Saturday, March 28, 2009

கொல்லிமலை பேய் பார்த்தேன்



கொல்லிமலை என்றாலே ஒரு மர்மமான இடம் என்ற பேச்சு இருக்கிறது. கொல்லிப்பாவை கோவில், சித்தர்கள் வாழ்ந்த குகைகள், மூலிகை வனம், இப்போதும் ஆங்காங்கே கண்ணில் படும் சித்தர்கள், 180 அடி உயரத்திலிருந்து பிரம்மாண்டமாய் விழும் அருவி என புதிரான ஒரு பிரதேசமாகவே நமக்குத் தெரிகிறது கொல்லிமலை.
2004-ம் ஆண்டுதான் முதல் முதலில் கொல்லிமலை போனேன். பிறகு தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வருடத்திற்கு ஒரு முறையாவது போய்விட நேர்கிறது. ஐந்தாவது முறையாக கடந்த பிப்ரவரி 26 முதல் மார்ச் 1 வரை சென்று வந்தேன்.
கொல்லிமலை நாமக்கல்லிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், சேலத்தில் இருந்து ராசிபுரம் வழியாக சுமார் 90 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சதுரகிரி என்ற மற்றொரு பெயரும் கொண்ட கொல்லிமலை 17 மைல் பரப்பளவிற்கு விரிந்து படர்ந்த அடர் மூலிகை காடுகளுடன் தனித்து ஒரு அமானுஷ்யமாக விளங்குகிறது.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்து புலவர்களால் பாடப்பெற்ற சிறப்புடைய கொல்லிமலையில் மிளகு, பலா, அன்னாசி, தேன், வாழை, நெல், கொய்யா, பப்பாளி, பட்டை போன்ற பயிர்கள் பரவலாக எங்கும் செழித்து வளர்ந்து காணக் கிடைக்கிறது. கல்பகாலம் தொட்டு ஏராளமான சித்தர்களும், முனிவர்களும் தொடர்ந்து வாசம் புரிந்து வந்த கொல்லிமலையின் மூலிகை வளம் குறிப்பிடப்பட வேண்டியது. கருநெல்லி, கருநொச்சி, ஜோதிப்புல் உள்ளிட்ட அரிய மூலிகைகள் இங்கு கிடைக்கிறது.
கொல்லிமலையின் புகழுக்கு மற்றுமொரு காரணமாக விளங்கும் ‘கொல்லிப்பாவை‘ பற்றி பல கதைகள் நிலவுகின்றன. அசுரர்கள் தேவர்களை எதிர்த்து போரிட வந்தபோது, அசுரர்களை தடுத்து நிறுத்த தெய்வ தச்சன் ஆகிய மயன் என்பவன், கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காமத்தை ஏற்படுத்தி மயக்கி கொல்லவல்ல அழகிய பாவையின் படிமத்தினை செய்து வைத்தான். தனது அழகினால் மயக்கி அசுரர்களை கொன்று வந்த அப்பாவை ‘கொல்லிப்பாவை‘ என பெயரிட்டு அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்களில் கொல்லிப்பாவை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளது.
கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி கொல்லிமலையையும் அதனை சூழ்ந்திருந்த நிலப்பரப்புகளையும் அரசாண்டு வந்திருக்கிறான்.
சரி, கொல்லிமலைக்கு போன கதையைப் பார்ப்போம். நாமக்கல் தாண்டி நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி என்று சென்று வாகனம் மலையில் ஏற ஆரம்பித்தது. ஐந்து நிமிடங்களுக்கொரு கொண்டை ஊசி வளைவு. மொத்தம் 72 கொண்டை ஊசி வளைவுகள். நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மொத்தமும் பரநது விரிந்து அருமையாக இயற்கை சூழலில் காட்சியளிக்கிறது. மலையில் வாகனம் பயணிக்கும்போதே நம்மை குளிர் போர்த்தத் தொடங்கி விடுகிறது. கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 1219 மீட்டர் உயரத்தில் உள்ளது. வழியில் எங்கும் ஊர்கள் கிடையாது. மலை அடிவாரத்தில் தொடங்கினால் கொல்லிமலைக்கு 3 கி.மீ. தொலைவில் வரும் சோளக்காடு என்ற ஊர் வருகிறது. அது சிறிய ஊர் என்றாலும் இங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வார சந்தை நடக்கிறது.
சோளக்காட்டினை அடுத்து வரும் வளப்பூர் என்ற பகுதிதான் கொல்லிமலையின் நடுவாந்திரமான பகுதி என்பதால் இங்கு அரசு தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் வருபவர்கள் நாமக்கல் அல்லது சேலத்திலிருந்து பயணம் செய்தால் வளப்பூர் வந்து சேரலாம். இங்கு தனியார் தங்கும் விடுதிகள் மிகக்குறைவு. நல்லதம்பி ரிசார்ட் மற்றும் பி.ஏ. கெஸ்ட் ஹவுஸ் என்ற இரண்டு தனியார் விடுதிகள் மட்டுமே உள்ளது. படப்பிடிப்புக்கு வரும் குழுவினர் இங்குதான் தங்குகிறார்கள். நானும் நண்பர்களும் பி.ஏ. கெஸ்ட் ஹவுசில் தங்கினோம்.
சீக்குப்பாறை, தற்கொலை முனை, அரசு மூலிகைப் பண்ணை, அறப்பளிஸ்வரர் ஆலயம், பஞ்சநதி எனும் அய்யாறு அருவி, கொல்லிப்பாவை கோயில், சித்தர் குகைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் உள்ளது. நம்மிடம் வாகன வசதி இருந்தால் மட்டுமே எல்லா இடத்தையும் சுற்றிப்பார்க்க முடியும். இங்கு வாகன வசதி எதுவும் கிடையாது. கொல்லிப்பாவை கோயில் இருக்கும் இடம் உண்மையிலேயே அச்சம் தருவதாக இருக்கிறது. அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் இந்த சிறிய கோவிலுக்கு பார்வையாளர் அதிகம்தான். யாருடனும் பேசாமல் சடாமுடியுடன் சுற்றி வரும் சிலரை இங்கு பார்க்க முடிகிறது. யாரும் பிச்சை கேட்பதில்லை. ஆனால் அறப்பளிஸ்வரர் கோவில் பகுதியில் அதே சடாமுடி தோற்றத்துடன் பிச்சை கேட்பவர்கள் இருக்கிறார்கள்.
சீக்குப்பாறை மற்றும் தற்கொலை முனை இரண்டும் அருமையான ‘நோக்கு முனை‘ மலையின் பெரும்பான்மை பகுதியின் இயற்கை அழகு நம்மை சில்லென்ற காற்றுடன் ஆனந்தப்படுத்துகிறது. அருகாமையில் உள்ள அரசு மூலிகைப் பண்ணையில் அதிகம் மூலிகைச் செடிகள் இல்லையென்றாலும் அரிய மூலிகை வகைகள் உள்ளது.
கொல்லிமலையில் என்னை மிகவும் கவர்ந்த இடம் பஞ்சநதி எனப்படும் அய்யாறு அருவிதான். அறப்பளிஸ்வரர் கோயில் அருகே ‘இதெல்லாம் எனக்கு சாதாரணம்‘ என்ற எண்ணத்துடன் உற்சாகமாக இறங்க… இறங்க… 150 படிகளுக்குள் மூச்சுவாங்கி கால் வலியெடுக்கிறது. ஒரு படிக்கும் மற்றொரு படிக்கும் சுமார் 1 ½ அடி உயரம் இருக்கிறது. யாரோ பின்னாலிருந்து தள்ளுவது போல களைத்துப் போய் மெதுவாக 950 படிகள் கீழே இறங்கிப் போனால் ‘ஹோ‘வென பெரும் சப்தத்துடன் 180 அடி உயரத்திலிருந்து விழுகிறது அருவி. ஆழ்ந்த தனிமை, அதிக கூட்டமில்லாமல் நம் விருப்பம் போல நேரமெடுத்துக் கொண்டு அருவியில் நனைந்து மகிழலாம். முதுகில் யாரோ அடிப்பது போல சுளிரென்று அருவி நம் மீது வந்து விழுகிறது. அருவியில் குளித்ததும் இறங்கி வந்த களைப்பெல்லாம் போய்விடுகிறது. ஆனால் மறுபடி படியேற ஆரம்பிக்கும் போது அதே கஷ்டம். எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் கால் வலிக்கவில்லை என்று சொல்லாதவர்களே இல்லை. கஷ்டப்பட்டு படியேறி மேலே வந்ததும் கொல்லிமலையின் சிறப்பான ‘முடவாட்டு கால்‘ சூப் குடித்ததும் வலி குறைந்தது போல உணர்வு ஏற்படுகிறது, இரண்டு நாட்களுக்காவது கால் வலி நீடிக்கிறது. ஆனால் உடல் பாரம் குறைந்து லேசாகிப் போன்றதொரு உணர்வு நம்மை ஆட்கொள்கிறது. (இதைத்தான் ‘ஆவி‘ ‘பேய்‘ என்கிறார்களோ...?)
‘முடவாட்டு கால்‘ என்பது கொல்லிமலை பாறைகளுக்கு இடையில் விளையும் ஒரு கிழங்கு வகை ஆகும். பார்ப்பதற்கு ஆட்டின் கால்களை போலவே இருக்கும் இந்த கிழங்கை நீரிலிட்டு வேக வைத்து, மிளகு கலந்து குடித்தால் ஆட்டு கால் சூப் குடிப்பது போல அதே மணத்துடன் இருக்கிறது. மூட்டு சம்பந்தமான உபாதைகளுக்கு இது மிகவும் சிறந்த மூலிகை மருந்தாக கூறப்படுகிறது. அருகில் உள்ள அறப்பளிஸ்வரர் கோயில 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.பி. 7-ம் நூற்றாண்டிலேயே தேவாரப் பாடல்களில் பாடப்பட்ட பெருமையுடையது. ‘அறைப்பள்ளி‘ ‘அறப்பளி‘ என மருவியுள்ளதாக தெரிகிறது.
கொல்லிமலைக்கு செல்பவர்கள் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள் (எனக்கு தெரிந்தவரை)
பி.எஸ்.என்.எல். தவிர எந்த அலைபேசியும் இங்கு இங்கு ‘டவர்‘ கிடைக்காது.
பஞ்சநதி அருவிக்கு இறங்கிச் செல்வதற்கு முன்பாக குடிக்க தண்ணீர், குளுகோஸ், குளிர்பானம், உணவுப் பொருட்கள் கொண்டு செல்வது அவசியம். அந்த ஆழ்பள்ளத்தாக்கில் எதுவுமே கிடைக்காது.
அருவிக்கு செல்லும்போது வழியில் நிறைய குகைகள் உள்ளது. அங்கெல்லாம் போக முயற்சிக்காமல் இருப்பது நலம். தெரியாமல் ஒரு குகைக்குள் போக முயற்சித்து வவ்வால் வந்து முகத்தில் மோதி பயந்ததுதான் மிச்சம்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் போகாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் மெதுவாக 20 படிகள் இறங்கி சிறிது அமர்ந்து ஓய்வெடுத்தபின் இறங்கலாம்.
ரிசார்ட் இரண்டிலும் உணவு வசதி உள்ளது. வேறெங்கும் சுகாதாரமான உணவு கிடைக்கவில்லை. அசைவப் பிரியர்கள் கவனத்திற்கு : இங்கு கிடைக்கிற ஆட்டிறைச்சியும், நாட்டு கோழி இறைச்சியும் மூலிகை தழைகளை உண்பதால் மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் தங்கும் விடுதியில் கூறினால் உங்களுக்கு வேண்டிய உணவை அவர்கள் சுவையாக தயாரித்து தருகிறார்கள்.
அறை வாடகை 300 முதல் 2000 வரை உள்ளது. ஆறு பேர் தங்கும் விஐபி குடில்கள், இருவர் மட்டும் தங்கும் தேன்நிலவு குடில்கள் என தேவைக்கேற்ப உள்ளது.
மிளகு விலை குறைவாக உள்ளது. இங்கிருக்கும் அரசு கூட்டுறவு சங்கத்தில் மிளகு, மலைத்தேன் இரண்டும் தரமானதாக கிடைக்கிறது. பட்டை மரம் எங்கு பார்த்தாலும் இருக்கிறது. நீங்களே பறித்துக் கொள்ளலாம்.
கூடுமான வரை சொந்த வாகனம் எடுத்துச் செல்வது, கொல்லிமலையின் முழு அழகையும், கண்டு ரசிக்க உதவியாக இருக்கும்.
எல்லாவற்றையும் விட முக்கியமான குறிப்பு கொல்லிமலையில் மர்ம பிரதேசங்கள் நிறைய இருக்கிறது. ஏற்கனவே வாழ்ந்த சித்தர்களின் வசிப்பிடங்கள் அவை என கூறப்படுகிறது. மற்றபடி இங்கு பேய், அமானுஷ்ய நடமாட்டம் என்று எதுவும் இல்லை. (நீங்கள் உங்களோடு கூட்டிப் போனால்தான் உண்டு)
சிறுவர்களுக்கான விளையாட்டு இடங்கள், பொழுதுபோக்கு எதுவும் இங்கு கிடையாது. இயற்கை விரும்பிகளுக்கு இனிய, அமைதியான இடம் கொல்லிமலை.
முக்கியமான குறிப்பு : தட்டச்சிடும்போது தவறாகி விட்டது, தலைப்பை மாற்றி படிக்கவும். சரியான தலைப்பு :
“கொல்லிமலை போய் பார்த்தேன்“
- பொன். வாசுதேவன்

