிறு பெண்ணின் கனவில் தோன்றிய தேவதையொன்று கனவுகளில் அவள் விரும்பியதைப் பெற வரமொன்று அளிக்கிறாள். அச்சிறுமியின் கனவுகளில் தினமொரு சந்தோஷமாய் பல்லாயிரக்கணக்கான உலகங்கள் பூக்கின்றன.

ஒவ்வொரு உலகமும் விவரிக்கப் படாவிட்டாலும், அக்கதைகளின் நூல் விளிம்பைப் பற்றியபடியே யமுனாவின் இரவுலகம் உருவாகத் தொடங்கும். இரவு தளர்ந்து பொழுது விடியும் கணங்கள் எப்போதென்றே தெரியாது. அவ்வளவு மகிழ்ச்சியான நாட்களாயிருந்தது. வழக்கமாக தனியாக அல்லது சில சமயங்களில் வேலைக்கார ஆயாவோடு தூங்கும் பொழுதுகளில், அவளது இரவுகளுக்காகவே காத்திருந்து போர்த்திக் கொள்ளும் அச்சக் கனவுகளும், திடுக்கிட்டு விழித்த பிறகு முன்னிற்கும் தடித்த இருளும் எப்போதும் பயமூட்டியபடியே இருக்கும். சித்திரப்புத்தகத்தின் வாசிப்பிற்குப் பிறகு, இரவுகளை எதிர்பார்த்து கண்களை இறுக மூடி உறங்கச்செல்லும் கணங்களுக்காகவே காத்திருக்கத் தொடங்கினாள் யமுனா. வயதேற, வயதேற பகல் பொழுதுகளிலேயே கண்களைத் திறந்தபடி கனவு காணும் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தாள்.

சித்திரக்கதைகளின் நினைவினூடாக எழுகிற தேவதை வரமளித்த கனவுகளில் லயித்து தன்னை ஈடுபடுத்திக் கொண்ட யமுனாவின் வாழ்க்கை ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக மலர்த்திக் கொண்டது. படிப்பதும், கனவு காண்பதுமே அவளது முக்கிய வேளைகளாயிருந்தது. பனிக்குளிர் விடியல் பொழுதொன்றில் நதியில் இறங்கியதான உணர்வையனுபவித்து, தானும் ஒரு பெண்ணெண உணர்த்தப்பட்ட சில நாட்களுக்கு அவளுக்குள் இந்தப் பழக்கம் மறைந்திருந்தது. அன்றைய பொழுது அடர் தீற்றலான வெம்மைச் செவ்வானத்தினை நீளவாக்கில் கிழித்து அடிவயிற்றில் சுற்றித்திணித்தது போலிருந்தது அவளுக்கு.

-0-

les6

பணியில் சேர்ந்த கொஞ்ச நாளில் தங்கியிருந்த விடுதியின் அறைப் பங்காளியாக வந்து சேர்ந்த சுசியின் நட்பு கிடைத்து சில வாரங்களே ஆகியிருந்தது. சுசிக்கும் யமுனாவிற்கும் பல விஷயங்களில் ஒத்த கருத்திருந்தது. இதையெல்லாம் விட அவர்களை இணைத்த முக்கியமான ஒற்றைப் புள்ளியொன்று உண்டு. யமுனா அந்த தினத்தை மிக நன்றாக நினைவில் பதியச் செய்திருந்தாள். விடுப்புக்கடிதம் எழுதுவதை மனப்பாடம் செய்கிற பள்ளிச் சிறுமியைப்போல அதை அடிக்கடி நினைவு படுத்திக் கொள்வதில், ஒரு சுகமிருந்தது அவளுக்கு.