ஆசையெனும் துன்பம்

ஆசையே இல்லாதவர்கள் யாராவது இருக்கிறீர்களா...?

துறவிக்குக்கூட முற்றும் துறந்து தன்னைக் கடந்த நிலையை அடைய வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஆசைகளற்று இருப்பது கடினம். இதுதான் இயல்பு.

‘ஆசையே துன்பத்திற்கு காரணம்‘

எப்படி இது உண்மையாகிறது...? ஆசைகளற்ற பிறப்பு இருக்க முடியுமா ? மனிதனாகட்டும் அல்லது விலங்குகளாகட்டும், ஆசையே இல்லாமலிருப்பது சாத்தியமா ? இவ்வாறு பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன.

ஆசையென்பது என்ன...?

ஏதாவது ஒன்றை அடைய வேண்டுமென்ற பற்றாக இருக்கலாம். புலன்களுக்கு விருப்பமான விஷயங்களும் அவற்றின் தொடர்புகளும், எண்ணமும் ஆசையைத் தோற்றுவிக்கின்றன.

“அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா“

ஆசையைப் பற்றி அழகாகச் சொல்கிறார் திருவள்ளுவர்.

ஆசைக்கு அஞ்சி வாழ்வதுதான் வாழ்வு. ஏனென்றால் ஒருவனை வஞ்சிப்பது ஆசைதான்.

ஆசை ஒழியும் இடத்தில்தான் அறிவு வளர்கிறது. ஆசையை ஒழிப்பதென்றால் எப்படி ? நல்ல சிந்தனையோடு அன்பாகப் பேசி நடந்துகொளள் வேண்டும் என்ற விருப்பமும் ஆசைதான். சுமையற்றும் சிக்கலற்றும் வாழ்வை நடத்த நியாயமான ஆசைகள் ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.

ஆசையை அடியோடு ஒழிப்பது இயலாத செயல். அதற்குத் தேவையும் இல்லை. ஆசையென்பது ஓர் எண்ணம்... மனதின் இயக்க நிலையைக் குறிக்கிறது. எண்ணங்களற்று மனம் எப்போதும் சும்மா இருப்பதில்லை. எழுதும் போது நீங்கள் எழுதுவதைச் சிந்திக்கிறீர்கள். பேசும்போது பேசுவதை எண்ணுகிறீர்கள். இந்த எண்ணங்களே உங்களை இயக்கும் கிரியா ஊக்கிகள்.

ஆசை - துன்பம் இரண்டுமே ஒன்றுதான். ஆசையென்பது மனத்திற்கு ஏற்படும் ஓர் உணர்வு நிலை. அதே போலத்தான் துன்பமும். துன்பத்தை தவிர்க்க நாம் நினைக்கலாம். ஆசையை எப்படி விலக்க முடியும்...?

ஆசை மனத்தில் எழும் போதே அதற்கான காரணத்தை கண்டறியுங்கள். உங்களின் வாழ்க்கைச் சூழ்நிலை, வாய்ப்பு, வசதிகள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள சாதகமாக உள்ளனவா எனறு அறிந்து, அதன் பிறகே செயல்படுத்த முயல வேண்டும். எல்லாம் சரியாக இருந்தாலும் ஆசையின் பலன் நிலையானதா என்ற கேள்வியை எழுப்பி விளைவுகளைக் குறித்து யோசிக்க வேண்டும்.

ஆசைகளில்லா இதயமே இல்லை. ஆசை அறும் இடம் மரணம்தான்.

தேவையைக் கொண்டு எழுந்த ஆசை, தேவை நிறைவோடு நின்றுவிட வேண்டும். பசி, தாகம் முதலிய இயற்கை துன்பத்தைப் போக்கிக் கொள்ள எழுந்த ஆசை, துன்பத்தைப் போக்கிக் கொள்வதோடு நின்றாக வேண்டும்.

வளர்கின்ற சூழல், சமூகத்தில் உங்கள் வாழ் மதிப்பு, நமது இலட்சியங்கள் இவற்றைப் பொறுத்து அமைகிற ஆசைதான் நிலையானது.