வார இறுதியின் சனிக்கிழமை பிற்பகல் வேளைகளில் வழக்கமாகச் செல்லும் கடற்கரைப் பகுதியில் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அக்கடற்கரை பகுதி பொதுமக்கள் புழக்கம் மிகக்குறைந்த குப்பத்து குடியிருப்பினை ஒட்டியிருந்தது. நட்சத்திரங்களைப் துகளாக்கி பரப்பியதான மினுமினுக்கும் தோற்றம் தரும், உலர வைக்கப்பட்ட சிறு மீன்களிருக்கும் பகுதிக்கு அருகாமையில், துர்வாசனையின் மணத்தை லேசாக நுகர்ந்தபடியிருக்கக்கூடிய தொலைவில்தான் அவர்களிருவரும் அமர்ந்து பேசுவது வழக்கம்.

வழக்கம் போல இருவருக்கும் பொதுவானதாக வாய்த்திருந்த சின்னஞ்சிறு வயதின் நிராசைகள் குறித்தும், பிரியங்களின் மீதான அவநம்பிக்கை பற்றியும் பேசிக்கொண்டேயிருந்தார்கள். பிரம்மாண்டமாய் தங்கள் முன் படுத்திருந்த கடலிடம் எல்லாவற்றையும் சொல்லி முறையிடுவதில் அவர்களுக்கிருந்த திருப்தி அலாதியானது. ஆண்களை உணர்ந்த கணங்களைக் குறித்த பேச்சை ஆரம்பித்தாள் சுசி. அவளுக்கு அதில் பல அனுபவங்கள் இருந்திருக்கிறது. பேசும் போதெல்லாம், பிரியத்தையும் பிணைப்பையும் எதிர்பார்த்து அணுகி பலமுறை உட்காயங்களோடு விலக நேரிட்ட சம்பவங்கள் அவள் உதடுகளைப் பற்றி தொங்கிய படியேயிருந்தன.

யமுனாவிற்கு அப்படியல்ல. சுயலாபத்திற்கான ஒரு பொருளாகவே ஆண்கள் பெண்களைப் பார்க்கிறார்கள் என்ற உறுதியான கருத்தும், பார்வையும் ஆரம்பத்திலிருந்தே அவளுக்கிருந்தது. சந்தர்ப்பத்தையும், சூழலையும் தனக்கு சாதகமாக்கிக் கொள்வதில் ஆண்களுக்கு நிகர் வேறெவருமில்லை என்ற எண்ணவோட்டத்தை வற்புறுத்தி தனக்குள் நீடிக்கச் செய்திருந்தாள். அதன் பொருட்டு ஆண்களின் மீது பிரியமில்லையே தவிர வெறுப்பும் கிடையாது யமுனாவிற்கு.

ஆனால் வானம் போல வாழ்க்கை எல்லோருக்கும் பொதுவானதாக இருந்து விட வில்லையே. சுசிக்கு வேறு விதமாய் பிரியத்தையும், அவ நம்பிக்கையையும் அறியச் செய்திருந்தது. அப்படியான ஒரு பொழுதில் கடற்கரைப் பேச்சில் அவளது பிரியத்தின் மீதான நம்பிக்கையற்றுப் போன ஒரு சம்பவத்தை சொல்லி முடித்த பின் அந்தப் பக்கமாய் சென்ற பூனையொன்றின் மேல் சுசியின் பார்வை திரும்பியது.

நீடித்த மௌனத்திற்கு பிறகு பேச ஆரம்பித்தவள் சொன்னாள்

les7

“பூனைகளை எனக்கு ஒருபோதும் பிடிக்காது. கள்ளத்தனமும், போலியான உல்லாசங்களும் பூனைகளைப் போன்ற ஆண்களுக்கு எளிதாக கைகூடுவதன் ரகசியம் இதுதான். பூனையுடலின் மென்தோற்றம் அதன் முடிப்பொதிகளுக்குள் பிறாண்டக் காத்திருக்கும் நகங்களை மறைத்து விடுகிறது. பூனைகளின் பயப்பாவனை ஆண்களிடமும் ஒரு வித்தையாக இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். முற்பிறவியில் சபிக்கப்பட்ட ஆண்கள்தான் பூனைகளாகி உலகெங்கும் திரிந்து கொண்டிருக்கின்றனர்“