13-ஆம் நூற்றாண்டில் சொல்லப்பட்ட ஒரு ஸென் கதையை கேளுங்கள்.

பார்வையற்ற ஒருவன் தன் நண்பனைப் பார்க்க வந்திருந்தான். அவன் வீட்டிற்கு திரும்பும் போது இருட்டத் தொடங்கியதால் அவனது நண்பன் மூங்கில் விளக்கை கொடுத்தான். (ஜப்பானில் ஆதிகாலத்தில் மூங்கிலால் பெட்டி போன்று செய்து அதில் எல்லா பக்கங்களிலும் காகிதத்தை ஒட்டி ஏற்றிய மெழுகுவர்த்தியை உள்ளே வைத்து விளக்காக பயன்படுத்தினார்கள்.)

“எதற்கு விளக்கு...? இருளும் ஒளியும் எனக்கு ஒன்றுதானே...?“ என்றான் பார்வையற்றவன்.

“நீ வீட்டிற்கு திரும்ப விளக்கு அவசியமில்லை. ஆனால் மற்றவர்கள் உன் மேல் மோதிவிடாமலிருக்க விளக்கு தேவைப்படுமல்லவா..“ என்றான் நண்பன்.

‘அதுவும் சரி‘ என்று நண்பன் கொடுத்த விளக்குடன் கிளம்பினான் பார்வையற்றவன்.

பாதி தூரத்தை கடந்து சென்று கொண்டிருக்கும்போது, எதிரே வந்த ஒருவனுடன் மோதிக் கொண்டான்.

“என் கையிலிருக்கும் விளக்கு வெளிச்சம் உன் கண்ணிற்கு தெரியவில்லையா... பார்த்து வரக்கூடாது“ என்றான் கோபமாக.

“மெழுகுவர்த்தி அணைந்திருக்கிறது, நண்பனே“ என்றான் எதிரே வந்தவன்.

- - -

- பொன்.வாசுதேவன் -

Sunday, March 22, 2009

யமுனாவின் மனநோய்

யமுனாவின் மனநோய் - சிறுகதை

யமுனாவை இந்த வாரத்திற்குள்ளாக நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அறையிலிருந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பார்வை எதன் மீதும் பதியவில்லை. யோசனையிலேயே புறக்காட்சிகளை மறந்துவிடுகிற பழக்கம் அவனுக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.

யமுனாவைப் பற்றித்தான் நினைவெல்லாம். சமீப காலமாகவே இன்னதென்று உணர முடியாத மாற்றம் அவளிடம் தெரிகிறது. எப்போதும் கவலையும் சோர்வும் சூழ்ந்த முகமாகவே காட்சி தருகிறாள். கல்யாணமான புதிதில் இப்படியில்லை. சிரிப்பும் சந்தோஷமுமாகத்தான் நேரம் கடந்தது. அதிலும், அவள் ஒருவனைக் காதலித்த விஷயத்திருந்து, பேருந்து நெருக்கத்தில் இடுப்பைத் தடவியவனைப் பற்றியெல்லாம் கூட வெளிப்படையாக சொன்னவிதம் அவனை மிகவும் கவர்ந்திருந்தது.

அவனுக்கும் காதலித்த அனுபவங்கள் உண்டு. மகேஸ்வரி, வானதி, கலா மற்றும் சத்யா என நான்கு பேரை, வெவ்வேறு வயதில் வெவ்வேறு சூழ்நிலைகளில் காதலித்திருக்கிறான் என்றாலும், யாரைப் பற்றியும் யமுனாவிடம் சொல்லவில்லை.

‘நீதான் நான் தொட்ட முதல் பெண்‘ என்று முதலிரவன்று ரொம்பவும் சாதாரணமாகச் சொன்னதை அவளும் நம்பி விட்டாள். அவனுக்கு இயல்பாகவே, பொய் சொன்னாலும் பிறர் நம்பி விடும்படி சொல்லக்கூடிய திறன் வாய்த்திருந்தது. மேலும், பெண்மை கலந்த அழகான அவன் முகத்தைப் பார்க்கிற எவருக்குமே ‘இவன் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும்‘ என்றொரு நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.

யமுனா தனது காதலைப் பற்றி சொன்னபோது முதலில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. முதலிரவன்றே ‘நான் ஏற்கனவே ஒருவனை காதலித்தேன்‘ என்று சொல்கிற பெண்களை சினிமாவில் மட்டுமே பார்த்துப் பழக்கம். பிறகு இவ்வளவு துணிச்சலா... என்று கோபம் வந்தாலும், அவள் கொஞ்சம் அழகாக வேறு இருந்ததால் கோபத்தையடக்கி ‘இதிலென்ன இருக்கு... பரவாயில்லை‘ என்று சொல்லி சமாளித்தான். கல்யாணமெல்லாம் முடிந்து முதலிரவு வரை வந்து விட்ட பிறகு இனி எதுவும் சொல்லக்கூடாது என்று தீர்மானித்தான். ஐந்து மாதங்கள் போனதே தெரியவில்லை. விருந்து, வெளியூர், சினிமா, ஊர் சுற்றல் என பொழுது ஓடியது.

எதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் மார்பு வரை உருவம் தெரிந்தது. ‘நான் ஏன் இப்படி இருக்கிறேன்...?‘ தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்குள் கேள்வியெழுந்தது. மனதிற்குள் நினைத்திருந்தாலும் பேசியது போல உதடுகள் சப்தமின்றி அசைந்தன.

ஆமாம். யமுனாதான் காரணம். எப்போதும் கலகலப்பாக இருந்த அவள் சில நாட்களாகவே குளிரில் உறைந்த நீராக செயலற்று, ஜீவனற்று இருப்பதுதான் தன்னையும் பாதித்திருக்கிறது என்று அவன் நினைத்துக் கொண்டான்.

யமுனாவின் மனதில் ஆழ்ந்த உள்ளுணர்விற்கும், புற உலகிற்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதோ என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அவனைப் பார்க்கும் போதெல்லாம் தயங்கித் தயங்கி பேசுகிறாள். துணியை அலசிப் பிழிவதைப் போல் தொடர்ச்சியாக வழியும் அவள் பேச்சில் எப்போதுமே அவனுக்கு ஒரு மயக்கம் உண்டு.

இப்போதுகூட, கோயிலுக்குப் போயிருக்கும் அவள் உடன் இல்லாத இந்த நேரத்தின் வெறுமை மனதை கனக்கச் செய்கிறது. வெளியே பார்த்தான்.

வெட்ட வெளியில் வட்டமிட்டது போன்ற வடிவத்தில் யாருமே விளையாடாமல் வெறுமையாய் காட்சியளித்தது தூரத்து மைதானம். சுற்றுச்சுவரைத் தாண்டி மைதானத்திற்குள் எட்டிப் பார்ப்பது போல் வளைந்து நின்றிருந்தது ஒரு தென்னை மரம். தென்னங்கீற்றின் இடைவெளிகளுக்குள்ளிருந்து கசிந்த சூரிய ஒளி கண் கூசச் செய்தது.

யமுனாவிற்கும் இயற்கையை ரசிப்பது ரொம்பப் பிடிக்கும். அவனைப் போலவே படிப்பது, எழுதுவது, வரைவது என எல்லாவற்றிலும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. அவனுக்குத் தெரியாமல் பத்திரிகைக்கு அனுப்பிய அவளது கவிதையொன்று கூட பிரசுரமாகியிருந்தது. நேர்த்தியான கவிதை. அவனுக்கு கூட அது மாதிரியான நுட்பம் கைவரப்பெறவில்லை.

சொல்லாமல் கவிதையை பிரசுரத்திற்கு அனுப்பியதில் அவனுக்கு வருத்தம்தான் என்றாலும், நண்பர்களிடையே தன் மனைவியின் கவிதையைப் பற்றி சிலாகித்துப் பேசினான், நண்பர்கள் அனைவருமே அவளது கவிதையைப் பற்றி, அதில் தேங்கிக்கிடந்த அழகியல் உணர்வுகளை உன்னதங்களாய்ப் புகழ்ந்தனர். அவனுக்கும் பெருமையாக இருந்தது.

குவிந்த நிழலொன்று அறைக்குள் நீண்டது. நிமிர்ந்து பார்த்தான். யமுனாதான். கதவைத் திறந்த சப்தம் கூட எழவில்லை.