கேட்டுக் கொண்டேயிருந்த யமுனாவிற்கு, எழுந்து எதிரே கிடந்த கடலில் சென்று ஆழ முழ்கிக் கொண்டிருப்பது போல ஒரு நிம்மதியான நிலையேற்பட்டது. பால்யத்தின் விளிம்புகளில் வெறித்தனமாக ஆரம்பித்த தேடலின் கயிற்று நுனியைப் பற்றி விட்டதைப் போலுணர்ந்தாள். சுசியை அணைத்து தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள். சுசியும் குழைந்து அவளது மடியில் தன்னை கிடத்திக் கொண்டாள். இருவரும் பேசவேயில்லை வெகுநேரம்.

-0-

les2 தாய்மை, தந்தைமைகளின் பின்னால் ஒளிந்திருக்கும் கயமைத்தனம் பற்றி சுசிலா இப்போது பேசிக் கொண்டிருக்கிறாள். எதிரே வருவோரையெல்லாம் வெட்டிச் சாய்த்து போர் புரியும் வீரனின் முகபாவத்துடன், நேர்த்தியாக, சலிப்பேற்படுத்தாமல் பேசிக் கொண்டே யிருந்தாள். அவள் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைக் கூர்மை தாங்கவியலாதது போல மின்சாரம் தடைப்பட்டு இருளில் மிதந்தது அறை. கதவு, ஜன்னல்கள் அடைக்கப்பட்டு, காற்று வெளியேற வைக்கப்பட்டிருந்த சிறு சாளரத்தின் வழியே பயந்து பயந்து வெளிச்சம் உள்ளெட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

இருள் வேறு உலகமாக இருந்தது. அங்கு போலிச் சிரிப்பு தேவையில்லை. புன்னகைக்க வேண்டியதில்லை. செயல்கள் மட்டுமே நிகழும். ஒருவிதத்தில் இருள் சௌகரியம்தான். வெளிச்சமேயற்ற உலகம் என்ற ஒன்றிருந்தால் அங்கு குடியேறி விடலாம் என்ற எண்ணம் தோன்றியது. இடையில், பயம் போர்த்திய தனது இளமைக்கால இரவுகளின் நினைவிலாழ்ந்தாள் யமுனா. சுயசரிதை எழுதி எல்லாவற்றையும் பதிய வேண்டுமென அற்பமாய்த் தோன்றியது.

அறை முழுவதும் இருள் தேங்கியபடியிருக்க மென்மையாகக் கசிந்து கொண்டிருந்த சுசியின் குரலோசை ஆறுதலைப் பரவவிட்டபடியிருந்தது. தன் நினைவிலிருத்தியிருந்த சுசிலாவின் பெருவிழிகளை மனத்திலிருத்தியபடி இருளில் அவளைப் பார்த்தபடியே பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள் யமுனா. மகிழ்ச்சி வெளியில் மயக்கத்தின் பித்துப் பூக்கள் அவளை வேறோர் உலகிற்குள் உலவ விட்டிருந்தது. அணுக முயன்று தோற்றுப்போன சாளரத்து வெளிச்சம் சற்றே மங்கிக் கொண்டிருந்தது. விரல்களில் பரவசத்தை குவித்து பேசிக்கொண்டிருக்கும் சுசியின் தலையைத் தன் புறத்தில் தாழ்த்தி தன் மடியில் படுக்க வைத்து ஆறுதலாய்த் தலையைக் கோதினாள் யமுனா. கழுத்தறுபட்டு காயத்தின் வேதனை நொடிகளில் படபடத்து, உயிரடங்குதலில் நிம்மதியடையும் ஆட்டுக் குட்டியைப் போல அவள் மடியில் படுத்தபடியே பேசிக் கொண்டிருக்கிறாள் சுசீலா.

000

Comments system

Disqus Shortname