“வா... யமுனா, கோவில்ல நிறைய கூட்டமா...?“

“இல்லே, குறைச்சலாதான் இருந்தது. இந்தாங்க“

உள்ளங்கையில் வைத்திருந்த திருநீற்றையும் குங்குமத்தையும் கலந்து நீட்டினாள். திருநீற்றுடன் கலந்து இயல்பான ஆழ்ந்த சிகப்பு நிறத்தை இழந்திருந்தது குங்குமம். அதையே சிறிது நேரம் பார்த்தான். பிறகு விரலால் தொட்டு உதிர்த் நெற்றியிலும் கழுத்திலும் தடவினான். கைகளில் மீதமிருந்ததை அவன் நெஞ்சிலும் கைகளிலும் தடவினாள் யமுனா. எப்போதும் அவள் இப்படிச் செய்வது வழக்கம். ஒருமுறை காரணம் கேட்ட போது ‘கை, கால்களை நல்லா வைப்பா... கடவுளே‘ என்று சொல்லி அவள் அம்மா சிறுவயதிலிருந்தே தடவி விட்டு வந்ததால் தனக்கும் அதே பழக்கமாகி விட்டது என்று சொன்னாள்.

“ஏன் இப்போதெல்லாம் சரியா பேசறதேயில்ல“

“நீங்கதான எப்பவும் அமைதியா இருக்கீங்க. என் மேல ஏதாவது கோபமிருந்தா சொல்லணும்“

அவனுக்கு சோர்வாக இருந்தது. என்ன இவள்... ஏன் ஒரு மாதிரியா இருக்கேன்னு கேட்டா நான் கோபமாக இருப்பதாக சொல்கிறாளே... சிறிது நேரம் பேச்சேதுமின்றி கழிந்தது.

“நமக்குள்ள ஏதோ ஒரு இடைவெளி ஏற்பட்டுடுச்சுன்னு நினைக்கிறேன். உன்னோட மாறுதலுக்கு அதுதான் காரணமா இருக்கணும். நானே உன்னை மனநல மருத்துவரிடம் அழைச்சுட்டு போகலாமான்னு யோசிச்சுகிட்டிருந்தேன்“ மென்மையாக அதேசமயம் அழுத்தமான முடிவாகச் சொன்னான் அவன்.

யமுனா பதிலேதும் சொல்லவில்லை. இருவருக்கிடையேயான நெருக்கத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது உண்மைதான் என்பது போல அமைதியாக இருந்தாள். பிறகு வழக்கம்போல தனது ஆழ்ந்த பார்வையை அவன் மேல் நிறைத்து, “சரி போகலாம், அதுகூட நல்லதாகத்தான் படுகிறது“ என்றாள்.

கொஞ்ச நேரம் கழித்து “என் பிஃரண்டோட கணவர் கூட சைக்ரியாட்ரிஸ்ட்தான். நான் வேணும்னா அவளுக்கு போன் பண்ணி நாளைககு வர்றதா சொல்லட்டுமா“ அனுமதியை எதிர்பார்க்கிற பார்வையோடு கேட்டாள் அவள்.

“சரி போன் பண்ணி சொல்லிடு. காலையில பத்து மணிக்கு

இதுவரை தன்னை அழுத்திக் கொண்டிருந்த உணர்வுகளின் பாரம் குறைந்தது போல இருந்தது அவனுக்கு. இரவு படுத்த பின்னும் அவனுக்கு யோசனையாகவே இருந்தது. மனநல மருத்துவரிடம் போவதாக முடிவாகி விட்டது. ஆனால் அவரிடம் சென்றும் பலனேதும் இல்லையென்றால்... தூக்கமே வரவில்லை. யமுனாவை திரும்பிப்பார்த்தான்.

கால்களை மடக்கி பின்புறத்தோடு லேசாக அழுந்தியவண்ணம் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நிரம்பி வழியத்தயாரான வெண்ணை போல அவளது இடுப்புச் சதை சேலை விலகலில் புலப்பட்டது. பார்ப்பதற்குக் கிளர்ச்சியூட்டிய அக்காட்சி அவனது பாலுணர்வைத் தூண்டியது. பெரும்பாலும் இதுபோன்ற சமயங்களில் அவள் விழித்திருந்தால் மட்டுமே மேற்கொண்டு அவனது அசைவுகள் செயல்படும். இப்போது அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அதுவுமில்லாமல் மனதளவில் சந்தோஷமான நிலையில் அவள் இல்லாததும் அவனை யோசிக்கச் செய்தது.

இரவு கனவில் தென்னை மட்டையொன்றை தலைகீழாகத் திருப்பி கீற்றுகளை கத்தியால்உதிர்த்துக் கொண்டிருந்தான் யாரோ ஒருவன். கவனச் சிதறலில் மட்டையைப் பிடித்திருந்த ஒரு கையின் ஐந்து விரல்களும் துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்தது. ரத்தம் வழியத் துடித்து முகத்தருகே கையை கொண்டு சென்ற போதுதான் கவனித்தான் அவனது முகம் போல இருந்தததை. அவன்தான் அது. அதற்குள் விழிப்பு வந்து விட்டது. இருளில் கடிகாரம் இருந்த திசைநோக்கித் திரும்பினான். மணி மூன்றரை காட்டியது.

இரவு சரியாக தூக்கமில்லாததால் காலையில் எழுந்ததும் கண்கள் எரிச்சலாக இருந்தது. யமுனா சமைப்பதற்கு அடையாளமாக தாளிப்பு வாசனை படுக்கை அறையெங்கும் பரவியிருந்தது. குளித்துவிட்டு வந்ததும்., உணவு மேசையில் உணவைத் தயாராக எடுத்து வைத்திருந்தாள் யமுனா. எப்போதும் இருவரும் ஒன்றாகத்தான் சாப்பிடுவது வழக்கம். யமுனாவும் வந்து அமர்ந்தாள்.

“சாப்பிட்ட பத்து மணிக்கு மேல டாக்டர் கிட்டே போகலாமா..?“

“போன் பண்ணி சொல்லியிருக்கேன். பதினொரு மணிக்கு வரச் சொன்னார்“

ஆட்டோ பிடித்து அரை மணி நேரம் முன்பாகவே போய்விட்டோம். அவர்களுக்கு முன்பாகவே ஒருவர் கிளினிக் வெளியே அமர்ந்திருந்தார். வழக்கமாக கிளினிக்களில் காணப்படும் டோக்கன் தரகிற அட்டெண்டர் யாரும் இல்லை. வெளியே அமர்ந்திருப்பவரும் டாக்டரைப் பார்க்க வந்தவராகத்தான் இருக்கும். அவனும் யமுனாவும் உள்ளே நுழைந்தார்கள். ஏற்கனவே அமர்ந்திருந்தவர் திரும்பி யமுனாவைப் பார்த்தார். அவள் மீதேறிய பார்வை அத்தோடு இறங்கவே இல்லை. அவனுக்கு எரிச்சலாக இருந்தது. அவள் மட்டும்தான் அந்த அறைக்குள் நுழைந்த்து போல, பெயரளவுக்கு கூட அவன் மேல் பார்வையைத் திருப்பவில்லை அவர். அவரது பிரச்சனை பெண்களைப் பற்றியதாகத்தான் இருக்குமென்று நினைத்துக் கொண்டான் அவன்.

அமர்ந்த சிறிது நேரத்தில் உள்ளேயிருந்து வயதான ஒருவர் வெளியே வந்தார். இவருக்கு சைக்ரியாட்ரிஸ்ட்டை பார்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கும் என்று யோசித்துப் பார்த்தான் அவன்.

தலையைக் கவிழ்ந்து கண்களை மூடியடியிருந்தாள் யமுனா. எதுவும் பேசவில்லை.

மணியொலி கேட்டது. எதிரே அமர்ந்திருப்பவர் அடுத்து உள்ளே போவார் என்று நினைத்தான் அவன். அவர் யமுனா மேலிருந்த பார்வையை இன்னும் நகர்த்தவில்லை. மறுபடியும் மணியொலி கேட்டது. அவர் போவதாக தெரியவில்லை. யமுனாவும் அவனும் எழுந்து உள்ளே சென்றார்கள். கூடவே அவர் பார்வையும் தொடர்ந்தது.

நீளமான அல்லது குறுந்தாடியுடன் கருமை சூழ்ந்த விழிகள் உள்ளிடுங்கியிருக்கும் மனநல மருத்துவரை கற்பனை செய்திருந்த அவனுக்கு உள்ளே நுழைந்ததும், விற்பனை பிரதிநிதி போன்று பளிச்சென்று மருத்துவர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. சிரித்த முகத்தோடு அமரச் சொன்னார்.

அவன் யமுனாவைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததும், “அதெல்லாம் தேவையில்லை. உங்க இரண்டு பேரோட பேசினால் மட்டும் போதும். பிரச்சனை என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்“ என்றார் மருத்துவர்.

அவனுக்கு நம்பிக்கையேற்படவில்லை. எப்படி பேசுவதை மட்டுமே கவனித்து பிரச்சனையை உணர முடியும். யமுனாவைப் பற்றி எதுவும் சொல்லவிடாமல் செய்தது அவனுக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தது.

தன்னிடம் கேட்கப்பட்டதெற்கெல்லாம் உணர்ச்சிகளின் உந்துதல் ஏதுமின்றி கவனமாக பதில் பேசினான் அவன். யமுனாவும் அவர் கேட்டதற்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளிடம்தான் மருத்துவர் நிறையப் பேசினார். டாக்டரின் இந்தச் செயல் அவனுக்குள் கொஞ்சம் நம்பிக்கையூட்டியது. எப்படியும் பிரச்சனையைத் தீர்த்து விடுவார். அவனுக்கு வேண்டியதெல்லாம் பழைய கலகலப்பான யமுனா. அரை மணி நேரத்திற்கும் மேலாக இருவரிடமும் பேசினார் மருத்துவர்.

‘நன்றி‘ சொல்லிவிட்டு மருந்துச் சீட்டில் ஏதோ எழுதத் தொடங்கினார். மனநல மருத்துவத்திற்கு கூட மருந்துகள் சாப்பிட வேண்டியுள்ளது பற்றி அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனது முகமாற்றத்தை உணர்ந்தவராக “பொதுவான மருந்துகள்தான்“ என்றார் மருத்துவர்.

பணம் செலுத்தி மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு விடை பெற்று வெளியே வந்தார்கள். வெளியே அமர்ந்திருந்தவர் இன்னும் அங்கேயே இருந்தார். மறுபடியும் அவர் பார்வை யமுனாவை மொய்க்கத் தொடங்கியது. வாசலை விட்டு இறங்கும் போது மணியொலி கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். அவர் உள்ளே போகாமல் இன்னும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு குணமாகும் வாய்ப்பே இல்லை என்று தோன்றியது.

கிளினிக்கிற்கு எதிரே மருந்து கடை தென்பட்டது. யமுனாவைப் பார்த்து “நீ இப்படியே ஓரமாக நில். நான் மருந்து வாங்கி வரேன்“ என்று சொல்லிவிட்டு சாலையைக் கடந்து சென்றான்.

மருந்துகளை வாங்கிவிட்டு பணம் கொடுத்ததும் மருந்து சீட்டை பார்த்து மருந்துகள் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு சீட்டின் மேலே பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

மருந்துச் சீட்டின் மேலே ‘திரு.சுந்தரம்‘ என்று அவன் பெயர் எழுதப்பட்டிருந்தது.


*****

Thursday, March 19, 2009

இரண்டு ‘குட்டி‘ கதைகள் (மெல்லிய இதயம் கொண்டவர்கள் படிக்க வேண்டாம்)

வாலிப, வயோதிக அன்பர்களே... இளைஞர்களே, இளநிகளே... மன்னிக்கவும் இளைஞிகளே...

ரொம்ப போரடிக்காமல்... நானும் இரண்டு ‘குட்டி‘ கதைகள் (சொந்த சரக்கில்லை, படித்ததுதான்) சொல்லி விடுகிறேன். படித்த பின் பிடித்திருந்தால், இரசித்ததை பின்மொழியில் தெரிவியுங்கள். ‘குட்டி‘ கதை பிடிக்கவில்லையென்றால் ‘குட்டி‘ சொல்லுங்கள்...

(குறிப்பு : மெல்ல்லிய... இதயம் கொண்டவர்கள் இக்கதைகளை படிக்க வேண்டாம்)


சரி, கதைக்கு போவோம்.


கதை : 1

பல ஊர்களுக்கும் தேசாந்திரியாக சுற்றிச் சென்று பிச்சை பெற்று வாழ்க்கையை கழிக்கும் துறவி ஒருவர் இருந்தார். ஒருநாள் புதியதாக ஒரு நகருக்குள் சென்ற அவர் தனக்கு முன்னே, ஒரு காலில் சலங்கை அணிந்து கொண்டு, கையில் நீண்ட கொம்பை வைத்து தரையில் ‘தொம்‘ தொம்‘ என சப்தம் எழுப்பியபடி நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனை கண்டார். அவனது செய்கையும், ஒரு காலில் சலங்கை அணிந்திருந்த காட்சியும் வித்தியாசமாக இருந்ததால் அன்று முழுவதும் அவன் சென்ற வழியெல்லாம் பின்னால் சென்றார்.

இருட்டத் தொடங்கியதும், அந்த இளைஞன் ஊரின் கோடியில் இருந்த ஒரு சத்திரத்தில் சென்று தங்க ஆயத்தமானான். அவன் பின்னாலேயே வந்த துறவியும் அவனுக்கு அருகில் சென்றார். அவன் எதற்காக ஒரு கையில் கம்புடனும், ஒரு காலில் சலங்கை அணிந்தும் இருக்கிறான் என்று அறிந்து கொள்ள அவருக்கு அதிக ஆர்வமாக இருந்தது.

அவனருகில்சென்று அமர்ந்த துறவி ‘தம்பி, இன்று காலை முதல் நான் உன்னை பின் தொடர்ந்து வருகிறேன். ஒரு கையில் கம்பு, ஒரு காலில் சலங்கை மணி என்ற கோலத்தில் நீ இருப்பதன் காரணம் என்ன என்று நான் அறிந்து கொள்ளலாமா ?“ என்றார்.

“ அதுவா ஐயா, நான் எந்த உயிர்களுக்கும் துன்பம் இழைக்காமல் வாழ விரும்புகிறேன் “ என்று பதில் கூறினான் அந்த இளைஞன்.

“நல்லது தம்பி, அதற்கும் உன் கோலத்திற்கும் என்ன தொடர்பு“ என்றார் துறவி.

“ஐயா, நான் நடந்து வரும் போது கம்பினால் நிலத்தில் தட்டி ஒலியெழுப்பியபடி வருவேன், அப்போது பூச்சிகள், சிறு உயிர்கள் விலகிச் சென்று விடும். அதே போல சலங்கை மணி ஒலி கேட்டும் உயிரினங்கள் விலகிச் சென்று விடும். இதன் மூலம் உயிரினங்களுக்கு எந்த கேடும் ஏற்படுத்தாமல் இருக்கிறேன்“ என்றான் இளைஞன்.

துறவிக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. “வயதில் இளையவனாக இருந்தாலும் உன்னுடைய நோக்கம் மேன்மையானதாக உள்ளது“ என்று இளைஞனை பாராட்டினார்.

பின்னர், “தம்பி இதற்கு முன் ஏதாவது பாவ காரியம் செய்தது உண்டா ?“ என்று கேட்டார் துறவி.

சிறிது நேரம் யோசித்த இளைஞன், சற்றே தயக்கத்துடன் கூறினான் “ஆம் ஐயா, எனது வீட்டின் பக்கத்து வீட்டு பெண்ணுடன் ஒரு முறை உடலுறவு கொண்டேன்.“

சற்றே குரலை உயர்த்தி “வேறு பாவ காரியம்...“ என்றார் துறவி.

“ஒரு முறை என் எதிர்வீட்டில் உள்ளவரின் மனைவியுடன் தொடர்பு ஏற்பட்டு, அது ரொம்ப நாள் நீடித்தது ஐயா“

சலிப்புற்ற துறவி, விரக்தியான குரலில் “வேறு ஏதாவது“ என்றார்.

“வேறொருவர் மனைவியுடன் எனக்கிருந்த தொடர்பு பல பெண்களுக்கு தெரிந்து, அவர்கள் யாரிடமும் தெரிவித்து விடாமல் இருக்க நிறைய பல பெண்களிடமும் தொடர்பு ஏற்பட்டு விட்டது ஐயா“ என்றான் இளைஞன் தயங்கித் தயங்கி,

துறவிக்கு கடும் கோபம் ஏற்பட்டு விட்டது.

“தம்பி, நீ மணி கட்ட வேண்டிய இடம் கால் அல்ல“ என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்றார்.


******


கதை : 2

மழை பொய்த்துப் போய், பூமி வறண்டதால் விவசாயம் செய்து நஷ்டப்பட்ட விவசாயி ஒருவன் தன்னிடமிருந்த ஒரே மாட்டையும், கன்றுக்குட்டியையும் விற்று பிழைக்க முடிவு செய்தான். மாட்டை விற்பதானால் சில மைல் தூரத்தில் உள்ள பக்கத்து ஊருக்கு சென்றுதான் விற்க வேண்டும். பக்கத்து ஊருக்கு செல்வதானால் காட்டைக் கடந்துதான் செல்ல வேண்டும். தன்னிடமிருந்ததில் புதியதான வேட்டியை கட்டிக் கொண்டு மாட்டையும் கன்றையும் ஓட்டிக் கொண்டு சந்தைக்கு புறப்பட்டான் விவசாயி.

போகிற வழியில் நடுக்காட்டில் இரவாகி விட்டது. எப்படியாவது விடிவதற்குள் போய் விடலாம் என வேகமாக நடந்து கொண்டிருந்தான்.

திடீரென எதிரே இரண்டு திருடர்கள் வந்து விட்டனர்.

“டேய் மரியாதையா உன் கிட்ட இருக்கற பணத்த கொடு“ என்று கத்தியைக் காட்டி மிரட்டினார்கள் திருடர்கள்.

விவசாயி பயந்து போய் “ஐயோ, என் கிட்ட ஏது பணம். நானே விவசாயம் செஞ்சு நொந்து போய், நஷ்டப்பட்டு மாட்டை விற்க போயிட்டிருக்கேன்“ என்றான்.

பணம் இல்லை என்றதும் கோபமான திருடர்கள் அவனைப் பிடித்து அருகே இருந்த மரத்தில் கட்டிப்போட்டு விட்டு மாட்டை ஓட்டிக் கொண்டு சென்று விட்டனர்.

இரவு முழுவதும் “காப்பாத்துங்க... காப்பாத்துங்க“ என்று கத்தி சோர்ந்து போனான் விவசாயி.

பொழுது விடிந்ததும் இரண்டு பேர் அந்தப் பக்கமாக வந்த இரண்டு பேர் விவசாயி கத்திக் கொண்டிருந்ததை பார்த்து அவனை கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டு காப்பாற்றினார்கள்.

கட்டை அவிழ்த்து விட்டதுதான் தாமதம்... சுற்றும் முற்றும் பார்த்த விவசாயி, அருகில் இருந்த மரத்தில் இருந்து ஒரு கொம்பை உடைத்தான். உடைத்த கொம்பை எடுத்துக் கொண்டு போய் பக்கத்தில் மேய்ந்து கொண்டிருந்த கன்றுக் குட்டியை அடியோ அடியென்று அடிக்கத் துவங்கினான்.

காப்பாற்றிய இருவருக்கும் கடுமையான கோபம் வந்து விட்டது. “அடே மடையா, ஆபத்திலிருந்து உன்னை காப்பாற்றியதற்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் வாயில்லா ஜீவனான அந்த கன்றுக் குட்டியை போய் இரக்கமில்லாமல் அடித்துக் கொண்டிருக்கிறாயே“ என்று கூறினர்.

அதற்கு அந்த விவசாயி “பின்ன என்ன சாமி... நானும் ராத்திரி புஃல்லா கத்தறேன், நான் உன் அம்மா இல்ல... அம்மா இல்லன்னு... எங்க சாமி நான் கத்துனத கேட்டுச்சு அது“ என்றான்.


******


அவ்ளோதான்.

அன்பாக இருப்பதுதான் அன்பு

அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி. பலவிதமான மனித உறவுகளிடமும் நாம் எதிர்பார்ப்பதும், பெற விரும்புவதும் அன்புதான். துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல்.

சிலரிடம் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டால் மனம் பாதுகாப்பாக உணர்வதற்கு காரணம் இதுதான். அன்பாக இருப்பதிலும் அன்பு செலுத்துவதிலும் ஈடுபாடு காட்டுவதன் மூலம் எப்போதும் சந்தோஷ உணர்வு ஏற்படுகிறது.


அன்பு என்பது என்ன ?


பல அர்த்தங்கள் பொதிந்த வார்த்தை இது. இதுதான் அன்பு என அவ்வளவு எளிதில் வரையறுத்துச் சொல்ல முடியாது. மேலும், எந்த அளவிற்கு ‘அன்பு‘ ஆழமான வார்த்தையோ அதே அளவிற்கு மலினப்படுத்தப்பட்டும் உபயோகத்தில் இருக்கிறது.


அன்பைப் பற்றி பேசாதவர்களே இல்லை. அன்பு, காதல், பாசம் என்று பல்வேறு பெயர்களில் நாம் அழைத்தாலும் எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது.


சரி, அன்பு என்பது ஒரு கருத்தா ? அல்லது தத்துவம் என்று சொல்லலாமா ?

நான் சந்தோஷத்தை விரும்புகிறேன்.

கடவுள் அன்பாக இருக்கிறார்.

நான் உன்னை காதலிக்கிறேன்.

என்னுடைய தாயை நேசிக்கிறேன்.


இவையெல்லாம் என்ன...?

அன்பை வெளிப்படுத்துகிற பல்வேறு வார்த்தைகள். அன்புதான் இவ்வார்த்தைகளின் மையம். அன்பு எங்கே கிடைக்கும்... எங்கு வாங்கலாம்... அன்பை செலுத்த முடியுமா...?


அன்பைப் பற்றிய கேள்விகள் நிறையவே உண்டு. அன்பு என்ற உணர்வு உள்மனதிலிருந்து எழ வேண்டியது. சந்தோஷத்தை விரும்புவதும், கடவுள் அன்பாக இருப்பதும், காதலிப்பதும், தாயை நேசிப்பதும் உணர்வுபூர்வமாக செயல்படுத்தப்பட வேண்டும்.


கடவுள் அன்பாக இருக்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம் ? கடவுள் எந்த துன்பத்தையுமே நமக்கு தரமாட்டார். நாம் மட்டும்தான் கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர் என்றில்லை.


கடவுள் நம் மீது அன்பாக இருக்கிறார் என்று நாம் நம்புவதன் மூலம் எல்லா செயல்களிலும் பய உணர்வு நீங்கி செயல்பட உத்வேகம் பிறக்கிறது.


‘உயிர்களிடத்தில் அன்பு செய்‘ என்று சொல்லியிருக்கிறார்கள். கடவுளிடம் மட்டும்தான் என்றில்லை. எல்லோரும் நம் மீது அன்பாக இருக்கிறார்கள் என்ற நல்ல மனநிலையைக் கொண்டால் வாழ்க்கை இனிதாக அமையும்.


நான் கடவுள் மீது அன்பாக (பக்தியாக) இருக்கிறேன் என்று சிலர் கூறுவார்கள். இதைவிட போலியான விஷயம் வேறு என்ன இருக்க முடியும் ?


எப்போது நாம் கடவுளை வழிபடத் தொடங்குகிறோமோ, அதாவது, அன்பு செலுத்தத் தொடங்குகிறோமோ அப்போதே நாம் நம்மையே நாம் வழிபடத் தொடங்கி விட்டோம் என்றுதானே அர்த்தம் ? நம் மீது நாமே அன்பு செலுத்திக் கொள்வதுதான் வழிபாடு. அதற்கு புனையப்பட்ட நம்பிக்கை வேண்டியிருக்கிறது.


எனவே, அதை நாம் கடவுளின் மீது செலுத்தும் அன்பு என்று கூற முடியாது. கடவுள் என்பது உணர்வு பூர்வமான ஒரு நம்பிக்கை. எந்த விஷயத்தின் மீதும் கவனத்தைக் குவித்து வழிபடுவதன் மூலம் இது சாத்தியம்தான்.


தன்னம்பிக்கை என்பதுதான் கடவுள் என்பதை உணர்ந்தவர்களுக்கு இது புரியும். சுவாமி விவேகானந்தர் மிக எளிமையாக இதுபற்றிக் கூறுகிறார் “தன்னம்பிக்கை இல்லாதவன் எவனோ அவனே நாத்திகன்“ என்று. நம்பிக்கைதான் கடவுள் என்பதை உணராதவர்கள் மட்டுமே ‘நான் கடவுள் மீது அன்பாக இருக்கிறேன்‘ என்றெல்லாம் கூறுகின்றனர்.


நாம் எல்லோருமே தினசரி பிரச்சனைகளிலிருந்து தப்பிப்பதையே வாழ்க்கையாக கொண்டிருக்கிறோம். அதற்கென பல நாம் பல வழிகளையும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம்.


பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ள உதவும் உத்திகள்தான் தொலைக்காட்சி, கடவுள் வழிபாடு, திரைப்படம், எழுதுதல் இவையெல்லாம். இரண்டரை மணி நேரம் இருட்டில், யாரோ சிலரின் வாழ்வின் சந்தோஷங்களைப் பார்த்து சந்தோஷப்படவும், சோகங்களில் சோகமாகவும் நம் மனது இயல்பாக பழகிவிடுகிறது. அதேபோல்தான் கோயில்களிலும், “எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார்“ என்று வழிபாட்டின் போது வேண்டிக் கொள்வதன் மூலம் நம்முடைய பிரச்சனை நம்மிடமிருந்து இறக்கி விடுகிறோம்.


பிரச்சனைகளைப் பேசிப் பகிர்ந்து, பிறரிடம் அன்பாக இருப்பவர்களுக்கு இந்த தப்பித்தல் சாதனங்களின் தேவையிருக்காது. நம் தேவைகளைக் கூறவும் பிரச்சனைகளை பேசவும் கிடைத்த அதிலும் பதில் எதுவும் பேசி விடாத ஒரே சாதனம் கடவுள் என்பதால்தான் கோயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.


மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான். இதில் என்ன பிரச்சனையென்றால் அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருப்பதுதான்.


அன்பை நாம் எப்படி உணரப்போகிறோம் ? அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும். பலரிடமும் நாம் அன்பாக இருப்பதாக சொல்கிறோம், பேசுகிறோம். ஆனால் உண்மை என்ன ?


மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மன மகிழ்வைத் தரும்.


காலையிலிருந்து மாலை வரை நாம் பல மனிதர்களைச் சந்திக்கிறோம், சிரிக்கிறோம், பேசுகிறோம். இவர்களில் எத்தனை பேரிடம் உண்மையான அன்போடு சிரித்துப் பேசி இருப்போம் ?


உதடுகள் சிரிப்பதை விடுங்கள். பொய்யாக சிரித்து போலியாக புகழ வேண்டிய கட்டாயம் பலருக்கும் வாழ்வின் பல நிலைகளிலும் ஏற்பட்டிருக்கலாம். நம்மில் எத்தனை பேர் சந்திக்கின்ற அனைவரிடமும் அன்பாக இருந்திருப்போம்.


அன்பு பற்றி புத்தர் ஒரு கதை சொல்லியிருக்கிறார்.

வயல் வரப்பு வழியாக ஒருவன் நடநது கொண்டிருக்கும்போது புலியைப் பார்த்து விட்டான். அவன் ஓட புலி துரத்தியது. சிறிய குன்றின் உச்சிக்கு வந்து விளிம்பில் இருந்த காட்டு மரத்தின் வேர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.

புலி அவனை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. நடுங்கிக் கொண்டே கீழே பார்த்தான். இன்னொரு புலி பார்த்துக் கொண்டிருந்தது. மரத்தின் வேர்களில் அவன் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டு எலிகள் வேர்களைக் கடிக்க ஆரம்பித்தன. அவனுக்கு கைக்கெட்டும் தூரத்தில் காட்டுச் செடியின் பழம் இருந்தது. ஒரு கையால் வேரைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் பழத்தைப் பறித்து தின்றான். அப்போது அவன் மனதில் “பழம் எவ்வளவு சுவையாக இருக்கிறது“ என்று தோன்றியது.


இக்கதையில் வருகிற ‘கனியைச் சுவைக்கும் மனிதனின்‘ மனநிலைதான் அன்பின் மூலம் நாம் அடைவது.


எவ்வளவு துன்பங்கள், பிரச்சனைகள் இருப்பினும் அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருக்கச் செய்கிற சக்தி அன்பிற்கு மட்டும்தான் உண்டு. அன்பிற்கு மட்டுமே வாழ்வை இனிமையாக நகர்த்திச் செல்கின்ற சக்தி உண்டு.


- பொன். வாசுதேவன்

Tuesday, March 17, 2009

அடை


அருகில் திரும்பிப் படுத்தணைத்து

உன் இறால் குஞ்சு விரல்களை

கைகளுக்குள் அணிந்து

பதுங்கிப் பதுங்கி

அழைத்துச் செல்கிறேன்.

உழவு கண்டறியாமல்

வெடித்து இறுகி கனத்த

நிலம் முன் நீள...

காதை வருடும்

காற்று பேரோசையுடன்.

வெறித்துப் பார்க்கும்

சூரியனை அலட்சியப்படுத்தி

தூரத்தில் கலங்கும்

கானல் நீர்நோக்கி

தூசிகளால் கண் சிதையாது

சென்று கொண்டேயிருக்கிறேன்

பல கணங்களாய்...

புட்டம் உயர்த்தி கால்கள் மடிந்து

குப்புறப்படுத்து

நீ

தூங்கும் திசையெல்லாம்

பரவியபடி கசிகிறதென் அன்புவெளி

தனிமை உமிழ்ந்த

யோசனையின் எச்சமாய்...

இன்னும் வெகுதூரம்

செல்ல வேண்டியிருக்கிறது

உன்னைப் பாதுகாக்க.



- பொன். வாசுதேவன்



உயிர்மை டிசம்பர் 2004 இதழில் வெளியானது.

சிக்கல்


நூலிடையே சிக்குண்டு கிடக்கிறான் சிறுவன்

சிக்கலவிழ்க்க

முடிந்தும் முடியாமலும்...

அருகே

கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது காற்றாடி

நூலுடன் தொடர்பறுந்து போய்...

அகாலமாய் செத்து அழுகின

நாயின் வாசத்தை

நினைவூட்டுகின்றது காற்று

ஒரு வாரத்திற்குப் பின்னும்...

கடக்கப்படாத மைதானத்தின் தூரத்தை

ஓரம் நின்று பார்க்கின்றான்

ஓட்டம் பயில வந்தவன்.

எந்த அவசரமுமில்லாமல்

சிக்கலிலிருந்து மெதுவாக

வெளியேறிக் கொண்டிருக்கிறான் சிறுவன்.

அருகே கிடக்கின்றது

படிக்கப் போவதாக வீட்டில் சொல்லி

எடுத்து வந்த புத்தகங்களும் நோட்டும்...


- பொன். வாசுதேவன்

(தமிழ் அரசி - 7.12.97 இதழில் ‘வாரம் ஒரு கவிஞர்‘ பகுதியில் வெளியானது)

Monday, March 16, 2009

பிஞ்சு

கால்களிரண்டும்

ஒன்றோடொன்று தானே

தடவிச் சிரிக்கிறாய்

எப்படிச் சாத்தியமாகிறது

ஒரு கணம் அழுது

உடன் சிரிக்க...

எதைப் தேடிப் பார்க்கிறாய்

பாழ்வெளியில் கையசைத்து

விரல் நீட்ட இறுகப்பற்றி

சிறு விழியுருட்டி

வெளி நோக்கும் உன்னை

பருகி வைத்த மிச்சமாய்

உற்றுப் பார்த்து

ஓய்கிறது விழிகள்

விதை புதைந்து வெளியாகும்

செடித் தளிராய்

யார் படைத்தார் உன்னை

இவ்வளவு அழகாய்.


- பொன். வாசுதேவன்


(புதிய பார்வை, 16-30 நவம்பர் 1997 இதழில் வெளியானது)

“ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறை ராஜதந்திரம்“ – மருத்துவர் இராமதாசு

“ஜெயலலிதாவின் அரசியல் அணுகுமுறை நன்மை பயக்கும் ராஜதந்திரம்“ மருத்துவர் இராமதாசு

முதல் முறையாக பாராளுமன்றத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. நான்கு உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் இராமதாசு தங்களின் பாராளுமன்ற பிரவேசத்தை “மாயாஜால நகருக்கு சென்று வந்தோம்“ என நகைச்சுவையாக குறிப்பிடுகிறார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய மருத்துவர் இராமதாசு, தனது கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் பற்றிக் கூறினார்.

இனி பேட்டியிலிருந்து

“ஜெயலலிதா அவர்களின் அணுகுமுறை மிகவும் நன்மை பயக்கும் ராஜதந்திரமாக அமைந்துள்ளது. அமைச்சரவையில் எங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் திருப்தியளிப்பதாகவே உள்ளது. முதல் முறையாக பாராளுமன்றத்தில் நாங்கள் அடியெடுத்து வைக்க உதவிய அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவிற்கும், தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும் எங்களின் நன்றி. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நிலையானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. காங்கிரசும், ‘காணாமல் போன‘ ஐக்கிய முன்னணியும் பி.ஜே.பி. ஆட்சியினை எளிதாக கவிழ்த்து விடலாம் என பகல் கனவு காண்கிறார்கள். மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் எதிர்க்கட்சியினரிடையே நல்லெண்ணம் தேவை. அரசியலை மறந்து இதற்காக கட்சிகள் ஒன்றுபட வேண்டும். தேர்தலுக்கு முன்பே எங்களின் கூட்டணி ‘வெற்றிக்கூட்டணி‘ என்று நான் கூறினேன். ‘நாற்பதும் நமதே.. நாடும் நமதே‘ என்றவர்கள், எங்கள் கூட்டணியின் சக்தியை உணர்ந்திருப்பார்கள். இந்தத் தேர்தல் முடிவுகள் பாட்டாளிகளின் சக்தியை பண்ணையார்களுக்கு உணர்த்தியிருக்கும்.

பினாமி நிலச்சட்டம் புத்துயிர்ப்பு பெறும். புத்துயிர்ப்பு பெற பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும். தி.மு.க. ஆட்சி 1976 மற்றும் 1991 என இரண்டு முறை கலைக்கப்பட்ட போதும் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதனை அடுத்து வந்த தேர்தல்களில் கலைப்பு சரியென்றே மக்கள் தீர்ப்பளித்தார்கள். இப்போதும் அப்படித்தான் நடக்கப்போகிறது. காவலர்களுக்கு 1000 ருபாய் பரிசாக கொடுப்பதாக கூறி லஞ்சம் தருகிறார் கருணாநிதி. காவலர்களுக்கு 24 மணி நேரம் பணி புரிய வேண்டிய நிலை உள்ளது. எனவே, அரசு ஊழியர்களைப் போல முன்று மடங்கு சம்பளம் பெற தகுதியானவர்கள் அவர்கள்தான். மேலும், காவலர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் காவல் துறை லஞ்ச ஊழல் இன்றி செயல்படும்.

வெடிகுண்டு கலாச்சாரத்திற்கு காரணம் தி.மு.க. அரசும், கலைஞரும்தான். தனிப்பட்ட முறையில் கருணாநிதியின் அணுகுமுறைதான் இதை அதிகரித்தது. சட்டசபையில் பா.ம.க. 1, பா.ம.க. 2 என அறிவித்துள்ளனர். 2-க்கு பதிலாக பா.ம.க. கருணாநிதி என அறிவித்திருக்கலாம் என்பது எனது யோசனை.

Water Policy மற்றும் 69 % இடஒதுக்கீடு போன்ற விஷயங்களில் எங்களுடைய கட்சியை கலந்தாலோசித்து முடிவெடுப்போம். 19 மொழிகளையும் தேசிய மொழியாக்க வேண்டும் என புரட்சித்தலைவி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்கென விரைவில் கமிட்டி அமைக்கப்பட உள்ளது. 19 மொழிக்காரர்களுக்காகவும் இதன் முலம் வாதாடியிருக்கிறார் ஜெயலலிதா. இதை மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம்.

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தேர்தலில் மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறார் கருணாநிதி. இதற்கெல்லாம் பொறுப்பேற்று கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரதமரிடம் எங்களின் கோரிக்கை இது அல்ல. தமிழக மக்களின் நலப்பிரச்சனை பற்றியது மட்டுமே நாங்கள் கோரிக்கையாக வைத்திருக்கிறோம். டாக்டர் சுப்ரமணியசுவாமி என்னுடைய சிறந்த நண்பர். அவர் அமைச்சரவையில் இடம் பெறாதது எங்களுக்கு வருத்தம்தான். செல்வி ஜெயலலிதா அவருக்காக எவ்வளவோ முயற்சி செய்தார். ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய்யானவை என்று நாங்கள் நம்புகிறோம்.

இஸ்லாமியர் சிறுபான்மையினர் நலனுக்காக நான் என்றுமே போராடுபவன். முஸ்லீம் இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லாமல் அவர்களை அழைத்துப்பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும். எங்கள் கட்சி சிறுபான்மையினர் நலனுக்காக குரல் கொடுக்கும்.“


- பொன். வாசுதேவன்


(என்னால் தொகுத்து எழுதப்பட்ட இந்த பேட்டி ‘தமிழ் அரசி‘ வார இதழில் 5.4.1998-ல் வெளியானது.)

Sunday, March 15, 2009

ஏசுநாதரும்... வாசுதேவனும்...

பல்வேறு மதங்கள் மனித மனங்களை ஆளுகையில் வைத்திருந்தாலும் மதப்புனைவுகளுக்கிடையேயான ஒற்றுமை விசித்திரமானது... வியப்புக்குரியதும்கூட. சமுக மானுடவியல் ஆய்வாளர்கள் மதங்களை ஒப்பு நோக்கி ஆய்வு செய்து, ஒரே வித நிகழ்வுகள் பரவலாகவும், பொதுவாகவும் மதங்களில் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

கி.பி.1783-ம் ஆண்டு சியாம் (இன்றைய தாய்லாந்து) நாட்டினை ஆண்ட மன்னர் முதலாவது ராமா என்றழைக்கப்பட்டார். தாய்லாந்தில் ஆளும் மன்னரின் பெயர் ராமா -1, 2, 3, என தொடர்கிறது. பெரும்பான்மை மக்களள் லிங்கம் போன்ற வடிவை கடவுளாக இன்றும் வழிபட்டு வருவதை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். தாய்லாந்தின் அண்மையில் உள்ள கம்போடியாவின் கட்டிடக்கலை உன்னதங்களாக விளங்கும் கோயில்கள் இந்து மதம் சார்ந்து கட்டப்பட்டு, மதங்களின் எல்லை அளப்பிட முடியாத தொடர்புடையவை என்பதை உறுதிப்படுத்துகின்றன. அக்காலத்தில் ‘பௌங் பேங் பெஃய்‘ என்ற பௌத்த வேளாண் பண்டிகையின் போது நம் தீபாவளி பண்டிகை போல வாண வேடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடப்பட்டுள்ளது.

1854-ல் நைல் நதிப்படுகையில் கண்டெடுக்கப்பட்ட சிலை இரண்டாம் ராம்செஸ் என்ற மன்னருடையது என அறியப்பட்டுள்ளது. ஆதி நாட்களில் ‘ராமபிதிகஸ்‘ என்றொரு மனிதக் குரங்கினம் இருந்துள்ளது. வடகிழக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்திருந்த இக்குரங்கினத்தின் படிவங்கள் வட இந்தியாவில் சிவாலிக் என்ற இடத்தில் 1910-ல் கண்டறியப்பட்டுள்ளது. மதங்களுக்கென உருவாக்கப்பட்ட வேதங்கள் பலவானாலும் அவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

மொழியியல் ஆய்வாளர் கருத்துப்படி, ஈரானிய மொழியும், சமஸ்கிருத மொழியும் ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்று தெரிகிறது. ‘ஆர்ய‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு இந்து மற்றும் ஈரானிய மக்கள் என்ற பொருள் உண்டு. ‘ஈரன்‘ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ‘பாலை நிலம்‘ என அர்த்தம். துருக்கியின் ஒரு பகுதியான ‘அனடோலியா‘ என்ற இடத்தின் வழிவந்த ‘ஈரண்‘ மக்கள் இந்திய மண்ணில் ‘ஆரண்‘ என்றாகி ‘ஆர்யன்‘ என மருவியிருக்கக்கூடும், (ஆய்வுச்செய்தி துருக்கியில் வேதகால நாகரீகம்)

ஆபிரகாம் இப்ராகிம், யாகோப் யூசூப் என கிறித்தவ, முஸ்லிம் மதங்களின் பெயர்களின் ஒற்றுமை நாம் அறிந்ததுதான்.

அதே போல ஏசுவிற்கும், கிருஷ்ணருக்கும் பல வியப்பான ஒற்றுமைகள் உண்டு. ஏசுநாதர் கிருஷ்ணர் இருவருமே ஆட்டிடையர் குலத்தில் தோன்றியவர்கள். இவர்கள் இருவரின் பிறப்பின் போதும் வானத்தில் நட்சத்திரம் விசேஷமாக தோன்றியுள்ளன. ஏசுவும், வாசுதேவனும் இளமையில் தர்க்க சாஸ்திரத்தில் சிறந்து இருந்திருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக கம்சன் வாசுதேவனை கொல்ல முயற்சித்தது போலவே, ஏரோது மன்னன் முன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொல்ல கட்டளையிட்டான். யமுனை நதி இரண்டாகப் பிரிந்து வாசுதேவனுக்கு வழி விட்டது போலவே, செங்கடல் பிளந்து மோசேயிற்கு வழிவிட்டது. ஒரு பருக்கை சோறுண்டு பல முனிவர்களின் பசியாற்றிய கண்ணனின் லீலை போல, ஒரு அப்பத்தை ஆயிரமாக பல்கச் செய்து வழங்கிய அற்புதத்தை ஏசுநாதரும் செய்துள்ளார்.

இதெல்லாம் சரி... பெண்களிடம் கண்ணன் குறும்பு செய்ததை போல ஏசுநாதர் செய்திருக்கிறாரா..? என்று கேள்வியெழுப்புபவர்களுக்கும் பதில் உள்ளது. ஏசுநாதரின் இளம் பருவ வரலாறு நமக்கு கிடைக்கவில்லை என்பதுதான் அது. வீட்டை விட்டு மலை வனப்பகுதிக்கு வெளியேறும் ஏசுநாதர் அதன் பிறகு என்னவானார் என்ற தகவல் இன்றி, தேவகுமாரனாக மட்டுமே நமக்கு அறியக் கிடைக்கிறார்.

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தாவரங்களின் உரையாடல்‘ தொகுப்பில் வெளியாகியிருக்கும் ‘நட்சத்திரங்களோடு சூதாடுபவர்கள்‘ மிக அருமையான ஒரு கதை. தற்போது அதை மீண்டும் படித்த போது தோன்றிய எண்ணம்தான் இந்தப் பதிவு.

இது பல சிறு குறிப்புகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. மேலதிக தகவல்கள் இருப்பின் நீங்களும் விரிவான பதிவிடலாம்.


- பொன். வாசுதேவன்

Comments system

Disqus Shortname